பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Author: மணி செந்தில் Page 32 of 57

அந்தந்த நேரத்து நியாயங்கள்..

 

26733705_386350815123126_611877709230030666_n (1)

 
அந்த அழகான
பலிபீடம்
அந்த ஒற்றை
வெள்ளாட்டின்
முன் கருணை
விழிகளோடு
வீற்றிருந்தது..

குளிர்மையும்
வழுவழுப்பும்
நிரம்பிய
அதன் வளைவுகளில்
வெள்ளாடு லயித்திருந்தது..

அழகானது இது..

தலை பொருந்துவது
போன்ற வளைவு..

சற்றே சாயலாம்.
கொஞ்சம் உறங்கலாம்..

வெள்ளாட்டின் விழிகளில்
வண்ணக்கனவுகள்
மிளிர்ந்தன..

கத்தியின் கனம்
தெரிவு செய்ய
வெள்ளாட்டின் கழுத்து
மிருதுவான வருடல்களால்
ஆராயப்பட்டது..

தனித்தே பிறந்த,திரிந்த
வெள்ளாடு தன் மீது
சொரியும் வருடல்களால்
கசிந்தது..

எவ்வளவு கதகதப்பான
கரங்கள்..
ஆதரவாய்..ஆதுரமாய்..

நீ தனியன் இல்லை
என்பதை உணர்த்துவது
போல..

கலங்கி அழத் தொடங்கியது..
வெள்ளாடு.

அனலேறிய அப்பகற்
பொழுதில் தன் மீது
தெளிக்கப்பட்ட
குளிர் நீரை அருவியென
கருதி சிலிர்த்த வெள்ளாட்டின்
கழுத்தில் மாலையும்
இடப்பட்டது…

எவ்வளவு மரியாதை..
வெறும் ஆடு என
கருதாமல்..
செய்யப்பட்ட
பெருமை அருமை.

ஆகா.. இவ்வுலகம்
அன்பின் மடியாய்..
கருணையின்
கருவறையாய்..

சே..இந்த அன்பிற்காக
சாகவும் செய்யலாம்..

என வெள்ளாடு
கண்கலங்கி
உருகிய அந்நொடியில்..தான்

தலை தனித்து விழுந்தது.

 

ஞாநி..சில நினைவுகள்.

708x500xgnani.jpg.pagespeed.ic.QAlhGbMQGU

வாழ்வின் சூட்சமக் கோடுகள் விசித்திரமானவை. யாராலும் வகைப்படுத்த இயலாத மர்மச் சுழிகளால் வாழ்வெனும் நதி நிரம்பி தளும்பிக் கொண்டே இருக்கிறது. எவரோடு எவர் பிணைக்கப்படுவர் …பிரிக்கப்படுவர் என்று தெரியாத வாழ்வின் பொல்லாத பகடை ஆட்டத்தில் தான் நானும்,அவரும் அறிமுகமானோம். 2006-07 காலக்கட்டம். அப்போது அவர் புகழ்ப்பெற்ற எழுத்தாளர். அவரது நவீன நாடகங்கள் மூலமாகவும்,எழுத்துக்கள் மூலமாகவும் தமிழுலகம் தெரிந்த ஆளுமையாக உருவான அக்காலக் கட்டத்தில் தான் அவர் ஆனந்த விகடனில் ஓ பக்கங்கள் என்கிற தொடரை எழுதத் தொடங்கினார். பரவலான வாசகர் வரவேற்பை பெற்ற அத்தொடரில் ஒருமுறை பெரியார்-அண்ணா குறித்து ஒப்பீடு செய்து பெரியார் அரசியலில் தோற்றார்,அண்ணா வென்றார் என ஒப்பீடு செய்து எழுதினார்.

இணைய உலகம் தமிழகத்தில் அறிமுகமற்ற காலக்கட்டம். அண்ணன் அறிவுமதி என்கிற பல்கலைகழகத்தின் பயிற்சி மாணவனாக பயின்றுக் கொண்டிருந்த நான் தம்பி இயக்குனர் முரளி மனோகர் உதவியோடு ஞாநியின் எழுத்துக்களில் தெரியும் ஆரிய மனம் என்ற தலைப்பில் பெரியாரை இழிவுப்படுத்தியதாக குற்றம் சாட்டி ஞாநியை நேரடியாக தாக்கி ஒரு விவாதக்கட்டுரையை எழுதினேன். அதை ஞாநியின் ஆதரவாளர்கள் உருவாக்கி வைத்திருந்த ஞாநி தி ரைட்டர் என்கிற ஆர்குட் பக்கத்தில் வெளியிட்டேன். நாலாப்புறமும் ஞாநியின் ஆதரவாளர்கள் எனக்கு எதிராக பெரும் விவாதத்தை தொடங்கினர். சமூக வலைதளங்களில் பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதோர் என்கிற முறையில் முதன்முறையாக விரிவாக நடந்த விவாதம் அது. என்னோடு கோவை Yuvan PrabhaKaran , விடாது கருப்பு,சசி, Packiarajan Sethuramalingam ,Don Ashok R ,சீறிதர், Murali Manohar Vishnupuram Saravanan ஒட்டக்கூத்தன் என பலர் கொண்ட பெரும் படை இணைந்தது. பெரியாரியம் குறித்த நீண்ட அந்த விவாதத்தில் திராவிடம்,ஆரியம் ,ஈழம் ,அம்பேத்கரியம் என பல்வேறு அரசியல் கருத்துக்கள் விரிவாக விவாதிக்கப்பட்டன. இதில் என்ன ஆச்சரியம் என்றால் எழுத்தாளர் ஞாநியே நேரடியாக இவ்விவாதங்களில் பங்கேற்றார்.

மிகப்பெரிய ஆரிய பார்ப்பனீய இந்துத்துவ எதிர்ப்புணர்ச்சியோடு நாங்கள் அந்த விவாதங்களில் பங்கேற்றோம். இந்த விவாதம் நடந்துக் கொண்டிருந்த காலத்திலேயே ஞாநி அதே தொடரில்.. கலைஞர்.மு.கருணாநிதிக்கு வயதாகி விட்டது. அவர் அரசியலிருந்து ஓய்வு பெற வேண்டும் என எழுதப் போக… மேலும் நாங்கள் உக்கிரமானோம். ஈழப்போர் உக்கிரமாக நடந்துக்கொண்டு இருக்கிறது. விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு செயலாளர் அண்ணன் தமிழ்ச்செல்வன் சிங்களனின் குண்டு வீச்சினால் கொல்லப்படுகிறார். அப்போதைய முதல்வர் கருணாநிதி தமிழ்ச்செல்வன் மறைவை ஒட்டி இரங்கல் கவிதை ஒன்றை வெளியிட்டார். நாங்கள் கலைஞரை உச்சியில் வைத்து ஞாநியை தாக்கி எழுதி விவாதித்து கொண்டிருந்தோம். முதன்முறையாக எங்களது விவாதம் அண்ணன் அறிவுமதி அவர்களால் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அது அப்போதைய முதல்வர் கருணாநிதி யின் பார்வைக்கும் சென்று விட..அவரே என்னை அழைத்து நமது பிள்ளைகள் ஆரிய ஆதிக்கத்தை உடைத்து இணைய தளத்திலும் நுழைந்து விட்டதாக வாழ்த்தினார். பிறகு தம்பி என்னாரெஸ் பெரியார் மூலமாக திக தலைவர் வீரமணி அவர்கள் பெரியார் திடலுக்கு எம்மை அழைத்து வாழ்த்த..பெரும் உற்சாகமானோம். அய்யா சுப.வீ ,அண்ணன் திருமா,அண்ணன் சீமான் ,கொளத்தூர் மணி, எழுத்தாளர் பாமரன் போன்றோர் இந்த விவாதத்தையும், எங்களையும் பொது வெளிக்கு அறிமுகப்படுத்தினர். அதே உற்சாகத்தில் நாங்கள் ஆர்குட்டில் உலகத் தமிழ் மக்கள் அரங்கம் என்கிற குழுமத்தை உருவாக்கினோம்.இணைய வெளி சார்ந்து முதன் முறையாக ஒரு கலந்தாய்வுக்கூட்டத்தை சென்னை கோல்டன் பீச்சில் நடத்தினோம். அக்கலந்துரையாடலில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்,அண்ணன் அறிவுமதி,பாமரன்,அண்ணன் சீமான்,பேரா.சுப.வீ போன்ற ஆளுமைகள் கலந்துக் கொண்டனர்.

இவ்வளவிற்கும் காரணமான ஞாநி எங்களோடு விவாதித்துக் கொண்டே தான் சொல்ல வந்தவற்றை அழுத்தமாக சொல்லிக் கொண்டே இருந்தார். இறுதியில் நாங்களும் சமரசமாகாமல் தொடரவே..ஒரு கட்டத்தில் இனி எங்களோடு விவாதிக்கப் போவதில்லை எனவும்,சமூக வலைதளங்களில் இனி வரப்போவதில்லை என அறிவித்து விட்டு அமைதியானார். அய்யா சுப.வீ அவர்களை தாக்கி குங்குமம் இதழில் அவர் எழுதிய பத்திக்கும் நான் கடும் எதிர்வினை ஆற்றி இருந்த போதிலும்..ஒரு திருமணத்தில் எதிர்பாராத விதமாக சந்தித்த போது வாங்க..செந்தில் என அழைத்து என்னை இறுக அணைத்துக் கொண்டார்.
மாற்றுக் கருத்து கொண்டு இருந்ததாலேயே எதிரியாக நினைக்க தேவை இல்லை என அவர் கொண்டிருந்த புரிதல் ….அவர் மீதான எம் மதிப்பை அதிகரிக்கச் செய்தது.
திமுக தலைமை குறித்து அவர் வைத்திருந்த விமர்சனங்கள் காலப்போக்கில் உண்மையானப் பொழுதும்,அவற்றை நானே விமர்சித்து எழுதிய போதும்.. அவர் நான் அன்றே சொன்னேன் இல்லையா என்பது போல் வெளிப்படுத்தாமல் அமைதியாக இருந்தார்.
ஒரு முறை அவரை புத்தகக் கண்காட்சியில் சந்தித்து இது குறித்து பேசிக் கொண்டு இருந்த போது..நாங்கள் அந்த விவாதத்தில் தோற்று விட்டோம் என இன்று உணர்கிறேன் என்று தணிந்தக்குரலில் வருத்தமாக சொன்னேன்.
இல்லை..இல்லை.. நீங்கள் தோற்கவில்லை.தீவிரமாக இயங்கிய உங்களைப் போன்றோரை தனது செயல்பாடுகளால்..இழந்த கருணாநிதி தான் தோற்றார் என்றார் அவர். மேலும்…அது போன்ற கற்றுக்கொள்கிற…நாகரீக புரிதலுடன் கூடிய விவாதம் அதற்கு பிறகு சமூக வலைதளங்களில் எங்கும் நடக்க வில்லை எனவும் அதற்கான இடமே இல்லை எனவும் வருந்தினார்.
அவரை எதிர்த்து எழுதிய நாங்கள்..அதன் மூலமாக பொது வெளிக்கு அறிமுகமாகி வெவ்வேறு அமைப்புகளில் மதிப்பார்ந்த இடங்களில் இன்று இருக்கிறோம்.

எதிர்க்கவும்..எதிர்க்கப்படவும் கூட ஞாநி போன்ற தகுதி வாய்ந்த எதிரி தேவையாய் இருக்கிறது. வசவுகளும்,தனி மனித தாக்குதல்களும் நிரம்பிய இன்றைய சமூக வலைதளங்களில் ஞாநி போன்றோருக்கு இடமில்லை தான்.

நமக்கும் இடமில்லை என்பதுதான் ஞாநி சொல்லாமல் சொல்லி விட்டுச் சென்ற செய்தி.

போய் வாருங்கள் ஞாநி. நான் எழுதுகிற எழுத்துக்களில் எல்லாம்..நான் விரும்பியோ..விரும்பாமலோ நீங்கள் நினைவுக்கூரப்படுவீர்கள்.

அவ்வகையில்..நீங்கள் தான் அன்று வென்றீர்கள்.

மணி செந்தில்
15.01.2018.

என் வானின் பகலவன்..

26167072_382199455538262_6309952498669083654_n

 

 

அன்புள்ள பகல்..

அப்பா எழுதுகிறேன். இந்நொடியில் உன்னை நெஞ்சார்ந்து அணைத்துக்கொள்கிறேன். எப்போதும் மினுமினுக்கும் உன் கண்களில் தான் என்னை தேட வேண்டி இருக்கிறது. எனக்காக நீ எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்வாய். சகித்துக் கொள்வாய். சில சமயங்களில் என்னையும் கூட..

பல சமயங்களில் எங்கோ அலைந்து விட்டு, கூட்டம் முடித்து விட்டு வீடு திரும்புகையில்.. நீ அயர்ந்து தூங்கி இருப்பாய். வெளிச்சம் பட்டு உன் விழிகள் மெலிதாய் திறந்து பார்க்கும். எனை கண்டதும் சட்டென பூத்து ..அடங்கும் அவ்விழிகள் தான் எவ்வளவு கனிவு மிக்கவை.. ஒவ்வொரு இரவிலும்.. நடுநிசித் தாண்டி நான் படுக்க நுழைகையில்..இயல்பாய் என் கழுத்தை சுற்றி அணைக்கும் உன் பிஞ்சுக் கைகள் தான் எவ்வளவு உயிர்ப்பானவை..

உன்னளவிற்கு எனக்கு நேர்மை செய்வதில் நீ சிறப்பானவன் பகல். இவ்வாழ்வினுடாக நானே அறைந்துக் கொண்ட சிலுவைப் பொழுதுகளில் என்னை தூரத்தில் இருந்து அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தாய்.ஒரு கம்பீரமான..உன்னை.. எனக்கு தெரியும் என்பதான அமைதி அது. நீ என்னை கவனிக்கிறாய் என நான் உணர்கிற நொடியில் ஏதோ ஒரு போலி புன்னகையை என் முகத்தில் அணிந்துக்கொண்டு உன்னருகே வரும் போது …எந்த சலனமும் காட்டாமல் என் தோளில் என் ஆறுதலுக்காக சாயும் உனது அன்பினை நினைத்து நான் இந்நொடியில் கலங்குகிறேன். நான் பல சமயங்களில் உன்னை மறந்து..திரிந்து இருக்கிறேன். ஆனால் உறக்கத்தில் கூட அப்பா என்றுதான் நீ முனகுகிறாய் என அம்மா சொல்கிறாள். அதுதான் எனக்கு வலிக்கிறது.

வானத்தைப் போல நீள அகலம் விவரிக்க முடியாத பேரன்புத் தோட்டத்தினை உன் இயல்பிலேயே நீ கொண்டிருக்கிறாய். அதிலிருந்து எப்போதும் பனி படர்ந்த செந்நிற ரோஜாக்களை மட்டுமே நீ பரிசளிப்பாய்..ஆனால் நானோ பாலைவனப் பயணி. வறட்சித் தாகத்தை தவிர என்னிடத்தில் உன்னோடு பகிர என்னதான் உண்டு..??

நீ என்னைப் போல இருக்கிறாய் என அனைவரும் சொல்வது கண்டு நான் அஞ்சுகிறேன் பகல். வேண்டாம். நீ நீயாக இரு. மகிழ்ச்சியின் அலையோடு பொங்கிப்பூரிக்கின்ற பெரு நதியென திகழட்டும் உனது வாழ்வு. விடியலில் தொலைவதற்காக இரவில் மலரும் கனவினை நினைவெனக் கொள்ளும் கானல் காட்சியாளனாய் நீ இல்லாது..அந்தந்த தருணங்களில்.. வாழ் மகனே..

நேர்மையாக இரு. ஏமாளியாக இராதே.. அன்பினை மதி. ஆனால் அன்பினில் தொலையாதே. இரக்கம் கொள். உன்னை விற்று சித்திரம் வாங்காதே. நிறைய படி. பயன்படுத்து. நேசி. ஆனால் உன்னை இழக்காதே. இறுதி வரைக்கும் சரணடையாமல் இரு. தவறான நிலத்தில் விதைக்காதே.தரிசாகி விடும். அனைத்திற்கும் மேலாக உனக்காக வாழ்.

உனக்கு பகலவன் என பெயர் வைத்தவனுக்கு என்றென்றும் மகனாய் இரு.

மொத்தத்தில் நீ என்னைப் போல் இல்லாமல்.. உனக்கென விண்மீன்கள் சுடர் விடும் பாதையை உருவாக்கு.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் முடிவிலி முத்தங்களுடன்…

அப்பா
சனவரி 6 – 2018.

என் இளமையின் பொன்னிறத் துகள்..

 

 

26195657_381630508928490_7593472573008726768_n

 

அவன்
என் இளமையின்
பொன்னிறத் துகள்.
என் விழிகளில் பிணைந்திருக்கிற..
வாஞ்சைமிகு வசீகரம்.
என் கவிதை ஏடுகளில்
நிறைந்திருக்கிற எனது அகம்..
பல சமயங்களில்
அவனே நானாக..நானே அவனாக
வாழ்ந்துக் கொண்டிருக்கிற
விசித்திர வாழ்வின் விந்தைக்கோடுகள்
நாங்கள் இருவரும்..

இதில் யார் குரு..யார் சீடன்..??
என்ற குழப்பமில்லை எமக்கு.
தானாகி போனதொரு வாழ்வில்
அன்பள்ள சிவக்கிறது கிழக்கு.

தோள் சேர்த்து.. கை பிணைத்து..
காலம் ஒன்றை கண் அசைவுகளால்..
வார்த்தை வளைவுகளால்.. கட்டி எழுப்ப
வாடா..வாடா..

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் Dhuruvan Selvamani Somu

நித்திய நிலவொன்றின் சத்திய வார்த்தைகள்..

26063421_379710325787175_827668468199724837_o

 

சொற்களின் ஊடே
ஒளிந்திருக்கும்
முட்கள் நட்சத்திரங்களைப்
போல மின்னி..
பேரன்பின் கதிர்களை
மறைக்கின்றனவா
என்றெல்லாம் நான்
சிந்திப்பதில்லை.

இன்னும் கூட
வார்த்தைப் பின்னல்களால்
உருவேறிய அந்த சாட்டை
ஆன்ம உதிரத்தின்
சுவை பருகுகிறது என்று
நான் கலங்குவதில்லை..

ஏனெனில்..
கொடுங்காயத்தின் வலி
மறைத்துக் கூட
என் உணர்வுகளின் நிலா
வெளிச்சம்..
உன் இருட்பாதையில்
உன் துணையாய்
நகரும் என்பதை நான்
அறிவேன்..

உரையாடல்களற்ற
பொழுதொன்று
கால நதியில் சருகென
மிதக்கும் அந்த நொடியில்..
உன் விழிகள் என்னைத்
தேடும்.

நான் தூரத்து புல்லாங்குழல்
இசையாய் கரைந்திருப்பேன்..

அக்காலைப் பொழுதில்
உன் தேநீர் கோப்பையில்..
உதிரும் உன் ஒரு துளி
கண்ணீரைப் பற்றிதான்
கவலை எனக்கு.

உன் குளிர் கால
போர்வையினுள் பரவும்
வெப்பமாய்.. என் கனவுகளை
அன்று நீ உணர்வாய்..

அதற்கு முன் புல்லின்
நுனியில் பூத்திருக்கும்
எனதன்பின்
பனித்துளி யாரும்
அறியாமல்..

அனலேறிய இவ்வாழ்வின்
சூடு பொறுக்காமல் ஆவியான
கதை..

உனது மிச்ச வாழ்வின்
தேடலாய் இருக்கக்கூடும்
என்கிற அச்சத்தில் தான்

உனது விடியலின்
வெளிச்சக் கீற்றாய்..
நான் எரிந்துக் கொண்டே
இருக்கிறேன்..

…..

அதை நீ
தீப்பந்தம் என்கிறாய்..
நான் மெழுகுவர்த்தி என்கிறேன்..

இந்த புரிதலின்
வேறுபாட்டினில் தான்..

இந்த முடிவிலிக் கவிதை‌‌..
சில பூக்களோடும்..
சில புன்னகைகளோடும்..
ரகசிய கண்ணீர் துளிகள்
பலவற்றோடும்..

தொடர்ந்துக் கொண்டே
இருக்கிறது.

……….

வரிசையில் நில்லுங்கள்.

24796508_371951016563106_1692215070418562796_n

 

அந்த தத்தளிக்கும்
கைகளை
விட்டுவிடுங்கள்..
இறுதி நம்பிக்கை
தீர்ந்த உச்சக் குரலோடு
முழ்கித் தொலைக்கட்டும்.

பொங்கும் கடலலைகளை
விழி அசையா வெறித்த
பார்வையோடு பார்த்திருக்கும்
அவர்களை விரைவாக கடந்துப்
போங்கள்..
காத்திருந்து கடற்கரை
மணலோடு மணலாய்
மறையட்டும்..

ஒதுங்கும் உடல்களை
ஏறெடுத்தும் பார்க்காதீர்கள்.
குண்டடி காயங்களோடு
கரை சேர்ந்தவைகளையே
எளிதாய் கடந்தோம்.
அலையோடு அலையாக
அழுகி மக்கட்டும்..

ஆர்ப்பரிக்கும் அந்த
கோப முழக்கங்களை
அலட்சியப்படுத்துங்கள்…
அடுத்த தேர்தலில்
ஐநூறு ரூபாய் சேர்த்துக்
கொடுத்து விடலாம்..

சுழன்றடித்த புயலில்
சிக்கி சின்னா
பின்னமாகி
உதிர்ந்த சருகாய்
உலகின் ஏதோ ஒரு
மூலையில் ஒதுங்கும்
தமிழனின் உடலம்
கண்டு பதறாதீர்கள்…

அவனுக்குதான்..

யாதும் ஊரே
யாவரும் கேளிர்..

அதனால்தான்..

அவனுக்கென
ஊருமில்லை..

கேளிராய் கேட்க
நாதியுமில்லை..

விடுங்கள்..

தமிழக மீனவனைப்
பற்றி இந்த வரிகள்
படிக்க நீங்கள்
செலவழித்து இருக்கிற
நொடிகளே போதுமானது..

ஏனெனில்..
அடுத்த நொடியில்
நீங்கள் கவலைப்பட..

விசால்,தீபா,தொப்பி,
கமல், ரஜினி என
நிறைய இருக்கின்றன..

விவாதங்கள் தொடர்கின்றன.

போய் வரிசையில் நில்லுங்கள்.

கடலானவனின் கதை..

 

21_2bg

 

அந்த புன்னகை
கடல்.
யாரும்
கறைப் படுத்தி
விட முடியாது.

அந்தப் பார்வை
கடவுளின்
சாயலுடையது.
யாரும் களங்கப்
படுத்தி விட முடியாது.

அந்த வீரம்
வானம்.
யாரும் அளந்து
விட முடியாது.

அந்த அறம்
மழை.
யாரும் மலராமல்
இருக்க முடியாது.

அந்த நேர்மை
சுடர் விண்மீன்.
யாரும் கவனிக்காமல்
கடக்க முடியாது.

அந்த தியாகம்
பெருமழை அருவி.
யாரும் நனையாமல்
தப்ப முடியாது.

அந்த மொழி
வீசும் மென்சாறல்.
யாரும் சிலிர்க்காமல்
சிதற முடியாது.

அந்த கருணை
பாலையின் ஊற்று.
யாரும் தணியாமல்
தடம் புரள முடியாது.

மொத்தத்தில்..
அந்த
மனிதன் ..

யாரும்
கடக்கவே முடியா..
பெருங்காவியம்.

உலகத்தமிழர்களுக்கு..

தலைவர் பிறந்தநாள் வாழ்த்துகள்.

நான் ஆகாயம் போல் வாழ்பவன்..

DSC_0513

 

எவரிடமும் யாசகம் பெறுவதல்ல அறிவு. சிலர் நினைப்பது போல தந்திரத்திலோ..குறுக்கு வழியிலோ பெற்று விடுதல்ல தகுதி. உலகின் விழிகள் உறங்கும் போது மூடா இமைகளை கொண்டு புத்தகங்களுக்குள் தன்னைத் தொலைக்கிற பயிற்சி.. நீண்ட பயணங்கள்.. ஒவ்வொன்றையும் பதிவு செய்ய சிறு வயது முதல் பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் எழுதி பார்த்து… படைப்பில் கரைகிற உளவியல்..

சிறு வயது முதல் உடன் பயணிக்கிற உடல் குறைபாடுகளை வைத்துக் கொண்டு வெல்ல துடிக்கிற உத்வேகம்.

உளராமல்,,தளராமல் வார்த்தைகளை விரயமாக்குகிற எவற்றிலிருந்தும் தள்ளி நின்று தியானம் போல மெளனிப்பது..

யாரிடமும் என்ன பேச வேண்டும் என்கிற அடிப்படை அறிவு. சொல் புத்தி கேட்டாலும்..அதிலுள்ள அரசியலையும்,உண்மைத் தன்மையையும் ஆராயாமல் ஏற்கிற சுய புத்தியை அழிப்பது…

இவையெல்லாம் ஒரு நொடியில் முளைப்பதல்ல.. கடும் உழைப்பினால், ஏற்படுகிற பயிற்சி..

இரவு பகல் பாராது உழைப்பினால் ஏற்படுகிற தன் ஊக்கத்தினால் விளைகிற முயற்சி.

எத்தனை முறை சரிந்தாலும்…நிமிர்கிற தெம்பு இருப்பதால் தான்.. சரிவுகளையும்,அழிவுகளையும் பயிற்சியானதாக பார்க்க முடிகிறது.

மற்றபடி நீங்கள் அவன் சரிவிற்காக காத்திருங்கள்.

அந்நேரத்தில் அவன் தன் நிமிர்விற்காக உழைத்து விட்டு போகிறான்…

நீங்கள் அடைக்கத்துடிக்கும் சிற்சில கதவுகளைத் தாண்டி ஆயிரம் வாசல்களை கொண்டிருக்கும் அவனது பயணம் முடிவிலியானது.

இதை கூட சொல்லாமல் செய்யலாம் தான்.

அடுத்தவனின் சரிவில்..அழிவில் தன் வாழ்க்கையை தேடுபவனை பார்த்து இப்போதும் பரிதாபம் தான் கொள்ள தோணுகிறது. ஒரு இறுதி பரிவுப் போல..

அணி சேர்த்தோ..புறம் பேசியோ வெல்ல முடிவதற்கு அவன் உங்களில் ஒருவன் அல்ல.

ஆயிரத்தில் ஒருவன்.

அணுஅணுவாய் பார்த்து அவனாய் செதுக்கி உருவாக்கிக் கொண்ட அவனது வாழ்க்கையை அழிக்க யாராலும் முடியாது.

உங்கள் வாழ்க்கையை உருவாக்க உழையுங்கள். உங்களுக்காக .. உங்கள் தகுதிகளுக்காக உழையுங்கள்.

நீங்கள் எல்லாம் வெல்லக்கூடிய.. அவனை தோற்கடிக்க கூடிய இடத்தில் அவனில்லை.

மற்றபடி..பொல்லாதவன் படத்தில் சொல்வது போல்…

அவனை எல்லாம் அப்படியே விட்டணும்..

ஏனெனில்… அவன் ஆகாயம் போல் வாழ்பவன்..

டேனியலின் தாய் மடி…

 

 

crying_baby_by_adelelliethy-d50418n

குழந்தைப் பருவம் தேவதைகளால் ஆசிர்வதிக்கப்பட்ட… பட்டாம்பூச்சிகளின் சிறகு சொருகப்பட்ட..தேனமுது நிரப்பப்பட்ட கனவுகளால் ஆனது என்று பொதுவிதி எழுதப்பட்டு இருக்கிறது. ஆனால் வாழ்வின் நிலையாமையும், அபத்தமும், நிரம்பிய விசித்திரக் கோடுகள் கலைத்துப் போட்ட ஓவியமாய் பால்யத்தைக் கொண்ட குழந்தைகளும் நம்மிடையே இருக்கிறார்கள் நம்மில் யாரால் உணர முடிகிறது..?

எதனாலும் ஆற்ற இயலா காய வடுக்களை இளம் வயதிலேயே விதி சமைத்த கோரத்தால் பெற்று விட்ட குழந்தைகள் தனித்துவமானவர்கள். பொங்கி வரும் புன்னகை தருணங்களிலும் கண்களில் ததும்பும் காயத்தை மறைக்க முடியாமல் தேம்பி நிற்கும் அவர்களது வாழ்க்கை எப்போதும் மர்மமானது. இயல்பான குழந்தைமைக்கும்… அவர்களுக்கு நேர்ந்து விட்ட வாழ்வியல் முரண்கள் அவர்களுக்கு பரிசளித்திருக்கிற சாபங்களுக்கும் நடுவே அல்லாடுகிற ஊசலாட்டம் அவர்களின் வாழ்வு முழுக்க தொடர்ந்து துரத்தி வரும் நிலையாமையின் வடிவம் கொண்ட வெறி பிடித்த ஓநாய்களுக்கு சமமானது.

சிறு வயதிலேயே எதிர்பாராமல் பெற்றோரை இழந்தவர்கள்… எதன் காரணத்தினாலோ பெற்றோரை இழந்து அனாதையாக்கப் பட்டவர்கள்.. வாழ்வின் ஓட்டத்தில் சுமையாகி கைவிடப்பட்டவர்கள்.. உடனிருந்து உறைகிற நோயின் காரணமாய் பெற்றோரின் நடுவே கதகதப்பாய் உறங்குகிற இரவுகளை தொலைத்தவர்கள் என காயம் பட்ட பால்ய காலத்தை கொண்ட குழந்தைகள் சமூக வெளியில் புறக்கணிக்கப்பட்டவர்களாக நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

அவர்களை எங்கும் எளிதில் அடையாளம் காணலாம்..சற்றே தயக்கத்துடன்..அச்சத்துடன் அவர்களுடன் உறைந்திருக்கிற வித்தியாசமான உடற்மொழி அவர்களை தனித்துக் காட்டும்.

எத்தனையோ அனாதை இல்லங்களில் …சாலை ஓரங்களில் குழந்தைமைக்கான எவ்வித இயல்புமற்று பிறந்து விட்ட காரணத்திலேயே வாழ்ந்தே தீர வேண்டிய நிர்பந்தம் தான் அவர்கள் எதிர் கொள்கிற மாபெரும் துயரம்.ஏதேதோ ஆலயங்களில் புண்ணியத்தை தேடுபவர்கள் இந்த குழந்தைகளோடு ஏதோ ஒரு நாள் செலவிட்டால்….வாழுகின்ற நாளொன்றுக்கு அர்த்தம் ஏற்படும்.

புறக்கணிக்கப்பட்டு …கைவிடப்படும் ஒவ்வொரு குழந்தையும் தங்கள் ஆன்மாவில் பெரும் வலியை சுமக்கிறார்கள். அதை யாராலும் போக்க முடியாது. விவாகரத்து வழக்கிற்கென தாயாலோ..தந்தையாலோ அழைத்து வரப்படும் குழந்தைகளின் கண்களை பாருங்கள். வலியை சுமந்து மெளனத்தை சுமக்கும் ஊமை விழிகள் அவை.

எனது பால்யம் சென்னை அடையாறு ஆந்திரமகிள சபா என்று அழைக்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளியில் கழிந்தது. என்னோடு இருந்த பலர் பெற்றோரை இழந்தவர்கள். மிக நீண்ட வாரண்டாவில் கம்பி வலை அடைக்கப்பட்ட சன்னலோரத்தில் நின்றவாறே எதையோ வேடிக்கை பார்த்துக் கொண்டே உறைந்து போய் நின்றுகொண்டு இருக்கும் பல சிறுவர்களுக்கு நடுவே நானும் ஒருவனாய் இருந்தக் காலக்கட்டம் அது. எனது நோயின் காரணமாய் நான் பெற்றோரை பிரிந்திருந்தேன். ஆனாலும் மாதத்தின் முதல் வார சனிக்கிழமை அன்று என் அம்மா என்னை பார்க்க வந்து விடுவார். அன்றைய நாளில் பெரும்பாலும் வழிபாட்டு நேரமான காலை 8 மணிக்கு என் அம்மா கும்பகோணத்தில் இருந்து நீண்ட தூரம் பயணித்து வந்து எனக்காக காத்திருப்பார். என் அம்மா என்னை காண வந்திருப்பதை பெரும் பாலும் என்னிடம் புன்னகைப் பொங்க அறிவிப்பது அண்ணன்கள் டேனியலும், கில்பர்ட் ராஜாவும் தான்.

குறிப்பாக அண்ணன் டேனியல். அவருக்கு தாய் தந்தை கிடையாது. விடுதிலேயே வளர்பவர். அப்போது அவர் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

என் அம்மா சனிக்கிழமை வந்து… அன்றைய இரவு என்னுடனேயே தங்கி…மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஊருக்கு திரும்புவார். ஓவ்வொரு முறையும் அம்மா வந்தவுடன் ..என் கூடவே இரும்மா என்று நான் அடம் பிடிப்பதும்..நான் உன் கூடத்தான் இனி இருக்கப் போகிறேன் என அம்மா சொல்வதும் வழக்கமான நிகழ்வுகள். அப்போது டேனியல் அண்ணனும் அம்மா சொல்வதை ஆமோதித்து என்னை தேற்றுவார். ஆனால்..எங்கள் மூவருக்கும் தெரியும்..அது நடக்கப் போவதில்லை என.. இருந்தாலும் ஒவ்வொரு முறையும் நான் அம்மா என்னுடன் நிரந்தரமாக இருக்கப் போகிறார் என உறுதியாக நம்பி கனவில் திளைப்பேன். சனிக்கிழமை இரவு அம்மாவை இறுக்கி கட்டிப் பிடித்துக் கொண்டு அம்மாவின் சேலை வாசத்தை முகர்ந்தவாறே நான் அயர்ந்து நிம்மதியாக தூங்கிய உறக்கத்தை இதுநாள் வரைக்கும் தூங்கியதில்லை.. அந்த இரவுகள் என்றும் மங்காத நட்சத்திரங்களானவை என்பது இன்றளவும் நினைவில் பெருகும் நதியென என்னுள் சலசலத்துக் கொண்டே இருக்கும்.

அம்மா ஊருக்கு திரும்ப வேண்டிய ஞாயிற்றுக்கிழமை மதியத்தில் இருந்து நான் அழத் தொடங்கி விடுவேன். என்னை ஆற்றுப்படுத்த மதிய உணவு முடிந்தவுடன் அம்மா எனக்கு கதை சொல்லத் தொடங்குவார் .. எப்போதும் எனக்கு பிடித்த கதை அது மட்டும் தான். எப்போதும் அதைதான் அம்மா சொல்ல வேண்டும். பறக்கும் குதிரை கதை. வானலோகத்தில் இருந்து பறந்து வரும் வெள்ளைக் குதிரை நிலங்களில் இருக்கிற பயிரை மேய்ந்து விட்டு பறந்து போய் விடுவதையும் …அதை அந்நாட்டின் இளவரசன் கண்டு பிடித்து அடக்கி தன் வயப்படுத்துவதான கதை… பாதி கேட்டுக் கொண்டிருக்கும் போதே நான் உறங்கி விடுவேன். ஏதோ ஒரு நொடியில் திடுக்கிட்டு நான் விழிக்கையில் என்னருகில் படுத்திருந்த அம்மா என் பக்கத்தில் இருக்க மாட்டார். நான் கத்தி கூறியவாறே சன்னலோரம் போய் பார்க்கையில்…தூரமாய் கானல் நீர் போல அம்மா போய்க் கொண்டு இருப்பார்…நான் அம்மா…அம்மா என கத்தி தீர்க்கும் போது டேனியல் அண்ணா தான் என்னை கட்டி அணைத்துக் கொள்வார்.

அவரிடம் இருக்கிற வண்ண வண்ண பென்சீல்களை கொடுத்து என்னை வரையப் சொல்லி என் கவனத்தை மாற்ற முயல்வார். ஒரு கட்டத்தில் நானும் சமாதானமாகி வரைவதில் மும்முரமாவேன். அப்படியே அவரோடு படுத்து உறங்கியும் விடுவேன்.

டேனியல் அண்ணா போலியோவால் இரு கால்களும் பாதிக்கப்பட்டு..இரு தோள்களிலும் கட்டை வைத்து நடந்தாலும் கூட..அப்போதே நிறைய வரைவார். பிரார்த்தனை கூட்டங்களில் அவரே பேச்சாளர். கடவுளின் குழந்தைகளான நம்மை கடவுள் என்றும் கைவிட மாட்டார் என உறுதியான குரலில் சொல்லும் போது.. கடவுள் வானிறங்கி வந்து நம் கரங்களை பற்றிருப்பார். அந்த அளவிற்கு உணர்வுகளை சொற்களில் வடிப்பதில் டேனியல் அண்ணா ஒரு தேவதன்.

ஒரு வெள்ளிக்கிழமை மதியம் என்னை டேனியல் அண்ணா தனியே அழைத்துப் போய் தான் சொல்வதை யாரிடமும் சொல்லக் கூடாது எனக் கூறி நாளை உன் அம்மா வருவாங்களா என கேட்டார். கண்டிப்பாக அண்ணா என்ற என்னை .. எனக்கு ஒரு ஆசை டா .. அம்மா மடியில் ஒரு 5 நிமிடம் நான் படுத்துகிட்டா என தயக்கமாக கேட்டார்.

அந்த வயதில் அக்கேள்வியை எதிர்க் கொள்ள என்னால் முடியவில்லை… என் அம்மா..அவங்க மடியில் இவர் ஏன் படுக்கணும் என எனக்கு கோபம். அதெல்லாம் முடியாது…அது என் அம்மா என்று வெடுக்கென்று சொல்லி விட்டு வந்து விட்டேன். திடீரென டேனியல் அண்ணா எனக்கு எதிரியாகிப் போனதாக நான் நினைத்துக் கொண்டேன்

. அன்றைய இரவு உணவின் போது கூட அவரை பார்க்க விரும்பாமல் தவிர்த்தேன்..

மறுநாள் என்னை காண வந்திருந்த அம்மாவிடம் கோபமாய் இதை தெரிவித்தேன். ஏண்டா இப்படி சொன்ன..அவனும் என் மகன் தானே படுத்துட்டு போறான்..பாவம் இல்லையா அவன்., என கேட்ட அம்மாவிடம் அவருக்கு தான் அப்பா அம்மா இல்லையே… அவர் எப்படி உன் மகனாவார் என கேட்ட என்னை அம்மா கோபமாய் பார்த்து விட்டு டேனியல் அண்ணாவை தேடிப் போனார். எங்கு தேடியும் டேனியல் அண்ணா கிடைக்கவில்லை. அம்மா என்னை திட்டியவாறே ஊருக்கு போய் விட்டார்..

அதன் பிறகு இரண்டு நாள் கழித்து டேனியல் அண்ணாவை பார்த்தேன்..அவர் என்னிடம் எதுவும் பேசவில்லை.. என்னை பார்க்க நேரும் சந்தர்ப்பங்களில் எதுவும் பேசாமல் அமைதியாக தலைகுனிந்து சென்று கொண்டிருப்பார்.

அதன் பிறகு சில மாதங்களில் என் மருத்துவ சிகிச்சை முடிந்து ஊருக்கு திரும்பும் போது சொல்லி விட்டுப் போக டேனியல் அண்ணாவை தேடிய போது அவர் சிக்கவில்லை. வேண்டுமென்றே என்னை தவிர்த்திருந்தார்.

கால நதியின் இரக்கமற்ற வேகத்தில் ஆண்டுகள் ஆயின… எனக்கும் திருமணம் ஆகி இரண்டு மகன்களை பெற்றெடுத்தேன்.

ஒரு பணி நிமித்தமாக சென்னை போன போது பல ஆண்டுகளுக்கு பிறகு ஆந்திர மகிள சபா சென்றிருந்தேன். டேனியல் அண்ணா வை பற்றி விசாரித்த போது அவர் இன்னமும் அங்கு இருப்பதாகவும்,அங்கே ஓவிய ஆசிரியராகப் பணி புரிவதாகவும் சொன்னார்கள்.

அவரை பார்க்க போன போது அவர் வகுப்பறையில் ஏதோ வரைந்துக் கொண்டிருந்தார். முடியெல்லாம் நரைத்து அடையாளம் தெரியாத அளவிற்கு வயதாகி இருந்தார்.

அண்ணா…என்று அழைத்த என்னை அவரால் சட்டென அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. நான் தான்னா என்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பிறகு அவரது கண்கள் ஒளிர்ந்தன. இறுகிக் கட்டிக்கொண்டார். இன்னமும் திருமணம் ஆகாமல் இருந்த அவர் என் தொழில், திருமணம்,என் குழந்தைகள் என அனைத்தையும் கேட்டார்.

இரண்டு பசங்களடா…எப்படி இருக்காங்க…

ஓடியாடி விளையாடுறாங்கண்ணா…அடம் தாங்கல….. என சொன்ன என்னை உற்றுப் பார்த்த அவர் … விடு… நம்மைப் போல இல்லாம நல்லா விளையாடட்டும். கர்த்தரே… பிள்ளைகளுக்கு நன்மை செய்யப்பா என ஜபம் செய்தார்.

பிறகு அவரிடமிருந்து விடைப்பெற்றேன். சில ஓவிய பயிற்சி புத்தகங்களை என் மகன்களுக்கு பரிசாக அளித்து வாசல் வரை வந்து வழி அனுப்பினார்.

ஒரு விஷயம் எனக்கு உறுத்திக் கொண்டே இருந்தது.

ஏனோ அவர் இறுதி வரை அம்மாவை பற்றி கேட்கவும் இல்லை.. நான் சொல்லவும் இல்லை.

ஒரு இரவில்…எல்லையற்ற விடியல்கள் —

 

Ilayaraja-16-2

எப்போதும் இல்லாத அளவிற்கு அந்த இரவு அவ்வளவு அமைதியானதாக என்னுடன் பயணித்துக் கொண்டு இருந்தது. இரவுகள் விசித்திரமானவை. மனித உணர்ச்சிகளை ஒரு இரவால் மூர்க்கம் கொள்ள வைக்கவும், அமைதிப்படுத்தி ஆற்ற வைக்க முடியும் என்பது யாரால் மறுக்க முடியும்.. மனித வாழ்வின் பாடுகளை மனித மனம் அசை போடுவதற்காக இரவு ஒரு நீண்ட அமைதி வெளியை ஏற்படுத்துகிறது.

அப்படி ஒரு இரவில் தான்.. நியான் விளக்குகள் ஒளிர்ந்த அந்த தேசிய நெடுஞ்சாலையில் எனது மகிழுந்து அமைதியாக விரைந்துக் கொண்டு இருந்தது. தனிமை கொப்பளிக்கும் பயணங்களில் எல்லோருக்கும் வழித்துணையாக வாய்க்கும் இளையராஜா தான் எனக்கும் வழித்துணையாய் வாய்த்திருந்தார். மகிழுந்து ஓட்டப் பழகியதில் இருந்து தனிமையாய் இவ்வளவு நீண்ட தூரம் பயணிப்பது இதுதான் முதன் முறை.ஏறக்குறைய தமிழ்நாட்டை குறுக்கே கடக்கிறேன். இந்த பெருநிலத்தில் நானும் நகரும் புள்ளியாக.. விழிப்புற்ற ஆன்மாவோடு.. துளித்துளியாய் சொட்டும் இரவொன்றில் தனிமையின் விரல் பிடித்து கடப்பது நினைப்பது பரவச வெளியில் உன்மத்தம் கொண்டிருந்தேன்..

எல்லோராலும் கைவிடப்பட்ட..நோயுற்ற ஒரு குழந்தையாய் இந்த உலகத்தில் நான் தோன்றினேன். என் பால்யத்தில் என் அம்மா மட்டும் என் தோழி. அவளின் கலங்கும் விழிகளும்..எதிரே இருக்கும் சாயம் போன வீட்டு வசதி வாரியக் குடியிருப்புச் சுவரும் தான் எனது பால்யக் கால நினைவுகள். அம்மாவின் கதகதப்பான உள்ளங்கைகளுக்கு அப்பால் ஒரு உலகம் இருக்கிறது என்று நம்ப முடியாத எளிய ஆன்மாவை கொண்டிருந்தனாலோ என்னவோ.. இந்த பயணம் எனக்கு மிகப்பெரிய சாகசமாக இருந்தது. வாழவே முடியாது என என்னாலே நம்பப்பட்ட என்னாலும் இந்த உலகில் எந்த புள்ளிக்கும் மிகச்சாதாரணமாக ஒரு பறவைப் போல தனித்து பறந்து போய் விட முடியும் என்கிற பெரு நம்பிக்கையை இந்த பயணமும், என் மகிழுந்தும் எனக்கு தந்திருந்தன..

இரவு விடியலை நோக்கி விரைந்துக் கொண்டிருந்தது. கண்கலங்கியவாறே என்னுள் மகத்தான நம்பிக்கையை ஏற்படுத்திய அந்த பேரன்பின் வெளிச்சத்தில் எனது பயணம் நெகிழ்வின் தாலாட்டோடு நீண்டது. இரவில் மிகப்பெரிய யானை அமர்ந்து இருந்தது போன்ற உறைந்திருந்த அந்த பெருமலைகளும், ஏற்ற இறக்க சாலைகளும் என்னை பரவசத்தில் ஆழ்த்தி இருந்தன..

சற்றே என்னை ஆசுவாசப்படுத்த … சாலையின் ஒரத்தில் இருந்த அந்த தேநீர் கடைக்கு முன்னால் என் மகிழுந்தை நிறுத்தினேன். ஏனோ இறங்க மனமில்லாமல் இருக்கையை சற்று சாய்த்து வேடிக்கை பார்த்தவாறே அமர்ந்திருந்தேன். அது ஒரு எளிய தேநீர் கடை. கடை மூடும் நேரம் போல. அந்த கடைக்காரர் சற்றே கடுகடுப்பும், முணுமுணுப்புகளும் உடைய மனிதராக தெரிந்தார். அந்த கடை வாசலில் அழுக்கு உடைகளோடு அமர்ந்திருந்திருந்த மனநிலை பிசகிய ஒருவரை அவர் ஏசிக் கொண்டிருந்தார். ஏய்..எழுந்து போ.. இனி இங்கே உட்கார்ந்தால் அடிப்பேன்..போ என்றெல்லாம் ஏசிக் கொண்டிருந்தார்.

கடையை மூடி விட்டு கிளம்பும் அவசரத்தில் இருந்த அவருக்கு அந்த மனநிலை தவறியவர் போல இருந்தவர் மிகவும் தொந்தவராக இருந்தார் போல.. கடைக்காரர் ஏதாவது செய்து அவரை விரட்டி விட முயன்றார்.

ஆனால் அந்த ஏச்சு,பேச்சுகளும் அந்த மனநிலை பாதித்தவரை பாதிக்கவில்லை. ஒரு கல்சிற்பம் போல அந்த மனிதர் உறைந்திருந்தார். வெறித்த பார்வையோடும், வாயில் எச்சில் ஒழுக..கலைந்த தலையோடும், தாடியோடும் அவர் அமர்ந்திருந்தது என்னவோ போலிருந்தது. வார்த்தைகளை நீராய் கொட்டி உறைந்திருந்த அந்த மனிதனை அசைக்கப் பார்த்த கடைக்காரர் ஒரு சமயத்தில் அலுத்துப் போனார்.

அருகே இருந்த பண்பலை வானொலியை ஒலிக்க வைத்து விட்டு இருக்கும் நாற்காலிகளை கடைக்காரர் மெதுவாய் அடுக்கி வைக்கத் தொடங்கினார்.

அக்கணத்தில் தான் இளையராஜா பண்பலையில் சோலை பசுங்கிளியே… என்று பாடத்தொடங்கினார். அந்த நள்ளிரவில்.. அப்பாடல் தானாய் தோன்றிய ஊற்றாய் எங்களுக்குள் ஊற தொடங்கியது. அந்த இசையும், அப்பாடலின் வலியும் ஏதோ மனதை பிசையத் தொடங்கினது. அதுவரை கடுகடுப்பாய் இருந்த கடைக்காரர் கூட அமைதியாகி விட்டது போல தோன்றியது. அந்த இரவை தன் வயப்படுத்தி தனது கட்டுப்பாட்டுக்குள் அந்த பாடல் இழுத்துக் கொண்டே சென்றதை என்னால் உணர முடிந்தது.

பாடல் முடிந்தது. வானொலியை நிறுத்தினார் கடைக்காரர். அந்த நிசப்த வெளியும், கேட்ட இசையும் இந்த உலகை வேறொரு தளத்திற்கு கொண்டு சென்றிருந்தன. திடீரென பெருங்குரல் எடுத்து கத்தி அழத் தொடங்கினார் அந்த மனநிலை தவறியவர். அவரை வேதனையோடு கடைக்காரர் பார்த்துக் கொண்டிருந்தார்.

மனித வாழ்வு எத்தகையது..? எதற்காக இந்த பாடுகள்… எதற்காக இவ்வளவு வலிகள்… எதை நாம் அதிகம் நேசிக்கிறோமோ அதுதானே நம்மை வலித்து கொல்கிறது…? என்றெல்லாம் என் சிந்தனை பல திசைகளில் விரிந்துக் கொண்டிருந்த போதுதான் அது நிகழ்ந்தது..

அதுவரை நிறுத்தி இருந்த அடுப்பை மீண்டும் பற்ற வைத்தார் அந்த கடைக்காரர். ஒரு தேர்ந்த முதிர்ச்சியோடு ஒரு தேநீரை தயாரித்து ஒரு கண்ணாடிக் குடுவையினுள் ஊற்றி அந்த மனநிலை பிசகியவருக்கு அருகே வைத்தார். சாப்பிட்டு இங்கே படுத்துக்கோ.. என்றவாறே விளக்கையும், அடுப்பையும் அணைத்த வாறே அவர் புறப்பட்டார். அடிக்கடி கண்களை துடைத்துக் கொண்டே வேக வேகமாய் நடந்து இருளில் கரைந்துப் போனார் அந்த கடைக்காரர்.

ஆனால் மனநிலை பிசகியவர் அழுகையை நிறுத்தவில்லை. நானும் புறப்பட்டேன். மெதுவாய் மகிழுந்தை ஓட்டிக் கொண்டு போன எனக்கு அந்த அழுகை ஒலியை தாங்க முடியவில்லை.

வலியும்..பாடுகளும்..காயங்களும் இல்லாத ஆன்மா யாருக்கும் இல்லாதது தான் கடவுளை தோற்றுவித்து இருக்கிறது என்று உணர்ந்த தருணம் அது.

இதையெல்லாம் தாண்டி ஒரு இசை..ஒரு குரல்..உயிரை உலுக்கி உள்ளுக்குள் புரையோடிப் போன ஒரு காயத்தை கண்ணீராய் சுரக்க வைக்கிறதே… நரகமாகிப் போன மனித வாழ்வில் ஏதோ ஒரு நொடியில் நம்மை ஆற்றுப்படுத்த கண்ணீர் தானே ஒரே வழி.

இதில் யார் மனநிலை பிசகியவர் என்று யோசித்த போது..நாம் எல்லாருமே தான்.. என்று நினைக்க தொடங்கியது…

இரவின் இருளை கிழித்து..என் மகிழுந்து விரைந்துக் கொண்டிருந்தது.

.

Page 32 of 57

Powered by WordPress & Theme by Anders Norén