பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Author: மணி செந்தில் Page 37 of 57

ஏனெனில்..பியானோக்கள் அவ்வாறானவை..

piano

 
தகிப்பிலாடும்
என் உள்ளத்தை
பியனோ என்றேன்.

நீ சிரித்தாய்.

நான் சொல்லத்
தொடங்கினேன்.

தேர்ந்த விரல்களின்
சில தொடுகைகளுக்காக
காத்திருக்கின்றன..

அவைகள்..

உயிர் உருக்கும்
உன்னத இசையை
பிறப்பிக்க.

உருவான நொடி
முதல் உள்ளுக்குள்
உன்னதங்களை
சுமப்பதென்பது
எளிதான காரியமல்ல.

சில
காலநழுவல்களில்
நேராமல் போய்விடுகிற
நொடிகளில்..

தாங்கிக் கொள்ள
முடியாமல்
உதிரமும்,
எச்சிலும்
கலந்து துப்பி
விட தோன்றுகிறது..

இருந்தும்..

சில நொடி
தொடுதலில்
துளிர்க்கிற
முளைப்பிற்காக..

அந்த முளைப்பில்
உயிர் மலரும்
கணத்திற்காக..

அந்த பியனோ
கட்டைகள்
காத்திருக்கின்றன..

யாருமற்ற
இரவொன்றில்
வெறித்து
ஒளிரும்
வீதி விளக்கொன்றின்
தனிமை போல

எப்போதும் அவை
தனித்திருக்கின்றன…

ஏதோ …
ஒரு புள்ளியில்
ஏதோ ஒரு மெல்லிய
அழுத்தத்தில்
மலர இருக்கிற
அந்த உன்னதத்
துளிக்காக

அவை தனித்திருக்கின்றன..

ஒரு நிலா நாளில்..
வெள்ளையும்
கருப்பும் மேவி
இருக்கிற உடலில்
சுழன்று லாவகமாக
நடனமிட இருக்கிற
விரல்களுக்குதான்
தெரியும்..

விரல் நுனிகள்
இதுவரை
திறக்கப்படாத
முடிவிலி
பாதை ஒன்றின்
சாவி என..

……………………

பெருமூச்செறிதலோடு
இறுதியில் நீ
ஒத்துக்கொண்டாய்..

அங்கே
இலக்குகள் அற்ற
விரல் அலைவுகள்
செவ்வியல்
இசையாய்
நிகழத் தொடங்கி
இருந்தது.

-மணி செந்தில்

தங்க மீன்களும் அழகனும்..

13925676_162271224197754_3264854279672705024_o

நிலா முழுகி
கிடந்த
கடலில்
நட்சத்திரங்கள்
துள்ளிக்கொண்டு
இருந்த அப்பொழுதில் தான்…

என் ஒற்றைப்படகில்
நான் தனித்திருந்தேன்..

மஞ்சள் வெளிச்சமும்,
இருண்மையும்
மாறி மாறி
பிரதிபலிக்கும்
இரவு பேருந்தின்
சன்னலோர முகத்தோடு
நீ லயித்திருந்த
பொழுதொன்று
ஆகாய அந்தர
வெளியில்
மிதந்துக்
கொண்டிருந்தது..

நிரம்பி ததும்பிய
அலைகளின் நுனியில்
நேற்றிரவு உன்
விழிகளில் மின்னிய
அதே சுடர்கள்..

காட்சி மயக்கத்தில்
தடுமாறி ஆழ் கடலில்
விழுந்த என் மேனி
எங்கும்பூத்து மலர்ந்தன
அல்லிகள்..

அப்படியே
என் இரு கரம் கொண்டு
வெது வெதுப்பான
கடலின் வயிற்றினை
திறக்க தொடங்கினேன்..

புற்றீசல் போல
தங்க மீன்கள்
வானவில் சிறகுகளோடு..

வானின் நீல வண்ண
படியேறி போன
ஒரு தங்க மீன்
தன் சிறகை அசைத்தவாறே
சொன்னது…

நீ அழகன் என..

நான் சிரித்துக் கொண்டேன்..

எப்போதும்
என் முகம் பார்க்கும்
கண்ணாடி நீயாக
இருந்தால்..

எப்போதும் எனை
பார்க்கும் விழிகள்
உனதாகி இருந்தால்..

நான்
அழகன்
தான்..

– மணி செந்தில்

 

 

மொழியை அருந்துபவன்..

 

3c69758c7da7fdb64651dff52fe2c007நமது உரையாடலின்
சொல் உதிர்தலில்
நமக்கான கவிதையை
நாம் தேடிய போதுதான்..

நீ உரையாடலை நிறுத்தி
மெளனமானாய்…

அடங்கா பசியை
அடர்த்தியாய்
சுமக்கும்
ஆடு ஒன்றாய்
எனை பார்த்து

ஆதி வனத்தின்
பசும் தழைகளாய்
எனை
மேய்ந்து விட்டு
போயேன்

என்று
உன் விழிகளால்
என்னிடம்
சொன்னாய்


இல்லை
இல்லை

மழைக்கால
சுடு தேநீரை
ஒரே மடக்கில்
குடித்து விடும்
வித்தை
நான் அறியேன்..

இது மீன் பிடிக்கும்
வேலை..

தூண்டிலுக்கும்
மீனுக்குமான
புரிதலில்..

ஏதோ

ஒரு தருணத்தில்
தூண்டில்
கனக்கும்..

மீன் சிக்கும்..

என்றேன் நான்..

உடனே
அவள்
என் தலை கோதி
சொன்னாள்..

நீதான் எனது
மொழியென….

காயங்களால் ஆனவன்.

14232482_182494872175389_8100183791492522624_n

அங்கே..
அவரவர்
ஆன்ம
விருப்பத்தின்
ரகசிய கணக்குகள்
மீன்களாய் அலைகின்றன

என
சொற்களின்
குளத்தில்
குளித்தவன்
சொல்லி விட்டு
போனான்.

அனல் மேவிய
சொற்களும்..
நிச்சயமற்ற
காலக்
கணக்குகளின்
அமில மழையும்..
கனவுப் பூக்கள்
ஒளிர்கிற
என் ஏதேன்
தோட்டத்தை
அப்போதுதான்
அழித்து முடித்து
இருந்தன..

காரிருளாய்
மேனி முழுக்க
துயர இருட்டு
அப்பிய
பொழுதொன்றில்..

உதிரம் கசிந்த
விழிகளோடு..
நானும்..
அவரும்..
மட்டுமே அறிந்த
மொழி ஒன்றில்
சொன்னார்..
கடவுள்.

..ஆகவே..
மகனே..
நீ காயங்களால்
ஆனவன்.

கணங்களின் கதை

 

14485021_188947611530115_2749357017552220995_n

கோப்பை ஏந்தியிருக்கும்
கரத்தின் சிறு நடுக்கத்தில்
சற்றே சிந்தும்
ஒரு துளி தேநீர்..

யாருடனோ
பேசுதலின் போது..
சொற்களின் ஊடே
கசியும் மெளனம்..

மழை நனைக்கும்
பொழுதில்
விழி மூடி
வானை நோக்கி
தலை உயர்த்தும்
கணங்கள்…

எங்கிருந்தோ
கரையும் பாடலில்
தலையணை
நனைய முகம்
சிவந்து கிடக்கும்
நடு நிசிப் பொழுது..

இப்படி..
இப்படி..

ஏதேனும் நொடிகள்
வாய்த்து விடுகின்றன..

சொல்ல
முடியாதவற்றை..
நமக்குள்ளே
சொல்லிக் கொள்ள..

உறைந்த உயிரை
நாமே கிள்ளிக் கொள்ள..

.**** சுயபுராணம்


overcome-yourself-fyodor-dostoyevsky-daily-quotes-sayings-pictures

மீண்டும் மீண்டும்
என்னை பிரசவிக்கும்
எனது மொழி..

வற்றா வளத்தோடு
குன்றாப் பெருமை
மணக்கும் எனது
சொல்..

எப்போதும் காண்பவர்
முகத்தில் கண்ணீரையும்,
புன்னகையையும்
ஒரே நேரத்தில்
சிந்த வைக்கும் எனது
எழுத்து..

இத்தனை வருடங்களில்
இரவு பகலாக
விழித்து..
வாசித்து..
ரசித்து..
உழைத்து..
எனக்கு நானே
கனவுகளை உளியாக்கி
செதுக்கிக் கொண்ட
தன்னம்பிக்கை
சுடர் விடும்
ஒரு வாழ்க்கை..

என்றெல்லாம்
பேசிட என்னிடம்
ஏதேனும்
இருந்தாலும்…

துளித்துளியாய்
சேமித்து பெருமழையென
பொழிய எனக்குள்
ஒரு மழை இருக்கிறது..

விழி நீர் கசிய
உயிர் உருகி ஓடிட
கதைகள் சொல்ல
எனக்குள்
நிலவொளியில்
சேமித்த ஒரு
இரவு இருக்கிறது.

பரவசப்படுத்தும்
கவிதைகளோடு
காலார நடந்திட
எனக்குள் பனிப்பூக்கள்
நிரம்பிய பூங்காவோடு
ஒரு பொன் மாலைப்
பொழுது இருக்கிறது..

ரகசிய கனவுகள்
மினுக்கும்
நீல விழி தேவதை
மிதக்கும்
தங்க மீன்கள்
உலவுகிற
பாசி படர்ந்த
பெருங்குளமும்
எனக்குள் உண்டு.

தேவ கரங்கள் தொட்டுத்
துடைக்க உதிரமாய்
பெருகுகிற
தீராத்துயரமும்..

சாத்தானின் முற்றத்தில்
முடிவிலியாய்
கொண்டாடி மகிழ
வற்றா புன்னகைகளும்..

என்னிடம் இருப்பதாக
மதுப் போதையில்
உளறிய
கனவுலகவாசி
ஒருவன் கைக்குலுக்கிப்
போனான்.

அவனிடம் மறுமொழி
கூற என்னிடம்
சொற்கள் ஏதுமில்லை
அப்போது..

பக்கத்தில் தேநீர்
அருந்திய வண்ணம்
சிரித்துக் கொண்டே
கடவுள் சொன்னார்

அது தான் நீ இருக்கிறாயே..

பயணம் என்கிற பெருவழி..

14523298_194382390986637_8173281201202185685_n
எழுதுபவனுக்கு எழுத்தின் மூலமாகத்தான் ஜீவனே நகரும். எனக்கு அந்த ஜீவனைச் சூடாக வைத்திருப்பதே பயணங்கள்தான். அது என்னை வேறொன்றாக மாற்றுகிறது. புவிப்பரப்பை முழுமையாகப் பார்க்க எல்லா இடங்களையும் அகலமாகப் பாருங்கள். பார்க்காத இடம் பார்த்தல் சுகம். புது இடம் பார்த்தால் அதீதக் கற்பனை பிறக்கும். கற்பனையில் மிதக்காத மனிதனைச் சொல்லுங்கள். அவனையும் அலைந்து பிடிப்பேன்!’’
– கோணங்கி (விகடன் 16-09-2009)

என் வீட்டிற்கு முன்னால் கிளை கிளையாய் விரிந்திருக்கும் பாதைகளை காணுகின்றேன். இப்பாதைகளின் தொடக்கப்புள்ளி எது, இப்பாதைகள் எங்கே போய் முடியும் என்றெல்லாம் சிந்தனை முடிச்சுகளை மனம் பின்னிக் கொண்டே போகிறது. உண்மையில் பாதைகள் ஒரு முடிவிலி. அவைகளுக்கு தொடக்கமும் இல்லை. முடிவும் இல்லை. எல்லாப் பாதைகளும் ரோமை நோக்கியே என்ற கிரேக்க சொற்றொடர் உண்டு. பண்டைய காலத்தில் கிரேக்கத்தின் ஆதிக்கம் பரவி இருந்த போது இச்சொற்றொடர் பிறந்திருக்கலாம். அக்காலத்தில் பாதைகள் முழுக்க அலைந்து திரிந்த யாத்ரீகர்கள், ஊர்ச்சுற்றிகள் நிறைந்து இருந்தார்கள். பொதுவாக வாழ்தல் வேண்டி பிழைப்பு கருதி, சாமியாராக,வித்தைக் காட்டுபவராக, விசித்திர பொருட்கள் விற்பவராக, குறி சொல்பவராக, கால்நடைகள் மேய்ப்பவராக நாடு, நகரம், காடு,கழனி என சுற்றிக் கொண்டே இருந்த ஊர்ச்சுற்றிகள் உண்டு,. ஊர்ச்சுற்றுதல் என்பது வெறும் கேளிக்கைக்கானது மட்டுமில்ல. அது ஒரு ஆன்மீக அனுபவம் என்கிறது பெளத்தம். பெளத்தப் பிக்குகள் பல நாடுகளுக்கு புத்தரின் போதனைகளை எடுத்துக் கூற பயணப்பட்டுக் கொண்டே இருந்திருக்கிறார்கள். அந்த காலத்தில் மதத்தினை பரப்ப பயணம் மட்டுமே ஒரே வழி. மதம் பரப்புதல் என்கிற நோக்கமும், பொருளீட்டுதல் என்கிற நோக்கமுமே பயணம் என்கிற பெருவழிக்கு பெரும்பாலும் காரணங்களாக அமைகின்றன. பயணம் என்பது பெரும் அனுபவங்களின் கூட்டுத் தொகையாக இருக்கிறது. பயணம் மூலமாக பெறும் அனுபவங்கள் மனித வாழ்க்கையையே மாற்றி அமைக்கும் வல்லமை கொண்டது. சேகுவேரா தன் நண்பன் அல்பெர்த்தோ கிரானடோவுடன் மோட்டார் சைக்கிளில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் மேற்கொண்ட பெரும் பயணமே அவனை ஒரு புரட்சியாளராக உருவாக்கியது. சேகுவேராவின் பயண அனுபவங்கள் ஆங்கிலத்தில் தமிழிலும் நூலாக கிடைக்கின்றன. சே குவேரா-புரட்சியாளனாக உருவானது எப்படி என்ற தலைப்பில் இந்த பயண அனுபவங்களை கிழக்கு பதிப்பகம் நூலாக வெளியிட்டு உள்ளது. ‘ ஒரு தகப்பனாக நான் புரிந்துகொள்ள முடியாத பல விஷயங்கள் அவனிடம் இருந்தன. கால ஓட்டத்தில் தான் அவைகளை நான் அறிந்தேன். பயணத்தின் மேல் அவன் கொண்டிருந்த தீராவேட்கையானது புதியவைகளை அறிய வேண்டும் என்கிற அவனுடைய பற்றுறுதியின் இன்னொரு அம்சமே என்பதை அப்போது நான் உணரவில்லை.’ மோட்டார் சைக்கிள் நாட்குறிப்புகள் நூலுக்கு எழுதிய முன்னுரையில் தன் மகன் குறித்து சேகுவேராவின் தந்தை எர்னஸ்டோ சீனியர் தெரிவிக்கிறார். உண்மைதான். பயணங்கள் எப்போதும் புதியவனவற்றை தேடி அலைகிற ஆன்மாவின் குரலாக இருக்கிறது.

அப்பயணத்தின் ஊடே சேகுவேரா விடை பெறுதலின் பொருட்டு ஒரு கடற்கரையில் தன் காதலி சிச்சினாவை சந்திக்கிறார். பொங்கி அலையடித்துக் கொண்டிருந்த அக்கடல் போலவே சேகுவேராவின் மனமும் பயணம் தருகிற புதிய சாகசங்களுக்காக கொந்தளித்துக் கொண்டிருந்தது. தனது காதலியின் விரல்களைப் பற்றிக் கொண்ட சே தெரிவித்தார். “ விடைபெறும் தருணம் இது. பிரிவின் துயரமும், உவப்பின்மையும் என் சுவாசத்தோடு கலந்து விட்டது. பயணங்களின் ஊடே நிகழும் சாகசங்களை நோக்கி நான் செல்லப்பட்டு விட்டேன். நான் திரும்பும்வரை நீ காத்திருப்பாயா என்று கேட்டார். சிச்சினா தலையசைத்தாள். பயணம் தொடர்ந்தது.

சே குவேரா செய்த இப்பயணம் குறித்து மோட்டார் சைக்கிள் டைரீஸ் ( Motor Cycle Diares (2004) ) என்ற புகழ்ப் பெற்ற உலகத்திரைப்படம் காணக்கிடைக்கிறது. நிலவியல் காட்சிகளும், நுட்ப உணர்வுகளும் நிரம்பிய அத்திரைப்படத்தை காணுதல் என்பதே மகத்தான ஒரு அனுபவம். கொடும் மழையிலும், பல்வேறுவிதமான பருவ சூழல்களிலும் ஆஸ்துமாவால் பலவீனமான நுரையீரலோடு சேகுவேரா பயணித்த அந்த அனுபவக் காட்சிகள் திரையில் விரியும் போது பயணம் குறித்த நம் மதிப்பீடுகள் மாறத் தொடங்குகின்றன. இதன் பாதிப்பில் வெளிவந்த மலையாளத்திரைப்படம் தான் துல்கர் சல்மான் நடித்த நீல ஆகாசம் பச்சக்கடல், செவ்வண்ண பூமி(2013).

அதே போல புரட்சியாளர் மாவோ நடத்திய பெரும் பயணமே சீனப்புரட்சிக்கு அடிப்படையாக திகழ்ந்தது. ஏகாதிபத்திய கோமிண்டாங் படைகளின் தாக்குதல் இருந்து தப்பிக்க மாவோவின் தலைமையில் 2,30,000 செஞ்சட்டை படையினர் 1934 அக்டோபர் 16 முதல் 1935 அக்டோபர் 21 வரை சுமார் ஓராண்டு காலம் நெடும்பயணம் நடத்தி, சீன விவசாயிகளை, மக்களை புரட்சிக்காக அணியப்படுத்தினர்.கடுமையான பருவ கால சூழல்களுக்கு முகங்கொடுத்து 6000 மைல் தூரத்தை செஞ்சட்டைப் படை கடந்தது. கொந்தளிக்கும் ஆறுகள், குத்தீட்டி மலைகள், அதல பாதாளமான நிலவியல் அமைப்புகள் , உணவு, உறைவிடம் ஆகியவற்றை கண்டறிவதற்கான சூழல்கள் போதாமை, தொற்று நோய்களின் தாக்குதல் என பல்வேறு விதமான சங்கடங்களை கடந்து சீனப் புரட்சியை தன் படையினரோடு நிகழ்த்திக் காட்டினார் மாவோ.

இந்தியப் பெருநிலத்தில் அண்ணல் காந்தியடிகள் சென்ற தண்டி யாத்திரைப் பற்றி நமக்குத் தெரியும். 1930 மார்ச் 12 ஆம் தேதி குஜராத்தில் உள்ள தனது சபர்மதி ஆசிரமத்தில் இருந்து , 23 நாட்கள் 240 மைல்கள் நடந்து 1930 –ஏப்ரல் 6 ஆம் தேதி தண்டியை பல ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் அடைந்த காந்தி தனது பயணத்தின் மூலமாகவே தன் போராட்ட உணர்வை பரவலாக்கினார். சாதாரண மனிதராக இருந்த காந்தியை மகாத்மா காந்தியாக்கியதற்கு மூல சம்பவமும் அந்த தென் அமெரிக்க ரயில் பயணம் தானே..

இப்படி உலகம் முழுக்க பயணங்களும், அது தரும் அனுபவங்களும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமைக் கொண்டவைகளாக இருக்கின்றன. ஒரு பயணம் என்பது ஏதேனும் காரணங்கள் கொண்டவையாக இருக்கலாம். இல்லையேல் பயணம் தருகிற அனுபவங்களும், மனநிலையுமே ஒரு பயணத்திற்கான காரணங்களாக அமையலாம்.

maxresdefault

 

தமிழ் இலக்கிய உலகில் பெரும் ஊர்ச்சுற்றிகளாக எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணனும், கோணங்கியும் திகழ்ந்திருக்கிறார்கள். இருவரின் எழுத்துக்களின் ஊடே அப்பயணங்களின் அனுபவங்களும், நிலவியல் காட்சிகளும் நிரம்பி ததும்புகின்றன. ஒரு முறை எஸ்.ரா சொன்னார் “ பயணத்திற்கென எனக்கு காரணங்கள் தேவையில்லை. எவ்வித காரணங்களும் இல்லாமல் ஒரு ஊரில் இருந்து கிடைக்கிற பேருந்து, வாகனம் என ஏதாவது ஒன்றில் ஏறி இலக்கில்லாமல் ஏதோ ஒரு ஊரில் இறங்கி, அங்கு கிடைப்பதை உண்டு, அங்கு இருப்பதை கண்டு , அங்கேயே நாலைந்து நாட்கள் தங்கி விட்டு வருவதை நானும், கோணங்கியும் வெகுநாட்கள் வழக்கமாக கொண்டிருந்தோம். ”

உண்மையில் ஊர்ச்சுற்றுதல் கேளிக்கைக்கு எல்லாம் அப்பாற்பட்ட பெரும் அனுபவமே என்று ஊர்ச்சுற்றிகள் கண்கள் மிளிர சொல்கிறார்கள். அது ஒரு வகையான போதை. ஒரு வகையான ஆழ் மனக் கோரல். அனைத்திலிருந்தும் தப்பிகிற மனநிலை.
ஆஸ்கர் விருது வாங்கிய Forest Gump என்கிற உலகத்திரைப்படம் உண்டு. அதன் கதாநாயகி எப்போதும் Forest Gump என்று பெயருள்ள அக்கதாநாயகனை Run Forest, Run Forest (ஓடு பாரஸ்ட்..) என்று சொல்லிக் கொண்டே இருப்பாள். ஒரு கட்டத்தில் அம்மாவையும், காதலியையும் இழந்த கதாநாயகன் என்ன செய்வது என்று தெரியாமல், காரணமே இல்லாமல் ஓடத் தொடங்குவான். இரவு, பகல் பாராது ஓடிக் கொண்டே பல நாடுகளை கடப்பான். அவனது இலக்கற்ற ,முடிவற்ற இந்த ஓட்டம் தொலைகாட்சிகளில் காட்டப்படும். உலக சமாதானத்திற்காகதான் ஓடுகிறார் என பலரும் நினைத்து, அவன் பின்னால் பலரும் ஓடுவர். ஒரு கட்டத்தில் அக்கதாநாயகனுக்கு வீட்டு நினைவு வந்து விடும். உடனே வீட்டை நோக்கி திரும்ப ஓடத் தொடங்குவான். ஏனெனில் அக்கதாநாயகனுக்கு தன் சோகத்தில் இருந்தும், மன அழுத்ததில் இருந்தும் தப்பிக்கும் வழியாக அந்த ஓட்டத்தை, அப்பயணத்தை கருதுவான். அது ஒன்று மட்டுமே அவனை ஆற்றுப்படுத்தும் .

தமிழ்நிலத்தில் ஊர்ச்சுற்றிகளின் பங்கு மகத்தானது. பல்வேறு விதமான தத்துவங்களை, மத போதனைகளை ,மருத்துவத்தை ,பண்பாட்டுக் கூறுகளை பரப்பியதில் ஊர்ச்சுற்றிகள் பெரும் பங்கு வகித்திருக்கிறார்கள். சமண முனிவர்களாக,பெளத்த பிக்குகளாக, புனித யாத்திரை செல்பவர்களாக விளங்கிய தமிழர்களின் ஊர்ச் சுற்றி உளவியல் அதிகார வேட்கையாக மாறிய காலத்தில் பெரும் படையெடுப்புகளை நிகழ்த்தி உலக நாடுகளை எல்லாம் வென்று இருக்கிறார்கள்.

பயண அனுபவங்களைப் பற்றி தமிழில் பல நூல்கள் காணக்கிடைக்கின்றன. பல நாடுகளுக்கு சென்று உலகம் சுற்றிய தமிழராக ஏ.கே செட்டியார் திகழ்ந்திருக்கிறார்கள். அதே போல மணியன் ,சாவி , தமிழ்வாணன், அகிலன் போன்ற பல எழுத்தாளர்களும் உலகைச்சுற்றி பார்த்து தனது அனுபவங்களை இலக்கிய பிரதிகளாக ஆக்கி இருக்கிறார்கள். காவேரி நதிக்கரை ஓரமாக எழுத்தாளர் தி.ஜானகிராமனும், அவரது நண்பர் சிட்டியும் மேற்கொண்ட பயணத்தை நடந்தாய் வாழி காவேரி (காலச்சுவடு வெளியீடு ) என்கிற படைப்பாக வெளியிட்டு இருக்கிறார்கள்.

 

14523202_194382474319962_8228487827882526794_n

ஊர்ச்சுற்றிகளின் குண இயல்புகள், ஊர்ச்சுற்றிகள் எதிர்க்கொள்ளும் சவால்கள்,பயணத்திற்கு தேவையான பொருட்கள் போன்ற ஊர்ச்சுற்றி அம்சங்களைப் பற்றி புகழ்ப் பெற்ற எழுத்தாளர் இராகுல சாங்கிருத்யாயன் “ ஊர்ச்சுற்றி புராணம் “ என்கிற புகழ்ப்பெற்ற நூலை எழுதியுள்ளார் .

( ஊர் சுற்றிப் புராணம்
ஆசிரியர் : ராகுல் சாங்கிருத்யாயன்
பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை-98
விலை ரூ 70 மொத்த பக்கங்கள் : 236)

எல்லா பாதைகளும் என் வீட்டில் இருந்தே தொடங்குகிறது என்கிறது ஒரு ஜென் மொழி. எந்த பயணமொன்றின் முடிவும் ஒருவிதமான தனிமை உணர்வை தருவது இயல்பு. ஏனெனில் பயணம் என்பதே நான் தனியன் அல்ல என்பதை உணரத்தானே…

 

சொல்லப்படுகிற சொற்களற்ற கதை.

14900327_208444706247072_1276150418681769516_n
காதிற்கு பின்னால்
வழியும்
ஒரு வியர்வைத்துளி
சொல்லக்கூடும்
இப்போது
என்ன நிகழும் என..

எதிரெதிர் திசைகளில்
நகரும் ரயில் பெட்டிகளில்
நீயும் நானும்..

செல்லும் ரயிலில்
இருந்தவாறே..
மெளனித்து கிடக்கிற
என் ரயில் பெட்டி அசைகிறது
என நீ நினைப்பது
உனக்கான ஆறுதல்
என எனக்கு புரிகிறது..

நிகழ்தகவுகளாய்
வர்ணம்
மாறிய மனதின் மொழியை
ஒரு போதும் பேச முயற்சிக்காதே..

ஏனெனில் உண்மைகள்
பொய்களை விட
மோசமானவை.
கருணையற்றவை.

இயல்பு மீறிய ஒரு
சலனத்திற்காக
நீ காத்திருப்பது
புரிகிறது.

பிரிவுகளின் உலர்ந்த
காரணங்களுக்கான
பிரத்யோக மொழிகளை
சொல்வதற்கு உன் உதடுகள்
இன்னும் தயாராகவில்லை
போலும்..

ஈரப்படுத்திக் மெதுவாய்
கனைத்துக் கொள்கிறாய்..

நான் தயாராகத்தான்
இருக்கிறேன்.

விஷம் தோய்ந்த
ஈட்டி முன்னால்
இதயம் துடித்துக்
கொண்டே இருப்பது
கொஞ்சம் அசெளகரியம்தான்..

சீக்கிரம் குத்தி விடு.

ஏதாவது ஒரு உடைபடாத
நொடியில் உடையலாம்
நீயோ..நானோ..

அந்த பரிதவிப்பு
நம் இருவருக்குமே
இருப்பதுதான்..
எனக்கான இறுதி ஆறுதல்..

கலங்கும் விழிகளில்
தூரத்து கானலாய்
தெரிகிறது.

என்னையும் மீறி
கொப்புளிக்க
துடிக்கும்
நாமாக இருந்த
பொழுதுகளின்
நினைவுகள்..

தப்பித்தவறி
அவை சொற்களாக
மாறக்கூடும் என
அஞ்சாதே..
.
மிடறு விழுங்கினாலும்
மீறி வர எத்தனிக்கும்
அச்சொற்கள் உண்மையின்
கயிற்றினால் இறுக்கி
கட்டப்பட்டு விட்டன..

இனி..

நீ தாராளமாக
எதையும்
சொல்லலாம்.

நொடிகள் கடந்தாலும்
நம்மை கடக்காமல்
நிற்கிற இந்த
இமைக்காத பொழுதில்..

சில
பெருமூச்செறிதல்களோடும்..
ஆழ்நிலை தியான
கவனத்தோடு இயற்றப்பட்ட
சில நொடி மெளனத்தோடும்.

நீ சொல்ல வருகின்ற
காரணங்களுக்காக
அன்றி
வேறு எதற்காகவோ
கசிகிற கண்ணீர்த்
துளிகளோடும்..

நீ சொல்லத் தொடங்கு..

நானும் இதை முதன்
முறை கேட்பது போல்
கேட்கத் தொடங்குகிறேன்..

-மணி செந்தில்

 

 

ஏமாற்றப் பிம்பம்.

cropped-anonymous-15061.jpg
எப்போதும்…
ஆர்வமாய்
தொடங்கி
ஏமாற்றப்
பிம்பத்தில்
ஆழ உறைகிறது..
 
ஞாயிறு
நாளொன்றின்
துயர் கவ்வும்
முடிவு.
 
– =

பர்கான் வானி- கனன்று ததும்புகிற காஷ்மீரிய விடுதலை உணர்வு..

ENCOUNTER-KUNZAR-PIX-5
 
என்னை அடக்கு.
என்னைக் கொல்.
என் மொழியை அழி.
என் நாவுகளை வெட்டு.
ஆனால் என் முன்னோர் வாழ்ந்து இறந்து,
மக்கிப் இன்று
மண்ணாகி இருக்கிற
என் தாய்நிலத்தை
என்ன செய்வாய்..??
என்ன செய்வாய்..??
 
எங்கே கொண்டு புதைப்பாய்..??
 
– மேகாலயா பூர்வக்குடிகளின் பாடல்
 
தேசிய இனங்களின் பெரும் சிறைக்கூடமாக இந்திய வல்லாதிக்கம் இருக்கிறது என்பதற்கு இந்த பெருநிலத்தின் இரத்தம் தோய்ந்த வரலாறு சாட்சியம் பகர்ந்துக் கொண்டே இருக்கிறது.
 
நன்கு வளர்ச்சியடைந்த 20க்கும் மேற்பட்ட தேசிய இனங்களின் தனித்தன்மையை ஒடுக்கி, அவர்களின் இறையாண்மையை மறுத்து, நிலத்தை சுரண்டி, வளங்களை அபகரித்து , ஆட்சி, அரசியல், கலை, பண்பாடு என அந்த இனம் கொண்டிருக்கிற தனித்துவ விழிமியங்களை அழித்து, இந்த பெருநிலத்தை 200 பணக்காரர்கள் ஆளுவதற்கான ஒரு நாடாக கட்ட கோடிக்கணக்கான பல்வேறு தேசிய இனங்களின் மக்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பதை தான்
இவர்கள்.. இந்திய ஒருமைப்பாடு, ஏக இந்தியா என்றெல்லாம் வர்ணப்பூச்சு பூசுகிறார்கள்.
 
இந்தியாவை பொறுத்தவரையில் ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே மாதிரியான மக்கள் என்பதான மந்தைக் கூட்டத்தை உருவாக்கவே இந்திய வல்லாதிக்கம் முயல்கிறது. தனித்துவ பண்பாடு, மொழி, வழிபாட்டு முறைகள்,வாழ்வியல் அம்சங்கள் கொண்ட பிறிதொரு இனத்தின் தனித்துவ அம்சங்களை அழித்து விழுங்கி ஏப்பம் விட இந்திய வல்லாதிக்க பூதம் திட்டமிட்டு காய் நடத்துகிறது என்பதைதான் சமஸ்கிருத கட்டாயத் திணிப்பு , கல்விப் பாடத்திட்டங்களில் இந்துத்துவ அம்சங்களை திட்டமிட்டு திணித்தல், தேசிய இனங்களின் தனித்துவ குணாதிசியங்களான ஜல்லிகட்டு போன்றவைகளுக்கு தடை போன்றவை காட்டுகின்றன.
 
எனவே தான் தமிழ்த்தேசியர்கள் தாங்கள் இந்துக்கள் என்கிற பொது அடையாளத்தை மறுக்கிற முதன்மை சக்திகளாக திகழ்கிறார்கள். இதை பஞ்சாபிகளின் போராளி பேராசிரியர் ஜக்மோகனும் வீரத்தமிழர் முன்னணி தொடக்க விழாவில் பேசிய போது தெரிவித்தார். “ தமிழர்களே.. நாங்களும் உங்களைப் போலவே.. நாங்கள் இந்துக்கள் அல்லர், நாங்கள் பஞ்சாபிகள் “ என்றார்.
 
அதைப் போலவே எம் சகோதரன் காஷ்மீரிய விடுதலைப் போராளி யாசின் மாலிக் நாம் தமிழர் கட்சியின் அழைப்பினை ஏற்று கடலூருக்கு வந்திருந்த போது சொன்னதை இவ்விடத்தில் நினைவுப்படுத்துகிறேன். “ காஷ்மீரிய நிலம் முஸ்லீம்களுக்கு மட்டும் சொந்தமான நிலமல்ல. அங்கு வசிக்கும் பார்சிக்கள் , பண்டிட்க்கள், பழங்குடி மக்கள் என வேறுவகையான பண்பாட்டு கூறுகளை கொண்ட மக்களுக்கு சொந்தமானது. இன்னும் சுருக்கமாக சொன்னால் காஷ்மீர் காஷ்மீரிகளுக்கு சொந்தமானது “.
ஆனால் இந்தியா காஷ்மீரிய விடுதலையை ஒரு மதம் சார்ந்ததாக, இஸ்லாமீய மார்க்கம் சார்ந்ததாக திட்டமிட்டு சித்தரித்துக் கொண்டு இருக்கிறது.
காஷ்மீர் என்கிற பேரழில் மிக்க அந்த நிலம் இந்திய வல்லாதிக்கத்தின் அதிகாரப் பசியால் இரத்தம் தோய்க்கப்பட்டு 60 ஆண்டுகளுக்கு மேலாகின்றது. இதுவரை அம்மக்கள் தங்களை இந்தியர்களாக பொருத்திக் கொள்ள தொடர்ந்து மறுத்து வருகிறார்கள்.
இந்திய- பாகிஸ்தான் அதிகார அரசியல் போட்டியில் தாங்கள் பகடைக்காய்களாக உருட்டி விளையாடப்படுவதை அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள்.
நாங்கள் பாகிஸ்தானியர்கள் அல்லர், இந்தியர்கள் அல்லர்., நாங்கள் காஷ்மீரிகள் என உரக்க முழங்கிப் போராடி வருகின்றனர். இந்திய அரசின் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் அங்கு வசிக்கும் ஒவ்வொரு குடும்பமும் தினம் தோறும் இழப்பினை சந்தித்து வருகின்றார்கள்.
 
தங்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக காஷ்மீரி சகோதரர்கள் வெகு நாட்களாக போராடி வருகிறார்கள். தங்கள் இறையாண்மையை காக்க உதிரம் சிந்தி, உயிரைக் கொடுத்து அவர்கள் நடத்துகிற தாய்நாட்டின் விடுதலைப் போராட்டம் இந்தியாவால் தீவிரவாதம், பயங்கரவாதம் என்றெல்லாம் திட்டமிட்ட பிரச்சாரம் மூலமாக வெளி உலகிற்கு காட்டப்பட்டு வருகிறது.
 
_97332cec-45a8-11e6-b0f4-7520104944f6
காஷ்மீரிகளின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாத குரலோசை ஒடுக்கப்பட்டு வாழ்கிற தமிழ்த்தேசிய இனம் போன்ற பல தேசிய இன மக்களுக்கு எல்லாம் உரிமைக்குரலாக ஒலிக்கிறது. தன் தாயக மக்களுக்காக, தன் தாய்நிலத்தின் விடுதலைக்காக பர்கான் வானி என்கிற அச்சகோதரன் உயிரைச்சிந்தி ..உணர்வினைப் பரப்பி இருக்கிறான். இந்தியாவின் ஒட்டுக் கூலிக் குழுவான ராஸ்டிரிய ரைபிள்ஸ் மூலமாக சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் பர்கான் வானியை தங்களது அடையாளமாக தூக்கி சுமக்கிறார்கள் காஷ்மீரிகள்.
 
அவனது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான காஷ்மீரி தேசிய இனமக்கள் கலந்துக் கொண்டு தங்கள் சுய நிர்ணய உரிமைக்காக குரல் கொடுத்த அந்த இளைஞனின் வீரச்சாவுக்கு பெருமை சேர்த்து இருக்கிறார்கள்.
13600273_132058630558408_8383952100426859512_n
இந்நேரத்தில்.. தனது தாய்மண்ணின் விடுதலைக்காக ஆயுதம் தாங்கிய பர்கான் வானியின் இளந்தோள்கள் தங்கள் களைப்பிலிருந்து நிரந்தமாக விடுப்பட்டிருக்கின்றன. தனது தாய்நிலத்தின் பனிப்படர்ந்த மலைகளை பார்த்து ரசித்த அந்த கண்கள் நிலைக்குத்தி நின்று இருக்கின்றன. சதா லட்சியக் கனவோடு உலவிய அவனது கால்கள் மரக்கட்டை போல மரத்து நீண்டு இருக்கின்றன.
அவனது விடுதலைக் கனலை சுமந்த சொற்கள் ஊமையாக்கப்பட்டு விட்டன. அவனைப் பற்றி மிஞ்சியிருக்கும் ஏதோ ஒரு நினைவுத்துளியைக் கூட வல்லாதிக்கத்தின் அதிகார நாவுகள் மிச்சம் வைக்காமல் உறிஞ்சி விடக் கூடும். அவன் பற்றி எதுவும் இல்லை என நிம்மதியில் கொன்ற கூட்டம் ஆழ உறைந்திருக்கையில்..
 
பனி படர்ந்த அந்த மலைச்சாரல்களில் அவன் சுவாசித்த காற்று மட்டும் அதே மூர்க்கத்துடன் உலவிக் கொண்டு இருக்கிறது..
 
அக்காற்றை சுவாசிக்கிற ஏதோ ஒரு காஷ்மீரி உரத்த குரலில் முழங்குவான்..
 
காஷ்மீர் எங்கள் நாடு. இந்தியர்களே வெளியேறுங்கள்.
 
– மணி செந்தில்

Page 37 of 57

Powered by WordPress & Theme by Anders Norén