பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: கவிதைகள் Page 1 of 7

நிலாப் பொழுதுகளின் நிழற்படங்கள்.

“நள்ளிரவு 12 மணிக்கு எங்கிருந்தாலும் வா. நிலா பொழுதுகளில் நாம் இணைந்திருக்கும் பழைய புகைப்படங்களை ஒரு இளையராஜா பாடல் பின்னணியில் ஒலிக்க சேர்ந்து பார்ப்போம்..” என்று அழைத்தாள் அவள்.

“வேண்டாம்.

புகைப்படங்கள் ஆழ்கடல் போன்றவை.

நினைவின் சுழல் கொண்டவை.

கால இயந்திரம் போல நிகழ்ந்த அந்த கணத்திற்கே நம்மை இழுத்துச் சென்று நிகழ்காலத்து தகவமைப்புகளுக்கு குழப்பம் ஏற்படுத்துபவை.

மீளவே முடியாத

ஆழத்தின் இருள் கொண்டவை. எப்போதோ அறுக்கப்பட்ட இறுக்கிக் கட்டி இருந்த கயிற்றின் தடம் போன்றவை.

வேண்டாம்..”

என அச்சத்துடன் மறுத்தேன்.

“இல்லை இல்லை..

தீரா மோகத்தின் வெப்பம் வீசும் விழிமயக்க புனைவு கதைகள்

அடங்கிய வசீகர புத்தகங்கள் நிறைய அடுக்கப்பட்டிருக்கும் புத்தக அலமாரிகளுக்கு பின்னால்

கனவின் கதவு

ஒன்று இருப்பது போல ..

ஒவ்வொரு புகைப்படத்திற்குப் பின்னாலும் ஒரு கனவின் மாயக்கதவு ஒன்று மறைந்து இருக்கிறது.

அதற்குள் சென்றால் ஆழ்மனதில் உறுத்தும் நம் ஆறாக் காயங்களை, சுகந்த நினைவின்

காற்று ஊதி ஊதியே குணப்படுத்தும் காதலின் தேவதை ஒருவள் காத்துக் கொண்டிருக்கிறாள்.

அவளைப் பார்த்துவிட்டு வரலாம் வா..” என்று அழைத்தாள்.

எனக்கு முன்னால் நட்சத்திரங்களை விண்ணை நோக்கி வீசிக்கொண்டிருக்கும் ஒன்றோடு ஒன்று பின்னிய நிறைவேறா கனவுகளின் கனலேறிய விசித்திர கிளைகள் கொண்ட ஒரு கொன்றை மரம் ஒன்று அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.

பார்க்கவே அச்சம் ‌. மேலும் அசைந்து கொண்டிருக்கும் கிளைகள் என்னை இழுத்து அந்தக் கனல் மரத்திற்குள் வைத்து கழுவேற்றிக் கொல்லுமோ என்கிற தீவிர பய உணர்ச்சி.

நடுங்கியவாறே என்னை நோக்கி மிதந்து வந்த அந்த அலைபேசி இணைப்பை துண்டித்தேன்..

….

விழிகளை மூடி அமர்ந்திருந்த அந்த கணத்தில் தான்.. நொடி பிசகிய திடுக்கிடலில் விழித்து பார்த்த போது..

நானாக உருவாக்கிக் கொண்ட காரணங்கள் துருவேறி இறுகிக் கிடக்கும் அந்தக் காலப் பூட்டு

அதுவாகத் திறந்து, என் முன்

என் வாழ்வில் இனி எப்போதும்

வாழ முடியாத, வசந்த காலத்தின் வண்ணப் புகைப்படங்கள்

கண்ணீர் கோர்த்திருக்கும் என் விழிகளுக்கு முன்னால் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தன.

❤️

நியாயத்தின் கதை.

????

நியாயம்

என்ற

வினாவின் ஓசை

நடுநிசியில்

மூடப்படாத

குடிநீர் பைப்பு

போல

சரித்திரத்தின்

வீதிகளிலே

சொட்டி கொண்டே

இருக்கிறது.

எது நியாயம்

என்பதற்கு

அவரவருக்கு

ஒரு தர்க்கம்.

ஆளாளுக்கு

ஒரு கதை.

வரையறையற்ற

சுதந்திரத்துடன்

அவரவர்‌ விழிகளில்

படுகிற காட்சியாய்,

இலக்கற்ற ஓவியமாய்,

அலைந்துக் கொண்டே

இருக்கும் சீரற்ற

சிதறலாய் நியாயம்.

எந்த திசையில்

நியாயம் உறைகிறது

என்று எவருக்குமே

தெரியாது.

ஏனெனில்

நியாயம்

திசைகளை அழித்து

அவரவருக்கு

ஒரு திசையை

பிரசவிக்கிறது.

நியாயத்தை

பற்றி எழுதி எழுதி

எழுதுகோல்கள்

முனை உடைந்து

இருக்கின்றன.

அவரவருக்கான

நியாயத்தின்

பழுப்பேறிய

ஏடுகளின்

வாக்கியங்கள்

தங்களுக்கு தாங்களே

அவ்வப்போது

மாறிக் கொள்கின்றன.

அப்படி என்றால்

நியாயம் என்றால் என்ன

என்று புத்தனின் கடைசி

சீடன் சுமன் கேட்டான்.

தனக்குள் ஆழ்ந்திருந்த

புத்தன் தன் மௌனத்தை

கலைத்து சொன்னான்.

“அடுத்தவரின்

பார்வையை

உன் விழிகளில்

பார்த்தால்

அது தான் நியாயம்.”

காலம் ஒரு முறை

சிலிர்த்து அடங்கியது.

❤️

வழி தொலைத்த கதவு.

உனக்கும்
எனக்கும் நடுவே
கைப்பிடி இல்லா
ஒரு கதவு.

அடிக்கடி
கதவு
பூட்டப்பட்டிருப்பதை
நாம் இருவருமே
உறுதி செய்து
கொள்கிறோம்.

இருபுறமும்
பூட்டப்பட்ட பூட்டுக்களின்
உறுதியை
அடிக்கடி
இழுத்துப்
பார்த்து
பரிசோதிக்கிறோம்.

என் சாவி உன்னிடமும்,
உன் சாவி என்னிடமும்,
இருப்பது
நன்றாக தெரிந்தும்
தொலையாத சாவியை
தொலைத்து விட்டதாக
தேடிக் கொண்டிருக்கிறோம்.

கதவு முழுக்க
துளை போட முயன்ற
தழும்புகள்.

குளிர்கால
பின்மாலையில்
கதவின் இடுக்கில் இருந்து
செந்நிற வெளிச்சம்
கசிவதை அச்சத்துடன்
பார்க்கிறேன்.

பாசிப்படர்ந்த
அந்தக் கதவின் மேல்
நீலக்கடல்
ஒன்றின் படம்
வரையப்பட்டு இருக்கிறது.

உடலில்
கருஞ்சிவப்புக்
கோடுகளோடு
ஒரு வெள்ளை மீன்
அதில் நீந்துவது போல
என்னை
பார்த்துக்
கொண்டிருக்கிறது.

அனேகமாக மறுபுறத்தில்
இதே போல
இன்னொரு மீனும்
உன்னையும்
பார்த்துக் கொண்டிருக்க கூடும்.

நள்ளிரவின் திடுக்கிடலில்
பின் கழுத்து வியர்க்க
நான் விழித்துப் பார்த்த போது
அந்த மீன் என்னை பார்த்து இமைத்ததாக தோன்றியது.

உனக்கும் அவ்வாறு தோன்றியிருக்கக்கூடும்.

சில நொடிகள் கழித்து
எனக்கு முன்னால்
தொங்கிக் கொண்டிருந்த
அந்தப் பூட்டை
உடைத்து விடலாமா
என்று எனக்குத் தோன்றியது.

அதே நொடியில்
அந்தப் பக்கம் பூட்டை
உடைக்கும்
சத்தம் எனக்கு கேட்டது.

நானறிந்த எதிரிக்கு..

நானறிந்தத

எதிரிக்கு

நானறிந்த

எதிரிக்கு

நாசூக்காக

சொல்வது

என்னவென்றால்..

????

நள்ளிரவு நடுக்கடலில்

மெல்ல அசைந்து

கொண்டிருக்கும்

தனிமை படகு நான்.

உன் புறக்கணிப்பின்

பாடல் என்னை

ஒன்றும் செய்யாது.

என் வானத்தில்

நீ அந்தி வரைய

முயற்சிக்காதே.

பல இரவுகளையும்

சில சூரிய சந்திரர்களையும்

ஒரு வேனிற் காலத்தையும்

குளிர் ஊதற் காற்றையும்

என் உள்ளங்கையில்

மறைத்து வைத்திருக்கிறேன்.

சட்டென அவைகளில்

ஏதேனும் ஒன்றை

அருகே இருக்கும் ஏரியில்

வீசி எனக்கான

பருவத்தை நானே

உருவாக்குவேன்.

கால தேச நழுவலின்

ஊடே எனக்கென்று

ஓர் உலகை

சமைக்க கற்றவன் நான்.

என்னை கைவிட்டதாக

கர்வம் அடையாதே.

நடுப்பகல் நேரத்து

பாலைவன ஓநாயின்

பசி கொண்ட

விழிகளை என்றாவது பார்த்திருக்கிறாயா ‌…??

அதுதான் என் வாழ்க்கை.

நீ யோசிக்கவே முடியாத

அந்தர வெளியில்

சில கழுகுகளோடு

நான் பறந்து கொண்டு

இருக்கிறேன்.

நீரில் தென்படும் என்

சலனத்தை பார்த்து

உன் கத்தியை

குத்தாதே.

நீ என்னை

வெள்ளைத்தாள்

என நினைத்துக் கொண்டு

வரைந்த வரம்பற்ற

கோடுகளால்

பலனேதுமில்லை.

ஒரு யுகத்தின் பக்கத்தில்

தங்க எழுத்துகளாய்

நான் மின்னிக் கொண்டு

இருக்கிறேன்.

என் முன்னால்

பெருமூச்சு விட்டு

ஆற்றாமையோடு நிற்கும்

உனக்கு ஒரு வார்த்தை..

என்னை கொல்ல

நீ சிகண்டியாய்

அடுத்த பிறவியில்

பிறந்து வா.

அது வரை

மரணமில்லா

பீஷ்மராய்

நான் இந்த

பெருவாழ்வில்

திளைத்திருக்கிறேன்.

நினைவின் விரல்கள்.

கால அடுக்கு

நழுவிய அந்த

நொடியில் தான்

என் நினைவின்

விரல்கள் அந்த கதவின்

மீது பட்டன.

வெண்மையும்

வெம்மையும்

கசிந்துக்கொண்டிருந்த

அந்த கதவிடுக்கின்

வழியே கண்ட போது

நீல நிறத்தில் மலர்ந்த

செம்பருத்தி சாயலில்

அந்த பாடல் எனக்காக

காத்துக் கொண்டிருந்தது.

துளித்துளியாய்

திறந்த கதவிற்கு

பின்

பனித்துளி தூவிய

பசுங் கொடி மேவிய

அந்த வெள்ளைச்சுவர்

இருந்தது.

அங்கே இருந்த

அலங்கார பீடத்தில்

வைக்கப்பட்டிருந்த

சுழலும் இசைத்தட்டில்

இருந்து எழும்பிய

மெல்லிய புகைச்சுருளின்

ஊடே சுழன்றவாறே

அவள் மிதந்திருந்தாள்.

அப்போதுதான்

எனக்கே

எனக்காக

உருவாக்கப்பட்ட

அந்த பாடல்

அனிச்சையாக

ஒலிக்க தொடங்கியது.

கண்கள் கலங்க

மீண்டும்

அந்தப் பாடலை

கேட்க

தொடங்கியபோது

தான் உணர்ந்தேன்.

நான்

திறந்தது கதவும் அல்ல.

நான் கேட்பது வெறும்

பாடலும் அல்ல.

இந்த இரவும்

முடியப் போவதில்லை.

விடியப் போவதில்லை.

கழுத்தில் சொருகப்பட்ட கத்தியின் கருணை.

????

…அடை மழை இரவில்

காற்றின் பேரோசைப்பொழுதில்

படபடவென அடித்துக்கொண்ட

ஜன்னல் கதவுகளை சாத்திவிட்டு

திரும்பிப் பார்த்தபோது,

அந்த நீல விளக்கு ஒளிர்ந்த

மாடி அறையின் மையத்தில் நீ

நின்று கொண்டிருந்தாய்.

தலை குனிந்த வாறே

நீ நின்றிருந்த கோலம்

எனக்கு மிஷ்கின் படத்து நாயகனை

நினைவூட்டியது.

உறுதியான கால்களுடன்

அங்கிருந்து நகரப் போவதில்லை

என்ற தீர்மானத்துடன்

நீ நின்று இருப்பதாக

எனக்குத் தோன்றியது.

நான் பேச எதுவும் இல்லை.

ஆனால் என் நடு மார்பில்

பாய்ச்சுவதற்கான அம்புகளாய்

விஷம் தோய்ந்த சொற்களை

உன் நாவில் எடுத்து வந்திருக்கிறாய்

என நினைக்கிறேன்.

தீரா கொடும் வலியும்,மீளா நடு இருளும்,

வண்ணங்களாய் ஒளிரும்

உன் சொற்கள் செவிகளில் புகுந்து விட்ட

முள் பந்தாய் உருளக்கூடியவை.

அடிமேல் அடி வைத்து

கடந்த காலத்தை

நினைவூட்டும் டேப்ரிக்கார்டரின் ரிவைண்டர் போல

பின்னால் போய்க் கொண்டிருந்தேன்

நீ குளிர் காலத்து பழங்கால சிலையாய்

அப்படியே உறைந்திருந்தாய்‌.

துளியும் கருணையற்று நீ

அவ்வப்போது துப்பியதூளாக்கப்பட்ட

பிளேடு துண்டுகளின் சாயல் கொண்ட

உன் சொற்கள் என் ஆன்மா முழுதிலும்

அப்பிக் கிடக்கின்றன.

வெளிறிய விழிகளோடு பின்னால் நகர்ந்த

நான் சுவரின் விளிம்பில்

நின்று கொண்டிருக்கிறேன்.

கால விசை நழுவிய

ஒரு நொடியில் வேகமாய்

ஓடி வந்த நீ ஆழமாய்

என் கழுத்தில் உன் கத்தியை சொருகினாய்.

நல்ல வேளை..

நீ உன் சொற்களோடு வரவில்லை

என்கிற ஆசுவாசம் மட்டும்,

அந்த ஒரு நொடியில்‌‌..

உதிரமேறி கிறங்கும்

என் விழிகளில் நிம்மதியின் நிழலை பரப்பியது

அல்லாஹு அக்பர்

நீ என்னை
ஆக்கிரமிப்பதற்காகவும்,
கட்டுப்படுத்துவதற்காகவும்
வீசும் ஆயுதங்களை
கம்பீரமான
எனது கலகக் குரல் மூலமாக
அடித்து நொறுக்குவேன்.

நான்
விடுதலையின் காற்று.
எதிர்ப்பின் ஏகாந்தம்.
உன் கட்டுபாட்டுக்
கம்பி வேலிக்குள்
அடங்கி விடமாட்டேன்.

ஓங்கி ஒலிக்கும்
எனது முழக்கம்
என்னைப்போலவே,
உன்னை எதிர்த்துப்
போராடி உன்னால்
உயிரோடு
கொளுத்தப்பட்ட
எனது முன்னோரின்
சாம்பலிலிருந்து
கிளர்ந்து எழுந்தது.

நான் யாராக இருக்க வேண்டும் என்பதை
நான் தீர்மானிப்பதை விட
நீ தீர்மானிக்கக் கூடாது
என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

நான் யார் என்பதை
நீ தீர்மானித்து
வைத்திருக்கும்
எல்லா வரையறை
சட்டகங்களையும்
கிழித்து எறிவேன்.

எனது உடை
உன் அதிகார
பாசிச உச்சங்களின்
உள்ளத்தை நடுங்கச் செய்கிறது என்றால்
அதை நான் ரசித்து
அணிவேன்.

எனது பண்பாட்டின்,
எனது வழிபாட்டின்,
கற்றைப் புள்ளிகளை
உன்
கைப்பிடி அதிகாரத்தால்
ஒற்றைப் புள்ளியாக
வரைய துடிக்கும்
உனது வரலாற்று
வன்மத்தை
எகிறி மிதிப்பேன்.

என்னை அச்சுறுத்துவதாக
எண்ணி
கூட்டம் கூடி முழங்கித்
தீர்க்கும் உனது அச்சம்
கம்பீரமான எனது
ஒற்றை அதட்டலால்
அடங்கி ஒடுங்கும்.

நீ கடவுளைச் சொல்லி
என்னை கலங்கச்
செய்வாய் என்றால்,
நானும் கடவுளை முழங்கி
உன்னை நடுக்கமுறச்
செய்வேன்.

இன்னும் மீறி
அழுத்தினால்,
எல்லோரும்
ஓர் குரலில்,
ஓர் உடையில் ,
உரக்கச் சொல்வோம்.

“அல்லாஹு அக்பர்”.

அன்பே சகலமும்..

இறுதியில்
அனைத்திலும்
இழந்து இருப்பதும்,
பெற்றிருப்பதும்,
ஒன்றே ஒன்று தான்..

அதைவிட
சுகமானதும்
கொடுமையானதும்
வெவ்வேறில்லை.

அதுதான்
கோரப்படும்
வரமாகவும்
விதிக்கப்படும்
சாபமாகவும்
திகழ்கிறது.

அதுவே
தண்டனையாகவும்
பிரார்த்தனையாகவும்
இருக்கிறது.

அதுவே
வாழ்வின்
அர்த்தமுமாக
அபத்தமுமாக
வாய்க்கப்
பட்டிருக்கிறது.

அதுதான்
சாத்தானின்
விலக்கப்பட்ட கனி.
அதுதான்
தேவனின்
கருணை மிகுந்த
உதிரம்.

இறுதியாக
அனைத்திலும்
மிஞ்சியதும்
எஞ்சியதுமாக
அதனது பாடலே
கேட்கக் கிடைக்கிறது.

ஆதி அந்தம்
அதுதான்.

அன்பே சகலமும்.

♥️

இரவின் சிறகுகள்

நிரந்தர
பிரிவொன்றின்
அடையாளமாக
நாங்கள்
புனைவேறிய
திட்டமிட்ட
புன்னகையோடு
கைக்குலுக்கி
கொண்டோம்..

இருவருமே
இயல்பாக இருப்பதாக
அவரவருக்கு
உணர்த்திக் கொள்வதில்
பெரிதாக ஒன்றும் சிரமமில்லை.

எல்லா கணக்குகளும்
தீர்த்தாகிவிட்டது.
இறுதியாய் இருந்த
புன்சிரிப்பைக் கூட
உதிர்த்தாகிவிட்டது.

திரும்பி
பார்க்கவே இயலாத
ஒரு பாதையில்
திசைகள் அமைக்க
எங்கள் திசைக்காட்டிகளை
கூட திருப்பி வைத்தாகி
விட்டது.

அவள் வெகு தூரம்
போன பிறகு தான்
நான் மெதுவாக உணர்ந்தேன்.

ஒரு குழந்தையின் அழுகைப்
போல எங்களின் சில இரவுகள்
என் விரல் பிடித்து
தலைதூக்கிப் பார்த்தன.

அந்த இரவுகளை
அப்படியே
அதே இடத்தில்
அதே நொடியில்
கைவிட்டு விட்டு
திரும்பிப் போகத்தான்
எத்தனித்தேன்.

ஆனாலும் நிலா
சொட்டிய அந்த இரவுகள்
கால தேச வர்த்தமானங்களை
தாண்டிய ஒரு அழகிய
பாடலாய் காற்றில் தனித்து
அலைகிற அபாயம்
கருதி அதுவரை
நான் சந்தித்திராத
இனியும் சந்திக்க முடியாத
அந்த இரவுகளை எங்கோ
சென்று இருட்குகையின்
ஆழ்க்குழியில்
புதைப்பதென
நிலவோடு கனத்திருந்த
அந்த இரவுகளை
வாரி சுருட்டி எடுத்துக் கொண்டேன்.

அந்த இரவுகளை
புதைப்பதற்கு முன்
பெருமூச்செறிந்து
இறுதியாக
ஒருமுறை பார்த்தேன்.

செந்நிற வானத்தின்
அந்திக்கால
செம்மைப்போல
நீங்காத வசீகரத்தை
அந்த இரவுகள்
தன் உடலெங்கும்
பூசிக்கொண்டு
இருந்தன.

அந்த இரவுகளை
சமன் செய்ய
நான் ஒருபோதும்
முயன்றதில்லை.

ஆனாலும்
அந்த நட்சத்திர
இரவுகள்
சதா ஒவ்வொரு
கணத்திலும்
உணர்ச்சிகளின்
கற்கள் வீசப்படுகிற
நினைவுகளின்
குளத்தில்
அல்லிகளாகத்தான்
பூத்துக் கொண்டிருந்தன.

எப்போதும்
என்னை நோக்கி
வீசப்படுகிற
முடிச்சுகள்
நிரம்பிய
மாயக்கயிற்றொன்றின்
கரங்களாக அந்த
இரவுகள் இருந்தன.

யாரும் பார்த்தறியாத
நொடி ஒன்றில்
கால நதியின்
கரையோரத்தில்
தீர்ந்தோர் கடனென
அந்த இரவுகளை
அப்படியே அள்ளி
கரைத்து விட்டு
திரும்பி பார்க்காமல்
நடந்தேன்.

மறுநாள்
நான் எதிர்பார்க்காத
ஒரு நொடியில்
என் ஜன்னலுக்கு
வெளியே பூத்திருந்த
மல்லிகைச் செடியின்
மீது அந்த இரவுகள்
வண்ணத்துப்பூச்சிகளாய்
பறந்து கொண்டிருந்தன.

விடைபெறுதலின் நம்பிக்கை.

 

 

திரும்ப வரப்
போவதே இல்லாத
ஒரு நாளில்
சந்திக்க வருவதாக
சொல்லி விட்டு
சென்று இருக்கிறாய்..

அன்றைய நாளில்
மழை பெய்யும் என்றாய்.

நீலக் கலர் சட்டையும்
கருப்பு ஜீன்ஸீம்
அணிந்து வா என்றாய்.

இளையராஜா பாடலை
கேட்டுக்கொண்டே
காத்திரு என்று
சிரித்துக் கொண்டே
சொன்னாய்.

நா உலரும் தருணங்களில்
தேநீர் குடித்துக் கொள்
என்றாய்…

காத்திருக்கும் தருணங்களில்
யாரையும் வேடிக்கை பார்க்காதே..
தப்பாக நினைப்பார்கள்
என்றாய்.

மிகவும் காலதாமதம்
ஆனால் பசியோடு இருக்காதே.
வரும் போதே எனக்கும் சேர்த்து
ஏதாவது வாங்கிக்கொண்டு
வா என்றாய்.

அடிக்கடி ஆழ மூச்சு
விட்டுக் கொள்.
அது நெஞ்சுப் படபடப்பை
குறைக்கும் என்றாய்.

முதல் நாள் இரவு
தூங்க Alprax போடாதே.
காத்திருக்கும் நேரத்தில்
தூங்கலாம் என்றாய்.

ஏதேனும் புத்தகம்
எடுத்துக் கொண்டு வா.
அது சில நாட்களாக
நீ படிக்க விரும்பும்
புத்தகமாக இருக்கட்டும்
என்றாய்.

எல்லாவற்றையும்
சொல்லி விட்டு
நான் தாங்குகிறேனா
என்பதையும் பார்த்து
விட்டு நீ போனாய்..

அன்றைய நாளும்
மழை பெய்தது.

மகிழம்பூ உதிரும்
மரத்தின் கீழே
அதே இரயில்வே
ஸ்டேஷனின் பழைய
பெஞ்சில் அமர்ந்து
இருக்கிறேன்.

வழக்கமாய் காலை
சுற்றி வரும்
நாயைக் காணோம்.

மரத்தில் அடையும்
பறவைகள் கூச்சல்
இன்று கொஞ்சம்
அதிகம்.

அடிக்கடி பார்க்கிற
பூ விற்கும் அம்மா
அன்று ஏனோ
வர வில்லை.

அந்த அம்மா
அமரும் இடத்தில்
காய்ந்த பூக்கள் சில
உதிர்ந்து கிடந்தன.

*

 

Page 1 of 7

Powered by WordPress & Theme by Anders Norén