பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Month: ஜூலை 2023

இவ்வாறாகவே நடந்தது அந்தக் கொலை.

????

உன்னை கொல்ல
நான்
ஆதி கால ஆயுதம்
ஒன்றை பரணில்
தேடிக்
கொண்டிருக்கும்
போது தான்,
அந்த துருப்பிடித்த கத்தியை
தேடி எடுத்தேன்.

அதன் முனை
அவ்வளவு கூர்மையாக இல்லை.
ஆனால் அதன் வளைவில் எப்போதோ குத்தப்பட்ட
குருதியின் கறை
அந்தக் கத்தியை
நான் தேர்ந்தெடுக்க போதுமான காரணத்தை தந்தது.

அதை உன்
தோல்களை கவ்வி நிற்கும்
விலா எலும்பில் குத்தலாமா,
கதகதப்பான
நடுநெஞ்சில் பாய்ச்சலாமா,
தசை ததும்பி நிற்கும் அடிவயிற்றில் சொருகலாமா, என்றெல்லாம் நினைக்கும் போது ..
மிடறு விழுங்குகிற உன் தொண்டைக் குழி எனக்கு நினைவுக்கு வந்தது.

அதன் மென்மை
இந்தக் கத்திக்கு
உகந்தது தான்‌.

ஆனால்..
எங்கே குத்தினாலும் சரி
நான் ஒன்றில் மட்டும் உறுதியாக இருக்கிறேன்.

உன் குருதித் துளி என் மீது பட்டுவிடக் கூடாது.

உன்னை விட
உன் குருதியை
நான் அதிகம் வெறுக்கிறேன்.
அதோடு அந்த நொடியில் உறையும் உன் விழிகளையும்.

அந்த இரண்டும்
வாந்தி எடுக்க முடியாத
ஒரு குடிகாரனின் இரவு போன்றவை.

ரத்தம் கொப்பளிக்கும்
உன் சாவை
எப்போதும் கொந்தளித்துக் கொண்டே இருக்கும்
என் மனக்கடலில்
ஒரு படகாக மாற்றி
செலுத்தி விட வேண்டும்
என எண்ணிய அந்த பொழுதில்..
ஏதோ
திருப்தியற்றவனாய்
சாவின் துருவேறிய
அந்தப் பழங்கத்தியை
என் ஜன்னல் வழியே
தூக்கி எறிந்தேன்.

அந்த நொடியில்
நிராயுதபாணியாக
நின்று இருந்த‌
என்னிடம்
என்ன ஆயுதம் இருக்கிறது
என யோசிக்கும் போது தான்…

அதுவரை
கண்ணியம் காத்தோ..
பழகிய காலம் கருதியோ..
உள்ளுக்குள் எப்போதும் சுரக்கும் பேரன்பின்
வாடை உறுத்தியோ…
உன்னைப் பற்றி
பேச கட்டாயப்படுத்தப்பட்ட
எல்லா தருணங்களிலும் மௌனித்த நான்,

முதல்முறையாக
உன்னை பற்றி பேசத் தொடங்கினேன்.

இனி
இயல்பாகவே
நடந்து விடும்‌.
எனக்கான ஒரு கொலையும்,
உனக்கான ஒரு சாவும்.

????

புத்தகப் பரிந்துரை- 2023

அன்பு உறவுகளுக்கு வணக்கம்.

நேற்றைய முன் தினம் நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பாசறை நடத்திய சென்னை புத்தகக் கண்காட்சி 2023 பற்றிய ட்விட்டர் ஸ்பேஸ் அமர்வில் இளம் தமிழ் தேசியர் மற்றும் வாசகர்கள் தவறவிட கூடாத மிக முக்கியமான புத்தகங்கள் பற்றிய பட்டியல் ஒன்றினை கேட்டிருந்தார்கள்.

அதன்படி இந்த பட்டியலை நானே உருவாக்கி உள்ளேன். இது அடிப்படை வாசகர்களுக்கு பரந்துபட்ட இலக்கிய வகைமைகளுக்கு அறிமுகங்களாக இருக்கக்கூடும்.

வழக்கமாக பொன்னியின் செல்வன் பாலகுமாரன் புத்தகம் சுஜாதா எழுதியவை என்றெல்லாம் இல்லாமல் இன உணர்வு மற்றும் நவீன இலக்கியங்கள் சார்ந்து இந்த பட்டியல் ஒன்றினை நான் உருவாக்கி இருக்கிறேன். சிறார் இலக்கியங்கள் குறித்து தனியே ஒரு பட்டியல் உருவாக்க‌ திட்டமிட்டு உள்ளேன்.

இது முழுக்க முழுக்க என் ரசனை சார்ந்தது. நான் வாசித்தபோது எழுந்த அனுபவ உணர்ச்சியினை சார்ந்து தயாரிக்கப்பட்டது.

இது தரவரிசை பட்டியல் அல்ல. எனக்குப் பிடித்த சில நூல்கள் இவை. இன்னும் பட்டியல் இடப்படாத பல நூறு நூல்கள் இருக்கின்றன என்றாலும் நான் வாசித்த வகையில் மிகப்பெரிய வாசிப்பு அனுபவத்தை எனக்கு அளித்த இந்த நூல் வரிசையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

இந்தப் புத்தகங்கள் அனைத்தையும் வாங்குங்கள் என்றெல்லாம் நினைத்து செய்யப்பட்ட பரிந்துரை அல்ல.

தமிழ் தேசிய தத்துவத்திற்கு மாற்றாக எழுதி வரும் சில எழுத்தாளர்களின் நூல்களும் இதில் இடம் பெற்று இருக்கின்றன. ஆனாலும் அவையும் படிக்க வேண்டியவை எனக் கருதி இந்த பட்டியலில் நான் இணைத்து உள்ளேன். எனவே நூல்களில் உள்ள கருத்துக்களை எல்லாம் நான் சார்ந்திருக்கும் அரசியல் தத்துவத்தின் மீது பொருத்தி குழம்பிக் கொள்ள தேவையில்லை.

புத்தக கண்காட்சிக்கு நீங்கள் செல்லும்போது இந்த புத்தகங்கள் உங்கள் கண்களில் பட்டால் ஒரு நிமிடம் எடுத்துப் பாருங்கள். பிடித்திருந்தால் வாங்கிக் கொள்ளுங்கள்.

இந்தப் பட்டியல் தரவரிசை பட்டியலும் அல்ல என்பதோடு இந்தப் பட்டியல் இன்னும் முடிவடையவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

புத்தகம் தேடி செல்வோர்க்கு இந்த பட்டியல் சிறு உதவி செய்தால் பெரும் மகிழ்ச்சி அடைவேன்.

அவசியம் களம் மற்றும் தமிழம் பதிப்பகம் அரங்குகளுக்கு செல்ல தவறாதீர்கள்.

நன்றி.

மணி செந்தில்.

????

  1. தமிழர் மேல் நிகழ்ந்த பண்பாட்டு படை எடுப்புகள் க.ப. அறவாணன்
  2. தமிழன் ஏன் அடிமையானான் க.ப அறவாணன்
  3. சுற்றுச்சூழலியல் உலகம் தழுவிய வரலாறு ராமச்சந்திர குகா எதிர் வெளியீடு
  4. தேசியமும் மார்க்சியமும் தணிகைச் செல்வன்
  5. தமிழ்நாடு தமிழருக்கே
    வழக்கறிஞர் சக்திவேல்
  6. ம.பொ.சியின் தமிழன் குரல்
  7. தொ பரமசிவன் முழு தொகுப்பு காலச்சுவடு வெளியீடு
  8. ஆசான் ம செந்தமிழன் அவர்களின் நூல்கள் செம்மை வெளியீடு
  9. தமிழகத்தில் பிற மொழியினர் ம.பொ.சி
  10. ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்
    தமிழில் இரா முருகவேள்
  11. கம்யூனிசம்- நேற்று இன்று நாளை_ இரா. ஜவகர் நக்கீரன் வெளியீடு
  12. தமிழகத்தில் சமூக சீர்திருத்தம்- அருணன்
  13. நான் நம்மாழ்வார் பேசுகிறேன்- விகடன் வெளியீடு
  14. சுதேசி இந்தியா சுரண்டப்பட்ட வரலாறு- விகடன் வெளியீடு
  15. சாதியை அழித்து ஒழித்தல்- அண்ணல் அம்பேத்கர் – அருந்ததி ராய் முன்னுரையுடன் காலச்சுவடு வெளியீடு
  16. உலக சினிமா- மூன்று தொகுப்புகள் செழியன்
  17. மாவீரர் உரைகள் நேர்காணல்கள்
  18. இவன் ஒரு வரலாறு தொகுப்பாசிரியர் பூபதி
  19. மண்டோ படைப்புகள்
  20. புதுமைப்பித்தன் சிறுகதைகள்
  21. எனது இந்தியா- எஸ் ராமகிருஷ்ணன்
  22. அறம்- ஜெயமோகன்
  23. இந்தியாவில் தேசிய இனங்களும் தமிழ் தேசியமும் கு.ச. ஆனந்தன்
  24. நள்ளிரவில் சுதந்திரம்
  25. வையத் தலைமை கொள் -இறையன்பு
  26. போர் தொழில் பழகு -இறையன்பு
  27. வெள்ளை யானை- ஜெயமோகன்
  28. 1801 -ராஜேந்திரன் ஐஏஎஸ்
  29. காலா பாணி -ராஜேந்திரன் ஐஏஎஸ்
  30. உலக இலக்கியப் பேருரைகள்- எஸ் ராமகிருஷ்ணன்
  31. வால்காவிலிருந்து கங்கை வரை
  32. பட்டாம்பூச்சி‌- நர்மதா பதிப்பக வெளியீடு
  33. மோகமுள்- தி ஜானகிராமன்
  34. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் -ஜெயகாந்தன்
  35. ஜெயகாந்தன் சிறுகதைகள்
  36. பாரதியார் கவிதைகள்
  37. பாரதிதாசன் கவிதைகள்
  38. உலகின் மிக நீண்ட கழிவறை அகர முதல்வன்
  39. இந்திய அரசியலமைப்பும் கூட்டாட்சியும்- ஆலடி அருணா
  40. சுளுந்தீ- முத்துநாகு
  41. மாபெரும் தாய் -அகரமுதல்வன.
  42. ஒரு சிறு இசை- வண்ணதாசன்
  43. வைரமுத்து கவிதைகள்
  44. அப்துல் ரகுமான் கவிதைகள்
  45. திராவிடம் தமிழின் மறுமலர்ச்சியை வளர்த்ததா மடை மாற்றியதா- பெ மணியரசன்
  46. தேசியமும் திராவிடமும்- மாசோ விக்டர்
  47. ஆழி சூழ் உலகு- ஜோ டி குரூஸ்
  48. பூஉலகின் நண்பர்கள் சிறியதே அழகு புத்தக வரிசை
  49. பார்த்தீனியம்- தமிழ் நதி
  50. ரசவாதி

50.புயலிலே ஒரு தோணி/ கடலுக்கு அப்பால்- ப.
சிங்காரம்

  1. பாப்லோ நெருடா கவிதைகள்- தமிழில் சுகுமாரன்
  2. பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும்
    -புதுவை ரத்தினதுரை தொகுப்பு
  3. தமிழின படுகொலைகள்
    களம் வெளியீடு
  4. தஞ்சை பிரகாஷ் சிறுகதைகள்
  5. வண்ண நிலவன் சிறுகதைகள்
  6. ஜாப்னா பேக்கரி -வாசு முருகவேல்
  7. நடுகல்- தீபச்செல்வன்
  8. இரண்டாம் ஆட்டம்/கொமாரா – லட்சுமி சரவணகுமார்
  9. சைவ சமயம் ஒரு புதிய பார்வை- சிகரம் செந்தில்நாதன்
  10. இந்து மதம் எங்கே போகிறது இரண்டு பாகங்கள்- நக்கீரன் வெளியீடு
  11. காந்தியைக் கொன்றவர்கள் -எதிர் வெளியீடு
  12. குற்றப்பரம்பரை -வேல ராமமூர்த்தி
  13. கள்ளிக்காட்டு இதிகாசம்/ கருவாச்சி காவியம்/ மூன்றாம் உலகப் போர்/ வைரமுத்து
  14. குஜராத் மதவெறி படுகொலைகள்- சூத்திரதாரிகளும், பங்காளிகளும் -களம் வெளியீடு
  15. அண்ணல் அம்பேத்கர் வரலாறு வசந்த் மூன் நேஷனல் புக் ட்ரஸ்ட் வெளியீடு/ பாபா சாகேப் அருகில் இருந்து- மைத்திரி
  16. சயாம் பர்மா மரண ரயில் பாதை
  17. ஆழமான கேள்விகளும் அறிவார்ந்த பதில்களும் ஸ்டீபன் ஹாக்கிங்
  18. தூக்கிலிடுபவனின் குறிப்புகள் சசிவாரியர் எதிர் வெளியீடு
  19. விடுதலைக்கு விலங்கு ராபர்ட் பயஸ் களம் வெளியீடு
  20. சிறை கொட்டடியில் இருந்து ஒரு மடல் பேரறிவாளன்
  21. தமிழ் தேசியத் தலைவர் தமிழரசனின் வாழ்வும் அறமும்
  22. நிலைத்த பொருளாதாரம்- ஜே சி குமரப்பா
  23. தமிழர் எழுச்சியின் வடிவம் -பழ நெடுமாறன்
  24. கால்கள்- ஆர் அபிலாஷ் உயிர்மை வெளியீடு
  25. இருபதாம் நூற்றாண்டு சிறுகதைகள் 100 -பதிப்பு முனைவர்.வீ. அரசு
  26. புலி நகக்கொன்றை- பி ஏ கிருஷ்ணன்
  27. கோபல்ல கிராமம் -கி ராஜநாராயணன்
  28. ஒரு புளிய மரத்தின் கதை- சுந்தர ராமசாமி
  29. அ முத்துலிங்கம் சிறுகதைகள்
  30. இருபதாம் நூற்றாண்டு இந்திய வரலாறு/ தகர்ந்து போன தன்னாட்சிக் கனவுகளும் தேசிய இனங்களின் தன்னுரிமை பயணமும் முனைவர் த ஜெயராமன்.
  31. ஈரோட்டுப் பாதை சரியா- ப ஜீவானந்தம்
  32. சாதியும் தமிழ் தேசியமும்- பெ மணியரசன்
  33. வ உ சிதம்பரனார்/ மா ரா அரசு/ சாகித்திய அகாதமி வெளியீடு
  34. அருணகிரி நாதர் முதல் வள்ளலார் வரை சிகரம் செந்தில்நாதன்.
  35. ஆரியக்கூத்து- அ.மார்க்ஸ்
  36. நவீன தமிழ் இலக்கிய அறிமுகம்- ஜெயமோகன்
  37. இடக்கை, யாமம், துயில் எஸ் ராமகிருஷ்ணன்,
  38. நிலம் பூத்து மலர்ந்த நாள் -மனோஜ் குரூர்
  39. செம்புலம் -இரா முருகவேள்
  40. மாநில சுயாட்சி- முரசொலி மாறன்
  41. முத்தமிழ் காவலர் கி ஆ பெ விசுவநாதம் அவர்களின் தமிழ் பணி / முனைவர் கோ வீரமணி
  42. சிதம்பர நினைவுகள் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு தமிழில் கே வி சைலஜா
  43. ஈழப் படுகொலையின் சுவடுகள் நிலவன்
  44. ஓநாய் குலச் சின்னம்
  45. மனித குலமும், தமிழ்த் தேசியமும் பல நெடுமாறன்
  46. சூழலியல்- கி வெங்கட்ராமன்
  47. பெருந்தலைவர் காமராஜர் விகடன் வெளியீடு
  48. அஜயன் பாலா எழுதிய நாயகன் வரிசை நூல்கள் விகடன் வெளியீடு
  49. நெடுங்குருதி- எஸ் ராமகிருஷ்ணன்.

தொகுப்பு: மணி செந்தில்

சி.ஆர்.7 -தன்னிகரற்ற வீரர்.

கால்பந்து ஆட்டங்கள் பார்க்கத் தொடங்கிய காலம் தொட்டு என்னுடைய அணி அர்ஜென்டினா. முதலில் மாரடோனா. தற்காலங்களில் என்னுடைய கதாநாயகன் மெஸ்ஸி. ஆனாலும் போர்ச்சுகல் நாட்டின் ரொனால்டோ ஆகச்சிறந்த கால்பந்து வீரனாக உருவாகி வந்த காலகட்டங்களில் ஒரு மெஸ்ஸியின் ரசிகனாக ரொனால்டோவை வெறுக்க முடியாதது ஒன்றுதான் ரொனால்டோவின் ஆகப்பெரும் வசீகரம். ஏனெனில் அந்தத் திறமை வெறுக்க முடியாத, பொறாமை கொள்ள முடியாத உயரம் கொண்டது.

ஒரு பேட்டியில் மெஸ்ஸி உலகின் தலைசிறந்த வீரர்களை பற்றி கூறும் போது ரொனால்டோவின் பெயரை கூறாதது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்புவார்கள். அப்போது மெஸ்ஸி சிரித்துக்கொண்டே “நான்தான் அவர். என்னில் இருந்து அவரைப் பிரிக்க முடியாது.. எனவே தான் அவரை நான் தனியே சொல்லவில்லை..” என்று சொல்வார்.

அதுதான் ரொனால்டோ. சிஆர் 7 என்று அவர் டீசர்ட் அணிந்து மைதானத்தில் இறங்கும்போது ஒவ்வொரு முறையும் ஆகச் சிறந்த ஆட்டக்காரரான அவர் தன்னைத்தானே மிஞ்சி காட்டுவதில ஒரு மந்திரக்காரன்.

தன்னை நோக்கி வரும் பந்தை உயரமாக எழும்பி கோலாக மாற்ற அவர் எழும்பும் உயரம் உலகில் இதுவரை யாராலும் முறியடிக்கப்படாதது மட்டுமல்ல, ஒரு கவிதை போல அவ்வளவு வசீகரமானது.

இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் முடியும்போது உலகின் ஆகச்சிறந்த வீரர்களான நெய்மர் , மெஸ்ஸி, ரொனால்டோ போன்ற ஜாம்பவான்கள் ஓய்வு பெற்று இனி விளையாட மாட்டார்கள் என செய்திகள் வெளியான போதே கால்பந்து ரசிகர்கள் பலருக்கும் நாடு இனம் கடந்து மனம் வலிக்க தொடங்கியிருந்தது.

இன்றும் அப்படித்தான்.

உலகக் கோப்பையின் கால் இறுதி போட்டியான இன்று போர்ச்சுக்கல் ஆப்பிரிக்க நாடான மொராக்காவை எதிர்கொண்டார்கள். ஆட்டத்தின் முதல் பாதியில் ஏனோ முதன்மை வீரரான ரொனால்டோவை போர்ச்சுக்கலின் கோச் இறக்காமல் பெஞ்சில் அமர வைத்து இருந்தது பார்வையாளர்களின் கடுமையான விமர்சனமாக இருந்தது.

இந்த உலகப் பந்தய போட்டிகளில் உலகின் மிகச்சிறந்த அணிகளை வென்று வருகிற மொரோக்கா ஆட்டத்தின் முதல் பாதியிலேயே கோல் அடிக்க இதுவரை போர்ச்சுக்களால் அதற்கு பதிலடி கொடுக்க முடியவில்லை.

இறுதியில் முதல்முறையாக ஒரு ஆப்பிரிக்க நாடு உலகக் கோப்பையின் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது மனதிற்கு ஆறுதலாக இருந்தாலும், கால்பந்து போட்டிகளின் கதாநாயகன் 37 வயது நிரம்பிய ரொனால்டோ தன் கடைசி போட்டியில் அழுது கொண்டே களத்தை விட்டு வெளியேறும் போது ,

மெஸ்ஸியின் பரம ரசிகனான என் இளைய மகன் பகலவன் கலங்கி அழுது கொண்டிருந்தான்.

அதுதான் ஒரு சிறந்த விளையாட்டு வீரன் தன் வாழும் காலத்தில் பெறுகிற உயர்வான வெகுமதி.

போய் வாருங்கள் சிஆர் 7.

உங்கள் கால்கள் உலவாத கால்பந்து மைதானங்கள் மெஸ்ஸியின் ரசிகர்களால் கூட விரும்பப்படாதவை தான்.

ஏனெனில் நீங்கள் விளையாடும் காலத்தில்…ஒரு காலத்தை உருவாக்கினீர்கள்.

எப்போதும் மெஸ்ஸியின் ரசிகனாக இருந்து சொல்வேன்..உங்கள் காலத்தில் தன்னிகரற்ற வீரர் நீங்கள் தான்.

❤️❤️❤️

நவம்பர் -26 தலைவர் பிறந்தநாள்

வனமேறி நின்ற
அந்த புலியின்
கண்கள்
ஆதி முருகன்
சாயல் ஒத்தவை
என பார்த்தோர்
பதற சொன்னார்கள்.

சினமேறி நின்ற
அதன் சீற்றம்
அறிந்தோர்
அது வெறும்
வனமேறிய புலி
அல்ல..
அது மூத்த குடி
சுமந்த கனவு
என கண்டார்கள்.

கார்த்திகை இரவில்
காந்தள் மலர் பூட்டி
சன்னதம் வந்து
முழங்கிய முதியவன்
ஒருவன் கம்பீரமாய்
சொன்னான்.

அது கனவும் அல்ல ,
நினைவின் சினமும் அல்ல,
அது
இனம் வணங்கும்
இறை என்று.

நவம்பர்-8 அண்ணன் சீமான் பிறந்தநாள்.

“அமைதியான வரலாறு என்ற ஒன்றே உலகில் கிடையாது” என்கிறார் மாமேதை வால்டர். வரலாற்றின் பக்கங்கள் எங்கோ தோன்றிய தனி நபர் விளைவித்த சிந்தனைகளால், கலகங்களால் சதா அதிர்ந்துக் கொண்டே இருக்கின்றன. யாரும் எதிர்பார்க்காத ஒருவரிடம், போகிற போக்கில் நிகழ்ந்துவிடுகிற கால ஓட்டத்தில் இருந்துதான் வரலாற்று அதிர்விற்கான சூட்சமப் புள்ளிகள் தோன்றி விடுகின்றன.

இவர் எங்கிருந்து வந்தார் என யோசிக்கும் முன்னே வரலாற்றுநாயகர்கள் சமகாலத்து சிந்தனைகளை மாற்றிக் கட்டமைத்து புது பாய்ச்சலை நிகழ்த்தி விடுகிறார்கள் ‌.

எப்படி சாத்தியம் என்று நாமெல்லாம் யோசிக்கும்போது நம்மில் ஒருவராக பிறந்து சீமான் என்கின்ற தனி மனிதன் சாத்தியப்படுத்தி சாதித்துக் காட்டியதைத்தான் நாம் 12 வருடங்களுக்கு மேலாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
நாம் தமிழர் கட்சி உருவான புள்ளியான மதுரையில் நடந்த “அறுத்தெறிவோம் வாரீர் ..” என்கிற பேரணி நடந்த போது கூட தமிழகத்தில் தமிழ் தமிழருக்கு எதிராக ஏதேனும் தோன்றினால் கலகம் செய்ய ஒரு சிறு அமைப்பாக செயல்படும் எண்ணம் தான் அண்ணன் சீமானிடம் இருந்தது. ஆனால் காலம் வேறு மாதிரி சிந்தித்து வைத்திருந்தது என்பதை அவர் கூட அப்போது உணரவில்லை.

படிப்படியான நகர்வு என்பது போன்ற ஒரு தொடர் ஓட்டத்தில் ஒரு பேரணிக்கு அனுமதி வாங்க உண்டாக்கப்பட்ட அமைப்பு இயக்கமானது. இயக்கம் கட்சியானது. அந்தக் கட்சி தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக தமிழ்த் தேசியத்தை அரங்கங்களில் இருந்து விடுதலையாக்கி வெகுஜன அரசியல் பரப்பிற்கு கொண்டு வந்தது. 30 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை வாங்கி தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக அசலான எதிர்க்கட்சியாக இன்று களத்தில் நிற்கிறது.

ஓய்வறியா தன் உழைப்பால், கொட்டி முழங்கும் தன் தமிழால், சமூகத்தின் கூட்டு மனசாட்சி அல்லது மக்களின் பொதுவான கருத்தியல் போன்றவற்றின் திசையை மாற்றி, தமிழ்த் தேசிய இனத்தின் சிந்தனை ஓட்டத்தில் பெரும் மாறுதல்களை ஏற்படுத்தியவர் அண்ணன் சீமான்.

2009 க்கு பிறகான காலகட்டத்தை திராவிடத்தின் பெருமிதங்களை, தேசியத்தின் தோற்ற மயக்கங்களை தன் அனல் தமிழால் தகர்த்தெறிந்த காலமாக அவர் மாற்றினார்.

ஒரே நேரத்தில் தமிழர்கள் இந்துக்கள் அல்லர், தமிழர்கள் திராவிடர்கள் அல்லர் என்று அரசியல் கணக்குகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு துணிந்து அண்ணன் சீமான் முழங்கியது அசலான கருத்தியல் புரட்சி.

இது எதுவுமே அவர் திட்டமிடவில்லை. அதுவாகவே ஒவ்வொரு படியாக நிகழ்ந்ததையும், நகர்ந்ததையும் நாங்கள் அனைவரும் விழிகள் வியக்கக் கண்டோம்.

ஒரு மாயவிசை ஒன்று அவரை இயக்கிக் கொண்டே இருந்ததை நாங்கள் உணர்ந்த போது அவர் தன் லட்சிய பயணத்தில் வெகு தூரம் கடந்து வந்து விட்டார். அந்த மாயவிசையை அவரும் தனக்குள் உணர்ந்திருக்கிறார்.

எல்லாவற்றையும் விட ஒரு இனப்படுகொலைக்கு பின்பான இந்த காலகட்டத்தில் பத்தாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.‌.எல்லோரும் அதைக் கடந்து விடுவோம் என அவருடன் பயணித்த பலர் சமரசமாகி சரண் அடைந்த பிறகும் கூட, இன்றளவும் துளியும் சமரசம் இன்றி அதே உக்கிரத்தோடு போராடிவரும் அண்ணன் சீமான் எங்கள் அண்ணன் என்பதில் எங்களுக்கு பெருமிதம் உண்டு.

இன்று தமிழகம் கண்டு இருக்கும் பல்வேறு மாற்றங்களுக்கு குறிப்பாக தமிழ்- தமிழர் உணர்வேற்றத்திற்கு அண்ணன் சீமானே முதன்மைக் காரணம்.

அவரோடு நிற்பதும் , அவரோடும் பயணிப்பதும், எம் இனத்திற்காக எம் மொழிக்காக நாங்கள் செய்யும் பிறவிக் கடன்.

அண்ணன் சீமான் நீடூழி நலத்தோடு வாழட்டும்.

தமிழர் நிலம் தலை நிமிரட்டும்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா.

Page 2 of 2

Powered by WordPress & Theme by Anders Norén