பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: அரசியல் Page 1 of 15

சென்று வா-எம் பாசப்பறவையே-ராபர்ட் பயஸ்.

எனது அன்பு அண்ணன்
ராபர்ட் பயஸ் அவர்களுக்கு..

ஒரு பொன்னான விடியலின் தொடக்கத்தில் நீங்கள் உங்கள் தாய் மண்ணில் கால் வைத்திருப்பீர்கள். 33 வருடங்களுக்கு முன்பாக பிரிந்த தாயின் கருவறைக்கு மீண்டும் ஒரு சேய் போய் சேர்ந்திருக்கிறது. நீங்கள் உங்கள் தாய் மண்ணை எவ்வளவு நேசித்தீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். உங்களின் வாழ்க்கை வரலாற்று நூலான ‘விடுதலைக்கு விலங்கு’ எழுதிய காலங்களில் இன்று விடுதலை ஆவோம் என்ற நம்பிக்கை அன்று இல்லை. சிறைக்குள் இருந்து கொண்டே உங்கள் தாய் மண்ணைப் பற்றி நீங்கள் யோசித்துக் கொண்டே இருந்தீர்கள். உங்கள் நிலத்திலிருந்து நீங்கள் பிரிந்து நீண்ட காலம் ஆகிவிட்டாலும் உங்கள் உதட்டோரம் ஈழத்துத் தமிழை சற்றே தேக்கி வைத்திருந்தீர்கள்.

ஒரு நாள் என் தாய் மண்ணிற்கு திரும்புவேன் என்கிற உங்களது நம்பிக்கையை எழுத்தில் வடித்த உரிமையோடு இந்த இரவில் இன்பமுருகிறேன்.ஆம். உங்கள் நம்பிக்கையுடன் கலந்த என் எழுத்து நிஜமாகிவிட்டது. இவற்றையெல்லாம் நாம் சிந்தித்த நாட்களில் இதுவெல்லாம் நடக்குமா என்று கூட நமக்குத் தெரியாது. ஆனாலும் ஒரு மன உறுதி கொண்ட தீர்க்கதரிசி போல நீங்கள் விடுதலை நாளொன்றின் பொன் கிரகணங்களுக்காக காத்திருந்தீர்கள். உங்கள் மீது அது இன்று படும் பொழுதில் நான் கண்கலங்க உங்களை என் நினைவுகளால் முத்தமிடுகிறேன்.

நமக்குள்ளாக எவ்வளவோ உரையாடல்கள் இருந்திருக்கின்றன. பகிர்ந்து கொள்ள முடிந்த அனைத்தையும் நாம் பகிர்ந்திருக்கிறோம். சில சமயங்களில் எவரிடமும் பகிர முடியாத சிலவற்றை உங்களோடு மட்டும் நான் பகிர்ந்திருக்கிறேன். நின்று நிதானித்து எனக்கு நீங்கள் திசை காட்டியிருக்கிறீர்கள். என்னைக் காணும் போதெல்லாம் புன்னகை பூக்கும் உங்கள் முகம் என் ஆன்மாவில் ஒரு சித்திரமாக உறைந்து இருக்கிறது. குறிப்பாக நீங்கள் பரோலில் வந்த போது என் மைத்துனர் பாக்கியராசன் இல்லத்தில் நாம் இருந்த பொன்னான பொழுதுகள் தேன் வடியும் நினைவுகள்.

இனி உங்களது சிறகு விரும்பிய திசையெல்லாம் விரியட்டும். நிறைய வானம் பார்ப்பீர்கள். கடந்த காலங்களில் நத்தைப் போல ஒரு நாள் ஒன்று நகர்வது இனி குதிரை போல மாறும். கால மாறுதல்களின் வேகம் குறித்து நிறைய சிந்திப்பீர்கள். ஆனாலும் நள்ளிரவில் திடுக்கிட்டு விழிக்கும் போது எங்கே இருக்கிறோம் என்கிற மனப்பதட்டம் உங்களுக்குள் விரியும். உங்கள் அருகில் இருக்கும் அண்ணியும், அம்மாவும் உங்களுக்கு ஆறுதலை தருவார்கள். இதையெல்லாம் குறித்து என் வாழ்நாள் முழுக்க நான் சிந்தித்துக் கொண்டே இருப்பேன். என் நினைவுகளால் உங்களைப் பின்தொடர்ந்து கொண்டே இருப்பேன்.

நாம் வெவ்வேறல்ல.. ஒரே நினைவின் இரண்டு பிரதி என்றே உணர்கிறேன். அதனால்தான் உங்களின் உணர்வுகளை நான் உள்வாங்கி எழுத முடிந்தது என நிறைவுக் கொள்கிறேன்.

இந்த மகிழ்வான சமயத்தில் நம் மூத்தவர் தெய்வப் பெருமகன் தடா சந்திரசேகர் இல்லை என்கிற குறை மட்டும் எனக்கு ஏக்கமாய் தேங்கி நிற்கிறது. உங்களுக்கும் அது இருக்கும் தான். என்ன செய்ய.. மூத்தவரின் நிறைவேறாத ஆசையான உங்களது விடுதலை நிறைவேறி விட்ட மகிழ்வில் அவரது ஆன்மாவும் அமைதி அடைந்திருக்கும் என்று நினைவில் நாம் நிலைத்திருப்போம்.

இந்த சமயத்தில் விடுதலை கனவோடு நம்மிடமிருந்து விடைபெற்ற அண்ணன் சாந்தனை நினைவு கூர்கிறேன். அவர் இன்னும் சில காலம் நலமோடு இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அண்ணன்கள் முருகன் ஜெயக்குமார் ஆகியோர் குடும்பங்களோடு இணைகிற இப்பொழுதுகளில் அவர்களது நலமும் வளமும் நீடிக்கட்டும்.

சொந்த ஊருக்கு சென்றவுடன் குலதெய்வம் கோவிலுக்கு போய் வாருங்கள். நம் மூதாதை உங்களுக்காக அங்கே காத்துக் கொண்டிருப்பார். படையல் போடுங்கள். பரவசமாய் இருங்கள்.
பழையன கழித்து புது வாழ்வு ஒன்றை புத்துணர்ச்சியோடு வாழுங்கள். உங்கள் வலி துயர் தியாகம் ஆகியவற்றை உணர்ந்த எல்லாம் வல்ல தெய்வங்கள் உங்களை காப்பார்கள்.

போய் வாருங்கள் அண்ணா. உங்கள் பால்யத்தில் நீங்கள் திரிந்த நதிக்கரையில் பால் நிலா பொழுதுகளில் காலார நடந்து செல்லுங்கள். நீங்கள் நேசித்த தாய் மண்ணை உங்கள் நினைவுகளின் கண்ணீரில் குழைத்து நெஞ்சில் பூசிக்கொள்ளுங்கள்.

சுருங்கிவிட்ட இந்த உலகில் என்றாவது ஒரு நாள் மீண்டும் நாம் சந்தித்தே தீருவோம். அந்த நாளுக்காக இங்கே நாங்கள் அனைவரும் காத்திருக்கிறோம். இந்த பூமியின் ஏதோ ஒரு இடத்தில் கடற்கரை ஓரத்தில் மகிழ்வான பொழுதில் நாம் நினைத்து சிரித்துப் பேச நிறைய செய்திகள் அன்று பூத்துக் குலுங்கும்.

அன்றைய நாளுக்காக … இனி நாங்கள் காத்திருப்போம்.

நெகிழ்வான நினைவுகளோடும்.. நெஞ்சம் முழுக்க பேரன்போடும்..

என்றும் உங்கள் தம்பி..
மணி செந்தில்.

“சாட்டை”க்கு பாராட்டுக்கள்..

LGBTQ+ வினரை பற்றி தம்பி சாட்டை துரைமுருகன் மிக முக்கியமான பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளது விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. முதலில் இதை விவாத பொருளாக மாற்றியதற்கே தம்பி துரைமுருகனுக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும்.

புறக்கணிக்கப்பட்டவர்களுக்கும், ஒதுக்கப்பட்டவர்களுக்கும், வரலாற்றால் வஞ்சனை செய்யப்பட்டவர்களுக்கும் வழங்கப்படுவது தான் நீதி. பாதிக்கப்பட்டவர்களோடு நிற்பது தான் அறம். அதைஉணர்ந்து தம்பி துரைமுருகன் செயல்பட்டிருப்பதை மனதார பாராட்டுகிறேன்.

1960களில் ஓரின பால் ஈர்ப்பு என்பது மனநலம் சார்ந்த பிரச்சனையாக கருதப்பட்டு வந்த நிலையில் நவீன மருத்துவம் அது “ஹார்மோன் மாறுபாட்டினால் ஏற்படுகிற நிலைமை” என்பதை கண்டறிந்த பிறகு உலகளாவிய அளவில் LGBTQ+ வினரைப் பற்றி பார்வைகள் மாறி இருக்கின்றன.

1870களில் இயற்றப்பட்ட ஆங்கிலேய சட்டத்தின் பிரதியான இந்திய தண்டனை சட்டம் பிரிவு 377 ஓரின பால் ஈர்ப்பை இயற்கைக்கு மாறான உறவு என வரையறுத்து தண்டனைக்குரிய குற்றமாக வைத்திருந்ததை 2018 ல் உச்ச நீதிமன்றம் மறுபரிசீலனை செய்து ஓரின பால் ஈர்ப்பு குற்றச் செயல் அல்ல என அறிவித்தது. ஆனால் சமத்துவத்திற்கு எதிரான பிரிவு 377 ஐ ரத்து செய்யும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்பதையும் அது பாராளுமன்றத்திற்கு தான் உண்டு என்பதையும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இதேபோல் உலகளாவிய முறையில் இருபதுக்கு மேற்பட்ட நாடுகள் ஓரின சேர்க்கை திருமணங்களை அங்கீகரித்து இருக்கின்றன. இந்த முற்போக்கு வரலாற்றின் தொடர்ச்சியாக 2019 ஆம் ஆண்டு திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தை இந்திய நாடாளுமன்றம் இயற்றி அவர்களுக்கான கல்வி சுகாதாரம் வேலைவாய்ப்பு போன்றவற்றில் காட்டப்படும் பாகுபாட்டை தடுக்கிறது.

நவீன அறிவியல் /மருத்துவ சிந்தனைகளால், கண்டுபிடிப்புகளால் பழைமை நிறைந்த பிற்போக்கு கருத்துக்கள் அடித்து உடைக்கப்பட்டு தூக்கி எறியப்படுகின்றன. காலம் காலமாய் புறக்கணிக்கப்பட்ட சமூகமாய் இருந்த LGBTQ+ வை சேர்ந்தவர்கள் பொதுச் சமூகத்தில் தங்களை இணைத்துக் கொள்வதற்கு நீண்ட காலமாக போராடி வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மாதத்தை அவர்கள் ‘பெருமை மாதமாக” ( Pride Month) அறிவித்து பேரணிகள் நடத்துகிறார்கள்.

பொதுச் சமூகத்தின் கவனத்தை ஈர்த்து தங்களுக்கான உரிமைகளை, தங்களுக்கான வாய்ப்புகளை அவர்கள் கோருகிறார்கள். இது மனநலம் சார்ந்த பிரச்சனை அல்ல, ஹார்மோன் மற்றும் உடல் மாறுதல்களால் ஏற்படுகின்ற விளைவு என்பதை பொதுச் சமூகத்திற்கு புரிய வைக்க அவர்கள் மிகுந்த அவமானங்களுக்கும், புறக்கணிப்புகளுக்கும் நடுவில் நீண்ட காலம் பயணித்திருக்கிறார்கள்.

எண்பதுகளில் வெளியான ஒரு தலை ராகம் திரைப்படத்தில்
” கொக்கரக்கோ கோழி கூவுற வேளை” என கிண்டலும், அவமானமும் நிறைந்த சின்னங்களாக பொதுச் சமூகத்துக்கு முன்னால் நிறுத்தப்பட்டவர்கள் அடைந்த இழிவுகள் கொஞ்சநஞ்சம் அல்ல. நீண்ட காலத்திற்குப் பிறகு இன்று அவர்களையும் மனிதர்களாக பார்க்கின்ற சக உயிரிகளாக பார்க்கின்ற குரல்கள் ஆங்காங்கே எழ தொடங்கியிருக்கின்றன.

திருநங்கைகள் பெரும்பாலும் கண்ணியமானவர்களாக காட்டக்கூடிய திரைப்படங்கள் வெளியாக தொடங்கி இருக்கின்றன. சரத்குமார், விஜய் சேதுபதி போன்ற முன்னணி நடிகர்கள் கூட திருநங்கைகளாக நடிக்க முன்வருவது அனைத்தும் மாறி வருகிற முற்போக்கு சிந்தனைகளின் வெளிப்பாடுகளே. ஒரு தலை ராகம் தொடங்கி காஞ்சனா/ சூப்பர் டீலக்ஸ் வரையிலான காட்சி அமைப்பு மாறுதல்களின் வரலாற்றுக்குப் பின்னால் எண்ணற்றவர்களின் துயர நிறைந்த போராட்டக் கதைகள், அவமான வலிகள், ஒதுக்கப்பட்டவர்களின் காயங்கள் ஒளிந்து இருக்கின்றன.

சமீபத்தில் ப்ரைமில் வெளியான இன்ஸ்பெக்டர் ரிஷி என்கின்ற தொடரில் முக்கிய கதாபாத்திரம் ஒன்று லெஸ்பியனாக வடிவமைக்கப்பட்டு அவர்களின் துயரம் பற்றி காட்சி அமைப்புகள் இருந்ததும் , பல வெப் தொடர்களில் ஓரின பால் ஈர்ப்பு பற்றி வெளிப்படையாக பேச தொடங்கி இருப்பதும் ஆரோக்கியமான காட்சிகளே.

நம்மோடு பிறந்தவர்கள் அவர்களை ஏன் நாம் அருவெறுப்பாக பார்த்து ஒதுக்க வேண்டும் என்கிற கேள்வி இன்று பரவலான பொதுக் கேள்வியாக மாறி இருக்கிறது. அவர்களையும், பாலியல் குற்றவாளிகளையும் இணைத்து பேசுவது போன்ற பிற்போக்குத்தனங்கள் குறைந்து இருக்கின்றன. காலங்காலமாக இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டிய திரைப்படங்கள் எவ்வாறு இன்று குறைந்து போயிருக்கிறதோ, பிற்போக்கு சிந்தனைகளின் வடிவமாக பார்க்கப்படுகிறதோ அதேபோல LGBTQ+ வினரை தவறாக காட்டுகின்ற திரைப்படங்களும் குறைந்திருக்கின்றன என்பது ஆறுதலான மாறுதல்.

பாலியல் தேர்வு என்பது அவரவர் தனிநபர் சார்ந்தது.LGBTQ+ வினரில் ஒரு பாலின ஈர்ப்பாளர்கள், இரு பாலின ஈர்ப்பாளர்கள் இருப்பது போல எந்த பாலினத்தின் மீதும் ஈர்ப்பு இல்லாதவர்களும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் இயல்பான மனிதர் வாழும் சாதாரண வாழ்விற்காக, எல்லோருக்கும் கிடைக்கும் சாதாரண உரிமைகளுக்காக சமத்துவ சமூகம் வேண்டி அவர்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது. அவர்களுக்கு இப்போதைய தேவையெல்லாம் நம் புரிதல் மட்டுமே.

மற்றபடி பிற்போக்குத்தனங்களின் பிதற்றல்களுக்கு நாம் பதிலளிக்க வேண்டிய அவசியமே இல்லை. அதுவே கத்தி தானாக ஓய்ந்துவிடும். இது வரலாற்றில் எப்போதும் நடப்பது தானே.

மற்றபடி புரிந்துணர்வு மிக்க, ஆகச் சிறந்த, மனம் நிறைந்த பாராட்டப்பட வேண்டிய காணொளி வெளியிட்ட Saattai- சாட்டை க்கும், என் ஆருயிர் இளவல் சாட்டை துரைமுருகனுக்கும், எனது மனமார்ந்த பாராட்டு‌. பேரன்பு.

அவன் என் தம்பி என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி.

மணி செந்தில்.

தமிழர்கள் அவசியம் படிக்க வேண்டிய 2 தன்னிகரற்ற நூல்கள்.நூல் வீதி 7

“பண்டைப் பெரும்புகழ் உடையோமா ? இல்லையா..!

பாருக்கு வீரத்தை

சொன்னோமா ? இல்லையா..!”

என பாவேந்தரின் வரிகள் அண்ணன் சீமான் குரலில் வெடித்து எழும்பும்போது அவர் முன் திரண்டிருக்கும் நமது உடலில் உள்ள மரபணுக்கள் எல்லாம் கிளர்ந்து எழுகின்றன. ‘உலகின் மூத்த குடி தமிழினம். உலகை ஆண்டது எம்மினம்’ என்றெல்லாம் பேசுவது வெறும் பெருமிதப் பிதற்றல்கள் அல்ல. வரலாறு அவ்வாறாகத்தான் சொல்கிறது. வரலாற்றை ஒட்டி நிகழ்கிற அறிவியல் ஆய்வுகளும் அவ்வாறாகத்தான் சொல்கின்றன. உலகத்தின் மாபெரும் அறிஞர்கள் எல்லாம் தமிழர் என்கின்ற இனம் தான் இந்த பூமி பந்தின் மூத்த இனம் என்று சொல்கிறார்கள்.

“யாதும் ஊரே.. யாவரும் கேளீர்..” என உலகம் முழுக்க சொந்தமாக நினைத்து பாடிய நமது முன்னோன் சொல் காற்றில் கரையக்கூடிய கற்பூரம் அல்ல. உலகம் முழுக்க பயணப்பட்டு, பக்குவப்பட்டு விரிந்தெழுந்த தமிழ் இன மூத்தோனின் முதற்குரல். உலகம் முழுக்க பரந்து, விரிந்து, ஆண்டு, வரலாற்றின் பக்கங்கள் முழுக்க பெருமை பதக்கங்களை சூடிக்கொண்ட ஒரு இனம் காலப்போக்கில் குறுகி கடற்கரை ஓரங்களில் குற்றுயிரும், கொலையுருமாக குன்றி எஞ்சிப் போனது எதனால் என்பதை வரலாற்றியல் பூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும் ஆய்வு செய்த பெருமக்கள் இந்த மண்ணில் மிக மிக குறைவு. தமிழர் என்ற மூத்த இனத்தின் வெற்றிகளையும், பெருமைகளையும் பேச தமிழ் மொழியில் ஆயிரமாயிரம் இலக்கியப் பிரதிகள் காலங் காலமாய் தோன்றி கொண்டே இருக்கின்றன. ஆனால் இன்றோ ஒடுக்கப்பட்டு, அடக்கப்பட்டு அடிமை தேசிய இனமாக மாறி இருக்கிற தமிழர் என்கிற இனத்தின் வீழ்ச்சியை ஆய்வு செய்கிற படைப்புகள் தான் இந்த இனம் மீள் எழுச்சிக் கொள்வதற்கான ஊக்கக் கருவிகளாக இருக்க முடியும்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்கள் எல்லா பயணங்களிலும் சுமக்கும் புத்தக வரிசைகளை அருகில் இருந்து பார்க்கின்ற அனுபவம் எனக்கு உண்டு.அந்த வரிசையில் தவறாமல் இடம்பெறும் புத்தகங்கள்

1. தமிழன் அடிமையானது ஏன் ? எவ்வாறு..?

2. தமிழர் மேல் நிகழ்ந்தப் பண்பாட்டு படையெடுப்புகள்.

இந்த இரண்டு நூல்களின் முக்கியத்துவம் போகிற போக்கில் ஒரு கட்டுரையில் விவரிக்க முடிகிறவை அல்ல. அண்ணன் சீமான் அவர்கள் புத்தகங்களைப் பற்றி ஒரு முறை பேசிக் கொண்டிருந்தபோது “தமிழர் என்கின்ற இனத்தின் விடுதலைக்காக களமாட வருபவர்கள் இந்த இரண்டு நூல்களையும் முழுமையாக மனனம் செய்து மனதில் ஏற்றி விட வேண்டும்” என்றார்.

அப்படிப்பட்ட அறிவுத் தகவல்களை, வீழ்ந்த இனம் எழுச்சிக் கொள்வதற்கான வழிமுறைகளைப் பற்றி விரிவாக இந்த இரண்டு நூல்களும் பேசுகின்றன. இந்த இரண்டு நூல்களையும் எழுதியவர் மாபெரும் தமிழ் அறிஞர், மேனாள் நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பெருந்தமிழர் ஐயா க‌.ப. அறவாணன் அவர்கள்.

1987 ல் வெளியான தமிழர் மேல் நிகழ்ந்த பண்பாட்டு படையெடுப்புகள் என்ற நூலைப் பற்றி அக்காலத்தில் மேற்கோள் காட்டி பேசாத தலைவர்களே இல்லை எனலாம். பல்லாயிரம் படிகள் விற்றுத் தீர்ந்த இந்த நூல் யார் வேண்டுமானாலும் படிப்பதற்கு ஏதுவான எளிமையான மொழி கொண்டது.

இந்த நூலைப் பற்றி ஐயா அறவாணன் அவர்கள் சொல்லும்போது

” தமிழர் பல நூற்றாண்டுகள் பழமை உடையவர் .இலக்கிய இலக்கணச் செழுமை உடையவர். உயர்ந்த சமூக விழுமியங்களை உடையவர். சீரார்ந்த நுண் கலைகளை உடையவர். அஞ்சா நெஞ்சுடையவர். எனினும் கிபி மூன்றாம் நூற்றாண்டு தொடக்கத்தில் இருந்தே தமிழர் அயற் புல ஆட்சிக்கு இலக்காயினர்.

ஆரியம் /களப்பிரம் /பல்லவம் எனும் மூன்றும் ஒன்றன்பின் ஒன்றாகவும், ஒன்றன் மேல் ஒன்றாகவும் தமிழை அடிமைப்படுத்தின. இது எவ்வாறு நிகழ்ந்தது..?? என வினா எழுப்புகிறார்.

இந்த வீழ்ச்சியை பற்றி ஆய்வு செய்யும் ஐயா அவர்கள் “தமிழர் மொழி அடிப்படையில் ‘நாம் தமிழர்’ என்று ஒன்றாய் குவியாது, சேரர், சோழர், பாண்டியர், வேளீர் என பல வேறுபாடுகள் மற்றும் குடி அடிப்படையில் பிரிந்திருந்தனர்.” என்கிறார். மேலும் இளங்கோ அடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்தின் அடித்தளம் வலியுறுத்தும் மிக முக்கியமான செய்தி.. “தமிழர் மொழி அடிப்படையில் ஒன்று பட வேண்டும் என்பதுதான்” என்று கூறும் இந்த நூல் தமிழில் இயற்றப்பட்ட நூல்களில் ஆகச்சிறந்த நூல்களில் ஒன்று.

முதல் அத்தியாயத்திலேயே நிறைய தகவல்கள். இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் மிகுதியான திரையரங்குகள், சாராயக்கடைகள் கசாப்புக் கடைகள், தொழு நோயாளிகள் அதிகம் என கூறும் ஐயா அறவாணன் அந்தக் காலத்தில் மலிந்து கிடந்த லாட்டரி சீட்டு மோகத்தையும் இடித்துக் காட்ட தவறவில்லை. தமிழர் எப்போதும் பிறரை சார்ந்து இருக்கும் போக்கினை வேதனையோடு பகிரும் ஐயா, இந்திரா காந்தி இறந்த போது இந்தியாவிலேயே அதிகம் தற்கொலை செய்து கொண்டது பிற மாநிலத்தை காட்டிலும் (3) தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தான் (6) தான் எனக் கூறி அதிர வைக்கிறார். போர்க்குணம் இல்லாமல் தாழ்வு மனப்பான்மை கொண்டமை, அயலாரை, அயல் பண்பாட்டை கண்மூடித்தனமாக போற்றும் குணம், தொலைநோக்கு இல்லாமல் போனது என்கின்ற நான்கு காரணங்கள் தான் தமிழினம் வீழ்ச்சிக்கு முக்கியமானவை என ஐயா வரையறுக்கிறார். அதற்கு ஆதாரமாக மாமேதை காரல் மார்க்ஸ்‌ “தமிழர்களைப் பற்றி ஆங்கிலேயர்கள் தென்னிந்திய மக்களை அச்சுறுத்தி எளிதில் அடிமைப்படுத்தியது போல பஞ்சாபியரை அச்சுறுத்தி வெற்றி கொண்டு விடலாம் என தவறாக கணித்து விட்டார்கள்..” என்று எழுதிய வரலாற்றுக் குறிப்புகளையும் சான்றாக காட்டும் ஐயா 1311 ஆம் ஆண்டு மாலிகாப்பூர் படையெடுப்பின்போது வெறும் செய்திகளை கேட்டு பயத்தால் தற்கொலை செய்து கொண்ட தமிழர்களைப் பற்றியும் தகவல்களை தருகிறார். தமிழ்நாட்டின் மீது நிகழ்ந்த ஆயிரக்கணக்கான அரசியல் படையெடுப்புகள் காரணமாக தமிழர் பண்பாட்டில் ஊடுருவி நிற்கின்ற நடைமுறைகள் குறித்து வெளிச்சத்தை ஏற்படுத்தும் இந்த நூல், பண்பாடு என்றால் என்ன என்பதை மிக ஆழமாக ஆய்வு செய்கிறது. இந்தியப் பெருநிலம் முழுக்க கிமு 1500 ஆண்டு வாக்கில் பரவி இருந்த ஒரு இனம் படிப்படியாக தமிழ்நாடு என்கின்ற சிறிய நிலப்பகுதிக்குள் எவ்வாறு குறுகி சிக்குண்டது என்பதை பற்றி இந்த நூல் முழுக்க வரலாற்று செய்திகள் மற்றும் பன்னாட்டு அறிஞர்கள் தந்த கருத்துக் குவியல்கள் நிரம்பித் ததும்புகின்றன.

அதேபோல் ‘மொழிக் காப்பியம்’ என்கின்ற இரண்டாவது அத்தியாயத்தில் மொழி உணர்வை இழந்த தமிழர்களின் நிலையை ஆய்வு செய்யும் ஐயா அறவாணன் அவர்கள் , கிரேக்கர்/ இஸ்லாமியர்/ தெலுங்கர்/ ஐரோப்பியர் என்கிற ஒவ்வொரு அயலார் படையெடுப்பின் போதும் இந்த நிலம் அடைந்திருக்கின்ற பண்பாட்டு மாற்றங்களை, தமிழர்கள் அடைந்த உளவியல் கேடுகளைப் பற்றி பற்றி நுட்பமாக ஆய்வு செய்கிறார்.‌ தமிழ் பண்பாட்டுக்குள் ஊடுருவி இருக்கின்ற அயலார் பண்பாட்டுப் புள்ளிகளை குறிப்பிட்டுக் காட்டும் இந்த நூல், நம் பண்பாட்டில் விரவி இருக்கின்ற மூடத்தனங்களையும், பிற்போக்குத்தனங்களையும் மிக அழுத்தமாக சுட்டிக் காட்டுகின்றது. குறிப்பாக “நாயக்கர் படையெடுப்பில் நீங்கா படிமங்கள்” என்கின்ற அத்தியாயம் மிக மிக முக்கியமானது. தெலுங்கரின் ஆதிக்கத்தினால் தமிழர் இழந்த நிலம்/ உரிமைகளைப் பற்றி இந்த அத்தியாயம் ஆழ்ந்து ஆய்வு செய்கிறது. அயல்நாட்டில் இருந்து நம் நாட்டில் மதம் பரப்ப வந்த துறவிகள் தமிழர்களைப் பற்றி எழுதி வைத்திருக்கின்ற குறிப்புகளை சேகரித்து அவற்றின் வாயிலாக தமிழரின் பண்பாடு அடைந்திருக்கின்ற வீழ்ச்சியை ஆய்வு செய்யும் இந்த நூல்

தமிழர் வரலாற்றைக் கொண்டு, சுய பரிசோதனை செய்து கொண்டு தமிழின மீட்சிக்கு களம் புகும் வீரர்கள் படிக்க வேண்டிய அடிப்படை ஆவணமாக அமைகிறது.

இந்த நூலின் தொடர்ச்சியாக ஐயா க.ப. அறவாணன் அவர்களின் தமிழர் அடிமையானது ஏன்? எவ்வாறு? என்கின்ற 2002 ல் வெளியான மற்றொரு முக்கியமான நூலும் அமைகிறது.

அடிமை என்ற சொல்லை ஆய்வு செய்வதிலிருந்து தொடங்கும் இந்த நூல்‌ தமிழரைப் போல் இல்லாமல் ஜப்பானியர், தாய்லாந்தினர், சீனர் போன்ற மற்ற இனத்தார் எப்படி வேற்று இனத்தாருக்கு அடிமையாகாமல் தடுத்துக் கொண்டார்கள் என்பதை பற்றி வரலாற்றுத் தகவல்களோடு விரிவாக ஆய்வு செய்கிறது. பிறகு தமிழர் அடிமை வரலாறு என்ற தலைப்பில் பழந்தமிழகத்தில் அடிமை முறை எவ்வாறு இருந்தது என்பதற்கான‌ சங்க இலக்கிய , வள்ளுவச் சான்றுகளை பேசுகிறது. தமிழர் அரேபியருக்கும், தெலுங்கருக்கும், ஐரோப்பாவினருக்கும் எப்படி அடிமை ஆனார்கள் என்பதை விரிவாக ஆய்வு செய்யும் ஐயா அறவாணன் அவர்கள் அதற்கு ஆதாரமாக பல்வேறு வரலாற்றுக் குறிப்புகளை பன்மொழி அறிஞர்கள் நூல்களில் மற்றும் சுய வரலாற்றுக் குறிப்புகளில் இருந்து பயன்படுத்துகிறார். தமிழர் அடிமை வரலாறைப் பற்றி விரிவாக ஆய்வு செய்த இந்த நூல் அதற்கான காரணங்களான தமிழர் தொலைநோக்கு இல்லாமல் போனது, கல்வி அறிவின்மை, தமிழர் பின்பற்றிய மதங்கள், பெண்ணடிமை, மன்னனுக்கும் மக்களுக்கும் தொடர்பு இல்லாமை, அறிஞர் பெருமக்கள் அநீதி இழைக்கபடும் போது போராடாமல் இருந்தது, தமிழ் மன்னர் இடையே ஒற்றுமை இல்லாமை, வெள்ளை நிற மோகம் போன்ற பல காரணங்களை ஆய்வு செய்வதோடு மட்டுமில்லாமல், இதற்கான தீர்வழிகளையும் மூன்றாம் பகுதியில் அலசுகிறது. தன்னம்பிக்கை இன்மை தாழ்வு மனப்பான்மை, அடிமை மனப்போக்கு ஆகிய மூன்றும் தமிழர் வரலாற்றில் திட்டமிட்டே நுழைக்கப்பட்டன என அரசியல் பொருளாதார சமுதாய காரணங்களை முன்வைத்து நிறுவுகின்ற இந்த நூல் தமிழர் வளம் பெற வழிகளாக அறிவின் ஆட்சி நடைபெற வேண்டும் என வரையறுக்கிறது.’ கட்சி வழி அரசியல் ஒரு சாய்ஸ்( வைரஸ்) நோய்’ என அடித்துச் சொல்லும் இந்த நூல் உலகமயமாதலின் கேடுகளைப் பற்றியும் நுகர்வு கலாச்சார படையெடுப்பை பற்றியும் தொலைக்காட்சி மோகத்தைப் பற்றியும் விரிவாக ஆய்வு செய்கிறது.

இந்த நூலின் நோக்கம் பற்றி ஐயா அறவாணன் அவர்கள் கூறும்போது..

“நம்மைப் பற்றி சிறுமைகளை அறிவிக்க வேண்டும் என்பதற்காக இந்த நூல் எழுதப்படவில்லை. அவற்றை அறிந்து கொள்ள வேண்டும், ஆத்ம பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், என்பதற்காகவும் தவறுகளுக்காக வருந்துவதற்காகவும், வருங்காலத்தில் அவை மீண்டும் மீண்டும் நிகழாமல் இருக்க திருந்துவதற்காகவும், மேற்கொள்ள வேண்டிய தற்காப்புக்காகவும் இவை எழுதப்படுகின்றன.” என்கிறார்.

இந்த இரண்டு நூல்களிலும் பல நூறு செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன. முக்கியமான இந்த இரண்டு புத்தகங்களை படிப்பவர் தமிழர் வரலாற்றைப் பற்றி மாபெரும் தெளிவை அடைவார்கள்.

புரட்சியாளர் லெனின் கூறுவது போல “வரலாற்றில் தெளிவு பெறாத எந்த இனமும் எழுச்சிக் கொள்ள முடியாது” என்பதை உணரும் காலகட்டத்தில் வாழ்கின்ற நாம், நமக்கென இருக்கின்ற வரலாற்றின் அடிப்படைச் செய்திகளை ஐயா அறவாணன் எழுதிய இந்த இரண்டு மாபெரும் நூல்களின் வாயிலாக கற்க வேண்டியது காலத்தின் கடமையாகும்.

பேரறிஞர் ஐயா க.ப.அறவாணன் தஞ்சை மாவட்டம் கடலங்குடியில் 1941 இல் பிறந்தவர். ஐயா தமிழியம் சார்ந்தும் கல்வியியல் சார்ந்தும் தமிழர் வரலாறு அரசியல் தமிழரின் உளவியல் இன்னும் பல்வேறு துறைகள் சார்ந்தும் 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தமிழரின் அற உணர்வை பற்றி தீவிரமாக ஆய்வு செய்து “அற இலக்கிய களஞ்சியம்” என்ற தொகுப்பு நூலை உருவாக்கியதில் ஐயா அறவாணனின் பங்கு முதன்மையானது.

ஐயா எழுதிய ‘ஈழம் தமிழரின் தாயகம்” என்கின்ற நூல், பிழைக்க போன நாட்டில் தமிழர்கள் ஏன் தனி நாடு கேட்கிறார்கள் என கேட்கும் அறிவற்றவர்களுக்காக எழுதப்பட்ட அறிவாயுதம். அவரது “சமணம் வளர்த்த தமிழ் இலக்கணம்” மிகச்சிறந்த ஆய்வுப் படைப்பு. தன் 27 ஆம் வயதில் கல்லூரி முதல்வரான ஐயா நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றியவர். அவரது காலத்தில் எனது பெரிய தந்தை எழுத்தாளுமை ச. கல்யாணராமன் அவர்களின் பெரும் முயற்சியால், கும்பகோணத்திற்கு வந்து என் திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்தது எனது வாழ்நாள் பெருமை. ஒவ்வொரு நாளையும் திட்டமிட்டு ஒவ்வொரு மணித்துளியும் வீணாக்காமல், தன் வாழ்நாள் முழுக்க தமிழரின் உயர்வுக்காக உழைத்த ஐயா அறவாணன் தன் வெற்றியின் ரகசியமாக “பொறுத்துப்போ, புறக்கணி, கடந்து போ..” என்கிற மூன்று கருத்துக்களை முன் வைக்கிறார். “பேசுவதைக் குறை. முடிந்தால் நிறுத்து.” என போதிக்கும்

ஐயா அவர்கள்

“முயன்று வரலாற்றைப் படித்தல் வேண்டும்!

முடிந்தால் வரலாற்றைப் படைத்தல் வேண்டும்!

இயன்றால் வரலாறாகவே வாழ்தல் வேண்டும்!”என முழங்கினார்.

உண்மையில் தமிழர் இனத்தில் தோன்றிய தனிமனித வரலாறு ஐயா க.ப. அறவாணன் அவர்கள்.2018 ல் நிகழ்ந்த ஐயாவின் மறைவிற்குப் பிறகு அவரது துணைவியார் அம்மா தாயம்மாள் அறவாணன் அவர்கள் “தமிழ்க்கோட்டம்” பதிப்பகம் மூலம் ஐயாவின் எழுத்துக்களை தொடர்ந்து பதிப்பித்து மாபெரும் தமிழ்ச்சேவை ஆற்றி வருகிறார்.

“பிறந்த ஊரில் கூட பாசை மாறி பேசும் காக்கைகள் உள்ளன. அவை காக்கைகள்தான். அப்படித்தான் மாறிப் பேசும். குயிலாக இருந்தால் மாறுமா ? மாற நேர்ந்தால் மடிந்து போகும் குயில் சாதி!

தமிழர் குயிலாக இருக்கட்டும் வேழமாக பிளிரட்டும்! வேங்கைப் புலியாக உறுமட்டும்! “

என தன் ஆன்மாவிலிருந்து எழுதிய பேரறிஞர் ஐயா க.ப.அறவாணன் அவர்களது படைப்புக்கள் இருண்டுக் கிடக்கும் தமிழர் மீள் எழுச்சிக்கான வரலாற்று வெளிச்சங்கள்.

தமிழர் மேல் நிகழ்ந்த பண்பாட்டு படையெடுப்புகள்.- க.ப.அறவாணன்/ பக்கங்கள் 273./ விலை ரூ 300

தமிழர் அடிமையானது ஏன்? எவ்வாறு ? – க.ப.அறவாணன் /பக்கங்கள் 336. விலை ரூ200.

ஐயா அறவாணன் அவர்களின் அனைத்து நூல்களையும் வெளியிடுவது

தமிழ்க்கோட்டம், அமைந்தகரை, சென்னை.

தமிழர்கள் படிக்க வேண்டிய அறிவுப் பேராயுதம்- திராவிடத்தால் வீழ்ந்தோம் -அறிஞர் குணா/ நூல் வீதி 5.

என் கல்லூரி காலத்தில் நான் கண்ட ஒரு புத்தகத்தின் பெயர் “குணா-பாசிசத்தின் தமிழ் வடிவம்.” அந்த புத்தகத்தை எழுதியவர்கள் அப்போது ஆய்வுத் துறையில் புகழ்ப்பெற்று இருந்த பேராசிரியர்கள் அ. மார்க்ஸ் மற்றும் கோ.கேசவன். இருவரும் என் தந்தையின் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் மூலமாக என் தந்தை அந்த புத்தகத்தை வாங்கி வந்தார். ‘பாசிசம்’ என்பது அழிவு அரசியலின் மிகப்பெரிய கலைச்சொல். அதை போகிற போக்கில் ஒரு தனிநபர் அல்லது ஒரு சிறு நூல் மீது யாரும் சொல்லி விட முடியாது என்று நினைக்கும் போது அதைப் பற்றி தெரிந்து கொள்ள மிகுந்த ஆர்வமாக இருந்தது. அந்தப் புத்தகம் எதைப் பற்றியது என வாசிக்க தொடங்கும் போது அறிஞர் குணா எழுதிய “திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்ற சிறு நூலுக்கான எதிர்வினையாக அது எழுதப்பட்டிருந்தது என தெரிந்தது. அப்போது அந்த நூல் எனக்கு எங்கும் கிடைக்கவில்லை.

கடந்த 2007 ஆம் ஆண்டு குடந்தை தமிழ் கழகத்தின் தலைவர் அண்ணன் பேகன் அவர்கள்‌ அந்தப் புத்தகத்தை கொடுத்து என்னிடம் வாசிக்க சொன்னார். அந்தப் புத்தகம் என்னிடம் வழங்கப்பட்ட நாளில் நான் கடுமையான ‘திராவிட மயக்கத்தில்’ சிக்குண்டு கடும் பித்தில் இருந்தேன்.தமிழீழத்தில் போர்ச்சூழல் தீவிரமாகும் காலகட்டத்தில் என்னைப் போன்று திராவிடத்தை இறுகப்பற்றிக் கொண்டிருந்த பலரும் களைப்படைந்தார்கள். வஞ்சகமும், சூழ்ச்சியும் நிறைந்த திராவிட அரசியல்வாதிகளின் போக்கு என்னை போன்ற பலருக்கும் மிகப்பெரிய வலியை கொடுத்த நாட்களில் ஒரு நாள் அந்த புத்தகத்தை எடுத்து படிக்கத் தொடங்கினேன்.

உண்மையில் தலைப்பை பார்த்தவுடன் கொஞ்சம் பதட்டமாக தான் இருந்தது. அதுவரை உயிரென நம்பிய ஒரு தத்துவத்தை, தலைகீழாக மறுபரிசீலனை செய்து ‘பாம்பு தன் தோலை தானே உரிப்பது போல’ தன்னை புதிதாக்கிக் கொள்கிற ஒரு வேலையை ஒரு நூல் வாசிப்பு நிகழ்த்தப் போகிறது என உணர்ந்த தருணம் அது.

சிறிய நூல். மொத்தம் 76 பக்கங்களே உடைய , ஒவ்வொரு பக்கத்தையும் படிக்கும் போது இத்தனை காலமும் நம் இதயத்தில் ஏற்றி வைத்திருந்த எல்லா சிந்தனைகளையும் உதறி போட சொல்லுகின்ற, அணுகுண்டு போல அடர்த்தியான நூல் அது.

தமிழரின் அறிவு பரப்பில் “திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்ற நூலை போல அதிர்வுகள் ஏற்படுத்திய படைப்புகள் மிக மிகக் குறைவு. ஏறக்குறைய மூன்று தலைமுறைகளாக அழுத்தத் திருத்தமாக சொல்லப்பட்டு, சொல்லப்பட்டு நம் உதிரம் வரை உருவேற்றி, நம் மூளையின் ஒவ்வொரு செல்லிலும் பதிவேற்றம் செய்யப்பட்ட சொல்லான ‘திராவிடத்தை’ வெறும் 76 பக்கங்கள் கொண்ட ஒரு நூல் பசி கொண்ட ஓநாய் போல வேட்டையாடுவதை உணரும் போது அது வசீகரமான,மனதிற்கு நெருக்கமான அனுபவமாக மாறிப்போனது.

பாவாணரின் தனித்தமிழில் எழுதப்பட்ட அந்த நூல் எழுப்பும் கேள்விகளை போகிற போக்கில் யாராலும் கடந்து விட முடியாது. ஒரு நூற்றாண்டு காலமாக சிம்மாசனமிட்டு, தனக்கு இணையாக தோன்றிய எல்லா சிந்தனை போக்குகளையும் தின்று, செரித்து, அரசியல் ஆட்சி அதிகாரம் என அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தி, செழித்து இருக்கிற திராவிடத்தின் உச்சிக்குடுமியை பிடித்து கேள்வி கேட்ட முதல் நூல் அறிஞர் குணா எழுதிய “திராவிடத்தால் வீழ்ந்தோம்.”

1994 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த நூல் பல பதிப்புகளைக் கண்டிருக்கிறது. 1994 ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அமைப்பு நடத்த இருந்த ஒரு கருத்தரங்கிற்காக அறிஞர் குணா அவர்களால் தயாரிக்கப்பட்டு பின்பு விரிவாக்கப்பட்ட உரையின் எழுத்து வடிவம் தான் “திராவிடத்தால் வீழ்ந்தோம்”.

அந்த நூல் இப்படி தொடங்குகிறது..

“காலம் தாழ்த்தி நாம் கண்விழிக்கின்றோம். மண்ணிருந்தும் தம் மண்ணை இழந்த தமிழ் மக்கள் விழியிழந்து வழி இழந்து நாடோடி இனமாக கெட்டழிந்து வருவதை பார்க்கின்றோம். பெயருக்கு ஒரு தமிழ்நாடு. ஆனால் அங்கு தமிழரிடம் ஆட்சியும், அரசும், கொற்றமும் கொடியும், நிலமும் கடலும் வானும் இல்லை. தமிழனின் மானத்தை மறைக்க உதவிய நான்கு முழத்துண்டும், பறி போனக் கதையாய் தாய்த் தமிழகமே இன்று வேலியில்லாத நிலமாகி, வாசலில்லா வீடாகி, வந்தாரை மட்டுமே வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.”

நூலின் முதல் பாராவிலேயே ‘இத்தனை ஆண்டு காலம் உறக்கத்திலே கிடந்த நம் செவுளில் ஓங்கி யாரோ அறைந்தது போல’ ஓர் உணர்வு. அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அடுத்தடுத்த பாராக்களில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தும் இந்த நூல் தமிழ் /தமிழர் என்று பேசினால் இனவெறி என பேசுகின்ற கூட்டத்தினரை காறி உமிழ்கிறது. ஆரியக் கொள்கையும் அதற்கு எதிராக தோன்றியதாக காட்டிக் கொள்கிற திராவிடக் கொள்கையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று சொல்லுவதோடு மட்டுமில்லாமல் இவைதான் இனவெறிக் கொள்கைகள் என கூறி அதிர வைக்கிறது.

ஆரியப் படையெடுப்பு தமிழர் மேல் நிகழ்ந்ததில்லை எனக் கூறும் இந்த நூல், அதைத் தாண்டிலும் பக்கத்தில் இருக்கின்ற கன்னடர்கள் தெலுங்கர்கள் மராத்தியர்கள் போன்ற பிற மொழியாளர்கள் தமிழர் நிலத்தில் நிகழ்த்திய படையெடுப்புகள், அதிகம் என்கிறது. ஆரியப் பூச்சாண்டியை காட்டியே தன்னை தமிழர் மண்ணில் கன்னடர்களும், தெலுங்கர்களும் வலுப்படுத்திக் கொண்டார்கள் என்பதற்கான பல்வேறு வரலாற்றியல் சான்றுகளையும் முன்வைக்கிறது.

தமிழ்நாட்டில் அதிகரித்த மார்வாடி- பனியாக்களின் வருகைக்கும் திராவிடத் தத்துவத்தின் மேலெழுச்சிக்கும் உள்ள உறவினை, 1950 ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி பெரியார் நடத்திய வடவர் கடை முன் நடத்திய போராட்டத்தினை முன்வைத்து ஆய்வு செய்கிறது. ஐயா பெரியார், அண்ணா போன்றவர்களது தத்துவ தடுமாற்றங்களையும், சிந்தனைத் தெளிவின்மை குறித்தும் உரத்து பேசுகின்ற இந்த நூல், பெரியாருக்கு பொருளியல் பார்வை இல்லை என கூறுகிறது. 1957 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக முதல் முதலாக வென்று 15 சட்டமன்ற உறுப்பினர்களை வென்ற பிறகு ஏற்பட்ட தத்துவ சறுக்கல்களை, கொள்கை முரண்களை , அரசியல் சமரசங்களை விவரிக்கும் அறிஞர் குணா அவர்கள், 1948 ஆம் ஆண்டு பெரியார் தமிழர்- திராவிடர் என்ற சொற்களுக்கான வரையறையை கீழ்கண்ட வாறு வகுத்ததாக கூறுகிறார்.

“தமிழ் என்பது மொழிபெயர். திராவிடர் என்பது இனப்பெயர். தமிழ் பேசும் மக்கள் அனைவரும் தமிழர் என்ற தலைப்பில் கூறி விட முடியும். ஆனால் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் திராவிடராக ஆகிவிட முடியாது”

இதன்படி திராவிடத்தை தனித்த மெய் இனமாக(Race) பெரியார் வரையறுத்ததின் போதாமையை,

போலிமையை தீர்க்கமாக விமர்சிக்கும் ஆசிரியர் குணா இன வரையறைக்கான உலகளாவிய அளவு கோல்களையும் ஒன்றாக ஆய்வு செய்து “திராவிடம் என்பது ஒரு இனம் அல்ல” என்று நிறுவுகிறார்.

குறிப்பாக பெரியாரின் மொழிக் கொள்கை பற்றி தீவிரமாக ஆய்வு செய்து, அவருக்கு இருந்த தமிழ் மொழி வெறுப்பு பற்றி இதுவரை வேறு எந்த நூலும் பேசாத பரப்பில் இந்த நூல் ஆய்வு செய்கிறது. “நமது மொழி தமிழ் . எனது மொழி கன்னடம்” என்று சொன்ன பெரியார் மொழி வழி மாகாணங்கள் பிரிக்கப்பட்டபோது கொண்டிருந்த தடுமாற்ற கொள்கைகளால் தமிழ்நாடு அடைந்த இழப்புகளை நூலாசிரியர் குணா பக்கத்திற்கு பக்கம் உரத்தக் குரலில் எடுத்துரைக்கிறார்.

பெரியார் மீது குணா வைக்கின்ற விமர்சனங்கள் அனைத்தும் போகிற போக்கில் காற்றில் மிதக்கின்ற சொற்களை ஒன்றாக கோர்த்து பொத்தாம் பொதுவில் வைக்கப்படும் கருத்துக்கள் அல்ல. மாறாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கும் பெரியாரின் பேச்சுக்கள் மற்றும் எழுத்துக்களில் இருந்து தனக்கான தர்க்கத்தை எடுத்தாண்டு ஒரு தேர்ந்த வழக்கறிஞர் போல தன் வாதத்தை முன்வைக்கின்ற நூலாசிரியர் குணா, வரலாற்று ரீதியாக தமிழர் வரலாற்றில் நிகழ்ந்திருக்கும் சுரண்டல்களையும், பிழைகளையும் சுட்டிக் காட்டுகிறார். இட ஒதுக்கீடு என்ற பெயரில் தமிழர் நிலத்தில் தமிழர் அல்லாதவர் மட்டுமே சலுகை பெறுகிறார்கள் என்பதை சட்டநாதன் குழு சுட்டிக்காட்டிய பிறகும் கூட அதன் பரிந்துரைகளை தொடர்ச்சியாக ஆண்டு கொண்டிருக்கின்ற திராவிட அரசுகள் உள்நோக்கத்தோடு நடைமுறைப்படுத்தாத காரணத்தினால் தமிழர்கள் இழுந்திருக்கின்ற பொருளாதார இழப்புகளை சுட்டிக்காட்டும் அறிஞர் குணா தமிழ் தேசத்தின் மீது நிகழ்த்தப்படும் எல்லா சுரண்டலுக்கும் திராவிடத்தின் பிழைப்பு வாதம் தான் மிக முக்கியமான காரணம் என நிறுவுகிறார். தமிழக கனிம வளங்கள் மட்டுமல்ல தமிழக நிலங்கள் எப்படி தமிழரிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக களவாடப்படுகிறது என்பதை ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தும் இந்த நூல், மண்ணின் பூர்வக்குடி மக்களான தமிழர்கள் தாய் தமிழகத்தில் தங்கள் சொந்த நிலத்திலேயே எவ்வாறு அடிமைப்படுத்தப்பட்டார்கள் என்பதற்கான அனைத்து செய்திகளையும் உள்ளடக்கி அடர்த்தி மிக்கதாக இருக்கிறது. எழுதப்பட்ட ஒவ்வொரு சொல்லையும் வாசிப்பவர் சிந்தித்து தன் பட்டறிவோடு ஒப்பிட்டுப் பார்க்கின்ற அனுபவத்தை இந்த நூல் ஏற்படுத்துகிறது.

கருணாநிதி, எம் ஜி ஆர், ஜெயலலிதா போன்ற திராவிட கட்சிகளின் தலைவர்கள் தமிழர் நிலத்தை ஆண்டதால் தமிழுக்கும், தமிழர் வாழ்விற்கும் ஏற்பட்டுள்ள கேடுகளை ‘நெற்றி பொட்டில் அடித்தாற் போல’ சொல்வதோடு மட்டுமில்லாமல் தொடக்க காலத்தில் திராவிடம்/ திராவிட நாடு/ திராவிடர் என்றெல்லாம் பாடிய பாவேந்தர் பாரதிதாசன் பாவாணரின் முதன் மொழிக் கொள்கைக்கு தந்த ஒப்புமையை சுட்டிக்காட்டி பாவேந்தர் கவிதைகள் மூலமாகவே தமிழ்த்தேசிய தத்துவத்தின் உறுதியை குணா கட்டமைக்கிறார்.

அறிஞர் குணா ஆயிரக்கணக்கான பக்கங்களில் தமிழரின் வரலாறு, மெய்யியல், அரசியல், அறிவியல், தேசிய இனச் சிக்கல், போன்ற பல தலைப்புகள் சார்ந்து பல நூல்களை எழுதி இருக்கிறார். அவரது வள்ளுவத்தின் வீழ்ச்சி தமிழில் எழுதப்பட்ட மகத்தான படைப்புகளில் ஒன்று. வள்ளுவப் பார்ப்பாரியம், தமிழின மீட்சி, தமிழரின் தொன்மை, மண்ணுரிமை, தமிழியத்தால் எழுவோம், முன் தோன்றிய மூத்த குடி, ஒரே நேரத்தில் இந்தியத் தேசியத்தையும் திராவிடத் தேசியத்தையும் முற்றும் முதலுமாக மறுக்கின்ற அவரது “இந்தியத் தேசியமும்,திராவிடத் தேசியமும்” போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவை. அவரது அனைத்து நூல்கள் அனைத்தும் படித்து தமிழர் உணர்ந்து தெளிய வேண்டிய முக்கியமான ஆக்கங்கள்.

தமிழரின் ஓர்மையை தடுக்கின்ற, தமிழகத்தில் நிலவுகின்ற கொடுமையான சாதிய உணர்வுகளுக்கு வலு சேர்க்கின்ற வகையில் சாதிகள் குறித்தான அவரது பார்வை, சாதிகளை முன்வைத்து இனத்தை வரையறை செய்கின்ற அவரது முடிவு போன்ற கருத்துக்களில் நமக்கு அழுத்தமான மறுப்பு இருக்கிறது என்றாலும் தமிழர் வரலாற்றுயியல் ஆய்வாளர்களில் அறிஞர் குணாவின் இடம் மிக மிக முக்கியமானது. அவர் எழுதிய இந்த சிறு நூலின் தர்க்கங்கள் தாங்க முடியாமல் திராவிட ஆதரவாளர்கள் பக்கம் பக்கமாய் இன்றைய தேதி வரை எழுதிக் குவித்துக் கொண்டிருப்பதே இந்த நூலுக்கான வெற்றியாக நாம் உணரலாம்.

கன்னடருக்கென்று ஒரு கன்னடநாடு இருப்பது போல, தெலுங்கர்களுக்கு ஒரு தெலுங்கர் நாடு இருப்பது போல, தமிழருக்கு ஏன் தமிழ்நாடு இல்லை என சிந்திக்கத் துண்டும் இந்த சிறு நூல் திராவிட மயக்கங்களில் இருந்து நாம் வெளிவருவதற்கு பயன்படுகின்ற பேராயுதம்.

திராவிடத்தால் வீழ்ந்தோம்- அறிஞர் குணா. முதல் பதிப்பு 1994 ‌.

வெளியீடு:தமிழக ஆய்வரண், பெங்களூர். விலை 42/-

இளம் தமிழ்த் தேசியர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்.நூல் வீதி 2

கடந்த 2009 மே மாதத்தில் தமிழ் ஈழத்தில் நிகழ்ந்த தமிழின படுகொலை தாயக தமிழகத்தில் அரசியல் சிந்தனைப் போக்குகளின் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுவரை திராவிடம், இந்திய தேசியம், சாதி மத பற்று போன்ற பல்வேறு மயக்கங்களில் சிக்குண்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தாயக தமிழர்கள் தங்கள் முகத்தில் மீது பட்டுத் தெரித்த தங்கள் தொப்புள் கொடி உறவுகளின் உதிரத் துளிகளால் விழிப்புற்றனர்.

அதுவரை தமிழக அரசியல் பரப்பில் அதிகம் பேசப்படாத,அரங்குகளில் மட்டுமே பேசப்பட்டு வந்த தேசியம்/தேசிய இனம் போன்ற அரசியல் சொல்லாடல்கள் வெகுஜன பரப்பில் விவாதமாகி எழுந்தன. தமிழர் என்ற இனம் தோன்றி பன்னெடுங்காலமாக ஆகிவிட்ட கூட இது ஒரு தேசிய இனம் என்கின்ற அடிப்படை சிந்தனை தாயக தமிழ் மண்ணில் எழுவதற்கு ஒரு இனப்படுகொலை நிகழ்ந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் தங்கள் உயிரை இழந்து காரணமாகி இருக்கிறார்கள். பொதுப் புத்தியில் நாமெல்லாம் இந்தியர்கள்/ நாமெல்லாம் திராவிடர்கள்/ நாமெல்லாம் இந்த மதத்தினர்/ நாமெல்லாம் இந்த சாதியினர் என்று பல்வேறு காரணிகள் அவரவர் அறிவுக்கு ஏற்றது போல உறைந்து கிடக்கின்றன. இதிலிருந்து தெளிவு பெறுவதற்கு, ஒரு இனப்படுகொலை நிகழ்ந்த பிறகும் கூட பல்வேறு மயக்கங்களில் இருந்து ஒரு இனம் மீண்டு வருவதற்கு அரசியல் விடுதலை என்பது மிக மிக முக்கியமானது. குறிப்பாக இன விடுதலை அரசியல் என்பது ஒவ்வொரு தேசிய இனத்தின் உச்சபட்ச லட்சியமாக இருக்கிறது.

எனவே ஒரு இனம் தன்னை தகமைத்துக்கொள்ள சமூக அரசியல் சிந்தனைகள் காரணமாக அமைகின்றன. ஏன் எந்த திராவிட கட்சியும், எந்த தேசிய கட்சியும் தமிழர் என்கின்ற இனம் ஒரு தேசியம் அல்லது ஒரு தேசிய இனம் என வெளிப்படுத்த தயங்குகின்றன என்பதை குறித்து தன் கண் முன்னால் நிகழ்ந்துவிட்ட இனப்படுகொலைக்கு பிறகாவது சிந்திக்க வேண்டிய நெருக்கடியில் தமிழர் என்கின்ற தேசிய இனம் இருக்கிறது.

முதலில் தேசிய இனம் என்றால் என்ன, தேசியம் என்றால் என்ன போன்ற அடிப்படைகளை புரிந்து கொண்டால் தான் கடந்த 2009க்கு பிறகு வெகுஜன அரசியலாக மாறி வருகிற ” தமிழ்த்தேசியம்” என்கிற மண்ணின் பூர்வ குடி மக்களுக்கான உரிமை அரசியல் இன்னும் கூர்மை பெறும். உலகத்தில் விடுதலை அடைந்த எத்தனையோ தேசிய இனங்களை உற்றுப் பார்க்கும்போது அவற்றின் மீள் எழுச்சியிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஏராளமான பாடங்கள் இருக்கின்றன. தன்னை ஒரு தேசிய இனமாக கூட உணராத அல்லது அறியாத ஒரு இனம் எப்படி விடுதலை பெறும் என்கிற சிந்தனை நம் ஒவ்வொருவருக்கும் தேவைப்படுகின்ற காலகட்டம் இது.

குறிப்பாக தமிழ்த் தேசிய சிந்தனைகள் கூர்மை அடைந்து வருகிற சமகாலத்தில் அரசியல் பண்பாட்டு சூழலியல் புள்ளிகளில் நின்று மண்ணின் பூர்வ குடி மக்களுக்கான அரசியலை பேசும் இளம் தமிழ்த்தேசியர்கள் மிகச் சிறந்த அறிவுத்தெளிவோடு அரசியல் களத்தில் நிற்பதற்கான தகுதியை உருவாக்குகின்ற ஒரு மிகச்சிறந்த நூல்தான் “இந்தியாவில் தேசிய இனங்களும் தமிழ்த் தேசியமும்” .

இந்த நூலை எழுதியவர் சிந்தனை செம்மல் வழக்கறிஞர் கு.ச.ஆனந்தன் அவர்கள். 1997 ஆம் ஆண்டுக்குரிய சிறந்த நூல்களுக்கான முதல் பரிசை இந்த நூல் வென்று உள்ளது. மறைந்த வழக்கறிஞர் கு.ச.ஆனந்தன் எழுதிய “மலர்க மாநில சுயாட்சி” என்கின்ற நூலும் புகழ்பெற்றது.

இந்த நூல் இந்தியாவில் தேசிய இனங்கள், தமிழ்த் தேசியம் தீர்வுகள் என்கின்ற மூன்று பெரும் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

நூலின் தொடக்கத்தில் இந்தியாவில் தேசிய இனங்கள் என்ற பகுதியில் தேசியம் மற்றும் தேசிய இனம் என்றால் என்ன, இந்த சொற்களுக்குப் பின்னால் இருக்கின்ற அரசியல் எப்படிப்பட்டது என்கின்ற விரிவான ஆய்வை ஆனந்தன் முன் வைக்கிறார். குறிப்பாக மொழி வழி தேசியத்தின் எதிர் நிலைகளாக தோன்றியுள்ள மத வழி தேசியங்கள், சாதிய முரண்பாடுகள் குறித்தும் இந்த நூல் விரிவாக ஆய்வு செய்துள்ளது. தேசிய இனங்களின் உரிமைகளை இந்திய அரசியலமைப்புச் சட்டம் எவ்வாறு பறிக்கிறது என்பதை சட்ட பிரிவுகளின் வாயிலாக இந்த நூல் நிறுவியுள்ளது. இந்தியாவில் இருக்கின்ற பிற தேசிய இனங்களின் தேசிய இனச் சிக்கல்கள் குறித்தும் இந்த நூல் விரிவாக ஆய்வு செய்கிறது.

இரண்டாம் பகுதியான தமிழ்த் தேசியம் என்ற பகுதியில் தமிழர் வரலாற்றில் எழுந்த சாதி சமய பிளவுகள், தமிழ் இலக்கியத்தில் தமிழ் இசையில் தென்பட்ட தமிழ்த் தேசிய உணர்ச்சிகள், தமிழ் தேசியம் உருவாகாத வரலாற்றுப் பின்னணி போன்றவை விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தேசிய சிந்தனைக்கு காரணமாக அமைந்த பெருமக்களையும் இந்த நூல் அறிமுகப்படுத்துகிறது. மூன்றாம் பகுதியான தீர்வுகள் பகுதியில் பெரியாரியமே உரிய தீர்வு என நூலாசிரியர் முன்வைப்பது நவீன தமிழ் தேசிய மறுமலர்ச்சி சிந்தனையில் முறியடிக்கப்பட்ட ஒன்று. ஏனெனில் தேசியம் தேசம் போன்ற சிந்தனைகளை அடிப்படையிலிருந்தே மறுத்தவர் பெரியார் என்பதனால் தமிழ்த் தேசிய இன விடுதலைக்கு பெரியார் சிந்தனைகள் ஒருபோதும் வழி வகுக்காது என்பதுதான் வரலாறு தந்த பாடத்திலும், பட்டறிவிலும், நாம் கண்டடைந்த தீர்வு.

தேசிய இனங்களின் உரிமையில் மார்க்சியம் கொண்டிருக்கின்ற முரண்பாடு குறித்து சில அடிப்படை செய்திகளை இந்த நூல் மூலம் நாம் அறியலாம். தேசிய இன உரிமைகளை அடைய தாயக தமிழகத்தில் வாழ்கின்ற தமிழர்களுக்கு தேவை சுயநிர்ணய உரிமையா, முழு தன்னாட்சியா, தனி நாடா, என்பதற்கான பல விவாத பரப்புகளையும் இந்த நூல் உள்ளடக்கி தனது அடர்த்தியை பெருக்கியுள்ளது.

இந்த நூல் எழுதப்பட்ட சூழலில் நிலவிய மற்ற சிந்தனை போக்குகளை மறுதலித்த பெரியாரிய ஆதிக்கம், திராவிட கட்சிகளின் அதிகாரம் மற்றும் மக்களின் பொது மனநிலை சார்ந்து இந்த நூல் தயாரிக்கப்பட்டிருப்பது இந்த நூலில் காணப்படும் முரண்பாட்டு புள்ளிகள்.

அதையெல்லாம் தாண்டி இந்திய பெருநிலத்தில் ஒரு இனம் ஒரு தேசிய இனமாக மாறுவதற்கான அவசியத்தையும், அதற்கான சிந்தனைப் போக்கையும் இந்த நூல் தருகின்ற காரணத்தினால் அவசியம் இளம் தமிழ்த் தேசியர் கற்றுத் தேற வேண்டிய மிக முக்கியமான நூலாக இந்த நூல் அமைகிறது.

“இந்தியாவில் தேசிய இனங்களும் தமிழ்த் தேசியமும்”

சிந்தனைச் செம்மல் கு.ச‌. ஆனந்தன்/600 பக்கங்கள்/ தங்கம் பதிப்பகம் ,கோயம்புத்தூர். அலைபேசி எண் 95 780 04698.

விலை ரூ. 650/-

திருமுருகன் காந்தி -சில குறிப்புகள்

2009 காலத்தில் இருந்து திருமுருகன் காந்தியை கவனித்து வருகிறேன். முதலில் தொடக்கத்தில் இருந்தே அவர் தமிழ் தேசியவாதி அல்ல. அவர் முன் வைப்பதும் தமிழ் தேசியம் அல்ல.மே 17 இயக்கத்தை தொடங்குவதற்கான அனைத்து பணிகளையும் செய்தது மன்னார்குடியில் என்னோடு படித்த என் பால்ய கால நண்பன் உமர். அவனது அறிவை, ஆற்றலைக் களவாடி திருமுருகன் காந்தி தனது செயல்பாடுகளாக காட்டிக்கொண்டது அனைவருக்கும் தெரிந்ததே. சொல்லப்போனால் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை தடுத்து நிறுத்துவதற்கான பொய்களை மற்றும் அவதூறுகளை பரப்புகிற கூலியாள் வேலையை தான் திருமுருகன் காந்தி செய்து வருகிறார்‌. அவர் யாருக்கும் நேர்மையாக இருந்த மனிதர் அல்ல. அவரோடு மே 17-ல் உழைத்த உமர், சரவணன் தங்கப்பா உள்ளிட்ட பல தோழர்கள் முன்வைத்த எந்த குற்றச்சாட்டுகளுக்கும் திருமுருகன் பதில் அளித்தவர் அல்ல.திராவிட பிழைப்புத் தனத்திற்கு எதிராக தமிழ்த் தேசிய பரப்பு விரிவடைவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த திராவிடத் தலைவர்களால் வளமூட்டி வளர்க்கப்பட்டவர் திருமுருகன்.திருமுருகன் யார் என்பதற்கு மிகப்பெரிய ஆவணம் உமர் எழுதிய நான் ஏன் மே 17 இருந்து விலகினேன் என்கிற பல பக்க கட்டுரை. தொடக்கத்தில் மே 17 இயக்கத்தில் உணர்வோடு இயங்கிய பலரும் திருமுருகனின் சுயநல போக்கினை, பிழைப்புவாத திராவிட ஆதரவு நிலையை கண்டு மனம் வெறுத்து அவரிடம் இருந்து விலகி விட்ட நிலையில், கையறு நிலையில் இப்போது வெறி கொண்டு அண்ணன் சீமான் மீதும், நாம் தமிழர் கட்சி மீதும் பாய்ந்திருக்கிறார். தன் மேடையில் அண்ணன் சீமானைப் பற்றி, நாம் தமிழர் கட்சியை பற்றி அவதூறாக மதிப்பு குறைவாக முகவரி அற்றவர்களை எல்லாம் ஒன்றாக திரட்டி ஒருமையில் ஏசி பேச வைத்து தன் தோல்வி காயங்களின் மீது மருந்து போட முயன்றிருக்கிறார் திருமுருகன். உண்மையில் அது அவரது மன நோய் சம்பந்தப்பட்டது.

இது போன்ற பல திருமுருகன் காந்திகள் பலரால் தயாரிக்கப்பட்டு எழுந்து வருகிற தமிழ்த் தேசியம் என்கின்ற வலிமையான தத்துவ உருவாக்கத்தின் மீது ஏவப்படுவார்கள். அவர்களையெல்லாம் போகிற போக்கில் இடது கையால் ignore செய்துவிட்டு மண்ணின் மைந்தர்களுக்கான பூர்வ குடிகளின் தத்துவ முழக்கம் வெற்றி பெற்றே தீரும்.

நமக்கு ஒரே ஒரு அச்சம் மட்டுமே இவ்வேளையில் இருக்கிறது. யாருக்கும் , எதற்கும் உபயோகமில்லாத திருமுருகன் போன்ற அடுத்தவர் அறிவை திருடி பிழைக்கின்ற அடிவருடிகளை நாம் எழுதி, பேசி பெரிய ஆட்களாக மாற்றி விடக் கூடாது என்பது மட்டும்தான்.

திருச்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடிய மாவீரர் நாள் மாநாட்டில்

அண்ணன் சீமான் அறிவித்தது போல.. இத்துப்போனவைகளைப் பற்றி, நிறம் இழந்து உதிர்ந்தவர்களை பற்றி பேசுவதும் எழுதுவதும் வீணானது.

நாம் நம்மைப் பற்றி பேசுவோம்.

நம் வெற்றியை உலகத்திற்கு உரக்கச் சொல்வோம்.

அந்தக் கம்பீரத்தில் திருமுருகன் காந்தி போன்ற சில்லறைகள்

காணாமல் போவார்கள்.

நம் தேசியத் தலைவர் அவர்களை தீவிரமாக எதிர்க்கின்ற திமுகவினரை அவர்களது விமர்சனங்களை நாம் அறிவோம். கருணாநிதிக்காகவே அவர்கள் கனவு கண்ட “தமிழினத் தலைவர்” என்கின்ற லட்சியப் பட்டத்தை உச்சபட்ச தன் தியாகத்தால் அடைந்த அந்த அதிமனிதன் மீது திமுகவின் பாமரத் தொண்டன் என்கின்ற முறையில் அவர்களுக்கு இருக்கின்ற வெறுப்பு/பொறாமை /வயிற்றெரிச்சல் இன்னும் பல.

ஆனால் அவர்களை எல்லாம் தாண்டி தேசியத் தலைவர் அவர்களை பெரியாரோடு வைக்கிறேன் அம்பேத்கரோடு பொருத்துகிறேன் என்றெல்லாம் மாய்மாலம் பேசும் வேடதாரிகள் தான் அபாயகரமானவர்கள். அம்பேத்கர் அவர்களையும் பெரியார் அவர்களையும் கூட ஒரே தட்டில் பொருத்துவது என்பது ஏற்கத்தக்கதல்ல. அண்ணல் அம்பேத்கர் அனைத்தையும் தான் கண்டடைந்த பேரறிவு மூலம் உணர்ந்து தெளிந்து அறிவித்தவர். பெரியார் அவ்வப்போது ஏற்படும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அரசியல் நிலைப்பாடுகள் எடுத்தவர். இருவருமே வெவ்வேறானவர்கள். இதன் நடுவில் தேசிய தலைவரைப் பொருத்துகிறேன் என்ற திருமுருகன் காந்தி போன்றோரின் நாடகம் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் அவமானப்படுத்தக் கூடியது.

ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்காக படைக்கட்டி போராடிய தலைவரை முற்றிலுமாக வேறு காலத்தில் வாழ்ந்த தலைவர்களோடு ஒப்பிடுவது என்பது ஒப்பிட்டு குறைபாடு மட்டுமல்ல, அரசியல் உள்நோக்கம் கொண்டது. ஆயுத வழி போரின் மூலம் சோசலிச குடியரசு நாட்டை கட்டி எழுப்ப களத்தில் நின்ற தேசிய இனத்தின் விடுதலை குறியீடு தலைவர் அவர்கள் தன் போராட்டத்தின் ஊடாக பெண்ணுரிமை சாதிய மறுப்பு மொழிப்பற்று சூழலியல் பாதுகாப்பு உள்ளிட்ட இலட்சிய கோட்பாடுகளை வென்றெடுத்தவர். தன்னை திராவிடர் என்றோ பெரியாரியவாதி என்றோ எங்கும் சொல்லிக் கொள்ளாத தலைவர் அவர்களை அவரவருக்கு விருப்பமான தத்துவ அடுக்குகளில் பொருத்துவது என்பது அப்பட்டமான சுயநலத்தனம்.

இந்த விஷயத்தில் இடதுசாரிகள் சற்றே தெளிவானவர்கள். பெரியாரையும், காரல் மார்க்ஸையும் ஒரே தட்டில் அவர்கள் வைக்க மாட்டார்கள்.

ஆனால் திராவிட திரிபுவாதிகள் பிழைப்புக்காக

எல்லாவற்றையும் கலந்து கட்டி அடித்து கல்லா கட்ட முயற்சிப்பார்கள். அந்த முயற்சிகளுக்கெல்லாம் கல்லறை கட்டுவது தான் நமது வேலை.

சீமான் அண்ணனின் பிறந்தநாள்.

பேரன்பினால் நெய்யப்பட்ட பேராற்றல்.

——————————————————————

ஒரு மீன் குஞ்சு தன் அம்மாவிடம் கேட்டது.

” நான் கடலைப் பற்றி எப்போதும் கேள்விப்படுகிறேன் கடல் என்றால் என்ன..? அது எங்கே இருக்கிறது..?”

“நீ வாழ்வதும், அசைவதும், உன் உயிர் இருப்பதும் கடலில் தான். கடல் உனக்குள்ளும் இருக்கிறது. நீ இல்லாமலும் இருக்கிறது. நீ கடலால் ஆனவள். நீ கடலில் தான் முடிவாய். கடல் உன் சொந்த உயிரைப் போல உன்னை சூழ்ந்துள்ளது. என்று அம்மா சொன்னாள்.

( நான் யார் ?.. 173 ஜென் கதைகள். அடையாளம் வெளியீடு.)

🛑

மிக எளிதாக இந்த ஜென் கதையை வெறும் கண்களால் படித்து, அகக் கண்களால் பார்க்கும் எவராலும் கடந்து விட முடியாது. ஏனெனில் அந்தக் கதை நம்மைப் பற்றியது. எப்படி அந்த மீன் குஞ்சு தான் மிதந்து கொண்டிருக்கின்ற கடலைப் பற்றி தன் அம்மாவிடம் கேட்டுக் கொண்டிருக்கிறதோ, அப்படித்தான் தமிழர் என்ற தேசிய இனம் அந்த ஒரு தனி மனிதனின் வருகைக்கு முன்னால் தான் யார் என்று தெரியாமல் திரைப்படங்களை பார்த்துவிட்டு நாம் இந்தியர் என்றும், திராவிட மேடைகளை பார்த்துவிட்டு நாம் திராவிடர் என்றும் குழம்பிக் கொண்டிருந்தது.

வன்னிக் காட்டில் கொழுந்து விட்டு எரிந்த ஒரு தீப்பந்தத்தில் உரசப்பட்டு, ஒரு அசலான எரியும் தீக்குச்சி போல அவன் வந்தான். இன அழிவு கோபத்தால் தகித்துக் கொண்டிருந்த ஆன்மாக்களில் சென்று சேர்ந்தான். பற்றி எரிந்தது வனம்.

வெந்து தணிந்தது காடு.

அண்ணன் சீமான் என்கின்ற அந்த அதி மனிதரின் இரு காட்சிகள்.

🛑

ஒரு காட்சி.

வெயிலேறி எரிந்து கொண்டிருந்த அந்தக் கனல் பொழுதில் நாங்கள் சென்று சேர்ந்த போது ஒரு வயதான முதியவரை தவிர அங்கே யாரும் இல்லை.

அவருக்குப் பின்னால் ஒரு சரிந்த லிங்கம் சாய்ந்து கிடந்தது.

சிறிது சலசலப்புடன் கூடி வந்த கூட்டத்தின் நடுவில் நின்ற அண்ணன் சரிந்து கிடந்த லிங்கத்தை பார்த்துவிட்டு அப்படியே உறைந்து நின்றார். ஒரு தீவிர மௌனத்தின் சுழல் அங்கே மெதுவாக சுழலத் தொடங்கியது.

அண்ணன் முகத்தில் உறைந்திருந்த உணர்ச்சி அலைகளை கண்ட அந்த இளைஞர் கூட்டமும் மௌனமாகிவிட்டது. அண்ணனின் கண்கள் கலங்கத் தொடங்கி இருந்தன. ‘ஏண்டா இப்படி..’ என்பது போல எங்கள் முகத்தை அண்ணன் பெரும் வலியோடு உற்று நோக்கினார்.

அங்கே இருந்த ஒரு பழைய கீற்று கொட்டகைக்கு கீழே வரலாற்றின் புகழ் வெளிச்சம் அனைத்தையும் ஒருங்கே அடைந்த தமிழ் இனத்தின் பேரொளி ஒன்று புதைந்து கிடக்கிறது. பெருவுடையார் கோவில் கண்ட பெருமை ஒன்று சிதைந்து கிடக்கிறது.

மாமன்னர் ராஜராஜ சோழன் அந்த உடையாளூர் மண்ணில் தான்

சிதிலம் அடைந்த லிங்கமாய் உடைந்து கிடந்தார்

வந்தவர் போனவருக்கெல்லாம் கடற்கரையில் கல்லறை கட்டி சில்லறை வீசும் ஒரு இனத்தின் மக்கள் தன் சொந்தவனை, உலகை ஆண்ட மன்னவனை உதறித் தள்ளிய வரலாற்றின் அவலக் காட்சி அது.

அந்த வயதான முதியவர் அண்ணனின் கைகளைப் பிடித்துக் கொண்டு தழுதழுக்க “உன் பாட்டனை காப்பாற்று, அவன் புகழ் போற்ற ஏதேனும் செய்..”

என்றார்.

அருகில் இருந்த நாங்கள் அரசின் கவனத்தை ஈர்க்க ஏதேனும் பெரிய போராட்டம் செய்வோம் என்று சொன்னோம்.

கண்கள் சிவந்து கலங்கிக் கொண்டிருந்த அண்ணன் தீர்க்கமாய் நிமிர்ந்து பார்த்தார்.

“இந்த திராவிடத் திருடர்கள் யாரும் என் பாட்டனுக்கு எதுவும் செய்ய வேண்டாம்.எந்த நினைவு மண்டபம் கட்ட வேண்டாம். கட்டவும் கூடாது. மீறி கட்டினார்கள் என்றால்.. ஒரு நாள் நான் ஆட்சிக்கு வருவேன். இவர்கள் கட்டியதை இடித்துவிட்டு நான் மாபெரும் நினைவாலயத்தை என் புலிக்கொடி பாட்டனுக்காக எழுப்புவேன்.

பல நூறு ஆண்டுகள் படுத்து கிடந்தவன் சில ஆண்டுகள் பொறுத்திருக்க மாட்டானா..??”

என்று சினம் கொண்டு கேட்ட அவரது உரம் மிக்க சொற்கள் கேட்டு புவியாழத்தில் புதைந்து கிடந்த அரசனுக்கு அரசன் அருண்மொழிச் சோழன் பெருமூச்செறிந்தான். சாய்ந்து கிடந்த லிங்கம் கூட சற்று நிமிர்ந்ததாய் ஒரு தோற்றம்.

.🟥

மற்றொரு காட்சி.

காவிரி செல்வன் விக்னேஷ் தீக்குளித்து விட்டான். அண்ணன் பதைபதைத்து ஓடி வந்து கொண்டிருக்கிறார். தம்பி விக்னேஷ் தாங்கி பிடித்திருந்த காவலர் தம்பி கண் மூடி விடாதே உன் தலைவர் வந்து கொண்டிருக்கிறார் என சொல்ல.. நெருப்பின் தழல் மேவிக் கிடந்த தம்பி விக்னேஷ் சிரமப்பட்டு விழிகளை திறந்தான். அவர் என் தலைவர் அல்ல. என் அண்ணன். என்று சொல்லிவிட்டு இறுதியாக விழி மூடினான்.

கண்கள் முழுக்க கண்ணீரோடு அந்த மருத்துவமனையின் வாசலில் நின்று கொண்டே இருந்த அண்ணனை பின்னிரவில் வாகனத்தில் சென்று அமர சொன்னோம். மறுத்துவிட்டு அவனது பெற்றோர்கள் வரும் வரை கலங்கிய கண்களோடு வலி தாங்கி நின்று கொண்டே இருந்தார். அவனது பெற்றோர்கள் முன் தம்பியை பறி கொடுத்துவிட்டு

கலங்கி நின்ற அவரின் தவிப்பு

எதனாலும் ஆற்றுப்படுத்த முடியாதது.

அன்று அவர் சிந்திய கண்ணீர் துளிகள் தாய்மையின் சாயல் கொண்டவை.

❤️

சிந்தித்துப் பாருங்கள்.

மரணப் படுக்கையிலும் கூட தன் அண்ணன் என்று ஒருவரை நினைவு படுத்தி அழைக்க முடிகிற தீவிரத்தை அண்ணனிடம் உள்ள

எது ஒருவனுக்கு தருகிறது..???

அண்ணன் என்பது வெறும் சொல்லா.. அல்லது உறவு முறையா.. அல்லது கூப்பிடும் வழக்கமா.. அல்லது மாண்போடு அழைக்கும் பண்பாடா… என்றால் இவை எதுவுமே இல்லை.

அது ஒரு வகையான தனித்துவம்.

வெவ்வேறு கருப்பைகளில் தோன்றினாலும் தொன்மத்தில் தோன்றிய, ஆதி இனத்தின் மரபணுவில் அழிவின் அழுத்தம் விளைவித்த

ஒழுங்கினால் நேர்ந்து விட்டிருக்கிற பெரும் அன்பின் அலைவரிசை. எதையும் அந்த மனிதனுக்காக இழக்கலாம் என துணிகிற மனநிலையை உள்ளுக்குள் துடித்துக் கொண்டிருக்கிற அந்த மரபணு தான் தீர்மானிக்கிறது.

அவரது மொழி கேட்டால் நம் உயிர் விழி அசைகிறதே.. அவர் வழி காட்டினால் நம் முன்னால் லட்சியப் பாதை ஒன்று விரிகிறதே..

என்றெல்லாம் நாம் வியந்து கொண்டிருக்கும் போதே, உயிர் வாழும் இறுதித் துளி வரை இணைந்திருக்கும் பேரன்பின் மொழியை அவர் நம் இதயத்தில் எழுதிக் கொண்டிருப்பார்.

அவரது மனநிலை அது.

கொஞ்சமும் ஒப்பனை இல்லாத, முன் தயாரிப்பு இல்லாத , அசலான அவரது இயல்பு அது. அந்த இயல்புதான் நாம் தமிழர் என்கின்ற மகத்தான குடும்பத்தை இயக்கிக் கொண்டிருக்கிற பேராற்றல்.

அந்தப் பேராற்றல் தான் ஒரு தேசிய இனத்தை விடுதலைப் பெற வைக்க கூடிய வலிமையாய், அவரது இயல்பாய் இணைந்திருப்பது காலக் கணிதத்தின் அதிசயமான கணக்கு தான்.

காலம் தனக்கான தேர்வுகளை அதுவாகவே செய்யும் என்பார்கள். முதல்முறையாக காலத்தை தானே தேர்ந்தெடுத்து தன் வரலாற்றை தன் இனத்திற்கான விடுதலை வரலாறாக மாற்ற உழைத்து வருகிற அண்ணன் நமக்காக மட்டுமல்ல, இந்த இனத்தில் பிறந்த ஒவ்வொருவருக்காகவும் பிறந்தவர்.

❤️

விடியலை நோக்கி விரைந்து கொண்டிருக்கின்ற இந்த இரவில் உன்மத்த அன்போடு என் உன்னத அண்ணனை கட்டி அணைக்கிறேன்.

அண்ணா.. நீங்கள் பிறந்ததால் நாங்கள் சிறந்தோம்.

உணர்ச்சி நிறைந்த

நன்றியும்,

முத்த வாழ்த்துகளும்.

#அடுத்து_நாமதான்ணே

❤️
❤️
❤️

இந்து தமிழ் திசைக்கு எதிர்வினை

இந்து தமிழ் திசை‌ இதழில் “ஆண் மனதின் கேவலம்” என்ற தலைப்பில் பிருந்தா சீனிவாசன் என்பவர் எழுதிய பதிவு ஒன்றினை காண நேர்ந்தது.

மிகவும் ஒரு தலைப்பட்சமான பார்வை கோளாறு நிரம்பிய அந்தப் பதிவு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களை ஆணாதிக்கம் உடையவராக சித்தரிக்க முயன்றது. குறிப்பாக அண்ணன் சீமான் எதிர்கொண்ட ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் கூறிய சில வார்த்தைகளை கருப்பொருளாக வைத்துக் கொண்டு பிருந்தா அவர்கள் இதழியலாளருகளுக்குரிய ஊடக அறத்தை தன் சுய கண்ணோட்டத்திற்காக மீறி இருப்பது அப்பட்டமாக தெரிந்தது.

அந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் குறிப்பிட்ட ஒரு பெண்ணைப் பற்றி அவரது மனைவியார் சொன்னதாக கூறிய கருத்து என்பது ஒட்டுமொத்த பெண்களுக்கு எதிரானது என காட்டுவது மிக மோசமானது. அந்தக் கருத்து குறிப்பிட்ட பெண்ணின் குணாதிசயத்தை விமர்சித்து எழுந்த கருத்து. பொய்யான அவதூறுகள் மூலம் தொடர்ந்து ஒருவரை பொதுவெளியிலும் தனிப்பட்ட முறையிலும் விமர்சித்து வருகிற ஒரு பெண்ணை அவரின் இயல்பை பற்றி எழுந்த விமர்சனம் அது. அந்த விமர்சனத்தை ஒட்டுமொத்த பெண் இனத்திற்கானதாக மாற்றுகின்ற திசை திருப்புகிற “பணி”(?)யை யார் பிருந்தாவிடம் வழங்கியது என்பதை பிருந்தா மட்டுமே அறிவார்.

இப்போதுதான் நாடாளுமன்றத்தில் 33 சதவீதம் பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்ட மசோதா நிறைவேறி உள்ள நிலையில்‌ சென்ற பாராளுமன்ற தேர்தலின் போதே நாம் தமிழர் கட்சி இந்திய அரசியல் கட்சிகளிலேயே முதன் முதலாக பெண்களுக்கு தேர்தலில் 50 விழுக்காடு வாய்ப்பளித்து வரலாற்றில் இடம் பிடித்த அமைப்பு. அடுத்து வந்த 2021 சட்டமன்ற தேர்தலிலும்‌ 234 தொகுதிகளில் சரி பாதி பெண்களுக்கு இடம் அளித்து பெண்ணுரிமையை தன் உயிர் கொள்கையாக அண்ணன் சீமான் செயலில் செய்து காட்டினார்.

இந்த துணிச்சலான நடவடிக்கை இந்திய சமூக வரலாற்றில் ஒரு மைல் கல். தேர்தல் வெற்றி தோல்வியை பற்றி கணக்கில் கொள்ளாமல் சமூக மாற்றத்தை பற்றி ஆழமாக சிந்திக்கும், பிருந்தா போன்றவர்களால் கேவலமானதாக பார்க்கப்படுகின்ற ஒரு உன்னத ஆண் மனது தான் இதை நடைமுறைப்படுத்தியது.

ஆணுக்குப் பெண் சமம் அல்ல, ஆணும் பெண்ணும் சமம் என்பதை தன் அமைப்பின் தத்துவமாக அண்ணன் சீமான் தான் பேசும் இடங்களில் எல்லாம் பதிவு செய்து வருகிறார்.

அண்ணன் சீமான் அவர்களுக்கு திருமணம் ஆகி பத்து ஆண்டுகள் கழித்து இரண்டு பிள்ளைகளுக்கு அவர் தந்தையான பிறகு “ஒரு காலத்தில் அவர் என்னை காதலித்தார் என்னை ஏமாற்றி விட்டார்..” என்றெல்லாம் ஒரு நடிகை பேசுவது இவர்களுக்கு பெண்ணுரிமையாகப்பட்டால் பிருந்தா போன்றவர்கள் தான் பெண்களை கேவலப்படுத்துகிறார்கள்.

இதே போல ஒரு காலத்தில் காதலிக்கப்பட்டவர்கள் மீது காதலித்தவர்கள் எல்லாம் குற்றம் சாட்டி வீதிக்கு வந்து நின்று சண்டை போடும் பட்சத்தில் இங்கே யாரால் நிம்மதியாக இருக்க முடியும்..??

காதல் என்பது ஒரு காலத்தின் உணர்ச்சி. அது சிலருக்கு திருமணத்தில் முடிகிறது. பலருக்கு நினைவாக தேங்கி விடுகிறது. மேலும் கால ஓட்டத்தில் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகும் மனநிலை காதல் என்ற பெயரில் தான் தேர்வு செய்யும் இணையை பெரும்பாலும் மறு பரிசீலனை செய்து மாற்றுவதற்கான சூழலையும் ஏற்படுத்துகிறது.

அந்த விமர்சனம் கூட குறிப்பிட்டு இத்தனை பெண்களுக்கு மத்தியில் அந்தப் பெண்ணை ஏன் நீ விரும்பினாய் என்கிற கேள்விக்கு இது போன்ற குணாதிசயம் உள்ள பெண்ணை ஏன் விரும்பினாய் என்பதுதான் பொருளே ஒழிய ஒட்டுமொத்த பெண்ணினம் இங்கே எங்கே வந்தது..??

தனிப்பட்ட விருப்பு வெறுப்பன்றி ஒரு செய்தியை அணுக முடியாதவர்கள் பத்திரிக்கை துறையில் பணியாற்றும்போது நேருகின்ற விபத்து இது. சொல்லப்போனால் குறிப்பிட்ட அந்த நடிகை மீதும் அவருடன் இணைந்து தற்போது பிரிந்து இருக்கின்ற இன்னொரு பெண்ணின் மீதும் உள்நோக்கத்துடன் அவதூறு பரப்புகிறார்கள் என நாடெங்கிலும் அதிகம் புகார் அளித்தது பெண்கள் தான், பெண்ணினத்தை சேர்ந்தவர்கள் தான் என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

பெண்ணுரிமை என்பது ஒரு ஆணை முன்னிறுத்தி பொய்களை உள்ளடக்கிய அவதூறு பரப்பி அதன் மூலம் நிலைநாட்டப்படுவதல்ல. மாறாக வரலாற்றில் காலம் காலமாக தாழ்த்தி ஒடுக்கப்பட்டு சமையலறையிலும் படுக்கை அறையிலும் வீழ்த்தப்பட்டு கிடக்கிற பெண்களை வீதிக்கு அழைத்து வந்து அதிகாரத்தை நோக்கிய பயணத்தில் அவர்களை ஈடுபடுத்துவது.

ஒருபோதும் பெண்களால் மட்டும் பெண்ணுரிமையை ஈட்டி விட முடியாது. பெண்களை சரிக்கு சமமாக மதிக்கின்ற அண்ணன் சீமான் போன்ற மிகவும் பக்குவமான சுதந்திர உணர்ச்சி நிரம்பிய ஆண் மனது அதற்குத் தேவையாக இருக்கிறது.

அப்படிப்பட்ட ஆண் மனது கேவலம் என அவதூறு பேசும் பிருந்தா போன்றவர்கள் தான் விடுதலைக்கும் பெண்ணுரிமைக்கும் எதிரானவர்கள்.

தமிழ் முழக்க நினைவுகள்

தமிழ் முழக்கம் என் வாழ்வில் செலுத்திய ஆதிக்கம் கொஞ்சநஞ்சம் அல்ல. எழுத்து உலகில் மிக இளையவனான என்னை கண்டெடுத்து தன் பத்திரிக்கைக்கு துணை ஆசிரியராக நியமித்து ஒவ்வொரு இதழிலும் என் எழுத்துக்களை பதிவேற்றம் செய்து என்னை உருவாக்கிய பெருமகன் தமிழ் முழக்கம் சாகுல் அமீது என்ற திருமகன்.

நாகப்பட்டினத்தில் நடந்த‌ நாம் தமிழர் கட்சியின் மாபெரும் இளைஞர் பாசறை தொடக்க மாநாட்டில் எங்களை மேடையேற்ற அவர் உழைத்த உழைப்பு இன்னும் என் கண்களிலே நிற்கிறது.

எதற்கும் அயராத மனிதன். அவரது உருவம் போல அவரது நம்பிக்கையும் மகத்தானது. எதுவுமே இல்லாத அடையாளமற்ற எளியவர்களை அவராகவே தேர்ந்தெடுத்து அவர்களை உயரச் செய்கிற குணம் நம்மில் எத்தனை பேருக்கு வாய்க்கும்..??

அவருக்கு வாய்த்தது. அண்ணன் சீமான் தொடங்கி இன்னும் எத்தனையோ என்னை போன்ற எளியவர்களுக்கு உதவி செய்து மேல் ஏற்றிய அவரது கரங்கள் பொற்கரங்கள்.

எதிலும் அவர் பிரம்மாண்டம் தான். விருந்து வைத்தாலும் சரி.. கூட்டம் நடத்தினாலும் சரி, அவருக்கென்று ஒரு மகத்தான பிரம்மாண்டமான திட்டம் இருக்கும். அந்தத் திட்டத்தை நிறைவேற்ற அவர் இரவும் பகலும் ஆக உழைப்பதில் தான் அவர் நிறைவடைவார்.

ஒரு முறை தமிழ் முழக்கம் இதழில் நான் எழுதிய ஒரு கட்டுரை காரணமாக கடுமையான எதிர்ப்பு தமிழகம் எங்கும் ஏற்பட்டு அவரது பத்திரிக்கை அலுவலகமே தாக்கப்பட்ட போது, அதைப்பற்றி கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் அடுத்த மாதமே எனது அடுத்த கட்டுரையை பதிவேற்றி அதுவே அட்டைப்படமாக மாற்றிக் காட்டிய அந்த நம்பிக்கையை நான் எங்கே கண்டடைவேன்..??

அண்ணன் சீமான் சொற்கள் தான் அவருக்கு வேத மொழிகள். தன் மருமகனின் சொல்லைத் தாண்டி அவருக்கு எல்லை ஏதுமில்லை. சீமான் என்ற மனிதனுக்கு தாய் மாமனாக மாறியதால் உலகம் எங்கும் வாழக்கூடிய இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உயிர் மாமனாக மாறியவர் அவர்.

குறிப்பாக என்னை செதுக்கி, நம்பிக்கை ஊட்டி இயங்க வைத்ததில் அவருடைய பங்கு மிக மிகப் பெரிது. அவரது நினைவுகளை இன்னும் மனதிற்குள் சுமந்து கொண்டு தான் அதிலிருந்து தான் இயங்குவதற்கான ஆற்றலை எனக்குள்ளாக நான் தயாரித்து வருகிறேன்.

இறுதியாக தன் வாழ்நாளில்‌ அவர் கலந்து கொண்ட கடைசி கலந்தாய்வு கூட்டம் என் வீட்டு மாடியில் தான் நடந்தது. அப்போதே அவருக்கு கடுமையான காய்ச்சல் தொடங்கி இருந்தது. வாயெல்லாம் கசக்கிறது என்று சொல்லிக் கொண்டே இருந்தார். நிலவேம்பு கசாயம் எடுத்து வந்த என் தாயிடம் வேண்டாம் என மறுத்து சர்க்கரை நிறைய போட்டு காப்பி வேண்டும் எனக் கேட்டார். கூட்டத்தில் நானும் அண்ணன் ஹுமாயூன் உள்ளிடவர்களும் கலந்து கொண்ட போது துணிச்சலான பல முடிவுகளை அவர் தயங்காமல் எடுத்தார்.

அவரை என் வாழ்வில் சந்தித்ததும் அவரால் நான் சந்தித்ததும் நிறைய இருக்கின்றன. முடிவாக ஒன்றே ஒன்று. அவரால் நான் உருவாக்கப்பட்டு இருக்கிறேன். தன் மருமகன் சீமானை அவர் நேசித்தார் என்பது எங்களுக்கு ஏற்கனவே தெரியும். அது எந்த அளவு என்றால் தன் வாழ்வின் இறுதி நொடியில் கூட கட்சியின் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளும் அளவிற்கு உயிரளவு என்பது அவரது மறைவிற்குப் பிறகு தான் புரிந்தது.

அந்தப் பற்றுறுதி தான் அந்த இலட்சிய விருப்பு தான் எங்களுக்கு அவர் விட்டு சென்று இருக்கின்ற இறுதி செய்தி.

அதை வாழ்நாள் எல்லாம் நாங்கள் கடைபிடிக்க அவர் தெய்வமாக நின்று கருணையின் குடை பிடிக்கட்டும்..

கண்கள் கலங்க என் ஆசானுக்கு கண்ணீர் வணக்கம்.

மணி செந்தில்.

காலமும் அவர்தான்.. களமும் அவர்தான்.

நாம் தமிழர் கட்சி வரலாற்றில் திருப்பூருக்கு என்றுமே தனி இடம் தான். 13 வருடங்களுக்கு முன்பாக ஒரு மழை நாளில் திருப்பூரில் அண்ணன் சீமான் கொட்டும் கொட்டும் மழையில் உணர்வு தீ கொதிக்க அனல் தமிழில் முழங்கிய ஆவேச பேச்சு இன்றும் நம் நினைவலைகளை விட்டு நீங்க வில்லை.

இன்றும் மழையின் மிரட்டலோடு நடந்த இந்த கூட்டத்தில் அண்ணன் சீமானின் பேச்சு இதுவரை இல்லாத மகத்துவம் நிறைந்த தனித்துவம். கூடி நின்ற மக்கட் பெருங்கடல் திரண்டு இருந்த அந்த மாபெரும் இடம் அண்ணன் சீமானின் கம்பீர தமிழுக்கு முன்னால் ஒரு மாபெரும் வகுப்பறையாக மாறிப் போனது. ஒரு தேர்ந்த பொருளாதாரப் பேராசிரியர் போல புள்ளிவிபரங்களோடு, அவ்வப்போது துள்ளி வருகின்ற நகைச்சுவை கிண்டல்களோடு அவர் நடத்திய சூழலியல் பொருளாதார வகுப்பு கடல் போல் திரண்டு இருந்த ஒரு வெகுஜன கூட்டத்திற்கு மிக மிகப் புதிது.

ஒரு தலைமைத்துவம் நிறைந்த மாபெரும் பேச்சாளர் ஒருவர் “தற்சார்பு பொருளாதாரம்” என்ற மிகக் கடுமையான தலைப்போடு ஒரு வெகுஜன கூட்டத்தை அணுகுவது என்பது மிக மிக ஆபத்தானது. எந்த நேரமும் பேச்சு தன் அலைவரிசையில் இருந்து மாறி, மக்களின் ஆர்வத்தை தூண்டாமல், திசை மாறுமானால் அந்தக் கூட்டம் அப்படியே கலைகின்ற சங்கடமும் நிகழ்ந்துவிடுகிற சூழல்.

ஆனால் நம் அண்ணன் சீமான் தான் “சொல்வல்லான்” ஆயிற்றே. கட்டமைக்கப்பட்ட தேர்ந்த சொற்கள் மூலம் ஆங்காங்கே இடையில் தூவப்பட்ட நகைச்சுவை துணுக்குகள் மூலம் அந்த மக்கட்பெரும் கடலை தனது தன்னிகரற்ற மொழியாற்றலால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கட்டிப்போட்டு வைத்திருந்தார் அவர்.

வந்திருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள். பலர் குடும்பத்தோடு வந்திருந்தார்கள். தங்கள் துயர் துடைக்க இறுதியாக பிறந்த நம்பிக்கையோடு காலங்காலமாய் வீழ்த்தப்பட்ட ஒரு இனத்தின் மக்கள் கைகோர்க்க தயாராகி வந்து நின்றார்கள்.

கூட்டத்தில் உணர்வு அலைவரிசையை அண்ணன் சீமான் தான் தீர்மானித்தார்.அவர் சிரித்தால் கூடியிருந்த மக்கள் கூட்டமும் சிரித்தது. அவர் கம்பீரமாய் கை உயர்த்தினால் அங்கே கூடி இருந்த அவ்வளவு பேரும் தங்கள் கைகளை உயர்த்தினார்கள். அவர் புள்ளி விவரங்களை துல்லியமாக அடுக்கிக் கொண்டே விவரிக்கும் போது முன்வரிசை மாணவன் போல ஒவ்வொருவரும் உன்னிப்பாக கவனித்தார்கள்.

தொலைக்காட்சியில் இதை கவனித்துக் கொண்டிருந்த என் தந்தை மூத்த தமிழ் பேராசிரியர் முனைவர் ச.மணி மிகுந்த வியப்புக்கு உள்ளானார். அவர் சுமார் 45 வருடங்கள் பேராசிரியராக, கல்லூரி முதல்வராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். ஒரு பேராசிரியருக்கு இருக்கும் பெரும் சவாலே வகுப்பறையில் அமர்ந்திருக்கும் மாணவர்களோடு ஒத்த அலைவரிசையில் தொடர்பாவதுதான். அந்த அலைவரிசை சிறிது பிசகினாலும் மாணவர்கள் வெறுக்கத்தக்க வகுப்பாக அந்த வகுப்பு மாறிவிடும் என்பது மட்டுமில்லாமல் அந்தப் பேராசிரியரும் தங்களுக்கான நம்பிக்கையை இழந்து விடுகின்ற துயரமும் நேர்வது உண்டு என அவர் சொன்னார்.

ஆனால் சீமானுக்கு அங்கே கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களோடு தனிப்பட்ட முறையில் ஒத்த உணர்வு அலைவரிசையில் எளிதாக தொடர்பானது ஒரு பேராசிரியர் என்கின்ற முறையில் அவருக்கு மிகுந்த வியப்பாக இருந்தது என்று சொன்னார். அது வெறும் கூட்டமல்ல. மாநாடு போல மக்கள் திரண்டு இருந்த அந்த இடம் தன்னைப் பொறுத்தவரையில் ஒரு வகுப்பறையாக நினைத்துக் கொண்டுதான் சீமான் அங்கே தற்சார்பு பொருளாதாரம் என்கின்ற தலைப்பில் பொருளாதார வகுப்பு எடுக்கிறார் என அவர் நுட்பமாக சொன்ன போது ஒரு அரசியல் மேடையை வகுப்பறையாக மாற்றிக் கொண்ட ஒரு நம்பிக்கை தலைவன் நம்மிடையே பிறந்து விட்டான் என்கின்ற பெரு மகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டது.

குறிப்பாக மறைந்த பொருளாதார மேதை ‘ஜே சி குமரப்பாவின் தாய்மை பசுமை பொருளாதார கொள்கையை’ மிக மிக நுட்பமாக அதே சமயத்தில் எளிமையாக விளக்கிய அவரது தமிழ்

மேதமை நிறைந்தது.

இத்தனைக்கும் அவரைச் சுற்றி ஆயிரத்தெட்டு விமர்சனங்கள், அவதூறுகள் என பொய்மையும், சூழ்ச்சியும் நிறைந்த ஏச்சுபேச்சுகள் படையெடுக்கின்ற காலம் இது. நம்பிக்கை கொண்ட அந்த மனிதனை இது போன்ற வெறும் விமர்சனங்களால் வீழ்த்தி விட முடியாது என ‘திராவிடத் திருவாளர்’ ஒருவரே கட்டுரை ஒன்றை எழுதியிருந்த காட்சியையும் சமூக வலைதளங்களில் பார்க்க முடிந்தது.

அவரது கண்கள் முழுக்க அழித்தொழிக்கப்பட்ட ஒரு இனத்தின் மீள் எழுச்சிக்கான நம்பிக்கை மிகுந்த துடிப்பினை மட்டுமே காண முடிந்தது. இந்த பயணத்தில் முதல் இரண்டு நாட்கள் நானும் அவரோடு இருந்த அந்த நேரத்தில் கூட உணவு உண்ணும் பொழுதுகளில் கூட அரசியலை மட்டுமே பேசிக்கொண்டே இருந்தார். அவர் பேச்சில் அவர் சொல்வது போல அவரது எண்ணம் செயல் மூளை அனைத்திலும் இன நலன்/ இன மீட்சி போன்றவை நிறைந்து இருந்து அவரை உறங்கவிடாமல் துரத்திக் கொண்டே இருக்கின்றன.

நீண்ட காலத்திற்குப் பிறகு தமிழ்நாட்டின் அரசியல் மேடையை வேறு திசைக்கு அண்ணன் சீமான் திருப்பி இருக்கிறார். கம்பராமாயணம் எழுதியது சேக்கிழார் என்று இனி உளற முடியாது. வெறும் துண்டு சீட்டை வைத்துக்கொண்டு “ஆக அந்த வகையிலே..” என பேசி வளர முடியாது.ஒவ்வொரு மேடையையும் அண்ணன் சீமான் போல வகுப்பறையாக மாற்றுகின்ற வல்லமை கொண்ட தலைவன் தான் இந்த மண்ணுக்கு தேவை. இதில் முக்கியமானது என்னவென்றால் சமகாலத்தில் அவர் மட்டும்தான் அவ்வாறு இருக்கின்றார். அவருக்கு போட்டியாக வாசிப்பறிவு கொண்டு மேடைகளை வகுப்பறைகளாக மாற்றி பேராசிரியராக முழங்க இங்கே யாருமே இல்லை.

இனி காலமும் அவர்தான். களமும் அவர்தான்.

இனி அவர் தீர்மானிக்கிற திசையில் தான் தமிழகத்து அரசியல் அமைய இருக்கிறது என்பதுதான் இன்றைய திருப்பூர் கூட்டம் மூலம் அண்ணன் சீமான் விடுத்திருக்கின்ற செய்தி.

Page 1 of 15

Powered by WordPress & Theme by Anders Norén