பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: சுயம் Page 5 of 6

சொல்ல முடியாதவைகளின் சொற்கள்..

 

 

 

யாருக்காவது எதையாவது சொல்ல விரும்பி சொல்லமுடியாமல் தவித்திருக்கிற அனுபவம் உங்களில் யாருக்கேனும் இருக்கிறதா…

சொல்ல முடியாத அன்பு.. காட்ட முடியாத காதல்.. நிறைவேறாத கனவு.. முடிவுறாத பற்று… பூர்த்தியடையாத ஆசை ..என நீண்டு கொண்டே செல்லும் பட்டியலில் உங்களின் உணர்ச்சியும் இருக்கக்கூடும்.

தாய் மடி வாசம் போல சில உணர்ச்சிகள் வார்த்தை வடிவங்களுக்கு உட்படாதவை. சொற்களின் விவரிப்பு எல்லைக்கு அப்பால் நின்று நம் தவிப்பை வேடிக்கை பார்ப்பவை. அப்படித்தான் நானும் இப்பொழுதில் தவித்துக் கொண்டிருக்கிறேன் எனது ஆகச்சிறந்தவனுக்காக…

ஏனெனில் அவன் ஒரு விசித்திரன். சொற்களின் சூட்சமங்களுக்குள் அவ்வளவு எளிதாக அகப்படாதவன். அவன் செவியோடு பிறந்த அலைபேசியும் .. எப்போதும் முகத்தோடு தங்கிய புன்னகையும்.. மட்டும் தான் அவன் என்று நினைத்தால் நீங்கள் ஏமாந்து போவீர்கள். கரும் பசுமை போர்த்திய நேச வனமொன்று அவனுள் உண்டு. உற்சாக மலையில் இருந்து கொட்டும் களங்கமற்ற களிப்பின் மலையருவியும் அவனுள் உண்டு.

அவன் எனது மீட்பர். நான் புதைகுழிகளில் விழுந்து இருக்கிறேன். காலத்தின் கோர இருளில் கரைந்து இருக்கிறேன். பலவீனங்களின் உச்சத்தில் நின்று பயந்து இருக்கிறேன். அதே நேரம் பரவசமும் பட்டிருக்கிறேன். எதனாலும் நிறைவுறாத கொந்தளிப்பு மனநிலை உடைய என்னைப்போன்ற ஒருவனை அருகிலேயே கொண்டிருப்பது மாபெரும் சாபம்தான்.

அந்த சாபம் கொண்ட ஒருவனைத்தான்.. இந்த இரவில் நான் நன்றியோடு கண்கள் கசிய நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

இந்த உலகமே என்னைக் கைவிட்ட போது… உற்றார் உறவினர்.. நண்பர்கள் ,நம்பி நின்றோர் ..என அனைவரும் என் கரங்களை காற்றிலே நிராதரவாய் அலையவிட்டு.. துரோகச் சூடுகளால் உயிர் ஆவியாக தவிக்கவிட்டு இவன் தனித்தவன், அதனாலேயே இறந்தவன் என ஊர் உலகத்துக்கு அறிவித்து விட்டு அகன்ற பிறகு..

அவன் பேரன்பின் மெழுகுவர்த்தி யோடு… நம்பிக்கை தென்றலை கையில் பிடித்துக் கொண்டு நான் புதைக்கப்பட்ட சுடுகாட்டிற்குள் நுழைந்தான். நிராசைகளால் நானே கட்டிக்கொண்ட அந்தப் புதைமேட்டிலிருந்து என்னைத் தோண்டி எடுத்தான்.விழிகளுக்கு ஒளியூட்டினான்.

நான் இறந்து விட்டேன் என்றேன். நீ பிறந்திருக்கிறாய் என்றான் .

இதுதான் அவன்.

என் விழிகளில் படிந்திருந்த கடந்த கால மயக்கங்களை ..அர்த்தமற்ற குருட்டுத்தனங்களை .. அகற்றி முன் செல்ல என் பாதைகளில் முளைக்கத் துடித்த முட்களை அகற்றியவன்.

சொல்லப்போனால் இன்று என் முகத்தில் உயிர்த்திருக்கும் புன்னகைக்கு அவனே காரணமானவன்.

பைபிளில் ஒரு வசனம் வரும்

நீங்கள் பிரார்த்தனையை கைவிடாது இருங்கள். இறைவன் உங்களை கைவிடாது இருப்பார்.

இறைவன் கைவிடுகிற பொழுதுகளும் மனித வாழ்க்கையில் உண்டு. பிராத்தனைகளும் தவறுகிற பொழுதுகள் உண்டு அப்போதும் கூட நம்மை கைவிடாது நடுங்கும் நம் விரல்களை பற்றிக் கொள்கிற அளவற்ற அன்பின் விரல்கள் அவனுடையது.

இதையெல்லாம் படிக்கும் உங்களுக்கு அவனோடு பழக ஆசை பிறப்பது இயல்புதான்.

நீங்களும் பழகலாம். எப்போதுமே மூடப்படாத கதவுகள் கொண்ட இதயம் கொண்ட அவனோடு ..நட்பின் கதகதப்பு மினுக்குகிற விழிகள் கொண்ட அவனோடு…

நீங்களும் பழகலாம்.

ஆனால் அவனை உயிருக்குள் வைத்து உணர ஒரு நிபந்தனை இருக்கிறது.

அதற்கு நீங்கள் மணி செந்திலாகத்தான் பிறக்க வேண்டும்.

அப்படி சக உயிரை மாசற்ற அன்பின் வெப்பத்தினால் உருக்கி விழி கசிய உணர வைக்கவும் ஒரு நிபந்தனை இருக்கிறது.

அதற்கு நீங்கள் சே.பாக்கியராசனாகத்தான் பிறக்க வேண்டும்.
………..

நான் என் தங்கை மீராவோடு , என் மருமகள் அகநகையோடு.. இன்னும் என் இளைய மைத்துனர் பிரபுவோடு மற்றும் … மதுரையில் இருக்கும் எங்கள் அம்மா அப்பாவோடு.. எங்கள் குடும்பத்தோடு..

எல்லாவற்றிற்கும் மேலாக அவன் உயிராக நேசிக்கும் அண்ணன் சீமானோடு…

நாங்கள் கொண்டாடிக் கொள்ள.. எங்களை நினைத்து நாங்களே பெருமைப்பட்டுக் கொள்ள.. எங்களுக்கு பொதுமையாக இருக்கும் மகத்தான காரணம்…

நாங்கள் அவனோடு இருக்கிறோம். அவனோடு வாழ்கிறோம்.

………..

இன்னமும் எழுத நிறைய இருக்கிறது. நன்றியோடு அழுது தீர்க்க கண்ணீர் இருக்கிறது. உணர்ச்சி ததும்ப கலங்கியவாறே கட்டித்தழுவ தோள்கள் இருக்கின்றன. கைகோர்த்து பயணிக்க பயணங்கள் இருக்கின்றன. சேர்ந்திசைக் குரலில் முழங்க முழக்கங்கள் இருக்கின்றன.

ஆனால் இவற்றையெல்லாம் விவரிக்க சொற்கள்தான் இல்லை.

வாழ வாழ்க்கை இருக்கிறது.

வாழ்வோம் தல..

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

நிலாக்காலம்..

 

நாங்கள் ஒரு
காலத்தில்
நிலாவில்
இருந்தோம்.

உண்மையாகவே
எங்கள் ஆத்தா
அந்த
நிலாவில் தான்
வடை சுட்டார்..

எப்போதும் வெளிச்சம்
இருக்கிற நிலாவில்
நாங்கள் பகலிரவு
தெரியாமல்
வளர்ந்தோம்.

பிணைக்கப்பட்ட
விரல்களோடும்..
எங்களை சுமந்த
7 தோள்களில் தான்
நாங்கள் முதற்
கனவு கண்டோம்.

நம்ப மாட்டீர்கள்.

அந்த கனவிலும்
நிலா வந்தது.
..

நம்ப மாட்டீர்கள்.
நாங்கள் கூட
நம்ப முடியாமல்
தவிக்கிறோம்..

ஆம்.
நாங்கள்
ஒரு
காலத்தில்
நிலாவில்
இருந்தோம்

————–

அன்பின் சூட்டினால்..
நினைவுகளை கிளறிய
Jayaprakash Raj க்கு.

ராஜீவ்- உள்ளொளி கொண்ட மானுடன்.

 

 

 

அன்றொரு நாள் சன் தொலைக்காட்சியில் படித்த செய்தி ஒன்று என்னை மிகவும் ஈர்த்தது

ப.சிதம்பரத்தை எதிர்த்து ராஜீவ்காந்தி போட்டி.

ஈழ அழிவு உச்சத்தில் இருந்தபோது நம் இனத்தை அழிக்க சிங்கள பேரினவாத அரசிற்கு ஆயுதம் கொடுத்து ஆலோசனை கொடுத்து எல்லாமுமாய் இருந்த இந்திய ஏகாதிபத்திய அரசிற்கு பாடம் புகட்ட கல்லூரி மாணவர்கள் தமிழ் இன உணர்வாளர்கள் உள்ளிட்டோர் முடிவெடுத்தார்கள். ஒரு தமிழனாய் பிறந்து தமிழின அழிப்புக்கு துணை போகிற இந்தியாவின் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் தோற்கடிக்க ஒரு ஆயுதத்தை அவர்கள் கண்டெடுத்தார்கள்.

அதன் பெயர் ராஜீவ் காந்தி. அந்த ராஜீவ் காந்தி ….ராஜீவ் காந்தியைக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவிக்க போராடும் என பெயர் வைத்த போது எங்கள் தந்தையார் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

தம்பி அருண் ஷோரி மூலமாய் அவனை என் அலைபேசியில் பிடித்தேன். சிக்கன மொழி. மெல்லிய குரல். தோழர் என்ற அறிவுஜீவி உரையாடல்.

.

பிறிதொரு நாள் மதுரையில் அண்ணன் சீமான் நடத்திய அறுத்தெறிவோம் வாரீர் என்ற நிகழ்வின் மேடையில் மெல்லிய உருவமாய் ஏறக்குறைய சிறுவனாய் ஓடியாடி கொண்டிருந்த அவனை மீண்டும் சந்தித்தேன். தோழனாய் அறிமுகமானவன் தம்பியாகி இருந்தான்.

எனது மனைவி ஊர் திருமயம் . சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டது. இதைச் சொல்லி அவனிடம் …தம்பி உன் அண்ணிகிட்ட சொல்லி இருந்தேன் அவ கூட உனக்கு தான் ஓட்டு போட்டாளாம்.

அட போங்கண்ணே ஒரு ஓட்டை வீணாக்கிட்டீங்களே.. கண்ணப்பனுக்கு ல ஓட்டு போட்டு இருக்கணும். என்று சிரித்தவாறு சொன்ன அவனை குழப்பமாக பார்த்தேன்.

அது ஒரு மாய சிரிப்பு. கண்கள் மினுக்கும் பூக்கும் புன்னகை.வேறெங்கும் காண முடியாத அந்த முகத்திற்கே உரிய வசீகர தனித்துவம்.

அண்ணா.. நான் வெல்ல தேர்தலில் நிற்கவில்லை. ப.சிதம்பரத்தை தோற்கடிக்கவே நான் தேர்தலில் நின்றேன். போங்கண்ணே…ஒரு ஓட்டை வீணாக்கிட்டீங்க. என்று சொன்ன அவனை யாராலும் விரும்பாமல் இருக்க முடியாது.

ஏறக்குறைய ஒரு கரும்புலிக்கான மனநிலை அது. இன அழிவு அவனை
உன்மத்தனாக ஆகியிருந்தது. விழிகளில் கனலேறி இருந்தது. மொழிகளில் அனல் ஏற்றி மேடையிலே கொட்டத் தொடங்கினான். புதுக்கோட்டை பாவாணன் போல உணர்ச்சி மொழி. மறைந்த அறிஞர் வலம்புரிஜான் போல வார்த்தைகளின் ஊடே வரிசையில் வரும் புள்ளிவிபரங்கள்.
அறிவும் , உணர்ச்சியும் ஒரே புள்ளியில் இணைகிற அதிசயக்காரன் அவன் தான்.

இப்படியாக ராஜீவ். என்னுள் நுழைந்தான்.

…….

கட்சி மேடையிலேயே அடுக்குமொழி வசனத்தோடு தொடர்ச்சியான முடிவுறாத வாக்கியங்களோடு ஆவேச மொழி மழை பொழியும்.. வழக்கறிஞர் அறிவுச்செல்வன் எல்லோருக்கும் அறிமுகமானவன்.

எனக்குத் தெரிய இன்னொருவன் இருந்தான். ஒரு மழைக்காலத்தில் தேநீரோடு புலர் காலைப் பொழுதை தொடங்கி பிடித்த புத்தகத்தின் வாசிப்பு மயக்கத்தில் கிறங்கி… அலையலையாய் வருகின்ற அலைபேசியை அணைத்து போட்டுவிட்டு… தலையணையை அணைத்து கிடக்கிற ராஜீவ் என்கிற வாசிப்புக் காரனை எனக்குத் தெரியும்.

எளிய சுமையோடு.. கண்கள் மின்ன ..கால்கள் கடுக்க.. தன்னந்தனியாய் வனாந்தரங்களில் சுற்றியலைந்து ..சிகரங்களில் ஏறி , நிலவை ரசித்து.. சட்டென எதிர்படும் அருவியில் தலையை நுழைத்து..
கூழாங்கற்களை தழுவி ஓடும் நதிக்கரைகளில் கால்களை நனைத்து..
இயற்கையை பனிக்கால கதகதப்பு தேநீராய் பருகும் ராஜீவை நான் அறிவேன்.

இந்த அலைகழிக்கும் வாழ்க்கை பொழுதுகளிலிருந்து சட்டென ஒரு நொடியில் தன்னை துண்டித்துக் கொண்டு..
அலைபேசி அலைவரிசையில் சிக்காமல்.. யாருக்கும் அகப்படாமல் துறவியின் மனநிலையோடு ஏரிக்கரைகளில் சுற்றித் திரியும் ராஜீவை நான் அறிவேன்.

ஏதோ ஒரு வறண்ட நாளில்.. நீர் பார்த்து வருடங்கள் ஆன அந்த ராமநாதபுரத்தின் காய்ந்த குட்டை ஒன்றில் பச்சை தேடி அலையும் ஆட்டு மந்தை ஊடே தானும் ஒரு ஆடாய் ..நம்பிக்கைகளோடு நகரும் அந்த கீதாரி ராஜீவை நான் அறிவேன்.

…..

திடிரென ஒரு நாள் அவனிடம் இருந்து அலைபேசி வரும். மகிழ்ச்சியோ துக்கமோ வலியோ, கோபமோ ,எதுவாக இருந்தாலும் முதலில் பகிரப்படும் மனிதனாக.. அவன் என்னை வைத்திருந்தான். இரண்டு மணி நேரம் பேசிக்கொண்டு இருப்பான். படித்த புத்தகங்களை, பார்த்த திரைப்படத்தை என நீளூம் அந்த உரையாடல் எப்போதும் முடிவுறாத திருப்தியின்மையை முடிவாக கொண்டது. பேசி அலுக்காத காதலர்களைப் போல நாங்கள் மாறி இருந்தோம். உச்ச மகிழ்ச்சியில் உண்மையாக அவன் சொல்வான் என் மனைவியை விட ..ஏன் இந்த உலகத்தில் இருக்கின்ற எல்லாரையும் விட ..உன்னை தான் அதிகம் நேசிக்கிறேன் அண்ணா ..

இந்த நேசிப்புக்கு நான் நேர்மை செய்திருக்கிறேனா என்றெல்லாம் எனக்கு தெரியாது. ஆனாலும் அவனது அன்பு மாசு மருவில்லாத புனிதம்.

அதுதான் ராஜீவ். என்னிடம் உள்ள பிரச்சனையை மிக நேர்மையாக கண்டறிந்தவன் அவன். முடிவில் தெளிவாக சொன்னான் ‌. கடந்துப்போக கற்றுக் கொள்.
…just go ahead.

இன்னொருமுறை சொன்னான் எல்லாவற்றிற்கும்.. எப்போதும் அழுது கொண்டே இருக்க முடியாது என. அப்போது எனக்கு ஒரு புத்தகத்தை பரிசளித்தான் . வையத் தலைமைகொள்.

வசந்தத்தை மட்டுமே பரிசளித்துக் கொண்டு.. வரங்களை மட்டுமே வாரி இறைத்துக்கொண்டு.. எப்போதும் பசுமையாய் ஒளிர வாழ்க்கை ஒன்றும் தேவதைகளின் முகத்தில் மின்னும் விழிகள் அல்ல. அது சாத்தானின் பாம்பு.
வசீகரமானது தான் .ஆனால் வலிக்கக்கூடியது. அழகானதுதான். ஆனால் அழிக்கக்கூடியது. எனவேதான் பூமியில் எது நடந்தாலும் அதை உயரத்திலிருந்து கவனித்து விட்டு .அனைத்தையும் அலட்சியமாக கடக்கின்ற மேகம் போல ஒரு மனநிலை தேவைப்படுகிறது. இந்த மனநிலை சாதாரணமாக வாய்க்கக்கூடியது அல்ல. அது அருகிலிருந்து நமது தோளைப் பற்றிக்கொள்ளும் விரல்களின் அன்பிலும் நம்பிக்கையிலும் பூப்பது.

அப்படி ஒரு பூத்தலை தான் ராஜீவ் என்னுள் நிகழ்த்தினான். ஒரு பெரு மழைக் காலம் முடிந்து வரும் அமைதி போல வாழ்வில் அலைக்கழிக்கப்பட்டு தடுமாறி கீழே விழுந்து.. பிறகு எழுந்து.. அலைந்து திரிந்து ஒரு நிதானத்திற்கு வரும் போது உள்ளுக்குள்ளாகவே ஊறும் ஒரு அமைதி ..
போல.. நிதானமானவன் ராஜீவ்..
எனக்கு நிரந்தரமானவன்.
.
இந்த வானவில் யுகத்தின் வல்லாண்மை பேரரசர்கள் நாம். நம் முன்னால் நுரையோடு கொப்பளித்து கொண்டு இருக்கிற வாழ்வெனும் அமுதத்தை நம் அன்பெனும் வைர கோப்பைக் கொண்டு பருகி தீர்ப்போம்.பருகிய அலுப்புத் தீர ஆதி வனம் தேடி பெரும் பயணம் போவோம். காற்றாய் திரிவோம். கடலாய் மிதப்போம்.

சியர்ஸ் ராஜீவ்.

எனது ஆகச் சிறந்த ஆனந்த் …

 

 

நான் தனித்தவன் என்கிற என் குறை உணர்ச்சியை,தாழ்வு மனப்பான்மையை தணித்தவன். என் தாய் தந்தையருக்கு அடுத்து என்னை அதிகம் சுமப்பவன். என் நிழலையும் தாண்டி என்னோடு நெருங்கி இருப்பவன். அவனின்றி எனக்கு எதுவுமில்லை. அவனை மிஞ்சியும் எனக்கு எதுவுமில்லை.

நான் இவ்வாழ்வில் அடைந்த மிகப் பெரிய சொத்து… அவன் தான். நான் சம்பாதித்த உச்சபட்ச தொகையும் அவன் தான்..

நான் தடுமாறிய பொழுதுகளில்.. என்னை பாதுகாத்து என்னை ஆற்றுப்படுத்தினான். என் காயங்களை பிறர் அறியாமல்..பிறர் தீண்டாமல் மூடி வைத்தான். நான் ஒரு நிதானத்திற்கு வரும் வரை உடனிருந்து அமைதியாய் என்னை காத்து நின்றான்.மீண்டும் நிமிர அவனே கரம் நீட்டினான்.

நடக்க முடியா என் பாதைகளில் அவன் தான் ஒடுகிறான். என் கரங்கள் நீளும் தொலைவில் தன் தோள்களை பொருத்துகிறான். நான் தேடும் திசைகளில் எல்லாம் சட்டென தோன்றுகிறான். நான் நினைத்ததை செயலாக்கி முடிக்கிறான்.

மணி செந்தில் … நான் சொற்கள் மட்டுமே.

என் தம்பி ஆனந்த் தான் நான் செய்வதாக இந்த உலகம் அறிகிற செயல்கள் அனைத்தும்….

நிறைய இருக்கின்றன. சொல்ல முடிந்தவைகளும்…சொல்ல முடியாதவைகளும்.. நினைத்தாலே கலங்குகின்றன விழிகள்.

நன்றி என்ற சொல் உனக்கெல்லாம் பொருந்தாதுடா. வாழ்வில் பார்த்துக் கொள்வோம்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் .
Made in Mani Senthil..kku .

நேசிப்பின் நதிக்கரை..

27657324_394780410946833_983619852173550470_n

வருஷம் 16 திரைப்படத்தில்..முதல் காட்சி. கார்த்திக் சிறைக்கு சென்று 16 வருடங்கள் கழித்து திரும்பி வருவார். அந்த 16 வருடத்தில்..அவர் குடும்பத்தில் இருந்த பலரும் இறந்து படமாக உறைந்து இருப்பார்கள். காலச் சக்கரத்தின் இரக்கமற்ற வேகத்தில் கூழாங்கற்களாய் மானுட வாழ்வு சிக்கி மண்ணோடு மண்ணாய் மக்குகின்ற உண்மையை தான்..அந்த செல்லூயிட் காவியமும் விவரிக்க முயலும். அப்படி தான் என் குடும்பமும் சிறுக சிறுக வருஷம் 16 காட்சியை பிரதிபலிக்கிறதோ என்கிற துயர் மிக்க பிரமையோடு இந்த தனிமை இரவு நகர்கிறது.

எங்களில் ஒருவனாய் பிறந்து வாழ்ந்து வந்த என் அண்ணன்களில் ஒருவனான அறிவும் இந்நொடியில் வெறும் சாம்பலாய் இந்நேரம் மிஞ்சியிருப்பான். எங்கள் தலைமுறையின் முதல் மரணம் இது. எங்கள் மீதும் மரணத்தின் நிழல் படிய தொடங்கி விட்டது என்பதைதான் அறிவு நினைவூட்டுகிறான். மரணத்தின் ருசி என்ன என்பதை புரியத் தொடங்கி இருப்பதை அறிவின் மரணம் மெளனமாக அறிவிக்கிறது.

ஒரு கூட்டுக் குடும்பத்தில் பிறந்த நாங்கள் இறுகிப் பிணைக்கப்பட்ட சங்கிலிகளோடு கொண்ட பால்யத்தைக் கொண்டிருந்தோம். மறைந்த எம் ஆத்தா (தந்தையின் தாய்) அந்த அரூவ சங்கிலியின் அறுபடாத கண்ணியாக திகழ்ந்தார். எம் தந்தையர் பாகுபடற்ற பேரன் பின் பெருமழையில் எங்களை நனைத்த வண்ணம் இருந்தனர். எனக்கெல்லாம் என் தந்தை யாரென்று பிரத்யோக அறிந்துக்கொள்ளவே பல வருடங்கள் ஆனது நினைத்து ஆச்சர்யமாக இருக்கிறது. ஆனால் சுயநலமும்..‌பொறாமையும் உடை என அணிந்திருக்கும் இவ்வுலகு எங்களையும் நோயென பாதிக்க தொடங்கிய காலத்தில் ..என் ஆத்தா இறந்து போனார். தனித்தனியாக அறுத்தெறியப்பட்ட சரமாய் கால ஓட்டத்தில் நாங்கள் தனியரானோம். இருந்தும் எங்களுக்குள் சுரந்த வண்ணம் இருந்த அன்பின் கதகதப்பினை மறக்க முடியாமல் தவித்தோம். அவரவருக்கென தனித்த வாழ்வு,குடும்பம்..அதை சார்ந்த நலன்கள் என ஓட தொடங்கும் போது சுயநலச் சாத்தானின் கைகளுக்குள்ளாக நாங்களாகவே சிக்குண்டோம்.ஒட்டுமொத்த குடும்பத்தின் நலன்.. மகிழ்ச்சி என்பதை மறந்து தனி வாழ்விற்கான விழுமியங்களை தேட தொடங்கிய போது கசப்பின் சாயை எம்முள்ளும் படியத் தொடங்கியது.

அது ஒருவகையான விசித்திர விளையாட்டு. தோற்போம் என்று தெரிந்தே விளையாடும் அந்த பகடை ஆட்டத்தில் பலி கொடுக்க அவரவருக்கென அடுத்தவரின் கனவு தேவைப்பட்டது. நாம் வாழ்கிறோம் என்பதை மறந்து நான் வாழ வேண்டும் என நினைக்கத் தொடங்கும் நொடியில் அவரவருக்கென நியாயங்களும்..தர்க்கங்களும் உருவாக்கப்பட்டன. வேட்டைக் காடென எம் வாழ்வை நாங்களே மாற்றிக்கொண்ட பொல்லாங்கை எதனாலும் அடக்க முடியவில்லை.

அறிவு உழைத்தான்‌. எம் குடும்பத்தை நிமிர்த்த கனவு கண்டான். வீடு கட்டினான்.கடையை உருவாக்கினான். பிறகு அவனே தனித்துப் போனான். வேக வேகமாய் பிரிந்துப் போனான். நாங்களும் பிரிந்தோம். வேகவேகமாக ஏதேதோ தொழில் நடத்தி போராடினான். விரைவாக வாழ்வினை வாழ விரும்பிய அறிவின் வாழ்வும் எதிர் பாராமல் விரைவாகவே முடிந்தது. இன்று பிணமாய் படுத்திருந்த அறிவு புன்னகையை சதா சுமக்கும் மனதையும்..முகத்தினையும் கொண்ட வசீகரன். விளையாட்டு வீரன். ஆனாலும் ..அவனுக்கென அவனே உருவாக்கிக்கொண்ட உலகில் அந்த வசீகரத்தை தொலைத்து மெளனப் போர்வையில் புதைந்தான். ஊரெல்லாம் அயலாரை ஏற்றி பாதுகாப்பாக சுற்றி வந்த அறிவு உள்ளூரில் இரு சக்கர வாகனம் மோதி சாதாரணமாக இறந்தது எதிர்பாரன்மையையே தன் இயல்பாக கொண்டிருக்கும் மரணத்தின் குணாதிசயம் என்றாலும்.. ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்த வாழ்வும்..உலகமும் நமக்கு நிரந்தரம் எனக் கருதி நாம் போடுகிற ஆட்டம் நினைக்காத தருணமொன்றில் முடிந்து விடுகிறது. முடியும் போது இன்னமும் அனைவரையும் நேசித்து,விட்டுக் கொடுத்து, மன்னித்து,மன்னிக்கப்பட்டு வாழ்ந்திருக்கலாமோ என நினைக்க தோணுகிறது.இந்த காட்சிப் பிழை வாழ்விற்குள் எந்த தைரியத்தில் போட்டி,பொறாமை கொண்டு அலைகிறோம்..??

சிந்திய பனித்துளி சூரிய சுடர் பட்டு சில நொடிகளில் ஆவியாவது போல சட்டென முடியும் வாழ்விற்காக நாம் எவற்றை எல்லாம் இழக்கிறோம் என எண்ணும் போது அச்சமாக இருக்கிறது . இருக்கும் காலங்களில் நேசித்து ..நேசிக்கப்பட்டு வாழும் வாழ்வினை ஏன் நாங்கள் தொலைத்தோம்…??

அப்படிதான் இன்று அறிவையும் இழந்து விட்டு .. நாங்கள் நிற்கிறோம்‌ . இப்போதுதான் வாத்தியார் அப்பா வீட்டு மாடியில்..நாங்கள் எல்லோரும் விளையாடியது போல நினைவு. அதற்குள் முடிந்து விட்டது.

வெறுப்பும்.. விரோதமும் ‌..வன்மமும் இல்லாத மனித வாழ்வொன்று சாத்தியமில்லை தான்..

ஆனால்..

அனைவரையும் மன்னித்து.. அனைவராலும் மன்னிக்கப்பட்ட ஒரு பெரு வாழ்வினை வாழ வேண்டும்.

இந்நொடியில் நான் மீண்டும் எனக்குள்ளாக சொல்லிக் கொள்வது இதை தான்.. நேசிப்பின் பெரும் சுழி என்னுள் உருவாகட்டும். நேசிப்பின் நதிக்கரையில் காலார எனது ஆன்மா உலவட்டும்.
போட்டி..பொறாமை..வன்மம் தொலைத்து இன்னொரு வாழ்வொன்று இங்கேயே எங்களுக்குள் முளைக்கட்டும்.

அறிவு..

நீ கிளம்பி விட்டாய் ஒரு தொலைதூர பயணத்திற்கு..வழக்கமான வேகத்துடன்.

போய் வா அறிவு.

நினைவலைகள் ததும்பும் நதி அருகில் கலங்கி நிற்கும் எங்களுக்கு சுவாசமாய் இருந்து ஆற்றுப்படுத்து.

 

( எனது பெரிய தந்தை மறைந்த ச.பாலகுரு அவர்களின் மகன். பா. அறிவழகன். பெருமாள் வடக்கு வீதி ,பந்தநல்லூர் ,மறைவு 07.02.2015)

என் இளமையின் பொன்னிறத் துகள்..

 

 

26195657_381630508928490_7593472573008726768_n

 

அவன்
என் இளமையின்
பொன்னிறத் துகள்.
என் விழிகளில் பிணைந்திருக்கிற..
வாஞ்சைமிகு வசீகரம்.
என் கவிதை ஏடுகளில்
நிறைந்திருக்கிற எனது அகம்..
பல சமயங்களில்
அவனே நானாக..நானே அவனாக
வாழ்ந்துக் கொண்டிருக்கிற
விசித்திர வாழ்வின் விந்தைக்கோடுகள்
நாங்கள் இருவரும்..

இதில் யார் குரு..யார் சீடன்..??
என்ற குழப்பமில்லை எமக்கு.
தானாகி போனதொரு வாழ்வில்
அன்பள்ள சிவக்கிறது கிழக்கு.

தோள் சேர்த்து.. கை பிணைத்து..
காலம் ஒன்றை கண் அசைவுகளால்..
வார்த்தை வளைவுகளால்.. கட்டி எழுப்ப
வாடா..வாடா..

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் Dhuruvan Selvamani Somu

போர்ஹேவின் சொற்கள்..

slide_363547_4103384_free
என் முதுகிற்கு பின்னால் உதிர்க்கபடும் வசவுகளையும்,தூற்றல்களையும் கண்டு புண்படவோ..புன்னகைக்கவோ எனக்கு நேரம் இல்லை.

ஏனெனில்..காயம் கொடியதென்றாலும்..உள்ளுக்குள் வெடிக்கக் காத்திருக்கும் கனவு பெரிது.

என்

முன்னால் நீளும் பாதையில்..

என் குதிரையின் கால்கள் பயணப்பட்டுக்கொண்டே இருக்கும்.

எனக்கு உறுதியாகத் தெரியும்.

இந்த கொடும் விதி சமைத்த பாதையில் காற்றின் வழியே கசிந்து வரும் ஏதோ ஒரு புல்லாங்குழல் என் ஆன்மாவிற்கான பிரத்யோகப் பாடலை இசைத்து என் கொந்தளிப்பை அடக்கும்.

ஏனெனில்..நான் என்னிலிருந்து விடுதலை பெற்றே தீருவதற்கான பாதையில் போவதாக மீண்டும் உறுதி செய்து கொண்டே இருட் பாதையின் ஊடே நம்பிக்கை சுரக்கும் களங்கமற்ற இலட்சிய தாகம் மினுக்கும் இலக்கினை தேடிப் பயணிக்கிறேன்.

மற்றபடி..நான் எதுவுமில்லை…

– போர்ஹே.

 

பாக்யராசன் என்ற என் வாழ்க்கை…

21271236_341238972967644_8545662175495430546_n

 

ரணத்துக்
கனத்து
நிகழ்கிற
என்
நொடிகளை
எல்லாம்.
ஒரு.
இளையராஜா
பாடல் போல
நிலா மிதக்கும்
கனாக் காலமாக
மாற்ற அவனால்
முடிந்திருக்கிறது..

ஏதோ ஒரு திசையில்..
ஒரு அலைபேசி
உரையாடலோடு
சிரித்தவாறே
அவன்
நகர்கையில்…

எதிர்பாராமல்
சந்தித்து விட்ட
விழிகளோடு
விழிகளாலேயே
ஒரு புன்னகை
கைக்குலுக்கல்
மூலமாகவே
அன்பை நகர்த்தி
விடுவதில்
அவன் அசரா
அசுரன்…

எனக்கென
அவன்
தனித்து சேமித்து
இருக்கும்
ப்ரியங்களை
அவன் சொற்களால்
காட்டியதே இல்லை..

சில சமயங்களில்
சிக்கனமான கரம்
பற்றுதலில்..
தல என்று அழைக்கும்
குழைவில் என்றெல்லாம்
அடுக்கிக் கொண்டே
போனாலும்..

அதுவல்ல எனக்கான
அவன்
என அவனுக்கும் ,எனக்கும்
தெரியும்.

விவரிக்க முடியா
பேரன்பின் அக்கறையோடு
என்னை இழுத்துக்
கொண்டே திரிகிறான்..

கடும் சுமையாய்
நான் கனத்தப் பொழுதுகளில்
கூட..
அமைதியான காட்டில்
யாரும் அறியா பெய்யும்
மழை போல..
என்னை கரைத்து இருக்கிறான்..

கரை சேர்த்து இருக்கிறான்..

அவனுக்கென
என்னிடம் சொல்ல
இதற்கும் மேலும்..
வாஞ்சை சொற்கள்
நிரம்பிய
உணர்ச்சிக்குடங்கள்
உண்டு தான்..

உடைத்துக் கொண்டே
போகலாம் தான்..

ஆனால் வாழ்க்கை இருக்கிறதே…
அவனோடு வாழ..

என் தங்கை மீராவிற்கு..
என் மருமகள் அகநகைக்கு..
எனக்கும் …

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல..

அம்மாவிற்கு…

20882164_335942676830607_5908594693985192965_n

 

என் அம்மாவிற்கு…

எது நடந்தாலும்…எந்த தவறை செய்தாலும்..சீரணிக்கவே முடியாத என் முட்டாள் தனங்களால் உன் வாழ்வே செல்லரித்துப் போனாலும்…

என்னை வெறுக்க முடியாமல் நேசித்தே ஆக வேண்டிய பெருஞ்சாபம் உன் வாழ்நாள் விதியாக நேர்ந்தமைக்கு வருந்துகிறேன்.

நீதான் அம்மா இதற்கும் காரணம். உன் பேரன்பின் வானம் தாண்டி என் விழிகள் பயணித்ததில்லை.உன் கையை விட்டு நானாக நடக்க முயன்ற போதெல்லாம் தடுக்கி கீழே விழுந்திருக்கிறேன். உன் மடியில் தலை வைக்காமல் தூங்கிய போதெல்லாம் சாத்தான் கனவுகளால் சபிக்கப்பட்டு இருக்கிறேன்.

இருண்டக் குழிகளுக்குள் நானாக விழும் கணங்களில் எல்லாம் எனக்குத் தெரியும். உன் கரம் நீண்டு வந்து எனைக் காக்குமென.
அதற்காகவே…அந்த நம்பிக்கையிலேயே நான் குழிகளுக்குள் மீண்டும் மீண்டும் விழுகிறேன்.

இம்முறை கொஞ்சம் அதிகம் என நான் உணர்கிறேன். உன் மீது என் மன அழுத்தத்தை எல்லாம் கொட்டினேன். வார்த்தை வாணலியில் உன்னை வதக்கி சிதைத்தேன். எல்லாவற்றையும் விட நீ பார்த்து கனவு கண்டு உருவாக்கிய நான் நானாகவே அழிந்துக் கொண்டேன்

என் அழிவை உன்னால் தாங்க முடியாமல் தவித்தாய்.. ஆயுதங்கள் அனைத்தையும் பயன்படுத்தினாய்..பிறகு ஆயுதங்கள் அனைத்தும் தீர்ந்த கர்ணணாய் சரிந்து அமர்ந்தாய்.. அலுத்துப் போனாய்.

யாருமற்ற வெளியில்… தனித்து விடப்படும் நேரமும் வந்தது. சூன்ய வெளியில் தனித்து கண் மூடி அமர்ந்திருந்த போது தாங்க முடியா வலி. ஏமாற்றம்.

நடந்த சூதாட்டத்தில்…நம்பிக்கைகளை வைத்து விளையாடிய தருமனானேன். உன்மத்ததில் எல்லாவற்றையும் இழந்து மீண்டும் உன்னையே தேடி வந்தேன்.

நீயோ என் அழிவினால்.. ஏறக்குறைய அழிந்திருந்தாய். என் கண்களை கண்டாய். குற்ற உணர்வும், தாங்க இயலா இழப்பும் கண்ணீராய் அதில் தேங்கி நிற்க…ஒரு நொடியில் எழுந்து நின்றாய்..

என் தலை கோதி சரி செய்தாய்.

ஒரே ஒரு கேள்வி கேட்டாய்.

இந்த நிலைக்கு யார் காரணம்..எது காரணம்..

நான் தாம்மா காரணம். நான் மட்டுமே காரணம்.

என்னுடைய பேரன்பின் சூடு பல ரோஜாக்களை பொசுக்கின. எல்லாம் என்னை விட்டு போகக்கூடாது என்கிற அழுத்தம் எல்லாவற்றையும் அழித்தன..

மனதார மன்னித்து விடு…என

பேசிக்கொண்டே போன என் வாயை பொத்தினாய்…

நானிருக்கிறேன் …வா…போகலாம் என்றாய் மீண்டும்..

கலங்கிய கண்களுடன் நின்ற என் தலை கோதினாய்..

பெரு மழை பெய்யத் தொடங்கியது.

-மணி செந்தில்

உறுபசிக்கு பின்னால்…

 

 

20953734_335863913505150_1919002977959472517_n (1)

இந்த நாவல் எழுதப்பட்ட காலத்தில் தான் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களோடு சிலப்பதிகாரம் விவரித்துள்ள நிலவியல் குறிப்புகளின் படி கண்ணகி பூம்புகாரிலிருந்து மதுரை வரை நடந்துச் சென்ற பாதையை தேடி அப்பாதையை கண்டறிந்து பயணப்பட்டு கொண்டிருந்தோம் .எங்களோடு ஆனந்த விகடன் புகைப்படக்காரர், அன்பு நண்பர் திரு.பொன் காசிராஜனும் ஒளி ஓவியங்களாக எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தார்.

பெரும் பயணம் அது. குறிப்பாக எஸ்.ரா என்ற கதை சொல்லியோடு பெரும் பயணம் மேற்கொள்வது என்பது முழு நிலா நாளில் அடர் வனத்தில் திரிவது போல..

இந்த பயண நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அவர் எப்போது இந்த நாவலை எழுதினார் என்று எனக்கு இப்போதும் நினைவில்லை.

இந் நாவல் தமிழ் பயின்ற சம்பத் என்ற மனிதனின் வாழ்வையும், சரிவையும் பேசுகிறது. மனித உளவியல் சந்திக்கும் அறம் என்ற உணர்ச்சி தரும் சிக்கல்களை நுட்பமாக ஆராய்கிறது.

ஏன் சம்பத் அப்படி ஆனான்…என்ற கேள்விக்கு பின்னால் இருக்கும் பதில்கள் மொழியற்றவை. இருட்டு மூலையில் மறைந்திருக்கும் வெளவால்கள் போன்றவை. எப்போதும் மெளனம் என்பது இயலாமையால் விளைவது அல்ல. பேரன்பின் பாற் தனக்கு தானே தூக்கி கொண்டு சுமந்து திரிகிற சிலுவையாய் உண்மைகளை மறைத்து திரிகிற மெளனம் திகழ்கிறது.

என் தம்பி இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனர் வருங்கால திரை நம்பிக்கை Murali Manohar உறுபசி நாவலை எனக்கு எஸ்.ரா அர்ப்பணிப்பு செய்திருப்பதாக சொன்னார்.

ஒரு எளிய வாசகன் மேல் ஒரு மாபெரும் படைப்பாளன் கொண்டிருக்கும் ஆழ்ந்த அன்பின் சாட்சி யாக உறுபசி விளங்குகிறது..

இதற்கெல்லாம் அப்பாற்பட்டு இன்றளவும் என்னை உறுத்துகிற, எஸ்.ராவிற்கு மட்டும் பதில் தெரிந்த,இது வரை பதில் சொல்லாத,இனியும் பதில் சொல்ல மறுக்கிற கேள்வி..

என்னில் எது உறுபசி..?? உறுபசியில் நான் யார்..?!!

Page 5 of 6

Powered by WordPress & Theme by Anders Norén