எப்போதும் அநீதிகளுக்கு சாட்சியமாக குழந்தைகளின் விழிகள் அமைந்து போவது தான் உலகத்தின் கோர விதியாக இருக்கிறது. ‘ஜெய் பீம்’ திரைப்படத்தில் இது நுட்பமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. “ஜெய் பீம் -ல் குழந்தைகள்” என தனி ஆய்வே செய்யலாம் என்ற அளவிற்கு குழந்தைகளின் அழுகை, குணாதிசயங்கள், எதிர்பார்ப்புகள், அச்ச உணர்வுகள் என குழந்தைகளின் யதார்த்தக்காட்சிகள் படம் முழுக்க விரவிக் கிடக்கின்றன.

சற்று பிசகினாலும் ஆவணப்பட சாயல் அளித்துவிடும் என்கிற அளவிற்கு உண்மை சம்பவங்களை, நிஜ மனிதர்களை காட்சிமைப் படுத்தியது சவாலான காரியம் தான்.

இந்த படத்தின் அடிநாதம் எளிய மனிதர்களுக்கு எதிராக இழைக்கப்படுகின்ற அநீதி, வன்முறை போன்றவை. எனவே கதாநாயக பிம்பம் அநீதிக்கு எதிராக எழுந்து நிற்க கதையோட்டத்தில் அநீதியின் பிம்பம் வலிமையாக இருக்க வேண்டும். அதை கதாநாயகன் சூர்யாவுக்கு இணையாக ஏறக்குறைய சம பலத்தில் தாங்கிப் பிடித்திருக்கிறார் காவல்துறையின் உதவி ஆய்வாளராக வருகின்ற தம்பி தமிழ்.

ஏற்கனவே அசுரன் படத்தில் வியத்தகு நடிப்பாற்றலை வெளிப்படுத்திய தம்பி தமிழுக்கு ஜெய்பீம் ஒரு புதிய பாய்ச்சல்.

புரட்சியாளர் அம்பேத்கர் வழங்கிய “ஜெய் பீம்” என்ற சொல்லின் அரசியலை படம் முழுக்க ஒரு கல்வி போல பார்ப்பவரின் மனதிற்குள் விதைப்பதற்கான வித்தை இயக்குனர் ஞானவேலுக்கு கூடி வந்திருக்கிறது.

சில திரைப்படங்கள் வெளிவரும் போது அதற்கான அரசியல் போக்குகள் உருவாக முயலும் காட்சிகளை சமீபகாலத்தில் காண்கின்றோம். குறிப்பாக சாதி புகழ் பேசும் சில திரைப்படங்கள் மனதிற்குள் கடும் அருவெறுப்பை,ஒவ்வாமையை தோற்றுவித்து விடுகின்றன.

நெருங்கிய தம்பி ஒருவர் அந்தப்படத்தைப் பற்றி எழுதுங்கள் அண்ணா என்று சொன்னார். எதிர்த்து எழுதுவது கூட அதற்கான விளம்பரமாக அமைந்து விடும் என்கிற பயத்தில்தான் அப்படியே கடந்து விடுவது.

அது போன்ற படங்களைப் பற்றி பேச மறுப்பது தான் அந்த படங்களுக்கு எதிரான கடும் எதிர்ப்பு.

எல்லாவற்றையும் பேச முடிகிற நமக்கு அத்திரைப்படங்களை நினைத்து கூட பார்க்க முடிவதில்லை.அது போன்ற திரைப்படங்களை பற்றி பேசுவது கூட ஆதிக்க அரசியலுக்கு சார்பான போக்கு என்ற நிலையில்தான் ஜெய்பீம் வெளிவந்திருக்கிறது.

ஆனால் ஜெய்பீம் பற்றி
அவசியம் பேசவேண்டும்.
பேசியே தீரவேண்டும்.

அது கூட ஒரு அரசியல்தான்.
அதுதான் மக்களுக்கான அரசியல்.
எளிய மனிதர்களுக்கான அரசியல்.

படம் பார்த்து முடித்த பின்னரும் அதிர்ந்து கொண்டே இருக்கும் மனநிலையில் செங்கனியின் விம்மிய அழுகை மட்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

ஜெய்பீம் பற்றி பேசுவோம்.
விரிவாகப் பேசுவோம்.

ஒரு வகையில் அந்தப் படம் அதைத்தான் எதிர்பார்க்கிறது.

பேசப்பட வேண்டும் என்பதுதான் அநீதிகளால், அதிகாரங்களால் பாதிக்கப்பட்ட அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.

பேசுவோம்.