மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

இவ்வாறாகவே நடந்தது அந்தக் கொலை.

????

உன்னை கொல்ல
நான்
ஆதி கால ஆயுதம்
ஒன்றை பரணில்
தேடிக்
கொண்டிருக்கும்
போது தான்,
அந்த துருப்பிடித்த கத்தியை
தேடி எடுத்தேன்.

அதன் முனை
அவ்வளவு கூர்மையாக இல்லை.
ஆனால் அதன் வளைவில் எப்போதோ குத்தப்பட்ட
குருதியின் கறை
அந்தக் கத்தியை
நான் தேர்ந்தெடுக்க போதுமான காரணத்தை தந்தது.

அதை உன்
தோல்களை கவ்வி நிற்கும்
விலா எலும்பில் குத்தலாமா,
கதகதப்பான
நடுநெஞ்சில் பாய்ச்சலாமா,
தசை ததும்பி நிற்கும் அடிவயிற்றில் சொருகலாமா, என்றெல்லாம் நினைக்கும் போது ..
மிடறு விழுங்குகிற உன் தொண்டைக் குழி எனக்கு நினைவுக்கு வந்தது.

அதன் மென்மை
இந்தக் கத்திக்கு
உகந்தது தான்‌.

ஆனால்..
எங்கே குத்தினாலும் சரி
நான் ஒன்றில் மட்டும் உறுதியாக இருக்கிறேன்.

உன் குருதித் துளி என் மீது பட்டுவிடக் கூடாது.

உன்னை விட
உன் குருதியை
நான் அதிகம் வெறுக்கிறேன்.
அதோடு அந்த நொடியில் உறையும் உன் விழிகளையும்.

அந்த இரண்டும்
வாந்தி எடுக்க முடியாத
ஒரு குடிகாரனின் இரவு போன்றவை.

ரத்தம் கொப்பளிக்கும்
உன் சாவை
எப்போதும் கொந்தளித்துக் கொண்டே இருக்கும்
என் மனக்கடலில்
ஒரு படகாக மாற்றி
செலுத்தி விட வேண்டும்
என எண்ணிய அந்த பொழுதில்..
ஏதோ
திருப்தியற்றவனாய்
சாவின் துருவேறிய
அந்தப் பழங்கத்தியை
என் ஜன்னல் வழியே
தூக்கி எறிந்தேன்.

அந்த நொடியில்
நிராயுதபாணியாக
நின்று இருந்த‌
என்னிடம்
என்ன ஆயுதம் இருக்கிறது
என யோசிக்கும் போது தான்…

அதுவரை
கண்ணியம் காத்தோ..
பழகிய காலம் கருதியோ..
உள்ளுக்குள் எப்போதும் சுரக்கும் பேரன்பின்
வாடை உறுத்தியோ…
உன்னைப் பற்றி
பேச கட்டாயப்படுத்தப்பட்ட
எல்லா தருணங்களிலும் மௌனித்த நான்,

முதல்முறையாக
உன்னை பற்றி பேசத் தொடங்கினேன்.

இனி
இயல்பாகவே
நடந்து விடும்‌.
எனக்கான ஒரு கொலையும்,
உனக்கான ஒரு சாவும்.

????

புத்தகப் பரிந்துரை- 2023

அன்பு உறவுகளுக்கு வணக்கம்.

நேற்றைய முன் தினம் நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பாசறை நடத்திய சென்னை புத்தகக் கண்காட்சி 2023 பற்றிய ட்விட்டர் ஸ்பேஸ் அமர்வில் இளம் தமிழ் தேசியர் மற்றும் வாசகர்கள் தவறவிட கூடாத மிக முக்கியமான புத்தகங்கள் பற்றிய பட்டியல் ஒன்றினை கேட்டிருந்தார்கள்.

அதன்படி இந்த பட்டியலை நானே உருவாக்கி உள்ளேன். இது அடிப்படை வாசகர்களுக்கு பரந்துபட்ட இலக்கிய வகைமைகளுக்கு அறிமுகங்களாக இருக்கக்கூடும்.

வழக்கமாக பொன்னியின் செல்வன் பாலகுமாரன் புத்தகம் சுஜாதா எழுதியவை என்றெல்லாம் இல்லாமல் இன உணர்வு மற்றும் நவீன இலக்கியங்கள் சார்ந்து இந்த பட்டியல் ஒன்றினை நான் உருவாக்கி இருக்கிறேன். சிறார் இலக்கியங்கள் குறித்து தனியே ஒரு பட்டியல் உருவாக்க‌ திட்டமிட்டு உள்ளேன்.

இது முழுக்க முழுக்க என் ரசனை சார்ந்தது. நான் வாசித்தபோது எழுந்த அனுபவ உணர்ச்சியினை சார்ந்து தயாரிக்கப்பட்டது.

இது தரவரிசை பட்டியல் அல்ல. எனக்குப் பிடித்த சில நூல்கள் இவை. இன்னும் பட்டியல் இடப்படாத பல நூறு நூல்கள் இருக்கின்றன என்றாலும் நான் வாசித்த வகையில் மிகப்பெரிய வாசிப்பு அனுபவத்தை எனக்கு அளித்த இந்த நூல் வரிசையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

இந்தப் புத்தகங்கள் அனைத்தையும் வாங்குங்கள் என்றெல்லாம் நினைத்து செய்யப்பட்ட பரிந்துரை அல்ல.

தமிழ் தேசிய தத்துவத்திற்கு மாற்றாக எழுதி வரும் சில எழுத்தாளர்களின் நூல்களும் இதில் இடம் பெற்று இருக்கின்றன. ஆனாலும் அவையும் படிக்க வேண்டியவை எனக் கருதி இந்த பட்டியலில் நான் இணைத்து உள்ளேன். எனவே நூல்களில் உள்ள கருத்துக்களை எல்லாம் நான் சார்ந்திருக்கும் அரசியல் தத்துவத்தின் மீது பொருத்தி குழம்பிக் கொள்ள தேவையில்லை.

புத்தக கண்காட்சிக்கு நீங்கள் செல்லும்போது இந்த புத்தகங்கள் உங்கள் கண்களில் பட்டால் ஒரு நிமிடம் எடுத்துப் பாருங்கள். பிடித்திருந்தால் வாங்கிக் கொள்ளுங்கள்.

இந்தப் பட்டியல் தரவரிசை பட்டியலும் அல்ல என்பதோடு இந்தப் பட்டியல் இன்னும் முடிவடையவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

புத்தகம் தேடி செல்வோர்க்கு இந்த பட்டியல் சிறு உதவி செய்தால் பெரும் மகிழ்ச்சி அடைவேன்.

அவசியம் களம் மற்றும் தமிழம் பதிப்பகம் அரங்குகளுக்கு செல்ல தவறாதீர்கள்.

நன்றி.

மணி செந்தில்.

????

  1. தமிழர் மேல் நிகழ்ந்த பண்பாட்டு படை எடுப்புகள் க.ப. அறவாணன்
  2. தமிழன் ஏன் அடிமையானான் க.ப அறவாணன்
  3. சுற்றுச்சூழலியல் உலகம் தழுவிய வரலாறு ராமச்சந்திர குகா எதிர் வெளியீடு
  4. தேசியமும் மார்க்சியமும் தணிகைச் செல்வன்
  5. தமிழ்நாடு தமிழருக்கே
    வழக்கறிஞர் சக்திவேல்
  6. ம.பொ.சியின் தமிழன் குரல்
  7. தொ பரமசிவன் முழு தொகுப்பு காலச்சுவடு வெளியீடு
  8. ஆசான் ம செந்தமிழன் அவர்களின் நூல்கள் செம்மை வெளியீடு
  9. தமிழகத்தில் பிற மொழியினர் ம.பொ.சி
  10. ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்
    தமிழில் இரா முருகவேள்
  11. கம்யூனிசம்- நேற்று இன்று நாளை_ இரா. ஜவகர் நக்கீரன் வெளியீடு
  12. தமிழகத்தில் சமூக சீர்திருத்தம்- அருணன்
  13. நான் நம்மாழ்வார் பேசுகிறேன்- விகடன் வெளியீடு
  14. சுதேசி இந்தியா சுரண்டப்பட்ட வரலாறு- விகடன் வெளியீடு
  15. சாதியை அழித்து ஒழித்தல்- அண்ணல் அம்பேத்கர் – அருந்ததி ராய் முன்னுரையுடன் காலச்சுவடு வெளியீடு
  16. உலக சினிமா- மூன்று தொகுப்புகள் செழியன்
  17. மாவீரர் உரைகள் நேர்காணல்கள்
  18. இவன் ஒரு வரலாறு தொகுப்பாசிரியர் பூபதி
  19. மண்டோ படைப்புகள்
  20. புதுமைப்பித்தன் சிறுகதைகள்
  21. எனது இந்தியா- எஸ் ராமகிருஷ்ணன்
  22. அறம்- ஜெயமோகன்
  23. இந்தியாவில் தேசிய இனங்களும் தமிழ் தேசியமும் கு.ச. ஆனந்தன்
  24. நள்ளிரவில் சுதந்திரம்
  25. வையத் தலைமை கொள் -இறையன்பு
  26. போர் தொழில் பழகு -இறையன்பு
  27. வெள்ளை யானை- ஜெயமோகன்
  28. 1801 -ராஜேந்திரன் ஐஏஎஸ்
  29. காலா பாணி -ராஜேந்திரன் ஐஏஎஸ்
  30. உலக இலக்கியப் பேருரைகள்- எஸ் ராமகிருஷ்ணன்
  31. வால்காவிலிருந்து கங்கை வரை
  32. பட்டாம்பூச்சி‌- நர்மதா பதிப்பக வெளியீடு
  33. மோகமுள்- தி ஜானகிராமன்
  34. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் -ஜெயகாந்தன்
  35. ஜெயகாந்தன் சிறுகதைகள்
  36. பாரதியார் கவிதைகள்
  37. பாரதிதாசன் கவிதைகள்
  38. உலகின் மிக நீண்ட கழிவறை அகர முதல்வன்
  39. இந்திய அரசியலமைப்பும் கூட்டாட்சியும்- ஆலடி அருணா
  40. சுளுந்தீ- முத்துநாகு
  41. மாபெரும் தாய் -அகரமுதல்வன.
  42. ஒரு சிறு இசை- வண்ணதாசன்
  43. வைரமுத்து கவிதைகள்
  44. அப்துல் ரகுமான் கவிதைகள்
  45. திராவிடம் தமிழின் மறுமலர்ச்சியை வளர்த்ததா மடை மாற்றியதா- பெ மணியரசன்
  46. தேசியமும் திராவிடமும்- மாசோ விக்டர்
  47. ஆழி சூழ் உலகு- ஜோ டி குரூஸ்
  48. பூஉலகின் நண்பர்கள் சிறியதே அழகு புத்தக வரிசை
  49. பார்த்தீனியம்- தமிழ் நதி
  50. ரசவாதி

50.புயலிலே ஒரு தோணி/ கடலுக்கு அப்பால்- ப.
சிங்காரம்

  1. பாப்லோ நெருடா கவிதைகள்- தமிழில் சுகுமாரன்
  2. பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும்
    -புதுவை ரத்தினதுரை தொகுப்பு
  3. தமிழின படுகொலைகள்
    களம் வெளியீடு
  4. தஞ்சை பிரகாஷ் சிறுகதைகள்
  5. வண்ண நிலவன் சிறுகதைகள்
  6. ஜாப்னா பேக்கரி -வாசு முருகவேல்
  7. நடுகல்- தீபச்செல்வன்
  8. இரண்டாம் ஆட்டம்/கொமாரா – லட்சுமி சரவணகுமார்
  9. சைவ சமயம் ஒரு புதிய பார்வை- சிகரம் செந்தில்நாதன்
  10. இந்து மதம் எங்கே போகிறது இரண்டு பாகங்கள்- நக்கீரன் வெளியீடு
  11. காந்தியைக் கொன்றவர்கள் -எதிர் வெளியீடு
  12. குற்றப்பரம்பரை -வேல ராமமூர்த்தி
  13. கள்ளிக்காட்டு இதிகாசம்/ கருவாச்சி காவியம்/ மூன்றாம் உலகப் போர்/ வைரமுத்து
  14. குஜராத் மதவெறி படுகொலைகள்- சூத்திரதாரிகளும், பங்காளிகளும் -களம் வெளியீடு
  15. அண்ணல் அம்பேத்கர் வரலாறு வசந்த் மூன் நேஷனல் புக் ட்ரஸ்ட் வெளியீடு/ பாபா சாகேப் அருகில் இருந்து- மைத்திரி
  16. சயாம் பர்மா மரண ரயில் பாதை
  17. ஆழமான கேள்விகளும் அறிவார்ந்த பதில்களும் ஸ்டீபன் ஹாக்கிங்
  18. தூக்கிலிடுபவனின் குறிப்புகள் சசிவாரியர் எதிர் வெளியீடு
  19. விடுதலைக்கு விலங்கு ராபர்ட் பயஸ் களம் வெளியீடு
  20. சிறை கொட்டடியில் இருந்து ஒரு மடல் பேரறிவாளன்
  21. தமிழ் தேசியத் தலைவர் தமிழரசனின் வாழ்வும் அறமும்
  22. நிலைத்த பொருளாதாரம்- ஜே சி குமரப்பா
  23. தமிழர் எழுச்சியின் வடிவம் -பழ நெடுமாறன்
  24. கால்கள்- ஆர் அபிலாஷ் உயிர்மை வெளியீடு
  25. இருபதாம் நூற்றாண்டு சிறுகதைகள் 100 -பதிப்பு முனைவர்.வீ. அரசு
  26. புலி நகக்கொன்றை- பி ஏ கிருஷ்ணன்
  27. கோபல்ல கிராமம் -கி ராஜநாராயணன்
  28. ஒரு புளிய மரத்தின் கதை- சுந்தர ராமசாமி
  29. அ முத்துலிங்கம் சிறுகதைகள்
  30. இருபதாம் நூற்றாண்டு இந்திய வரலாறு/ தகர்ந்து போன தன்னாட்சிக் கனவுகளும் தேசிய இனங்களின் தன்னுரிமை பயணமும் முனைவர் த ஜெயராமன்.
  31. ஈரோட்டுப் பாதை சரியா- ப ஜீவானந்தம்
  32. சாதியும் தமிழ் தேசியமும்- பெ மணியரசன்
  33. வ உ சிதம்பரனார்/ மா ரா அரசு/ சாகித்திய அகாதமி வெளியீடு
  34. அருணகிரி நாதர் முதல் வள்ளலார் வரை சிகரம் செந்தில்நாதன்.
  35. ஆரியக்கூத்து- அ.மார்க்ஸ்
  36. நவீன தமிழ் இலக்கிய அறிமுகம்- ஜெயமோகன்
  37. இடக்கை, யாமம், துயில் எஸ் ராமகிருஷ்ணன்,
  38. நிலம் பூத்து மலர்ந்த நாள் -மனோஜ் குரூர்
  39. செம்புலம் -இரா முருகவேள்
  40. மாநில சுயாட்சி- முரசொலி மாறன்
  41. முத்தமிழ் காவலர் கி ஆ பெ விசுவநாதம் அவர்களின் தமிழ் பணி / முனைவர் கோ வீரமணி
  42. சிதம்பர நினைவுகள் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு தமிழில் கே வி சைலஜா
  43. ஈழப் படுகொலையின் சுவடுகள் நிலவன்
  44. ஓநாய் குலச் சின்னம்
  45. மனித குலமும், தமிழ்த் தேசியமும் பல நெடுமாறன்
  46. சூழலியல்- கி வெங்கட்ராமன்
  47. பெருந்தலைவர் காமராஜர் விகடன் வெளியீடு
  48. அஜயன் பாலா எழுதிய நாயகன் வரிசை நூல்கள் விகடன் வெளியீடு
  49. நெடுங்குருதி- எஸ் ராமகிருஷ்ணன்.

தொகுப்பு: மணி செந்தில்

சி.ஆர்.7 -தன்னிகரற்ற வீரர்.

கால்பந்து ஆட்டங்கள் பார்க்கத் தொடங்கிய காலம் தொட்டு என்னுடைய அணி அர்ஜென்டினா. முதலில் மாரடோனா. தற்காலங்களில் என்னுடைய கதாநாயகன் மெஸ்ஸி. ஆனாலும் போர்ச்சுகல் நாட்டின் ரொனால்டோ ஆகச்சிறந்த கால்பந்து வீரனாக உருவாகி வந்த காலகட்டங்களில் ஒரு மெஸ்ஸியின் ரசிகனாக ரொனால்டோவை வெறுக்க முடியாதது ஒன்றுதான் ரொனால்டோவின் ஆகப்பெரும் வசீகரம். ஏனெனில் அந்தத் திறமை வெறுக்க முடியாத, பொறாமை கொள்ள முடியாத உயரம் கொண்டது.

ஒரு பேட்டியில் மெஸ்ஸி உலகின் தலைசிறந்த வீரர்களை பற்றி கூறும் போது ரொனால்டோவின் பெயரை கூறாதது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்புவார்கள். அப்போது மெஸ்ஸி சிரித்துக்கொண்டே “நான்தான் அவர். என்னில் இருந்து அவரைப் பிரிக்க முடியாது.. எனவே தான் அவரை நான் தனியே சொல்லவில்லை..” என்று சொல்வார்.

அதுதான் ரொனால்டோ. சிஆர் 7 என்று அவர் டீசர்ட் அணிந்து மைதானத்தில் இறங்கும்போது ஒவ்வொரு முறையும் ஆகச் சிறந்த ஆட்டக்காரரான அவர் தன்னைத்தானே மிஞ்சி காட்டுவதில ஒரு மந்திரக்காரன்.

தன்னை நோக்கி வரும் பந்தை உயரமாக எழும்பி கோலாக மாற்ற அவர் எழும்பும் உயரம் உலகில் இதுவரை யாராலும் முறியடிக்கப்படாதது மட்டுமல்ல, ஒரு கவிதை போல அவ்வளவு வசீகரமானது.

இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் முடியும்போது உலகின் ஆகச்சிறந்த வீரர்களான நெய்மர் , மெஸ்ஸி, ரொனால்டோ போன்ற ஜாம்பவான்கள் ஓய்வு பெற்று இனி விளையாட மாட்டார்கள் என செய்திகள் வெளியான போதே கால்பந்து ரசிகர்கள் பலருக்கும் நாடு இனம் கடந்து மனம் வலிக்க தொடங்கியிருந்தது.

இன்றும் அப்படித்தான்.

உலகக் கோப்பையின் கால் இறுதி போட்டியான இன்று போர்ச்சுக்கல் ஆப்பிரிக்க நாடான மொராக்காவை எதிர்கொண்டார்கள். ஆட்டத்தின் முதல் பாதியில் ஏனோ முதன்மை வீரரான ரொனால்டோவை போர்ச்சுக்கலின் கோச் இறக்காமல் பெஞ்சில் அமர வைத்து இருந்தது பார்வையாளர்களின் கடுமையான விமர்சனமாக இருந்தது.

இந்த உலகப் பந்தய போட்டிகளில் உலகின் மிகச்சிறந்த அணிகளை வென்று வருகிற மொரோக்கா ஆட்டத்தின் முதல் பாதியிலேயே கோல் அடிக்க இதுவரை போர்ச்சுக்களால் அதற்கு பதிலடி கொடுக்க முடியவில்லை.

இறுதியில் முதல்முறையாக ஒரு ஆப்பிரிக்க நாடு உலகக் கோப்பையின் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது மனதிற்கு ஆறுதலாக இருந்தாலும், கால்பந்து போட்டிகளின் கதாநாயகன் 37 வயது நிரம்பிய ரொனால்டோ தன் கடைசி போட்டியில் அழுது கொண்டே களத்தை விட்டு வெளியேறும் போது ,

மெஸ்ஸியின் பரம ரசிகனான என் இளைய மகன் பகலவன் கலங்கி அழுது கொண்டிருந்தான்.

அதுதான் ஒரு சிறந்த விளையாட்டு வீரன் தன் வாழும் காலத்தில் பெறுகிற உயர்வான வெகுமதி.

போய் வாருங்கள் சிஆர் 7.

உங்கள் கால்கள் உலவாத கால்பந்து மைதானங்கள் மெஸ்ஸியின் ரசிகர்களால் கூட விரும்பப்படாதவை தான்.

ஏனெனில் நீங்கள் விளையாடும் காலத்தில்…ஒரு காலத்தை உருவாக்கினீர்கள்.

எப்போதும் மெஸ்ஸியின் ரசிகனாக இருந்து சொல்வேன்..உங்கள் காலத்தில் தன்னிகரற்ற வீரர் நீங்கள் தான்.

❤️❤️❤️

நவம்பர் -26 தலைவர் பிறந்தநாள்

வனமேறி நின்ற
அந்த புலியின்
கண்கள்
ஆதி முருகன்
சாயல் ஒத்தவை
என பார்த்தோர்
பதற சொன்னார்கள்.

சினமேறி நின்ற
அதன் சீற்றம்
அறிந்தோர்
அது வெறும்
வனமேறிய புலி
அல்ல..
அது மூத்த குடி
சுமந்த கனவு
என கண்டார்கள்.

கார்த்திகை இரவில்
காந்தள் மலர் பூட்டி
சன்னதம் வந்து
முழங்கிய முதியவன்
ஒருவன் கம்பீரமாய்
சொன்னான்.

அது கனவும் அல்ல ,
நினைவின் சினமும் அல்ல,
அது
இனம் வணங்கும்
இறை என்று.

நவம்பர்-8 அண்ணன் சீமான் பிறந்தநாள்.

“அமைதியான வரலாறு என்ற ஒன்றே உலகில் கிடையாது” என்கிறார் மாமேதை வால்டர். வரலாற்றின் பக்கங்கள் எங்கோ தோன்றிய தனி நபர் விளைவித்த சிந்தனைகளால், கலகங்களால் சதா அதிர்ந்துக் கொண்டே இருக்கின்றன. யாரும் எதிர்பார்க்காத ஒருவரிடம், போகிற போக்கில் நிகழ்ந்துவிடுகிற கால ஓட்டத்தில் இருந்துதான் வரலாற்று அதிர்விற்கான சூட்சமப் புள்ளிகள் தோன்றி விடுகின்றன.

இவர் எங்கிருந்து வந்தார் என யோசிக்கும் முன்னே வரலாற்றுநாயகர்கள் சமகாலத்து சிந்தனைகளை மாற்றிக் கட்டமைத்து புது பாய்ச்சலை நிகழ்த்தி விடுகிறார்கள் ‌.

எப்படி சாத்தியம் என்று நாமெல்லாம் யோசிக்கும்போது நம்மில் ஒருவராக பிறந்து சீமான் என்கின்ற தனி மனிதன் சாத்தியப்படுத்தி சாதித்துக் காட்டியதைத்தான் நாம் 12 வருடங்களுக்கு மேலாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
நாம் தமிழர் கட்சி உருவான புள்ளியான மதுரையில் நடந்த “அறுத்தெறிவோம் வாரீர் ..” என்கிற பேரணி நடந்த போது கூட தமிழகத்தில் தமிழ் தமிழருக்கு எதிராக ஏதேனும் தோன்றினால் கலகம் செய்ய ஒரு சிறு அமைப்பாக செயல்படும் எண்ணம் தான் அண்ணன் சீமானிடம் இருந்தது. ஆனால் காலம் வேறு மாதிரி சிந்தித்து வைத்திருந்தது என்பதை அவர் கூட அப்போது உணரவில்லை.

படிப்படியான நகர்வு என்பது போன்ற ஒரு தொடர் ஓட்டத்தில் ஒரு பேரணிக்கு அனுமதி வாங்க உண்டாக்கப்பட்ட அமைப்பு இயக்கமானது. இயக்கம் கட்சியானது. அந்தக் கட்சி தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக தமிழ்த் தேசியத்தை அரங்கங்களில் இருந்து விடுதலையாக்கி வெகுஜன அரசியல் பரப்பிற்கு கொண்டு வந்தது. 30 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை வாங்கி தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக அசலான எதிர்க்கட்சியாக இன்று களத்தில் நிற்கிறது.

ஓய்வறியா தன் உழைப்பால், கொட்டி முழங்கும் தன் தமிழால், சமூகத்தின் கூட்டு மனசாட்சி அல்லது மக்களின் பொதுவான கருத்தியல் போன்றவற்றின் திசையை மாற்றி, தமிழ்த் தேசிய இனத்தின் சிந்தனை ஓட்டத்தில் பெரும் மாறுதல்களை ஏற்படுத்தியவர் அண்ணன் சீமான்.

2009 க்கு பிறகான காலகட்டத்தை திராவிடத்தின் பெருமிதங்களை, தேசியத்தின் தோற்ற மயக்கங்களை தன் அனல் தமிழால் தகர்த்தெறிந்த காலமாக அவர் மாற்றினார்.

ஒரே நேரத்தில் தமிழர்கள் இந்துக்கள் அல்லர், தமிழர்கள் திராவிடர்கள் அல்லர் என்று அரசியல் கணக்குகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு துணிந்து அண்ணன் சீமான் முழங்கியது அசலான கருத்தியல் புரட்சி.

இது எதுவுமே அவர் திட்டமிடவில்லை. அதுவாகவே ஒவ்வொரு படியாக நிகழ்ந்ததையும், நகர்ந்ததையும் நாங்கள் அனைவரும் விழிகள் வியக்கக் கண்டோம்.

ஒரு மாயவிசை ஒன்று அவரை இயக்கிக் கொண்டே இருந்ததை நாங்கள் உணர்ந்த போது அவர் தன் லட்சிய பயணத்தில் வெகு தூரம் கடந்து வந்து விட்டார். அந்த மாயவிசையை அவரும் தனக்குள் உணர்ந்திருக்கிறார்.

எல்லாவற்றையும் விட ஒரு இனப்படுகொலைக்கு பின்பான இந்த காலகட்டத்தில் பத்தாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.‌.எல்லோரும் அதைக் கடந்து விடுவோம் என அவருடன் பயணித்த பலர் சமரசமாகி சரண் அடைந்த பிறகும் கூட, இன்றளவும் துளியும் சமரசம் இன்றி அதே உக்கிரத்தோடு போராடிவரும் அண்ணன் சீமான் எங்கள் அண்ணன் என்பதில் எங்களுக்கு பெருமிதம் உண்டு.

இன்று தமிழகம் கண்டு இருக்கும் பல்வேறு மாற்றங்களுக்கு குறிப்பாக தமிழ்- தமிழர் உணர்வேற்றத்திற்கு அண்ணன் சீமானே முதன்மைக் காரணம்.

அவரோடு நிற்பதும் , அவரோடும் பயணிப்பதும், எம் இனத்திற்காக எம் மொழிக்காக நாங்கள் செய்யும் பிறவிக் கடன்.

அண்ணன் சீமான் நீடூழி நலத்தோடு வாழட்டும்.

தமிழர் நிலம் தலை நிமிரட்டும்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா.

உலகமெங்கும் கேட்கட்டும் சங்கத்தமிழோசை..

????

“சங்கத் தமிழ் ஓசை” என்ற பெயரில் அழைப்பிதழ் பார்த்தவுடன் உண்மையில் அச்சமாகத்தான் இருந்தது. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நுட்பமான இலக்கண விதிகளுக்கு உட்பட்டு வரையப்பட்ட இலக்கிய பாடல்களான சங்க பாடல்களுக்கு சமகாலத்தில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்துவது என்பது எந்த வகையில் பார்வையாளர்களை ஈர்க்கும் என்கிற கேள்வியும்,சாதாரண வாசகர்களால் வெற்று வாசிப்பின் மூலம் எளிதில் புரிந்து கொள்ள முடியாத சங்க பாடல்களை எப்படிப்பட்ட இசை வடிவத்தில் பொருத்தி கேட்போரை ஈர்க்க செய்யப் போகிறார்கள் என்கிற கேள்வியும் எனக்குள் எழுந்தன.

உண்மையில் அது ஆபத்தான முயற்சி தான். அதுவும் ஒரு வெகுஜன அரசியல் கட்சி தன் கலை பண்பாட்டு பாசறை மூலமாக தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதல்முறையாக சங்கப் பாடல்கள் மற்றும் பாவேந்தர் பாரதிதாசன், பாரதியார் பாடல்களை வெகுமக்கள் திரள் முன் மேடையேற்றம் செய்கிற நிகழ்ச்சி அது.‌ ஓட்டு அரசியலுக்கு இது எந்த விதத்தில் கை கொடுக்கும் என்கிற கேள்வி இயல்பாகவே அரசியல் பார்வையாளர்களுக்கு எழ வைக்கிற முயற்சி அது. தன் கட்சி கொடிகள் சின்னங்கள் லட்சணைகள் எதுவும் இல்லாமல் கவனமாக அவைகள் தவிர்க்கப்பட்டு, “மீண்டெழும் தமிழ் மொழி ” என்கின்ற புனித லட்சியத்திற்காக தன்னலம் பார்க்காமல் நாம் தமிழர் கட்சி செய்திருக்கின்ற இந்த வரலாற்றுப் பெரு நிகழ்வு தமிழர் வரலாற்றில் மறுமலர்ச்சியை தோற்றுவிக்கிற தொடக்கப் புள்ளியாக கொள்ளலாம்.

இருந்தாலும் இந்த நிகழ்ச்சி எவ்வாறு வெற்றி பெறப் போகிறது என்கிற கவலையும், கூட்ட ஒழுங்கு பற்றிய அச்சமும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பலருக்கும் அச்சமயத்தில் இருந்தது.

ஆனால் இதையெல்லாம் பற்றி கொஞ்சமும் கவலைப்படாத, சொல்லப்போனால் அந்த நிகழ்ச்சி குறித்து மகத்தான நம்பிக்கை கொண்டிருந்து உலகத் தமிழர்களை அந்த நிகழ்ச்சிக்கு அழைக்கும் பணியில் அண்ணன் சீமான் தீவிரமாக இருந்தார். கட்சி பொறுப்பாளர்களை அழைக்கும் போது கூட “இது மிக மிக முக்கியமான ஒரு நிகழ்வு. வரலாற்றில் முதல்முறையாக, தவற விட்டு விடாதே..” என உரிமையோடும், அதே நேரத்தில் கொஞ்சம் கண்டிப்போடும் அழைத்த அந்த அழைப்பு, ஆயிரக்கணக்கான தமிழர்களை 17-09-2022 சனிக்கிழமை மாலை சென்னை கலைவாணர் அரங்கத்தில் திரட்டியது.

அந்த அரங்கில் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக கூடியிருந்த எல்லோர் மனதிலும் இருந்த கேள்வி ” அடுத்து வருகிற சில மணி நேரங்களை எப்படி கடப்பது ‌…”

ஏனென்றால் இது போன்ற பல நிகழ்ச்சிகளை அவர்கள் ஏற்கனவே தங்கள் வாழ்க்கையில் சந்தித்து இருக்கிறார்கள். இது போன்ற இசை நிகழ்ச்சியில் திரைப்பட பாடல்களுக்கே உரிய வசீகரமோ, துள்ளல் இசையோ போன்ற கொண்டாட்ட அம்சங்கள் இடம்பெறாது என்பது இதுவரை
நிகழ்ந்த நிகழ்ச்சிகள் மூலம் அவர்கள் பெற்றிருந்த வாழ்வியல் பாடம். ஒரு வகுப்பறையில் நடக்கும் தமிழ் வகுப்பில் செய்யுள் பாடப்பகுதி‌ நடத்தப்படும் போது எது போன்ற அனுபவம் (?) நமக்கு இதுவரை கிடைத்ததோ அதே அனுபவத்தை இந்த நிகழ்ச்சியும் வழங்கி விடுமோ என்கிற அச்சம் அங்கே கூடியவர்களுக்கு இருந்தது.

ஆனாலும் அண்ணன் சீமான் அழைத்திருக்கிறார். நிகழ்ச்சியில் அவர் பேசுவதாகவும் சொல்லி இருக்கிறார். எனவே அந்த நெருப்புத் தமிழை கேட்பதற்காக வேணும் நாம் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோம் என அவரவருக்கு ஒவ்வொரு சமாதானத்தை உள்ளுக்குள் உண்டாக்கி இருந்தார்கள்.

அந்த அரங்கில் அமைக்கப்பட்டு இந்த மேடை இந்த கணக்குகளை எல்லாம் தாண்டி பார்த்த நொடியில் ஆர்வத்தை தூண்டக்கூடிய பிரம்மாண்ட ஒழுங்குகளை கொண்டிருந்தது.

மேடையில் ஆபிரகாம் பண்டிதர் உள்ளிட்ட தமிழிசை மூத்தோர் படங்கள் வைக்கப்பட்டிருந்தன.

மின்விளக்குகள் அமைக்கப்பட்டிருந்த முறையும், ஒலி ஒளி அமைக்கப்பட்டிருந்த ஒழுங்கும் ஒரு பிரம்மாண்டமான இசை விருந்தை எதிர்கொள்ள பார்வையாளர்களை தயார் படுத்தின.

சற்றே இருளும், குளிரூட்டி குளிரும் நிலவிய அந்த அரங்கில் சில முணுமுணுப்புகளை தாண்டி பெரிய ஓசைகள் இல்லை. மேடையிலும் யாரும் இல்லை.
எல்லோருக்கும் இனம் புரியாத அமைதி உள்ளுக்குள் ஊற, தயாரானது அரங்கம்.

சரியாக ஆறு மணிக்கு அண்ணன் சீமான் முகம் முழுக்க பெருமித புன்னகையோடு, அரங்கத்திற்குள் வரவே, உற்சாக குரல்கள் விண்ணை தொட்டன. அவரைத் தொடர்ந்து பட்டாடையோடு உள்ளே வந்தார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.

30க்கும் மேற்பட்ட இளைஞர்களும் இளம்பெண்களும் மேடையில் அடுக்கடுக்கான வரிசையில் மிக ஒழுங்காய் நிற்க மேடை முன்புறம் அமைக்கப்பட்ட சிறு மேடையில் வந்து நின்று நிகழ்ச்சி குறித்து அறிமுக உரை நிகழ்த்தினார் ஜேம்ஸ் வசந்தன்.

முதலில் இசை நிகழ்ச்சியை நடத்துபவர்கள், பார்வையாளர்கள் என்கிற இருவர்களுக்குமான இடைவெளி இருக்கக் கூடாது, இந்த நிகழ்ச்சியில் அனைவருமே பங்கேற்பாளர்கள் என்பதை முத்தாய்ப்பாக அறிவித்தார்‌ அவர்.

தன் உரையின் தொடக்கத்திலேயே
பார்வையாளர்கள் கொண்டிருந்த நிகழ்வு குறித்தான அச்சங்களை
தன் புன்னகை மொழியால் அடித்து நொறுக்கினார் ஜேம்ஸ் வசந்தன்.
மேலும் இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவம் குறித்தும் , தமிழ் மொழியின் தொன்மை குறித்தும் அவர் ஆற்றிய சிறு உரை அந்த நிகழ்ச்சி எப்படி அமையப் போகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்தது.

முதலில் “திருக்குறளின் கடவுள் வாழ்த்து” அதிகாரம்.

அரங்கமே அமைதியானது. மேடையில் நின்றிருந்தவர்களின் சேர்ந்திசை குரல் மெதுவாக தொடங்கியவுடன், ஒரு பன்னாட்டு இசை நிகழ்ச்சிக்கான நேர்த்தியை நம்மால் உணர முடிந்தது.

“அகர முதல” என தொடங்கிய போது அருகே வைக்கப்பட்டிருந்த திரைகளில் வரிகளும் வரிகளுக்கான விளக்கமும் தோன்றத் தொடங்க, நவீன இசையும் இணைந்து கொள்ள கண்ணுக்கும் காதுகளுக்கும் பெரும் விருந்தை அந்த நிகழ்ச்சி படைக்க தொடங்கியது. அடுத்தது புறநானூறு , குறுந்தொகை, பாரதிதாசன் பாரதியார் பாடல்கள், பாடல்கள் காளமேகப்புலவரின் கவிதைகள்,மீனவர் பாடல் என அடுத்தடுத்த பாடல்கள், அதற்கான முன்னுரைகள் என நிகழ்ச்சிக் களைக் கட்டியது.

பாரி மகளிர் பற்றி சங்க கால கவிஞர் கபிலர் பாடிய பாடலைக் கேட்கும் போது வேள்பாரி உருவம் திரையில் தோன்ற, நம் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களே தோன்றுவதாக உணர்ந்து அரங்கில் உள்ளோர் விழி நிறைந்து உறைந்தனர்.

அதேபோல் தமிழுக்கு அமுதென்று பேர் என்கிற பாவேந்தர் பாரதிதாசன் பாடலின் வரிகளும் இசையும் அந்த அரங்கில் உள்ளவரை சொக்கி இழுத்து மயக்கி போட்டன என்றால், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கிற துள்ளல் பாடல் இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் வழிகாட்டுதலின் அடிப்படையில் அனைவரையும் எழுந்து ஆட வைத்தது. அண்ணன் சீமான் உள்ளிட்ட அந்த அரங்கில் உள்ளோர் அனைவரும் எழுந்து ஆட
உச்சகட்ட கொண்டாட்ட தருணத்தை பார்வையாளர்கள் அனுபவித்தார்கள்.

“விடிவெள்ளி தானே நம் விளக்கு.
..” என்கின்ற மீனவர் பாடல் அரங்கில் உள்ளோர் அனைவரையும் ஐலேசா போட வைத்தது.

ஈடு இணையற்ற தொழில்நுட்ப மேன்மையோடு அமைக்கப்பட்ட அரங்கு, துல்லியமான ஒலி ஒளி வசதிகள் என பிரமிக்க வைத்த 90 நிமிட அந்த நிகழ்ச்சி , தமிழரின் காதல், வீரம், அறம், தொன்மை என அனைத்து பக்கங்களையும் தொட்டு காட்டி பார்க்கும் அனைவரையும் பரவசப்படுத்தியது. “யாயும் யாயும்
யாரோ யாராகியோரோ..” என்கிற சங்க கால காதற் பாடல் இசைக்கப்படும்போது முழுக்க தோன்றிய திரை முழுக்க காதற் சின்ன இதயங்கள் பேரழகு வடிவமைப்பால் நம்மை வெகுவாக கவர்ந்தன.

எல்லா காலத்திலும் எல்லா இசை வடிவங்களிலும் ஒரு மொழி பொருந்துகிறது என்றால் அந்த மொழி எப்படிப்பட்ட வடிவம் கொண்டதாக இருந்திருக்க வேண்டும் என்பதை தன் இசை மூலம் ஜேம்ஸ் வசந்தன் நுட்பமாக விளக்க விளக்க அரங்கில் உள்ளோரெல்லாம் தன்னை மறந்து தன் இனத்தையும், தன் மொழியையும் நினைத்து பூரித்து நின்றார்கள்.

90 நிமிட வெகு அற்புதமான நிகழ்ச்சிக்குப் பிறகு, வாழ்த்துரை வழங்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் பலத்த வாழ்த்தொலிகளுக்கு மத்தியில் மேடை ஏறினார்.

மிகுந்த உற்சாகமும் பூரிப்பும் பெருமிதமும் நிறைந்த மனிதராக காணப்பட்ட அண்ணன் சீமான் கஎப்படி இசை நம் மொழியின் உயிராக இருக்கிறது என்பதை இலக்கிய சான்றுகளோடு உணர்வுபூர்வமாக உரையாற்றினார். ஓசைக்கும் இசைக்குமான வேறுபாடை அவர் விவரித்த முறை அவரது ஆழ்ந்த பேரறிவை, வாசிப்பை வெளிப்படுத்தியது. கோவில்களில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதன் கோபத்தையும் தன் உரையில் வெளிப்படுத்திய அவர், இப்படிப்பட்ட புலவர்களை உருவாக்கிய ஆசிரியர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்திருப்பார்கள் என வியப்பாக தெரிவித்த போது அவர் அடைந்த அதே வியப்பு நிகழ்ச்சியை கேட்ட பார்த்த அனைவரும் அடைந்தார்கள்.

ஆழமான அதே சமயத்தில் அழகான மொழியோடு இசை நிறைந்த வடிவத்தோடு தன் உரையை ஆற்றி அமர்ந்த அண்ணன் சீமான் வாழ்த்துரையில் ஒரு துளி அளவு கூட சமகால அரசியல் குறித்து பேசவில்லை என்பது மிக மிக குறிப்பிடத்தக்கது.
ஏனெனில் அது தமிழுக்கான மேடை. தமிழ் இசைக்காண மேடை. அதில் அரசியலை கலக்க வேண்டாம் என்கிற அவரது உறுதி தமிழ் நிலத்தில் வேறு எந்த அரசியல் தலைவருக்கும் வாய்த்திராத அற்புத உளவியல்.

அண்ணன் சீமான் வாழ்த்துரைக்குப் பிறகு ஏற்கனவே இசை நிகழ்ச்சியில் பாடப்பட்ட பாடல்களில் சிறந்தவை மட்டும் பார்வையாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மீண்டும் இசைக்கப்பட்ட போது அரங்கம் கொண்டாட்டத்தின் உச்சிக்கே சென்றது.

வாழ்க்கையில் இது போன்ற அனுபவத்தை இதுவரை அனுபவித்ததில்லை என்பதை நிகழ்ச்சி முடிந்த பிறகு பார்வையாளர்களின் பரவச முகங்களே அடையாளங்களாய் திகழ்ந்தன.
..

ஒரு மொழி அதுவும் உலகத்தின் மூத்த தொன்மையான இன்றளவும் பேச்சு வழக்கில் எழுத்து வழக்கில் இருக்கின்ற செவ்வியல் மொழி இத்தனை காலங்கள் கடந்த பிறகும், இத்தனை வரலாற்றுப் பக்கங்கள் நகர்ந்த பிறகும் உயிர்போடு இருந்து நவீன கால இசை திறப்புகளிலும் பொருந்துகிறது என்று சொன்னால், தமிழ் மொழி போல் வேறு எந்த மொழியும் இல்லை என்பதை தமிழர் பெருமிதம் கொள்ளலாம் என்பதற்கு சான்று இந்த இசை நிகழ்ச்சி.

குறிப்பாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இசை குழுவினரின் அளவற்ற உழைப்பின் மூலம் பயிற்சி மூலம் அடைந்த ஒழுங்கு தான் இந்த நிகழ்ச்சி அடைந்திருக்கும் வெற்றியின் மூலதனம். ஒரே நேரத்தில் காணொலி மூலமாகவும் இசையொலி மூலமாகவும் நிகழ்த்தப்பட்ட இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இளைஞர்களும் இளம் பெண்களும் அளவற்ற திறமை கொண்டவர்களாக இருந்ததோடு மட்டுமல்லாமல், 90 நிமிட நிகழ்ச்சியில் ஒரு நொடியை கூட வீணாக்காமல் பார்வையாளர்களுக்கு கொண்டாட்டத்தையும் , தமிழ்மொழி உணர்ச்சியையும் வழங்கி சிறப்பித்தார்கள்.

ஓட்டு அரசியலில் வெகுஜன கட்சியாக செயல்படும் நாம் தமிழர் கட்சி என்கிற அமைப்பு சங்க தமிழோசை என்கிற மொழி மீட்பு இசை நிகழ்ச்சியை நடத்துவதன் மூலமாக வெறும் அரசியல் விடுதலை மட்டுமல்ல, தமிழர்கள் தங்களது பண்பாட்டு தளத்தில் மொழி மீட்பு களத்தில் வெற்றி பெற வேண்டும் என்கிற உணர்ச்சியை உலகமெங்கும் பரந்து வாழக்கூடிய தமிழர்களுக்கு ஏற்படுத்துவதில் வெற்றி பெற்று விட்டது.

நிகழ்ச்சி மேடையிலேயே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் சொன்னது போல இந்த தமிழோசை ஒவ்வொரு ஊரிலும் உலகில் தமிழர்கள் எங்கெங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கங்கெல்லாம் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தினார்.

மெய் சிலிர்க்க நடந்த இந்த வரலாற்று பெரு நிகழ்வு பார்வையாளர்களுக்குள் ஏற்படுத்திய தாக்கம் மிக மிக ஆழமானது.

இதே நிகழ்ச்சி உலகமெங்கும் நடக்கட்டும்.
உலகத் தமிழர் உள்ளத்தில் தமிழ் உணர்ச்சி மலரட்டும்.

“உலகம் எங்கும் கேட்கட்டும் சங்கத்தமிழோசை.”

நன்றி : வேல் வீச்சு இதழுக்கான அட்டைப்பட கட்டுரை.

திசை அறியும் திசைக்காட்டி.

சமகால தமிழக அரசியல் வரலாற்றில் அதிகம் விமர்சிக்கப்படுகிற, விவாதிக்கப்படுகிற ஆளுமையாக அண்ணன் சீமான் உருவாகி இருக்கிற உயரம் அவரே எதிர்பார்க்காத ஒன்று‌.அது திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட அல்லது நோக்கம் கருதி உருவாக்கப்பட்ட நிகழ்வு அல்ல. காலத்தின் கருவியாக தன்னை ஒப்புக் கொடுத்த ஒரு தனி மனிதனின் அசாத்திய மனப்பாங்கு.

தன் அரசியல் வாழ்வின் தொடக்க காலத்தில் இருந்து யாரும் தொட தயங்குகிற ,பிற தலைவர்கள் அதுவரை தொட்டிராத வரலாற்றின் வீதியில் இறுக மூடப்பட்டு துருவேறிக் கிடக்கின்ற பல சர்ச்சைக் கதவுகளை தன் அனல் தமிழால் எட்டி உதைத்து
மூடப்பட்ட கதவுகளை திறக்கும் பேரொசையால் அரசியல் களங்களை நிறைத்தவன் அண்ணன் சீமான்.

எங்கோ தொலைதூரத்தில் இருக்கின்ற தீவின் பிரச்சனை என அனைவரும் பேசிக் கொண்டிருக்கும்போது, இல்லை.. இல்லை.. அது என் மற்றொரு தாய் நிலத்தின் விடுதலைப் போராட்டம் என முழங்கியவன் அவன்தான்.

விடுதலைப்புலிகளை நாங்கள் ஆதரிக்கிறோம் என முழங்கிய தலைவர்கள் மத்தியில் புலிகள் எங்கள் உடன் பிறந்தவர்கள், தமிழர்கள் புலிகளின் புதல்வர்கள் என முழங்கியவன் அவன் தான்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் , அவர் வீரம் செறிந்தவர் என்றெல்லாம் பேசிய தலைவர்களுக்கு மத்தியில் பிரபாகரன் என் அண்ணன், என் உடன் பிறந்தான் என முழங்கி தமிழகத்து வீதிகளில் இன உணர்வு தீப்பற்ற வைத்தவன் அவன் தான்.

அவன் பார்க்காத விமர்சனம் இல்லை. அவன் சந்திக்காத எதிர்ப்பு இல்லை.

எம் இனத்தை அழித்த காங்கிரஸ் கட்சி, திமுகவோடு கூட்டணி கண்டு 63 இடங்களில் ஆர்ப்பரித்து நின்ற போது, இப்போது நிமிர்ந்து நிற்கும் நாம் தமிழர் கட்சி அப்போது இல்லை தான்.

ஆனாலும் தனி ஒருவன் அவன் அசரவில்லை. ஓயாமல் அவன் ஓடி ஓடி ஓங்கி அடித்த அடியில், அவன் போக முடியாத ஐந்து தொகுதிகளை தவிர, 58 தொகுதிகளில் காங்கிரஸ் காணாமல் போனது பழைய வரலாறு.

இயக்கமாக இருந்த போது இன்னும் சில காலம் இருப்பார்கள் சில்லறையாய் சிதறுவார்கள் என்றார்கள். கட்சியாய் மாறிய போது இதுவெல்லாம் சில காலம் தான்.. காணாமல் போய்விடுவார்கள் என்றார்கள். தேர்தலில் நின்ற போது பத்தோடு ஒன்று என்றார்கள்.திமுகவை எதிர்த்த போது இத்தோடு இது ஒன்று என்றார்கள். திராவிடத்தை எதிர்த்த போது பாஜகவின் B டீம் என்றார்கள்.பாஜகவை எதிர்த்த போது இதுவும் இன்னொரு திராவிடக் கட்சி தான் என்றார்கள்.

சாதி மறுப்பு பேசியபோது அதுவெல்லாம் சாத்தியம் இல்லை என்றார்கள். மதம் கடந்து தமிழராய் இணைத்த போது இதுவெல்லாம் ஆகாத வேலை என்றார்கள்.

கவிப்பேரரசு வைரமுத்து சொன்னது போல..

“அப்படி என்றால் அதுவும் தப்பு.. இப்படி என்றால் இதுவும் தப்பு..
கத்தும் நாய்க்கு காரணம் வேண்டாம்.
தன் நிழல் பார்த்து தானே குரைக்கும்.”

????

ஒவ்வொரு முறையும் முடிவெடுக்கும் போது அண்ணன் சீமான் விமர்சிக்கப்படுகிறார். ஆனால் தான் கொண்ட தத்துவத்திற்கு, தான் நிக்கிற லட்சியப் பாதைக்கு அவர் நேர்மையாக நிற்கிறார்.

அவர் அண்ணன் திருமாவளவனோடு எதில் இணைய வேண்டும் எதில் இணையக் கூடாது என்பதில் அண்ணன் சீமான் மிகத் தெளிவாக இருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பாக தனியாக நின்று என்ன புடுங்க போகிறாய் என கேட்ட அண்ணன் திருமாவிற்கு ,எம் அண்ணன் சீமான் சொன்ன பதில் ” எனக்கு என்ன அவர்கள் போதித்தார்களோ அந்த பாதையில் தான், அவர்கள் விலகினாலும் நான் தொடர்ச்சியாக பயணிக்கிறேன். கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் பதக்கம் பெறுவதில்லை. கற்றுக் கொள்ளும் மாணவர்கள் தான் வெற்றி பெறுகிறார்கள் பதக்கம் பெறுகிறார்கள்.”

இந்தப் பக்குவம் கடந்த 12 ஆண்டுகளாக அரசியல் செய்து தன்னிச்சையாக உறுதியாக களத்தில் நிற்கிற அண்ணன் சீமான் இறுதியாக கண்டடைந்த நிலை.

தன் இலட்சியப் பயணத்தை பிறர் சொல்லியும் எச்சரித்தும் கேட்காமல் தொடங்கிய அவருக்கு அது எப்படி நடத்த வேண்டும் என்கிற புரிதல் உண்டு.

எனவே இங்கு போதனைகள் தேவையில்லை.

எத்துயர் வந்தாலும், எந்நிலை தாழ்ந்தாலும் அண்ணன் கரம் பற்றி தடம் மாறாமல் பயணிக்கும் பேராற்றல் சாதனைதான் வேண்டும்.

அந்த நம்பிக்கை தான் இந்த 12 வருடங்களில் தடம் மாறாமல், தடுமாறாமல் பயணித்து அவர் சம்பாதித்தது.

அழைத்துச் செல்லும் அண்ணன் சீமான் அறிவார் அனைத்தையும்.

அவர் உறுதியாய் வெல்வார் தமிழர் மனத்தையும்.

எனவே .
ஏன் அப்படி செய்கிறார், ஏன் இப்படி செய்கிறார் என்றெல்லாம் வினாக்கள் எழுப்பி அவர் பாதையில் நாம் திசைக் காட்டிகள் வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஏனெனில் அவர் பயணத்தில் அவரே பாதை. அவரே திசைக்காட்டி.

அமைதி கொள்க அனைவரும்.

பொன்னியின் செல்வன் பார்ப்போர் கவனத்திற்கு…

????

அமரர் கல்கி எழுதி ஜெயமோகன் திரைக்கதை வசனத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கிற பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ஆர்வமாக எதிர்பார்த்து “புல்லரிப்போடு” இருக்கின்ற அனைவருக்கும்…

1. முதலில் பொன்னியின் செல்வன் என்பது கற்பனை கதை. வரலாற்றில் இருந்து சில சம்பவங்களை வைத்துக் கொண்டு எழுதப்பட்ட புனைவு. இந்தக் கதையையே வரலாறு நினைத்துக் கொள்ள வேண்டாம் . வரலாறு இந்த புனைவுகளை எல்லாம் தாண்டி பிரம்மாண்டமானது.

2. அமரர் கல்கி எழுதியபோதே வரலாற்று கல்வெட்டுகளில் காணப்படும் ஆதித்த கரிகாலன் கொலை பற்றி உள்நோக்கத்தோடு எழுதியுள்ளார் என்பதான விமர்சனங்கள் அந்தக் காலத்திலேயே முன்வைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ஆதித்த கரிகாலன் படுகொலை என்பது பார்ப்பனர்களால் நிகழ்த்தப்பட்டது என்றும் அதை மட்டுப்படுத்தவே நந்தினி என்ற கற்பனைக் கதாபாத்திரத்தை முன்வைத்து “நந்தினி- ஆதித்த கரிகாலன் காதல்” என்பதான கற்பனைக் கதை ஓட்டத்தை அமரர் கல்கி எழுதினார் என்றும் அது பெரு மாவீரனான ஆதித்த கரிகாலன் புகழுக்கு எதிரான செயல் என்பதான விமர்சனங்கள் அப்போதே உண்டு.எனவே புல்லரிப்பாளர்கள் ‘விக்ரம் – ஐஸ்வர்யா ராய்’ ஜோடியை பார்த்துவிட்டு இதுவே தமிழரின் வரலாறு என்று நினைத்து விடாதீர்கள்.

3. இது ஒரு திரைப்படம் என்பதோடு மட்டுமே நிறுத்திக் கொள்ள வேண்டும். எப்போதுமே வரலாற்றை தழுவி மணிரத்னம் செய்கிற ஆக்கங்களில் அவருக்கென்றே உரித்தான மேல்தட்டு வலதுசாரி ‘அரசியல்’ இருக்கும் என்கிற கவனத்தோடு இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் ஈழத்தின் வீர வரலாற்றை ஆயுத வியாபாரிகளின் மோதல் என இழிவுபடுத்திய மணிரத்னம் , எடுத்துள்ள ‘பொன்னியின் செல்வனில்’ அல்ல..அல்ல PS-1 ல் ( ப்ளே ஸ்டேஷனா என்றெல்லாம் கேட்டு விடாதீர்கள்.) நல்லவற்றை எடுத்துக்கொண்டு அல்லவற்றை விமர்சிக்கிற மனப்பாங்கு பார்வையாளர்களுக்கு வேண்டும்.

4. எல்லாவற்றிற்கும் மேலாக அதீதமாக ஒலிக்கும் இந்த திரைப்பட விளம்பரத்தின் மூலமாக திடீரென கவனம் பெற்று இருக்கிற ‘ராஜராஜ சோழன்’ இதோ கும்பகோணத்தில் அருகே இருக்கிற உடையாளூரில் எவ்வாறு பராமரிப்பின்றி படுத்து கிடக்கிறார் என்கின்ற காட்சியை பொன்னியின் செல்வன் படம் பார்ப்பவர்கள் அனைவரும் ஒருமுறை அவசியம் நேரில் வந்து பார்த்துவிட்டு சென்றால், இக்கதை, திரைப்படம், விளம்பரம், வணிகம் இவைகளுக்கு ஊடாக இருக்கிற ‘அரசியல்’ புரியும்.

5. அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதை அவரே இக்கதையின் முன்னரையில் சொன்னது போல சோழ வரலாற்றை ஆய்வு செய்த சதாசிவ பண்டாரத்தார், கே ஏ நீலகண்ட சாஸ்திரி போன்ற பெரும் அறிஞர்களின் உழைப்பிலிருந்து எழுத்தாளப்பட்ட சில வரலாற்று செய்திகளை கொண்டு எழுதப்பட்ட கற்பனை கதை. இதில் ஆழ்வார்கடியான் நம்பி பூங்குழலி நந்தினி குடந்தை ஜோதிடர் என பல கற்பனை கதாபாத்திரங்கள் இடம்பெற்றிருக்கிறார்கள்.

சாண்டல்யன் எழுதிய கடல்புறா போன்றது தான் பொன்னியின் செல்வனும். இது வரலாறு அல்ல.

இந்த புரிதலோடு திரைப்படத்தை அணுக வேண்டும்.

6. வரலாற்று நிகழ்வுகளை திரைப்படமாக எடுக்கும் போது இருக்க வேண்டிய கவனம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இருக்கிறதா என்பதை எல்லாம் திரைப்படம் சொல்லட்டும். ஆனால் வரலாற்றில் பொன்னியின் செல்வனில் இடம்பெறும் சம்பவங்கள் நடந்த போது அருள்மொழி வருமனுக்கு 16 17 வயது இருக்கலாம். ( ஜெயம் ரவியை பார்த்தால் அப்படி தெரியவில்லை என்றெல்லாம் நினைக்க வேண்டாம். கற்பனை என்பதோடு நிறுத்தினால் இந்த பிரச்சனை இல்லை.) ஆதித்த கரிகாலனுக்கு 20 21 இருக்கலாம் .( 20 21 வயது இளைஞனுக்கு விக்ரம் போல தாடி மீசை முளைக்குமா என்றெல்லாம் யோசிக்க வேண்டாம் ‌. இது கற்பனை. அவ்வளவுதான்.)

எனவே இதை சோழர் வரலாறாக திரைப்படம் பார்க்க வரும் குழந்தைகள் மனதில் பதிய வைத்து விடாதீர்கள். அவர்களுக்கு இந்த திரைப்படம் சோழர் வரலாறு பற்றிய ஒரு தொடக்கமாக இருக்கட்டும் என்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். வரலாற்றை உண்மையான ஆவணங்கள் மூலம் நாம் படித்தறிந்து நம் பிள்ளைகளுக்கு கடத்துவோம். பிழையான வரலாறுகளால் தான் இன்னும் இந்த தமிழினம் அடிமையாக கிடக்கிறது என்கிற புரிதல் முதலில் நமக்கு வேண்டும். திரைப்படங்களை வரலாறாக புரிந்து கொண்ட பேதமையால் தான் இங்கே ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ ஓடியது. மருது பாண்டியர்கள் வரலாற்றை அசலாக பேசிய ” “சிவகங்கைச் சீமை” தோற்றது.

5. மற்றபடி திரைப்படம் என்கிற அறிவியல், அது தருகிற வசீகரம், தொழில்நுட்பத்தால் விளைகிற அதிசயங்கள், திரையில் விரியும் நடிகர்களின் திறமை ஆகியவற்றை ‘ஒரு திரைப்படப் பார்வையாளன்’ என்கிற முறையில் கொண்டாடி மகிழ்வோம்.‌

ஆனால் இதுவே வரலாறு என நம்பி தொலைக்கும் பேதைமை தொலைப்போம்.

கவனம் கொள் தமிழினமே..

நிலாப் பொழுதுகளின் நிழற்படங்கள்.

“நள்ளிரவு 12 மணிக்கு எங்கிருந்தாலும் வா. நிலா பொழுதுகளில் நாம் இணைந்திருக்கும் பழைய புகைப்படங்களை ஒரு இளையராஜா பாடல் பின்னணியில் ஒலிக்க சேர்ந்து பார்ப்போம்..” என்று அழைத்தாள் அவள்.

“வேண்டாம்.

புகைப்படங்கள் ஆழ்கடல் போன்றவை.

நினைவின் சுழல் கொண்டவை.

கால இயந்திரம் போல நிகழ்ந்த அந்த கணத்திற்கே நம்மை இழுத்துச் சென்று நிகழ்காலத்து தகவமைப்புகளுக்கு குழப்பம் ஏற்படுத்துபவை.

மீளவே முடியாத

ஆழத்தின் இருள் கொண்டவை. எப்போதோ அறுக்கப்பட்ட இறுக்கிக் கட்டி இருந்த கயிற்றின் தடம் போன்றவை.

வேண்டாம்..”

என அச்சத்துடன் மறுத்தேன்.

“இல்லை இல்லை..

தீரா மோகத்தின் வெப்பம் வீசும் விழிமயக்க புனைவு கதைகள்

அடங்கிய வசீகர புத்தகங்கள் நிறைய அடுக்கப்பட்டிருக்கும் புத்தக அலமாரிகளுக்கு பின்னால்

கனவின் கதவு

ஒன்று இருப்பது போல ..

ஒவ்வொரு புகைப்படத்திற்குப் பின்னாலும் ஒரு கனவின் மாயக்கதவு ஒன்று மறைந்து இருக்கிறது.

அதற்குள் சென்றால் ஆழ்மனதில் உறுத்தும் நம் ஆறாக் காயங்களை, சுகந்த நினைவின்

காற்று ஊதி ஊதியே குணப்படுத்தும் காதலின் தேவதை ஒருவள் காத்துக் கொண்டிருக்கிறாள்.

அவளைப் பார்த்துவிட்டு வரலாம் வா..” என்று அழைத்தாள்.

எனக்கு முன்னால் நட்சத்திரங்களை விண்ணை நோக்கி வீசிக்கொண்டிருக்கும் ஒன்றோடு ஒன்று பின்னிய நிறைவேறா கனவுகளின் கனலேறிய விசித்திர கிளைகள் கொண்ட ஒரு கொன்றை மரம் ஒன்று அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.

பார்க்கவே அச்சம் ‌. மேலும் அசைந்து கொண்டிருக்கும் கிளைகள் என்னை இழுத்து அந்தக் கனல் மரத்திற்குள் வைத்து கழுவேற்றிக் கொல்லுமோ என்கிற தீவிர பய உணர்ச்சி.

நடுங்கியவாறே என்னை நோக்கி மிதந்து வந்த அந்த அலைபேசி இணைப்பை துண்டித்தேன்..

….

விழிகளை மூடி அமர்ந்திருந்த அந்த கணத்தில் தான்.. நொடி பிசகிய திடுக்கிடலில் விழித்து பார்த்த போது..

நானாக உருவாக்கிக் கொண்ட காரணங்கள் துருவேறி இறுகிக் கிடக்கும் அந்தக் காலப் பூட்டு

அதுவாகத் திறந்து, என் முன்

என் வாழ்வில் இனி எப்போதும்

வாழ முடியாத, வசந்த காலத்தின் வண்ணப் புகைப்படங்கள்

கண்ணீர் கோர்த்திருக்கும் என் விழிகளுக்கு முன்னால் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தன.

❤️

எப்போதும் என் அம்மா.

❤️

இன்று கும்பகோணத்தில் மின் கட்டண உயர்வை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் என் அம்மா கலந்து கொண்டதை பற்றி என் தம்பி மருத்துவர் மு.முகம்மது சர்வத்கான் நெகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்தான்.

இந்த காட்சி எனக்கு புதிதல்ல. சிறுவயதில் இருந்து எனக்கு தோளுக்கு தோளாக மட்டுமல்ல , உயிராக இருப்பது எனது அம்மா தான்.

நோயால் பாதிக்கப்பட்ட என் பால்ய காலத்தில் என் அம்மா மட்டும்தான் எனது பால்யகால தோழி. காலில் கட்டு போட்டு அமர்ந்திருக்கும் என்னோடு என் அம்மா தான் கேரம்போர்டு விளையாடுவாள். டிரேடு என்று சொல்லக்கூடிய ஒரு விளையாட்டு. பரமபதம் சதுரங்கம் அமர்ந்து விளையாடக்கூடிய எல்லா விளையாட்டுகளிலும் அம்மா தான் அமர்ந்திருப்பாள். நான் கற்பனை காண்பது எதையாவது படித்து பரவசம் அடைவது என எனது எல்லா உணர்ச்சிகளையும் அம்மாவிடம் தான் கொட்டுவேன்.

அம்மாவிற்கு 16 வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது. 17 வது வயதில் நான் பிறந்து விட்டேன். 17 வயதில் நோயுற்ற ஒரு குழந்தையை தூக்கிக் கொண்டு வீதி வீதியாக மருத்துவமனைகளுக்கு அலைந்த இயல்பு வாழ்க்கையை மீறிய அவலமும், அலைகழிப்பும் கொண்ட வாழ்க்கையை அடைந்த ஒரு தாய் எனது அம்மா. இப்போதுள்ள கருத்தடை போன்ற அறிவியல் வசதிகள் பெரிய அளவில் இல்லாத காலகட்டத்தில் நோயுற்ற ஒரு குழந்தை பிறந்து விட்டானே என்ற ஒரே காரணத்திற்காக என் அம்மா அடுத்த குழந்தையை கூட பெற்றுக் கொள்ளவில்லை.

ஒரு மனிதனாக அது போன்ற தருணங்களை என்னால் இந்த வயதில் புரிந்து கொண்டு கண்கலங்க முடிகிறது.

தனிமை தரும் வலி என்னை வதைத்து விடக்கூடாது என்பதற்காக எப்போதும்‌‌ நான் சாய்வதற்கான தோள்களை அம்மா தயாராகத்தான் வைத்திருக்கிறாள். இன்றளவும் கூட அப்படித்தான்.

இன்றும் நான் காலையில் எழுந்து தேடும் முதல் முகம் என் அம்மா உடையது தான். என்னை மட்டுமல்ல என் பிள்ளைகளையும் அவள் தான் வளர்த்து ஆளாக்குகிறாள்‌ . என் மகன்களுக்கு அவர்களது தாய் தந்தையரை விட தாத்தா ஆத்தா தான் முதன்மையானவர்கள் என்பதில் எனக்கு எப்போதுமே பெருமிதம் தான்.

நான் படுத்து “பறக்கும் குதிரை” கதை கேட்ட அதே மடியில் தான் என் மகன்களும் படுத்து அதே “பறக்கும் குதிரை” கதை கேட்டார்கள்.

இன்றளவும் எனது சிறு அசைவுக்கு கூட அம்மாவிடம் ஏற்படும் மாற்றம் மிக வியப்பானது. அதை பதைபதைப்பு என்று சொல்வதா, தன் தயாராவதற்கான ஆயத்தம் என்று சொல்வதா என்றெல்லாம் எனக்கே குழப்பங்கள் உண்டு.

சமீபத்தில் தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நான் சற்றே தடுமாறி கீழே விழுந்து விட்டேன். இது போன்ற நூற்றுக்கணக்கான சூழ்நிலைகளை அம்மா தன் வாழ்வில் சந்தித்திருந்தாலும், இந்த முறை ஏனோ கொஞ்சம் தளர்ந்து விட்டாள். கொஞ்சம் காலில் அடிபட்டு இருந்தாலும் அம்மாவிற்காக அடுத்த நாளே நான் எழுந்து நடக்கத் தொடங்கி விட்டாலும் இந்த முறை அம்மாவை சமாதானப்படுத்துவது கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது.

கீழே விழுந்து கொஞ்சம் அடிபட்டு இருந்த என்னை பார்க்க

பெருந்தமிழர் கிருஷ்ணகுமாா் வந்திருந்த போது அம்மா உடைந்து அழ, அம்மாவிற்கு எந்தவித சமாதானமும் சொல்லாமல் ஐயா அவர்கள் அமைதியாக தலையை குனிந்தவாறு அமர்ந்திருந்தார்கள்.

பக்கத்தில் அமர்ந்திருந்த வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளர் சதீஷ் அம்மாவை சமாதானப்படுத்துங்கள் ஐயா எனக் கேட்டுக் கொண்ட பிறகும் கூட ஐயா அவர்கள் எதுவும் பேசாமல் தலையை குனிந்தவாறு அமைதியாக அமர்ந்திருந்தார்கள்.

அந்த நிலை எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அம்மாவிற்கு ஏதோ ஐயா ஆறுதல் சொல்வார்கள், அம்மா சமாதானம் அடைவாள் என நினைத்த எனக்கு ஐயாவின் அமைதி ஆச்சரியமாக இருந்தது.

கொஞ்ச நேரம் கழித்து கலங்கிய கண்களோடு ஐயா நிமிர்ந்து பார்த்தார். ஏன் ஐயா எதுவும் சொல்ல மறுக்கிறீர்கள் எனக் கேட்டதற்கு… “அந்தத் தாய்மை கொண்ட வலிக்கு ஆறுதல் கூற என்னிடத்தில் மொழி இல்லை, அப்படி மீறி கூறினாலும் அந்த மொழி பற்றாக்குறையாக தான் இருக்கும், எனவே அதுவே அழுது அதுவே ஓயட்டும்..” எனச் சொல்லிவிட்டு கண்களை துடைத்தவாறே சென்றார். தமிழ் மொழி மட்டுமல்ல உணர்வின் மொழியும் அறிந்த பெருமகன் அவர்.

அந்த நொடியில் நான் முடிவெடுத்துக் கொண்டேன். அம்மாவிற்காவது நான் நிறைய வேலைகளை என் சக்திக்கு அப்பாற்பட்ட பணிகளை எடுத்துக்கொண்டு செய்து என்னை இயல்பானவனாக காட்டிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்து சமீபத்தில் எங்கள் இல்லத்தில் ஒரு திருமணமும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

இன்றும் அப்படித்தான். நான் போராட்டத்திற்கு கிளம்பினேன். போராட்டத்திற்கு நிறைய ஆட்களை அழைப்பதற்காக பேசிக் கொண்டே இருந்தேன். அம்மா உடனே எதுவுமே சொல்லாமல் நானும் அப்பாவும் வருகிறோம் என்று என் காரில் ஏறிக் கொண்டார்கள்.

அவர்களைப் பொறுத்தவரையில் அவர்களது மகன் எதன் பொருட்டும் சங்கடப்பட்டு விடக்கூடாது. குறிப்பாக எனது நாம் தமிழர் முயற்சிகளில் அனைத்திலும் என் தாய் தந்தையரின் பங்கு உண்டு. அவர்களைப் பொறுத்த வரையில் அண்ணன் சீமான் இன்னொரு மகன்.

மூத்த மகன் எடுக்கின்ற முயற்சிகளுக்கு இளைய மகன் நிற்க வேண்டும் என்கிற தீவிரம் அவர்களுக்கு எப்போதுமே உண்டு.

போராட்டத்தில் நின்று நான் பேசி முடிக்கும் வரை அம்மா என் பக்கத்திலேயே நின்று கொண்டிருந்த தன் மிக முக்கியமான காரணம் தஞ்சை சாலையில் தடுமாறி விழுந்துவிட்ட தன் மகன் கும்பகோணத்தில் விழாமல் நின்று பேசி விடுவான் என்ற நம்பிக்கை.

அம்மா நம்பிக்கை என்று பலிக்காமல் இருந்திருக்கிறது..??

நானும் பேசிவிட்டு இருக்கையில் வந்து அமர்ந்தேன்.

அம்மா நான் நன்றாக பேசினேனா என்று என் கேள்விக்கு..

கலங்கிய விழிகளோடு என் அம்மா அளித்த பதில் ..

“நல்லா ஆயிட்ட.”

❤️

அம்மாவைப் போன்ற ஒரு தேவதை என் பக்கத்தில் இருக்கும் போது எனக்கு என்னதான் நேர்ந்து விடும்..??

Page 5 of 53

Powered by WordPress & Theme by Anders Norén