பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Author: மணி செந்தில் Page 33 of 57

ஒரு மணல் வீடும் சொச்ச பாரத்தும்..

22730590_356813458076862_6275861430852755470_n

அந்த பிஞ்சு
விரல்களுக்கும்
ஒரு மணல் வீடு
இருந்திருக்கும்..

அலை தழுவி
கலைக்காத
தொலைவில்..
காக்கிச் சட்டைகளும்
கந்து வட்டியும்
கனவுகளை அழிக்காத
வரையில்…

அந்த மணல் வீடு
அப்படியே
இருந்திருக்கும்..

இரவின்
கரு நிழல்
பகலின் மீதும்
படிய தொடங்கும்
நிலத்தில் தான்
குழந்தைகள் எரியத்
தொடங்குகின்றன…

கொழுந்து விட்டெரியும்
நெருப்பில் பொசுங்கும்
மயிலிறகு தேகங்களுக்கு
எரிவதற்கான காரணங்கள்
தேவையில்லை..

புரியவுமில்லை.

பணம் தின்ன
பிணம் பண்ணும்
நிலத்தில்
இனி ரணம்
சுமக்க இயலாது என
தீ கனம் சுமந்து
எரிகிறார்கள்.

நேற்றைய ஊடகப்
பசிக்கும்..
குற்ற உணர்வற்ற
நமது
முணுமுணுப்புகளுக்கும்
தீ நியாயம்
செய்திருக்கிறது.

இன்றையப் பசிக்கு
நியாயம் செய்ய
சாவின் நாவுகள்
டிஜிட்டல் பாரத
வீதிகளில் தேடி
அலைகின்றன..

எங்கோ முகவரியற்ற
வீதிகளில்
விளையாடிக்கொண்டு
இருக்கும்
குழந்தைகளோ..

அறுக்க கதிரற்று
உயிர் உதிர்க்க
காத்திருக்கும் விவசாயியோ
அவைகளுக்கு கிடைக்கக்
கூடும்..

பிரதமரின் ஆடை
செலவிற்கு கூட
பெறுமானம் இல்லாத
குழந்தைகள் செத்துதான்
போகட்டுமே..

இறக்கை விரித்து
அயல் தேசம் பறக்கிற
அவசரத்தில்
விவசாயி சாவு
விக்கலுக்கு கூட
சமமானதில்லை..

சாகட்டும்.

நீரோவின்
புல்லாங்குழலுக்கு
சாவுகளைப்
பற்றி சங்கடங்கள்
இல்லை.

…..
எல்லாம் கடக்கின்றன.
அவசர கதி வாழ்வில்
மறதி என்பது நீதி.

இன்று
கவலைப்பட..
கோபம் கொண்டு
இரண்டு கெட்ட வார்த்தைகள்
உதிர்க்க..
காரணங்கள் கிடைக்கும்
வரை..

நமக்கு சொச்ச பாரத்தும்
மிச்ச கருப்புப் பண
கனவும் இருக்கவே
இருக்கின்றன..

கூடவே நாம்
உச்சுக் கொட்ட
ஒரு நாள் செய்திகளும்..

ஆகையால் எனக்கு கடலென்றும் பெயர் …

 

header_essay-stormy-nationalgeographic_2474065

நள்ளிரவின்
நட்சத்திர மிதவைகளோடு
எனக்கு முன்
உயிர்ப்புடன்
உரையாடிக் கொண்டிருந்த
அந்த பெருங்கடலுக்குள்
சட்டென பாய்ந்தேன்..

எனக்குள்ளும்
ஆர்ப்பரித்து
கிடக்கிற அலைகளும்..
ஆசைகளாலும்
இருண்மைகளாலும்
இறுகிக் கிடக்கிற
சில நினைவுப் பாசிகள்
படிந்திருக்கிற
பாறைகளும் நிரம்பிக்கிற
கடலொன்று இருக்கிறது
என அறியாமலேயே
பெருங்கடல் என்னை
உள் வாங்கியது.

திணறிய மூச்சுக்கூட்டில்
சில கனவுக் குருவிகள்
கத்திக் கொண்டிருந்ததை
கவனிக்காத பாவனையோடு
மூழ்கி தீர தொடங்கினேன்..

உடைந்த மண்பானை
குடுவை என உடலம்
மாறிப் போனதாய்
உன்மத்தம் கொண்டேன்..

அடுக்கடுக்காய் சரிந்த
வாழ்வின் கசப்பு மீந்த
ஓலைகளில் இன்னும்
மங்காமல் தேங்கிற்று
என் பால்யத்தின்
புன்னகை ஓன்று.

என் விழிகளொடு
கசிந்தவை எல்லாம்
கடலோடு கலக்க..

என்னுள் மிஞ்சியவையும்
கடல் நீலமாய் மாற..

அந்த முழு நிலா இரவில்
நானே பெருங்கடலானேன்..

என்றேனும் உங்களில்
உணர்ச்சிகளின்
விளிம்பில் பேயாட்டம்
ஆடும்
யாராவது உணர்ந்துக்
கூட பார்க்க இயலும்..

சற்று முன் நீர்
தெளித்து
உங்கள் கண்ணீரையோ..
மாசற்ற புன்னகையையோ..
நனைத்து விட்டு
மீண்டும் கடலுக்கே
திரும்பிய அந்த
பேரலை…

நானாக இருப்பேன் என.

இறுதி மேடை..

22310419_354474694977405_8608714965574738064_n

தேர்ந்தெடுக்கப்பட்டு
உருவாக்கப்பட்ட
பொன்னிற மாலை ஒன்றில்..
அந்த சிவப்பு கம்பளம்
விரிக்கப்பட்ட மேசையின்
முன்
அவர்களெல்லாம்
அகம் மகிழ ஒன்று
கூடி இருந்தார்கள்..

கனிவு நிரம்பிய
ஒருவன்
விழிகளை
பிடுங்கிதான்
அம் மேசையின்
மெழுகு வர்த்தி
கொளுத்தப்பட்டிருந்தது.

நம்பிக்கை இறந்த
அவனது
ஆன்மாவின் உதிரத்துளிகள்
அவர்களது கண்ணாடிக்
கோப்பையை செந்நிற மாய்
நிறைக்க…
ஆரம்பித்தது அவன்
எழுதிய கவிதை
ஒன்றின் மேல்…
வன்ம வெறுப்புணர்வின்
வண்ணம் பூசும் வேலை..

காவியமாய் மலரத் தொடங்கிய
கவிதையை அவரவர் தங்கள்
அழுக்குகளுக்கு ஏற்ப
அதை மலிந்த ஓவியமாய்
மாற்றிக்கொண்டிருந்தார்கள்.

வெட்டப்பட்ட அவனது
ஆழமான நம்பிக்கைகள்
ஆங்காங்கே
அந்த அறை முழுக்க
மாமிசத்துணுக்குகளாய்
சிந்திக்கிடக்கின்றன..

அவரவரின் துரோகங்களுக்கு
அவனின் சொற்களை
தூக்கிலேற்றி
தங்கள் சொற்களின்
மேல் புனித பூச்சு
நிகழ்த்தினார்கள்.

ஏதோ தருணத்தில்
அவர்களுக்காக
அவன் சிந்திய
கண்ணீரின்
வெப்பத்தில் தான்
அவர்கள்
மாலை நேர
மயக்கத்து குளிர்
காய்ந்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களது காலணி
இடுக்குளில் இடறப்பட்ட
அவனது
களங்கமற்ற நேசத்தின்
வண்ணச்சிறகுகள் மீது
எளிதில் எச்சில் துப்பி
தூரப் போனார்கள்.

அவனது இறப்பில்
மகிழ்ந்திருந்த அவர்களுக்கு
தெரியாது..

அவரவர்களுக்கு என்று
ஒரு செந்நிற மேடை
தயாராகி காத்து இருக்கிறது
ஒரு பொன்மாலை விருந்திற்காக..

பூனை வளருங்கள்..

 

22405521_351864861905055_1599742958714680446_n

 

பூனை வளருங்கள்.

உங்களுக்கு
அடிமையாய் இருக்க..

உங்கள் வருகையை
எதிர்பார்த்திருக்க..

உங்கள் கால்களில்
பணிந்து நளிந்து
குழைய..

நள்ளிரவுகளில்
கதகதப்பாய்
உங்களோடு உறங்க..

நீங்கள் மிச்சம்
வைக்கும் எதையும்
நாசூக்கு பார்க்காமல்
நக்கித் தின்ன..

எதன் பொருட்டும்
உங்கள் அதிகாரத்தின்
மீது
சொல்லொன்றும்
உரைக்காமல்
மெளனிக்க..

ஏவும் பொழுதுகளில்
உங்கள் சுட்டு விரல்
காட்டுகிற…
எலிகளையும்
இன்னும் பிறவையும்
வேட்டையாட..

பூனை வளருங்கள்.

அது.
மனம் பிசகும்
தருணமொன்றில்
நம் கழுத்தை
கவ்வும் அபாயம்
இருப்பினும்…

தமிழ்த்தேசியம்- சில புரிதல்கள்.

 

22228191_351255648632643_1871345362821044997_n

தமிழ்த்தேசியம் என்பது தமிழ்த்தேசிய இன நலனிற்கான கருத்தியல். இத்தனை ஆண்டு காலம் உரிமைகள் மறுக்கப்பட்டு..அடிமை இனமாக ஆளப்பட்டு வருகிற ஒரு இனத்தின் மீள் எழுச்சிக்கான கருத்தியல்.

இது மற்ற இனங்களின் மீதான வெறுப்புணர்ச்சியில் கட்டமைக்கப்படும் கருத்தியல் அல்ல. மாறாக எம் இனத்தின் மீதான பற்றுணர்ச்சியில் உருவான கருத்தியல்.

அதுவும் வெறும் பற்றுணர்ச்சியில் உருவானது அல்ல.. ஒன்றரை லட்சத்திற்கும் மேலான எம் இனத்தாரை இழந்த போது..காக்க முடியாமல் போனது எதனால் என சிந்தித்ததன் விளைவு..புரிதல் .

தமிழ்நாட்டை நேசிக்கும் எவரும் தமிழ்நாட்டினை ஆள உரிமை உள்ளவர்கள் என பேசுபவர்கள் தன்னை தமிழ்த்தேசியர்களாக ஏன் காட்டிக் கொள்ள வேண்டும்… நீங்கள் சர்வ தேசியனாக காட்டிக் கொண்டு போக வேண்டியதுதானே..

ஆனால் தமிழ்த் தேசியராக அடையாளப்படுத்திக் கொண்டு..உலக தேசியம் பேசி கீழ்மைப் பட்டு அம்பலப்பட்டு நிற்கிற திராவிட கருத்தியலுக்கு காவடி தூக்குகிற வேலை.

தமிழ்நாடு தமிழருக்கே வா..இல்லை தமிழ் நாட்டை நேசிப்பவருக்கா… என்றால் வா..வாழ்..நேசி…நேசிக்கப்படு. ஆனால் இம் மண் அதன் பூர்வக்குடிகளுக்கானது என்ற புரிதலோடு நேசி.

என் மண் எனக்கானது என்பதை மறுத்து இங்கே வாழும் பிற மொழி சிறுபான்மை மக்களை இம் மண்ணின் பூர்வக்குடிகளுக்கான அரசியலை எதிர்ப்பு அரசியலாக காட்ட முனைவதுதான் தமிழ்த்தேசியமா..

பிறகு எதற்கு தமிழ்நாடு..தமிழர் உரிமை என்றெல்லாம் பேச வேண்டும்..

இதற்கு இந்தியத் தேசியம் பேசி காவிக்கொடி பிடிப்பவன் எவ்வளவோ மேலானவன். குழப்பாமல் நம்மை எதிர்க்கிறான்.

நாம் தெளிவாக இருக்கிறோம். எதிரிக்கும் இது புரிந்திக்கிறது.

நடுவே குழப்ப நங்கூரமிட்டு..குழப்பக் குட்டையில் திராவிட மீனை தேடும்
,”தோழர்கள் ” மீண்டும்..மீண்டும் அம்பலப்படுவார்கள்..

சாதி ஒழிப்பினை பிரதானப்படுத்துவதன் நுண்ணரசியல் இங்கே ஏற்கனவே வலிமையோடு திகழும் சாதீய உணர்வை இன்னும் வலிமைப்படுத்தவே..ஊரும் ,சேரியும் சேர ஓர்மைப்புள்ளிகளை பேசாது வெறுமனே சாதி ஒழிப்பு அரசியல் பேசுவது பலனற்றது..புனைவுகளுக்கு ஏன் பலன்..இன நலன்..?

வலிந்து கட்டப்படும் கதாநாயக பிம்பம் யாருக்காக..எந்த எழுச்சிக்கு எதிரானது என்றெல்லாம் நமக்கு புரியாமலில்லை..கண்டிருந்த வான் கோழிகளைப் பற்றி கான மயில்களுக்கு கவலை இல்லை.

இருந்தும் தமிழனின் வரலாற்றில் 50 வருடத்திய தவறுகள் மீண்டும் நிகழாமல் இருக்க..தூய்மை வாதி பட்டம் சுமப்பதில் தவறில்லை.

சொல்லப்போனால் அன்று சிங்கள பேரினவாத அரசிற்கு வால் பிடித்த..மிருதுவான..இவர்களைப் போலவே தமிழர் நலன் என்ற பெயரில் தமிழ் இன நுண்ணரசியல் பேசி குழப்பிய வரதராஜ பெருமாள் தான் நினைவிற்கு வருகிறார்.

ஆனால் வரலாறு வரதராஜ பெருமாள்களுக்கு உரித்தானது அல்ல..

அது பிரபாகரனுக்கானது.
தற்போது அவர் தம்பிக்கானது.

வேண்டுமென்றே வெளிச்சப் புள்ளிகள் செலுத்தி மின்ன வைக்க கட்டாயத்தில் நாங்கள் இருட்டில் திசைமாறிப் போன விட்டில் பூச்சிகள் அல்ல.

நாங்கள் பகலவன்கள்.

பற்றி எரிவோம். பற்றி பரவுவோம்.

தூக்குக் கயிற்றின் பாடல்..

 

 

21192660_340527729705435_3007562946593908183_nஅந்த தூக்குக்கயிறு
கனவின் வெப்பத்தை
சுமந்து வாறே
இன்னும் ஊசலாடிக்
கொண்டு தான்
இருக்கிறது…

காற்றின் சிறகுகளோடு
பின்னி..
எரிதழலினுடாக கரைந்துப்
போன அனிதா இன்னும்
குரல் வளை நெரிய
இருமிக் கொண்டுதான்
இருக்கிறாள்..

துயர் மிக்க பின்னிரவின்
கடைசித் துளி கரைவதற்கு
முன்னால் சற்றே கவனித்துக்
கேளுங்கள்..

குரல் வளை ஒன்று
நொறுங்கி உடைந்து
கானலாகிப் போன
அவள்
கனவுகளின் கேவல் ஒலி
உங்கள் ஆன்மாவை
தீண்டலாம்..

நள்ளிரவுகளில் விழி எரியும்
வெப்பத்தை
சுமந்து புத்தகங்களின்
பக்கங்களை அவள்
மென் விரல்களால்
புரட்டும் ஒலி குளிர் காற்றால்
போர்த்திக்கிடக்கும்
உங்கள் செவிகளில்
முணுமுணுப்பாய் முனகலாய்
கேட்கக்கூடும்.

ஓடுகள் சரிந்த
வீட்டின் கூரையை
ஊடுருவி பாதரச
பிம்பமாய் மிதந்து
வருகிற
தேவதையின்
கண்ணீர் துளி
விழி மூடி உறங்கும்
உங்கள் விழிகளில் விழலாம்..

விழுந்த சூட்டினில் சுக
கனவுகளோடு கிறங்கிக்
கிடக்கிற உங்கள் இமைகளில்
தீ எரியலாம்…

ஆனால் நாம் இதற்கெல்லாம்
அசரப் போவதில்லை.

வலி மிகுந்த நினைவு
என்றொரு பாலையை
கடக்க மறதி ஒட்டகங்கள்
நம் முன்னால் காத்துக்
கிடக்கின்றன..

எதையும் கடப்போம்.
எதையும் மறப்போம்.
மீறி துளிர்த்தால்
பிக் பாஸ் உலகத்தில்
ஒளிந்துக் கொள்ள
நமக்கு ஓரிடம் உண்டு.

இன்னும் உறுத்தினால்..
எவனையாவது திட்டி
சமூகக் கடமை
ஆற்றி விட்ட அக திருப்தியை
முகநூலின் முட்டுச்சந்தில்
தேடி திரியலாம்..

இன்னும் ஏதேனும்
எட்டிப்பார்த்தால்
எடப்பாடி:தினகரன்
கமல்:, ரஜினி
என்றெல்லாம் யோசித்து
சரிந்துக் கொள்ள
சாக்கடைகள் நமக்குண்டு..

95 வயது முதியவர்
இன்னும் இருக்கிறரா
ஜெ இட்லி சாப்பிட்டாரா
என்கிற சரித்திரக்
கேள்விகளில் நமது மனதை
தொலைக்கலாம்….

என்ன செய்யலாம் ..
இன்றைய சூடான செய்தி
எங்கிருக்கிறது என நோண்டி
நொங்கெடுக்க..
இருக்கவே
இருக்கின்றன ஏற்கெனவே
முடிவுகள் தீர்மானிக்கப்பட்ட
விவாத அரங்குகள்.

இவர்கள் விவாதிக்க
வேண்டுமெனில்.
தினந்தோறும் அனிதா
தூக்கில் தொங்கியாக
வேண்டும்..

என்ன செய்வது..

கனன்று எரிந்து தணிந்திருக்கிற
சாம்பலின் ஊடாய் அனிதா
புன்னகைக்கிறாள்.

நம்மைப் பொறுத்த வரை
என்றோ அவள் மரித்துப் போனாள்..

அவளோ மரித்தது நானல்ல.
என்னை
மறந்து ..திரியும் நீங்களே
இறந்துப் போன பிணங்கள்
என புன்னகைக்கிறாள்.

இன்னும் தூக்குக் கயிறு
ஊசலாடிக் கொண்டே
சொல்கிறது..

பிணங்களே…நீங்கள்
என் மீதேறி தொங்கி
என்னை இழிவாக்காதீர்கள்..

நேரடியாக சுடுகாட்டில்
சென்று படுத்து விடுங்கள்..

ஏனெனில் அதுதான்
உங்கள் நாடு..
பிணங்களுக்கான வீடு.

ஹம்ரா தேஷ் கே…
குச்சு குச்சு ஹோத்தா ஹை..

பயண மொழி..

 

road-trip-1

இப்படி ஒரு பயணம்.

தேநீர் கடைகள்.

இரவு ரசித்தல்..

இளையராஜா.

காலை விடியல் வான்
கண்டல்..

பல நினைவுப்புள்ளிகளோடு
கால நதியில் கல்லெறிந்து
பார்த்தல்..

சில துளி கண்ணீர்.

ஆங்காங்கே
பல சிறு புன்னகைகள்..

சாலையை கடக்கும்
முகம் அறியாத
வயதான தாய்
மீது காரணமின்றி
துளிர்க்கிற
மாசற்ற அன்பு..

பக்கத்து இருக்கையில்
நம்மோடு பயணிக்கிற
நமது நம்பிக்கை..

முடிவில் சில கவிதைகள்..

டாட் .

மழையாகிப் போன ஒரு பாடல்..

 

22008461_348378505587024_1053921957577664683_nஎரி வெயிலுக்கு

மத்தியிலும்..

நீண்ட தாழ்வாரத்தின்
முன்னால் படிந்திருக்கும்
இள நிழல் போல..

என் விழிகளில்
மென் குளிராய்
படர்கிறாய்.

உன்னை இமைக்காமல்
பார்க்கிற நொடிகளில்..
நான் காற்றாய் உருக் கொண்டு
மல்லிகைத் தோட்டங்களில்
பூக்களை உதிர்ப்பவனாக
மாறித் திரிகிறேன்..

காட்சிக்கும்…
பார்வைக்குமான
இடைவெளியில்..
எப்படியும்
இழையத் தொடங்கி
விடுகிறது..
மழை நாளொன்றில்
நாம் இருவரும

பகிர்ந்து பருகிய
ஒரு பாடல்.

ஓயாத தூறல் போல
இசை மொழியோடு
ஏதேதோ சொல்லிக்
கொண்டே போகிறாய்..

உன் சொற்களை தவிர்த்து
கொண்டே…
அசையா தேர் போல
என்னை நோக்கி இருக்கும்
உன் விழிகளின்
நீர் வீழ்ச்சியில்..
தலை நுழைத்து
மெய் நனைக்கிறேன்..

சட்டென என்னை
நோக்கி ..சலனமற்ற குளத்தில்
வீசப்பட்ட கல்லாய்..

இப்போ நான் என்ன
சொன்னேன்… எங்கே சொல்லு
என தேர்வு
கேள்வியொன்றினை
மொழி உறைந்திருக்கும்
என்னிடம்
கேட்கிறாய்…

மெளனித்து புன்னகைக்கும்
என்னிடத்தில் ..
நினைவுகளை ஸ்வரங்களாய்
தேக்கி இருக்கும் ஒரு
வயலின் இருக்கிறது…
வாசித்து காட்டவா என்கிறேன்..

முகம் சிவக்க
நீ ஒரு ராட்சஸன்
என்று சொல்லி ரகசியமாய்
புன்னகைத்ததில்
உன் பிம்பம்
படர்ந்திருந்த அந்த
கண்ணாடியில் பனி பூத்தது.

இப்போதும் சொல்வேன்.
நீ பேசிக்கொண்டே இரு…
நான் பார்த்துக் கொண்டே
இருக்கிறேன்..

ஏனெனில்..
நீ மழை.
கேட்பதை விட…..
பார்ப்பது சுகம்.
நனைவது அதை
விடவும்…

………

https://youtu.be/1gtGQc8Zm3M

 

நிலா சாட்சி..

moon-1404506_960_720 (1)

 

விண்ணில் இருந்து
இறங்கி..
பனி சுரக்கும் வனம் கடந்து…
சாத்தப்பட்டு இருக்கும்
சாளரத்தை மெல்ல திறந்து..

விழி மூடி இருக்கும்
நினைவேடுகளில்…
மெல்ல ஒளி பாய்ச்சி
குளிர வைத்து
செல்கிறது…

மறக்க முடியாத
அன்றைய இரவில்..

உன்னையும்..
என்னையும்..

ஒரு சேர தழுவி
நாசூக்காய்
நழுவி
விட்டுப்போன
நிலா.

போர்ஹேவின் சொற்கள்..

slide_363547_4103384_free
என் முதுகிற்கு பின்னால் உதிர்க்கபடும் வசவுகளையும்,தூற்றல்களையும் கண்டு புண்படவோ..புன்னகைக்கவோ எனக்கு நேரம் இல்லை.

ஏனெனில்..காயம் கொடியதென்றாலும்..உள்ளுக்குள் வெடிக்கக் காத்திருக்கும் கனவு பெரிது.

என்

முன்னால் நீளும் பாதையில்..

என் குதிரையின் கால்கள் பயணப்பட்டுக்கொண்டே இருக்கும்.

எனக்கு உறுதியாகத் தெரியும்.

இந்த கொடும் விதி சமைத்த பாதையில் காற்றின் வழியே கசிந்து வரும் ஏதோ ஒரு புல்லாங்குழல் என் ஆன்மாவிற்கான பிரத்யோகப் பாடலை இசைத்து என் கொந்தளிப்பை அடக்கும்.

ஏனெனில்..நான் என்னிலிருந்து விடுதலை பெற்றே தீருவதற்கான பாதையில் போவதாக மீண்டும் உறுதி செய்து கொண்டே இருட் பாதையின் ஊடே நம்பிக்கை சுரக்கும் களங்கமற்ற இலட்சிய தாகம் மினுக்கும் இலக்கினை தேடிப் பயணிக்கிறேன்.

மற்றபடி..நான் எதுவுமில்லை…

– போர்ஹே.

 

Page 33 of 57

Powered by WordPress & Theme by Anders Norén