பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: அரசியல் Page 9 of 15

கஜா புயல்/கண்டன ஆர்ப்பாட்டம்/நாகை

[youtube]https://www.youtube.com/watch?v=2xYtsj7dz_U&fbclid=IwAR1Yko0oAfFEVz8BNYddopqxHxTNodTFbDbQwrDO6-hvRRBZ8fTG5f1kGJ0[/youtube]

பெரியார்- என் புரிதலில்..

 

 

தமிழ்ச் சமூகம் தனது நீண்ட நெடிய பாதையில் எத்தனையோ தலைவர்களை கண்டிருக்கிறது. ஆனால் பெரியார் போன்ற ஆளுமையை இந்த நிலம் அதுவரை பார்த்ததில்லை. பெரியார் எழுதியிருக்கிற /பேசியிருக்கிற அனைத்தும் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறது. நம் நிலத்தில் வேறு எந்த தலைவருக்கும் இப்படிப்பட்ட முறை வகை ஒழுங்கு நிகழ்ந்ததில்லை.

பெரியார் இருந்த காலகட்டத்தில் அவர் உரைத்த கருத்துக்களில் பலவற்றில் குறிப்பாக அவரது மொழிக் கொள்கையில் ,மொழி பற்றிய அவரது நிலைப்பாட்டில் எனக்கு கடுமையான முரண்கள் உண்டு. எல்லை மீட்பு போராட்டம், கீழ்வெண்மணி படுகொலை , 60 களின் இந்தி எதிர்ப்புப் போராட்டம் உள்ளிட்ட பல அரசியல் நடவடிக்கைகளில் அவரது செயல்பாடுகளில் எனக்கு தீவிரமான எதிர்ப்பு நிலை உண்டு.

பெரியாரால் தான் படித்தோம் பெரியாரால் தான் வளர்ந்தோம் பெரியாரால் தான் இங்கு அனைத்தும் நிகழ்ந்தது என்றெல்லாம் ஒரு காலக்கட்டத்தில் நானே பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன். ஆனால் ஒரு காலகட்டம் வந்தது. பெரியாரின் கருத்துக்களை பெரியார் வழி வந்தவர்களாக சொன்னவர்களே மதிக்காமல் கடந்தபோது ..
பெரியார் என்னைப் போன்ற பலரால் மறுவாசிப்புக்கு உட்படுத்தப்பட்டார். வரலாறு முழுக்க பல்வேறு முரண்கள், ஏற்றத்தாழ்வுகள் என அவர் கருத்துக்களில் ஏராளமான குழப்பமும், முன்னுக்குப் பின்னான மாறிய காட்சிகளும் புலப்பட்டன. இன அழிவிற்குப் பிறகு பெரியாரைப் பின்பற்றுகிறவர்கள் மீதான கடும் எதிர்ப்பு நிலை, விமர்சனங்கள் எழும்போதெல்லாம் பெரியாரை கேடயமாகப் பயன்படுத்தும் தந்திரம் போன்றவை பெரியாரை மீண்டும் மீண்டும் வாசிக்க வைத்தன.

என்னைப் பொறுத்தவரையில் பெரியார் கடவுள்- மதம்- சாதி போன்ற நிலைகளுக்கு எவ்வாறு எதிராக நின்றாரோ அதே அளவு நிலம் – இனம் -மொழி ஆகியவைகளுக்கும் எதிராக நின்றார். தேசிய இன பெருமிதங்களை கற்பிதம் என அவர் தவறாக புரிந்து கொண்டார் ‌. வரலாறு பல்வேறு தேசிய இனங்களின் பயணங்களால் நிகழ்ந்தது என்பதை அவர் மறுத்தார். எல்லாவித பிற பெருமிதங்களுக்கு அப்பால் மனிதனே மேலானவன் என அவர் நம்பினார். ஆனால் அந்த மனிதனே ஒரு தேசிய இனத்தின் அடிப்படை அலகு என்பதை அவர் மறுத்தார்.

இது போன்ற பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் நான் பெரியாரை தொடர்ந்து வாசித்துக் கொண்டேயிருக்கிறேன். அவர் பற்றி நான் முழுவதுமாக புரிந்து கொள்ள விரும்புகிறேன். முரண்களும் கருத்துக்களில் முன்னும் பின்னான குழப்பங்களும் உடைய அம்மனிதரை பெரியாரை கடவுளாக்கியவர்கள் மத்தியில் ஒரு கால கட்டத்தில் தோன்றிய சிந்தனையாளராக , சமூகத்தில் நிலவிய பல்வேறு மூடத்தனங்களுக்கு எதிரான கருத்துக்களை துணிச்சலாக உரைத்த ஒரு துணிச்சல்காரராக உணர்ந்து அவரை வாசித்து வருகிறேன்.

பெரியாரை படிக்காமல் அவர்தான் சர்வரோக நிவாரணி என்று பேசுவதும் அவர்தான் அனைத்திற்கும் காரணம் என இகழ்வதும் ஏறக்குறைய சரி சமமானதுதான். பெரியாரைப் பற்றி இருதரப்பினருமே அவரவர் பங்குக்கு பெருமிதங்களை, கற்பிதங்களை , விமர்சனங்களை கட்டி வைத்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் அப்பால் பெரியார் என்ற சிந்தனையாளரின் கருத்துக்கள் தமிழ் நிலத்தில் நிகழ்த்திய மாற்றங்கள் செலுத்திய ஆதிக்கங்கள் ஆகியவை மிக நுட்பமானவை. ஆனால் இவற்றையெல்லாம் தர்க்கரீதியில் உரையாடாமல் பெரியாரை கடவுள் ஆக்குவதிலும் , பெரியார் பெயரைச் சொல்லி வசூல் செய்வதிலும் அவரது வாரிசுகள் மும்முரமாக இருப்பதால் அவர் பற்றிய தீவிர அறிவுப்பூர்வமான உரையாடல்கள் தமிழ் மண்ணில் ஆரோக்கியமாக நிகழாமல் போனது தமிழ் அறிவுலகில் ஏற்பட்டிருக்கிற மாபெரும் குறையாகவே நான் கருதுகிறேன். அளவுக்கு மிஞ்சிய போற்றலும் இகழ்தலும் நிகழ்ந்த மனிதனாக பெரியார் திகழ்கிறார்.

இன்று தமிழ் தேசிய சிந்தனைகள் பரவலாக பரவிக்கொண்டிருக்கின்ற காலகட்டத்தில் பெரியார் பற்றிய பெருமித கதையாடல்களை சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு அவரை மறு வாசிப்புக்கு உட்படுத்துவதே தற்கால இளையோருக்கு சரியான ஒன்றாக இருக்க முடியும் என நான் நம்புகிறேன். பெரியாரை வாசிக்காமல் இகழ்வது எப்படி அபாயமோ பெரியாரை வாசிக்காமல் புகழ்வதும் அவ்வாறு அபாயகரமானது. இந்த இரு நிலைகளுக்கும் அப்பால் பெரியாரை ஒரு காலகட்டத்தின் மனிதர் என்ற வகையில் கருதி மெளனமாக கடந்து செல்பவர்கள் எத்தனையோ மடங்கு மேலானவர்கள்.

ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் தமிழ் நிலத்தில் தீவிரமான தாக்கத்தை செலுத்திய/ பல முற்போக்கு ,பெண்ணீய, மூடத்தன எதிர்ப்பு, சாதி மத எதிர்ப்பு என்கிற பல்வேறு சிந்தனை முறைமைகளுக்கு வலு சேர்த்த ஐயா பெரியார் அவர்களுக்கு எனது புகழ் வணக்கம்.

சமரசம் இல்லா சமரன்..

ஒரு முறை நீண்ட பயணத்தின் போது அண்ணன் சீமானிடம் ஒரு கேள்வியை கேட்டேன்.

சமரசம் என்றால் என்ன.. என்னை உற்று நோக்கியவாறு அவர் சட்டென்று பதிலளித்தார்

அது ஒரு சாவு.

உண்மையில் சமரசம் செய்து கொள்ளுதல் என்பது மானுட வாழ்வின் ஒரு அங்கமாக மாறி போனபின் சமரசம் என்பதே மரணத்திற்கு சமமானது என நினைக்கும் அண்ணன் சீமான் தான் தனித்துவமானவர் என்பதை ஒவ்வொரு முறையும் நிருபிப்பவர்.

எத்தனையோ முறை தன்னை நோக்கி வருகின்ற கனிவான அழைப்புகளை தவிர்ப்பது குறித்து அவர் பலமுறை சிந்தித்து இருக்கிறார். சட்டென ஏற்படும் சலனம் கூட தன் கொள்கைக்கான மரணம் என்பதை அவர் மறந்துவிடாமல் நிதானித்து இருக்கிறார்.

நெருங்கிய நண்பர்கள் நலம்விரும்பிகள் ஆகியோர் மூலம் வருகின்ற இந்த அழைப்புகள் தன்னை தவிர்க்கமுடியாத சமரசத்திற்கு உட்படுத்தி விடும் என்று எண்ணி தவிர்த்திருக்கிறார்.

ஊரே அம்மணமாக அலைகிறது.‌ உனக்கு என்ன..என்று பலரும் கேட்டபோது என் மனதிற்கு எது சரியானதோ அதை நோக்கியே போவேன் என்று சொல்லி.. அவர் தனியே சென்று கொண்டிருக்கிறார்.

சமரசமற்ற அரசியல் என்பது சற்றே கடினமானது. அதுவும் வெகுஜன தேர்தல் அரசியலில் சமரசம் என்பது மறுக்க முடியாத அவசிய குணம். சென்ற சட்டமன்றத் தேர்தலில் ஏதோவொரு கூட்டணியில் இணைந்து நாலைந்து சீட்டுகள் வாங்கி இரண்டு மூன்று வெற்றி பெற்று அரசியல் அங்கீகாரம் பெற்றுவிடலாம் என்று சில பெரியவர்கள் ஆலோசனை சொன்னபோது, நான் இரண்டு மூன்று சீட்டுக்காக வந்தவன் அல்ல ..இரண்டு நாட்டிற்காக வந்தவன் என்று சொல்லி தவிர்த்ததை நாங்களெல்லாம் அருகிலேயே இருந்து கவனித்தோம்.

தெரியும். தேர்தல் யுத்தம் கடினம்தான். அதில் உண்மையின் சத்தம் இன்னும் கடினம். எவ்வித சாதிய பின்புலமும் பொருளாதாரப் பின்புலமும் இல்லாத எளிய குடும்பத்தில் பிள்ளைகள் ஒரு மாற்று அரசியலை முன்வைத்து தேர்தல் களத்தில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவது என்பது முதலைகள் வாழும் ஆற்றில் முயல்கள் நீந்தி போவது போல.

ஆனாலும் அந்த நெருப்பாற்றில் இன்முகத்துடன் நீந்த அவர் தயாராகவே இருந்தார். தன் தம்பிகள் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தனி ஒரு மனிதனாய் ஓடி ஓடி பிரச்சாரம் செய்தார். தனித்திருக்கும் இரவு வேளைகளில் கூட ..உளவியலாய் சோர்ந்து இருக்கும் யாரோ ஒருவரை அலைபேசி வாயிலாக அழைத்து வலிமைப் படுத்திக் கொண்டிருந்தார்.

அது அவருக்கென்றே, அவருடன் பிறந்த , அவரது பிடிவாதம். மரணம் எல்லா தவறுகளையும் கழுவி ஒருவரை புனிதர் ஆக்கிவிடும் என்றால்.. இங்கே நீரோ மன்னர்கள் கூட புனிதர்களே என்பதில் அவர் தீர்மானமாக இருந்தார்.

ஏனெனில் அவர் கடந்து வந்த பாதை ஏமாற்றங்களும் துயரங்களும் நிரம்பியது. இனம் அழிந்த காலத்தில்
… பிணம் பிணமாய் விழுந்த பொழுதில் யாராவது தன் மக்களுக்காக போராட வரமாட்டார்களா என ஏங்கித் தவித்து ஒவ்வொரு மேடையாக ஏறி அனைவருடனும் கைகோர்த்து ஏதாவது நல்லது நடக்காதா என்று ஏங்கி ஏமாந்தவர் அவர்.

அந்த வலி தான் அவர் ஆழ்மனதிற்குள் அப்படியே இருக்கிறது. தன் கண் முன்னே தனது உடன் பிறந்தார்கள் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிர்விட்ட பெரும் துயர் கதை அவரை எப்போதும் நிம்மதியுடன் இருக்க விடுவதில்லை. கவிதையும் ,பாடலும் ,இசையும் ,கதையும் பொங்கிய சீமான் என்ற இளைஞன் உறைந்துப் போனான். பெரும் கோபமும், சீற்றமும் ,ஆற்ற முடியாத காயமும், உடைய தலைவரின் தம்பி சீமான் எழுந்து நின்றார்.

எனவேதான் ஊர் உலகமே திமுக தலைவரின் மரணத்தை புனிதப்படுத்தி துயர இசை வாசித்துக் கொண்டிருக்கும் போது.. இவர் அமைதியாக இருந்தார். இதுவரை உலகத்திலேயே நிகழாத ஒன்று நம் உள்ளூரில் நிகழ்ந்து விட்டது போல ஆளாளுக்கு துடிக்கும் துடிப்பை பார்த்து.. நடிக்கும் நடிப்பை பார்த்து.. நாங்களெல்லாம் மிரண்ட போது.. அண்ணன் தடுமாறாமல்.. தடம் மாறாமல் .. அமைதியாக இருந்தார்.

அது ஒரு வித்தியாசமான ஒரு அமைதி. எதனாலும் அச்சுறுத்த முடியாத.. அபகரிக்க முடியாத.. ஆழ்கடலின் சலனமற்ற நிலை போன்ற அமைதி. இந்த மரணம் மட்டுமல்ல ..எந்த மரணமும் எங்களை ஒன்றும் செய்து விட முடியாது .ஏனெனில் நாங்களே மரணத்தின் தொட்டில்களில் பிறந்தவர்கள் என்ற புரிதலில் ஏற்பட்ட அமைதி.

இதோ ..இவர்கள் அடுத்த மீட்பரை தயார் செய்துகொண்டு எங்கள் முன்னால் களத்தில் நிற்கிறார்கள். வழிவழியாய் பரம்பரை பரம்பரையாய் தொடரும் சங்கர மட வாரிசுகளாய் வரிசை கட்டி நிற்கிறார்கள். நேற்றுவரை ஏசியவர்கள் இன்று.. புதிய தலைவரை புனிதராக்கி விடுவதில் மும்முரமாய் இருக்கிறார்கள். வாரிசு அரசியல் தகுதியற்ற தலைமை என்றெல்லாம் தாறுமாறாக பேசிவிட்டு சிலபல சீட்டுகளுக்காக ஒரே மேடையில் தமிழை அடமானம் வைக்க தயாராகிவிட்டார்கள்.

நாங்கள் இதையும் புன்னகையோடு ரசித்துக் கொண்டிருக்கிறோம்.

ஏனெனில் எதையும் சமரசமில்லாத சமரர்களாக அணுகி சமர் செய்வது எப்படி என்பதை சரித்திரம் எங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது.

மேலும் அந்த சரித்திரமே எங்களுக்கு சரியான ஒருவனை அண்ணனாக அளித்திருக்கிறது.

கம்பீர விழிகளோடு. ஒரு இளைய தலைமுறையின் பயணம் தொடர்கிறது.

விசுவாச குருட்டுத்தனம் இழைக்கும் விபரீதங்கள்..

 

 

திமுக தலைவர் கருணாநிதி நினைவேந்தல் நிகழ்விற்கு பாஜக தலைவர் அமித் ஷா வரவேண்டுமென திமுக செயல் தலைவர் ஸ்டாலினும், கனிமொழியும் வேண்டிக் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவரது வருகை உறுதி செய்யப்பட்டு இருப்பதாக செய்திகள் வரும் நிலையில் நமக்கு கண்முன் சில காட்சிகள் நிழலாடுகின்றன.

சென்ற வாரத்தில் தமிழகத்தின் புகழ்ப்பெற்ற எழுத்தாளர்கள் இலக்கிய ஆளுமைகள், கவிஞர்கள் பங்கேற்ற மறைந்த திமுக தலைவர் மு கருணாநிதி அவர்களுடைய நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது .அதில் பேசிய பலரும் திராவிட இயக்கம்தான் இந்துத்துவாவிற்கு எதிராக செயல்பட்டிருக்கிறது ,இனியும் செயல்பட இருக்கிறது, எனவே திமுகவை காப்பாற்ற வேண்டும் என்றெல்லாம் உணர்வு பொங்க பேசினார்கள்.

திமுக தலைவர் மு கருணாநிதி உயிருடன் இருந்தபோது கூட அவர் மேடையில் ஏற மறுத்தவர்கள் அவர் இறந்த பிறகு அவரைப் பற்றி புகழ்ந்து பேசியது இலக்கிய முறைகளுக்கு ஏற்புடைய பண்புநலன் என்றும்.. திரு மு கருணாநிதி வெறும் அரசியல் தலைவராக செயல்பட்டது மட்டுமில்லாமல் அவர் ஒரு எழுத்தாளராகவும் இயங்கியிருக்கிறார் எனவே இலக்கியத்துறை அஞ்சலி செலுத்துவது என்பது முறையானது என்றெல்லாம் ஆயிரத்தெட்டு சமாளிப்புகள் சொல்லப்பட்டன.

இது குறித்து நமக்கு எவ்வித அக்கறையோ கவலையோ இல்லாவிட்டாலும் கூட.. எப்போதும் இந்துத்துவாவோடு நேரடியான கூட்டில் இருக்கும் திமுகவை இந்துத்துவ -பார்ப்பனிய கோட்பாடுகளுக்கு எதிரான ஒன்றாக நிறுவத் துடிக்கும் .. அறிவுஜீவித்தனம் தான் நம்மை வியக்க (?) வைக்கிறது.

முதன்முதலாக பாஜக என்ற கட்சியை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியது இதே திராவிட இயக்கத்தினர்தான். அவர்கள் மந்திரிசபையில் இடம் பிடித்து மருமகனுக்கு ஒரு பதவி.. தன்னுடன் மாங்காய் பறித்தவருக்கு ஒரு பதவி என பலருக்கும் பதவி வாங்கி கொடுத்து ,பதவி சுகம் அடைந்து பல்லாயிரக்கணக்கான கோடி ஊழலில் பங்கு போட்டதும் இதே திராவிட இயக்கத்தினர் தான். குஜராத் மதவெறி படுகொலையின் போது பாராளுமன்றத்தில் இதே ஆரிய பார்ப்பனிய இந்துத்துவ பாஜகவுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததும் இதே திராவிட இயக்கத்தினர் தான்.

இதில் எந்த லட்சணத்தில் ஆரிய பார்ப்பன தனத்திற்கு எதிரானவர்கள் இந்த திராவிட இயக்கத்தினர் என்று நீண்ட நாட்களாக கற்பிதம் செய்யப்பட்டு வருகிறது என்பது புரியவில்லை.

இன்று திராவிட இயக்கத்தின் ஒப்புயர்வற்ற தலைவர் , திராவிட இனத்தின் அடையாளம்..மு.க விற்கு புகழுரை உரைக்கவும், கலைஞர் கானா பாடவும் பாஜக தலைவர் அமித்ஷா வருவது பற்றி நமக்கெல்லாம் எவ்வித ஆச்சரியமும் இல்லை. இதுதான் அவர்களது குணம் .இதுதான் அவர்களது நிறம். இதுவரை காவியை கருப்பாக எண்ணிக்கொண்டிருந்தது நமது கண் குருடு.

ஆனால் கண் குருட்டினை கண் குருடாக ஒப்புக்கொள்ளாமல் அதை பார்வை வெளிச்சமாக மாற்றி பேசுவதுதான் அறிவுஜீவித்தனம் போல. என்ன விலை கொடுத்தேனும் திராவிட இயக்கத்தை காப்பாற்ற வேண்டும் என முழங்கியவர்கள் இன்று அமித்ஷா வருகை பற்றி என்ன சொல்லப் போகிறார்கள்..??

எதுவும் சொல்ல மாட்டார்கள். ஆனால் நாம் தமிழர் என்றால் அது இனவாதம் , இந்துத்துவத்திற்கு ஆதரவானது , காவி அரசியலின் மறைமுக வடிவம் , சாதி பயங்கரவாதத்தை சாடாதது என்றெல்லாம் சரமாரியாக பேசி எழுதி தாக்கியவர்கள் இன்று வாய் மூடி மன்னிப்பது தான் உலகத்திலேயே ஆகப்பெரும் கள்ளத்தனம். வழக்கம் போல இது ஒரு இரங்கல் நிகழ்ச்சி தானே.. அகில இந்தியத் தலைவர்கள் பலர் கலந்து கொள்ளும் அந்த நிகழ்வில் அமித்ஷாவும் கலந்து கொள்கிறார் அதில் என்ன வந்தது.. திமுக என்ன கூட்டணியா வைத்து விட்டது.. என்றெல்லாம் சமாளிபிகேஷன்களை நாம் எதிர்பார்க்கலாம் ஆனால் இந்த சமாளிப்புகள் சொல்லும் உதடுகள் தங்கள் ஆன்மாவிற்கு நேர்மை செய்கிறார்களா என்று அவர்களுக்குள்ளாகவே கேட்டுக் கொள்ளலாம். அதுசரி. பெரியார் – ராஜாஜி நட்புக்கே நாம் பெருமை பட்டவர்கள் தானே..

நல்ல வேளை.. இவர்களெல்லாம் நம்மையும் புகழவில்லை . மாறாக ஏசி இகழ்கிறார்கள் என்பது நமக்குள்ள ஒரே தகுதி. நாம் சரியாகத்தான் இருக்கிறோம் என்பதற்கான அளவீடு.

இனிமேலும் திராவிடம் என்பது ஆரியத்திற்கு எதிரானது, கலைஞர் என்பவர் பார்ப்பனர்களுக்கு எதிரானவர் , அவர் தத்துவம் பார்ப்பனியத்திற்கு எதிரானது என்றெல்லாம் விசுவாச வரலாறு எழுதாமல்… செஞ்சோற்று சொற்கள் பேசாமல்.. நேரடியாக அமித்ஷா மேடையிலும், ஆர்எஸ்எஸ் மேடையிலும் இடம்பிடித்து தங்களுக்கென ஒரு சாகித்ய அகாதமி விருதையோ ,ஒரு பத்மபூஷன் விருதையோ பெற போட்டி போடுவது மேலானது. நேர்மையானது. அப்படி வந்தால் கூட ஜெயமோகன் போல மறுத்து வேண்டாம் என சொல்லி சீன் காட்டலாம்.

திராவிடம் என்பதே திருட்டுத்தனம் தான். இனிமேலும் அதை ஆரியத்திற்கு இந்துத்துவத்திற்கு எதிரான ஒன்றாக கட்டமைப்பது குருட்டுத்தனம்.

கூடிய விரைவில் அண்ணா அறிவாலயத்தில் இருந்து பிள்ளையார் சதுர்த்திக்கு ஊர்வலம் தொடங்கும் என்கின்ற செய்திக்காகவும் நாம் காத்திருப்போமாக.

அப்போதும் சில எழுத்துக்கள் இது ஒரு அரசியல் தந்திரம் என்றெல்லாம் பேசுவதையும் நாம் கண்டு களித்திருப்போமாக.

ஜெய் ஸ்ரீராம்.

ஒரு சிறிய விளக்கம்…

தான் அடிமை என உணர்ந்த ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்கான விழிப்பும், எழுச்சியும் நீங்களெல்லாம் நினைப்பது போல அவ்வளவு நாகரீகமாகவும்,நாசூக்காகவும் இருக்காது தான்.

இதுவரை மொட மொட வெள்ளைச்சட்டைப் போட்டுக் கொண்டு சட்டைப்பையில் கட்சித் தலைவன் படத்தை வைத்துக்கொண்டு பெரிய பெரிய கார்களில் பவனி வந்து, பிளக்ஸ் அடித்து,போஸ்டர் அடித்து வட்டம்,நகரம்,ஒன்றியம் ,கட்டம், சதுரம் என பொறுப்பு வாங்கி பஞ்சாயத்து பண்ணுவதுதான் அரசியல் என்பதை தலைகீழாக மாற்றத் துடிக்கும் படித்த இளைஞனின் அரசியல் அவ்வளவு பரவசமாக இருக்காது தான்..

வீழ்ந்த கதையை அறிந்து,. வீழும் நிலையை உணர்ந்து,இனி எழ வேண்டிய நிலை அறிந்து பதவி,பட்டம்,பணம் என எதையும் எதிர்பாராமல் உடல் முழுதும் வியர்வை வழிய வீதி தோறும் அலைந்து எளிய மக்களின் புரட்சியை வரலாற்றின் பொன்னேடுகளில் பொறிக்க உழைப்பவர்களின் உழைப்பு அவ்வளவு உவப்பானதாக இருக்காது தான்.

உள்ளன்போடு தாய் மண்ணை நேசித்து, உதிரம் வழிய இறந்த உடன் பிறந்தவர்கள் நினைவை சுமந்து, இனம் அழிய உடன் நின்ற துரோகிகளுக்கு இனி எழ முடியாத வீழ்ச்சியை அளித்து, எதிரிகளின் பகை முடிக்க விலை தலையே ஆனாலும் தரத்துடித்து, இனம் அழிந்த வலி ஈந்த கடும் சினத்தையே அரசியல் மூலமாகக் கொண்டு ,மூர்க்கமாக நிற்கும் எங்களின் எழுத்தோ,கருத்தோ,பேச்சோ, மூச்சோ நீங்கள் நினைக்குமளவிற்கு அவ்வளவு மென்மையானதாக இருக்காது தான்.

இதுவரை இருந்ததே இனிமேலும் இருக்க வேண்டும்.. அதே துருப்பிடித்த உங்களது தகர தத்துவம்,
அதே நீர்த்துப் போன உங்களது வாய்க்கரிசி வாக்குறுதிகள், அதே யாருக்கும் பயன் படாத பட்டுப்போன வசனங்கள்,அதே காலத்தை கடத்தும் உங்களது தவறுகள் இன்னும் இனி வரும் தலைமுறைக்கும் நீடிக்க வேண்டும் என்ற உங்களது ஆத்மார்த்த பிராத்தனைகளுக்கு வெடிகுண்டு வைக்கும் எங்களை உங்களால் சற்றும் சகிக்க முடியாதுதான்..

முடியாது தான்..முடியாது தான்

எங்களது உடையும்,எங்களது படையும் உங்களை வெறுப்பேற்றும் தான்..

எங்களது மொழியும்,எங்களது வழியும்
உங்களை உறங்க விடாது தான்..

எங்களது தர்க்கமும்,எங்களது தத்துவமும்
உங்கள் கோட்டைகளை தகர்க்கும் தான்..

ஆமாம் . திட்டமிட்டுதான் நகர்கிறோம்.

வன்மம் கொண்டுதான் வளர்கிறோம்.

முடிந்தால் எதிருங்கள்.

இல்லையேல் நகருங்கள்.

எதுவும் முடியவில்லை யா..

இப்படியே உங்கள் மனதிற்குள்ளாகவே
பதறுங்கள்.கதறுங்கள்.

ஏனெனில் நாங்கள் வானையே உரச
வளரும் சிகரங்கள்.

நாம் தமிழர்.

பெருந்தலைவருக்கு எதிரான பிழைப்புத்தனங்கள்

 

 

 

எப்போதும் தவறான,விஷமத்தனமான உரையாடல்களை உருவாக்குவது திராவிட பற்றாளர்களுக்கு கைவந்த கலை. கடந்த 2008-09 காலத்தில் கூட ஈழம் அழிவின் விளிம்பில் நின்ற பொழுதுகளில் கூட விடுதலைப்புலிகள் சகோதர யுத்தம் நடத்தியவர்கள் என்றெல்லாம் ஒரு விவாதத்தை திட்டமிட்டு உருவாக்கியது திமுக.எப்போதும் கருணாநிதியின் அறிக்கைகளில் இந்த சகோதர யுத்த புராணம் சற்று தூக்கலாகவே இருக்கும். இப்போதும் கூட தலைவர் பிரபாகரனைப் பற்றி அவ்வப்போது திமுக இணையத்தள அணியினர் விஷமத்தனமாக விமர்சனங்கள் வைப்பதும், அதை திமுக தலைமை ரசிப்பதும் அனைவரும் அறிந்ததே.

அதே போல இப்போதும் காமராசர் எதிர் பெரியார் என்கிற அபாயகரமான விவாதத்தினை பெரியார் திடல் தொடங்கியுள்ளது. காமராசரை ஒட்டுமொத்த தமிழினமும் தனது பெருமைக்குரிய சின்னமாக, நேர்மையான ஆட்சிமுறை/ மக்கள் நலன் சார்ந்த அரசியல் இவைகளின் அடையாளமாக காண்கின்ற இவ்வேளையில் அவருக்கு எதிராக பெரியாரை முன் நிறுத்துவது காமராசரின் புகழுக்கு எவ்வித களங்கமுமில்லை. இந்த விவாதம் பெரியாருக்குதான் இழுக்கினை ஏற்படுத்தும்.

கடந்த 2009 இன அழிவிற்கு பிறகான தமிழர் அரசியல் வேறு வடிவங்களில் மாறி இருக்கிறது. தமிழ்/தமிழர் என்கிற அடையாளங்கள் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்த்திப் பிடிக்கப்படுகிறது. திராவிட இயக்கங்கள் ஒரு காலத்தில் எள்ளி நகையாடிய தமிழரின் பண்பாட்டு விழுமியங்கள் தங்களது பெருமித நிலையை மறுபடியும் அடைந்திருக்கின்றன. சாட்சி : ஜல்லிக்கட்டு போராட்டம்.

மொழி ஒரு தொடர்புக் கருவி மட்டுமே என பேசிய பெரியார் இன்று தமிழின இளையோர்களால் மறுவாசிப்பிற்கு உள்ளாகி இருக்கிறார். இந்த போக்கு பெரியாரை கடவுளாக்கி, திராவிடத்தலைவர்களை ஆதீனமாக்கி, அவர்களது மகன்களை இளைய ஆதீனமாக்கி திராவிடக்கட்சிகளை மடமாக்கி வழிபடும் திராவிடப்பற்றாளர்களுக்கு மிகுந்த பதட்டத்தை உண்டாக்கி இருக்கிறது. அந்த பதட்டமே ஐயா திருச்சி வேலுச்சாமி சொல்வது போல ஆட்டைக் கடித்து ,மாட்டைக் கடித்து, இன்றும் மனிதனையும் கடிக்கத் தொடங்கி இருக்கிறது.

பெருந்தலைவர் காமராசர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் அல்ல. காமராசரின் இந்திய தேசிய உணர்வு கடந்த பல காலங்களில் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் காமராசர் மறு வாசிப்பிற்கு உள்ளாகிற, விமர்சனங்களுக்கு நேருகிற ஒரு ஆளுமையாக என்றுமே இருந்திருக்கிறார். ஆனால் பெரியாரை புனித முக்காடு அணிவித்து பெரியாரைப் பற்றி எவ்விதமான விவாதங்களும் எழாமல் கவனம் காப்பதும், மீறி எழுப்புபவர்கள் மீது அவதூற்று பிரச்சாரங்களால் எகிறி தாக்குவதும் திராவிட ஆதரவாளர்களின் இயல்பாக உள்ளது. தன் வாழ்நாளில் எத்தனையோ எதிர் பிரச்சாரங்களை நேரிடையாக எதிர் கொண்டு நின்றவர் பெரியார். ஆனால் அவரது வாரிசுகளாக அறிவித்து கொள்கிறவர்கள் சகிப்பற்றத் தன்மையின் சின்னங்களாக மாறி இருக்கிறார்கள்.

பெருந்தலைவர் காமராசர் போன்ற தமிழின அடையாளங்கள் மீது தகுதியற்ற விமர்சனங்களை வைத்தால் அது பெரியாருக்கு எதிராக திரும்பும் என்பது பெரியார் திடலுக்கு தெரியாதது அல்ல. அதையும் மீறி வைக்கிறார்கள் என்றால்.. பெரியாரைத் தாண்டியும் அவர்களுக்கு ஒரு அரசியல் உள் நோக்கம் இருப்பதை புரிந்துக் கொள்ள முடிகிறது.

என்றுமே பெருந்தலைவர் காமராசர் பெரியாரின் புகழ் வெளிச்சத்தில் வெற்றிப் பெற்ற ஆளுமை அல்ல. சமகாலத்தில் இருவருமே புகழ்ப் பெற்ற தலைவர்கள். பெரியாரின் ஆலோசனைகளை காமராசர் கேட்டிருக்கக் கூடும். ஆனால் முடிவுகளை காமராசர் தன்னியல்பில் தான் எடுத்தார். ராஜாஜி போன்ற எதிர்முரணை தன் வரலாற்றில் மிக நெருக்கமாக வைத்துக் கொண்ட பெரியாரால் ராஜாஜியின் எதிரியான காமராசரை ஆதரிக்க மட்டுமே முடிந்தது. இந்த வித்தியாசமான முரண்புள்ளிகளை காமராசர் மிக நன்றாக புரிந்து வைத்திருந்தார். அதனால் தான் காமராசரது இறுதிக்காலத்தில் திமுகவோடும், இராஜாஜியோடும் மீண்டும் இணக்கமாகி இருந்த பெரியாரை காமராசர் வெகுவாக விமர்சிக்கவில்லை. எனவே காமராசர் மீது பெரியார் மிகுந்த ஆதிக்கத்தினை செலுத்தினார் என்பதும், பெரியாரின் ஆலோசனைகளை வைத்தே காமராசர் ஆட்சி நடத்தினார் என்பதும் வெகுவான மிகைப்புள்ளிகள்.

பெருந்தலைவர் காமராசரைப் பற்றி நிறைய தகவல்கள் நூல்கள் வாயிலாகவும், இணையத்தளங்கள் வாயிலாகவும் நமக்கு கிடைக்கின்றன. அவரது ஆட்சிக்காலமே தமிழகத்தின் மாபெரும் பொற்காலமாக திகழ்ந்திருக்கிறது. தன் செய்த சாதனைகளை எல்லாம் பட்டியலிட்டு தங்கத்தலைவனுக்கு பாராட்டு விழா என்பதான அபத்த விளம்பரங்களை காமராசர் என்றுமே செய்துக் காட்டியதில்லை. சென்ற இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஏற்படாத மறுமலர்ச்சியும் விழிப்பும் இப்போது ஏற்பட்டுள்ளன. இதற்குக் காரணம் நமது காமராசர்தான். ஊர்தோறும் சாரம் தொழில்வளம் ஏற்பட்டுள்ளன. மூவேந்தர் காலத்தில்கூட நிகழாத இந்த அதிசயத்தைச் சாதித்த நமது காமராசரின் அறிவுத்திறனை மறுக்க முடியுமா?” என்று பெரியாரே வியந்துப் பாராட்டிய பெருமகனாக காமராசர் திகழ்ந்துள்ளார். பெரியார் தன் இயக்கத்திற்காக பெருச்சொத்தினை சேர்த்தவர். ஆனால் காமராசர் தன் கட்சியின் பெருஞ்சொத்தாக விளங்கியவர். திராவிட இயக்கங்கள் தமிழக அரசியலில் செய்த நலன்களை விட கேடுகளே அதிகம். அதில் மிக முக்கியமானது அரசியலில் இருந்த எளிமையை துடைத்து எறிந்தது. மக்களுக்காக உழைக்கிற அரசியலை ஒரு தொழிலாக மாற்றி, நிறுவனமாக மாற்றி கோடானுகோடி கொள்ளையடிக்கிற வணிகமாக மாற்றி ஆசியாவின் பெரும் பணக்காரர்களாக திராவிடத் தலைமைகள் மாறியது தமிழக அரசியலின் நேர்மை உணர்வை இல்லாதாக்கியது.

இவர்கள் விமர்சிக்கும் காமராசர் தான் இறக்கும் போது தன் தலையணைக்கு கீழே வைத்திருந்த சொற்ப பணத்தை (ரூ.160/-) தவிர வேறு எந்த சொத்தினையும் பொதுவாழ்க்கை மூலம் அடையாதவர். அவரின் குடும்பத்தினர்களோ, உறவினர்களோ அரசியலில் ஆதாயம் அடையாத அளவிற்கு சுய வாழ்க்கை சுத்தம் கொண்டவர். ஆனால் திராவிட அரசியல் வாதிகள்…????

பெரியாருக்கு எதிராக காமராசரை நிறுத்துவது அல்ல நமது நோக்கம். காமராசரை பெரியாருக்கு கீழே நிறுத்துவதை தடுப்பதே நமது நோக்கம். வரலாற்றினை தன் கொல்லைப்புற வாய்க்காலாக கருதி, அண்ணா அறிவாலயம் திசையில் மடைமாற்ற பிராயத்தனம் செய்யும் மதிமாறன் போன்றோரே பெரியாரின் கருத்தியலுக்கும், அவரது வாழ்க்கைக்கும் துரோகம் செய்கிறவர்களாக, பெரியாரை பலர் புறக்கணிக்கும் போக்கிற்கு காரணிகளாக திகழ்கிறார்கள்.

காமராசர் தான் கொண்ட இந்திய தேசிய உணர்வால் ஏமாற்றப்பட்டார். . ஆனால் அவரின் தியாகமும், சேவையும் ,இம்மண்ணுக்கேரிய ஒரு தூயத் தமிழனின் அப்பழுக்கற்ற சமூகப் பணி. அக்குணம் பாழ்படுத்தப்படாத ஒரு பச்சைத் தமிழனின் மரபியல் சார்ந்த பரம்பரைக்குணம். அதை குறை சொல்ல இம்மண்ணை கொள்ளையடித்தவர்களுக்கு, அடித்துக் கொண்டு இருப்பவர்களுக்கு, அடிக்கத் துடிப்பவர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை.

நான் ஏற்கனவே சொன்னதுதான் . காமராசரை ஆதரிக்கவே பெரியாருக்கு உரிமை உண்டு. அதை புரிந்துக் கொண்டு அவர் ஆதரித்தார். எதிர்க்க இவர்களில் யாருக்கும் தகுதி இல்லை.

பெரியார் தன்னை கன்னடன் என்று வெளிப்படையாக அறிவித்துக் கொண்டவர். இந்த மண்ணை ஆளும் உரிமை தனக்கில்லை என வெளிப்படையாக ஒத்துக் கொண்டவர். அது பச்சைத்தமிழன் காமராசருக்கே இருக்கிறது என அறிவித்தவர். பெரியாரின் வாரிசுகள் என அறிவித்துக் கொள்ளும் இவர்கள் தமிழ்நாட்டை தமிழன் ஆள வேண்டும் என்கிற பெரியார் ஆதரித்த ஒரு முழக்கத்தை எதிர்ப்பதுதான் திராவிட அரசியல்வாதிகளின் பிழைப்புத்தனமாக இருக்கிறது.

பிழைத்து விட்டு போங்கள்.

ஆனால் எங்களுக்காக உழைத்த காமராசர் மீது பெரியாரை காட்டி கறைப்படுத்தாதீர்கள்.

அது உங்களையே வீழ்த்தும். ஏற்கனவே தடுமாறிக்கொண்டு இருக்கிற உங்களது கட்டுமரங்களும், கப்பல்களும், காமராசரை தமிழின அடையாளமாக உணர்ந்து எழுந்து வருகிற தமிழ்த்தேசிய உணர்வு என்கிற பேரலையால் முழ்கடிக்கப்படும்.

காமராசரைப் பற்றி அறிய:

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D

காமராசரைப் பற்றியும்,
இச்சர்ச்சைப்பற்றியும்
திருச்சி வேலுச்சாமி அவர்களின்
எதிர்வினை

https://www.youtube.com/watch?v=_olmNq7mcm4

மிகைற்ற சினமும்..நேசிப்பின் ரணமும்

திராவிடத் தத்துவம் தனக்குத்தானே மதிப்பிழந்து,அம்பலப்பட்டு நிற்கிறது. நிகழ்கால அரசியலில் தத்துவ தலைமையில்லாமல் காவி அரசியலோடு கலந்து விட துடிக்கிறது. பெரியாரை கேடயமாகக் கொண்டு தனக்கு எதிரான விமர்சனங்களை எதிர்க்கொள்ள எத்தனிக்கிறது. இம்முயற்சி கேடயத்தையும் சேர்த்தே வீழ்த்தும் என்பது தெரிந்தும் பிரபாகரன் என்ன கடவுளா என கேள்வி கேட்டு திசை திருப்புகிறது. இதற்கு எதிர்வினையாக அப்படி என்றால் தெருவிற்கு தெரு சிலைகள் கொண்ட பெரியார் என்ன கடவுளா என்ற கேள்வி எழும்பும் என்பது தெரிந்தும்..பிரபாகரன் vs பெரியார் என்கிற விளையாட்டில் திராவிடத் தலைவர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

பாவம் அவர்கள். தர்க்க ரீதியான எந்த கேள்விக்கும் அவர்களது நடைமுறை முரண்களே பதிலாகிப் போனதால் சீமானை சீண்டிப்பார்க்கிறார்கள்.

அண்ணன் சீமான் ஈழம் சென்று விட்டு திரும்பி அடுத்த நான்கு வருடம் இதே பெ.தி.க மேடைகளில் தன் ஈழப் பயணம் குறித்து நிறைய செய்திகளை பகிர்ந்து இருக்கிறார். அப்போதெல்லாம் பக்கத்தில் இருந்து பல்லிளித்த இதே தலைவர்கள் இன்று பாய்ச்சலாய் பாய்வதன் காரணம் அணையப் போகிற திராவிடத் தீபத்தை எதை கொண்டாவது சுடர் விட வைக்கும் தந்திரமே.

திராவிடபிழைப்புவாதங்களை,
பித்தலாட்டங்களை,தமிழின துரோகங்களை இன்றைய இளைஞர்கள் இணையம் வழி கேள்வி எழுப்புகிறார்கள் ‌. எள்ளி நகையாடுகிறார்கள். இந்த எழுதலுக்கு காரணம் சீமான் என திராவிடத் தலைமைகள் நம்புகிறார்கள்.
அதனால் ஏற்பட்ட சினம் தான்
சீமான் மீது வன்மமாய் கவிழ்ந்துக் கிடக்கிறது.

ஈழத்திற்கு சென்று வந்து கொளத்தூர் மணி அவர்களிடம் சீமான் மூலமாக என்னென்ன தகவல்கள் பரிமாறப்பட்டன என அருகிலிருந்து கவனித்தோர் எல்லாம் இன்னும்,இன்றும் இருக்கிறோம் என்பதை மறந்து விட்டு, அக்காலக்கட்டத்தில் பல செய்திகள் பெரியார் தி.க மேடைகளில் கொளத்தூர் மணி அவர்கள் முன்னிலையில் சீமான் அண்ணனால் பகிரப்பட்டன என்பதையும் மறைத்து இன்று கொளத்தூர் மணி திடீரென தோன்றி காந்தியை சுட்டுட்டாங்களா என்கிற ரீதியில் பேசுவதுதான் மிகையாக தோன்றுகிறது. சீமான் சொல்வதெல்லாம் மிகை என்றால்..அன்றே கொளத்தூர் மணி மறுத்து இருக்கலாம். தங்க ஊசி என்றாலும் கண்ணில் குத்திக் கொள்ள முடியுமா..என்றளவிற்காவது எதிர்வினை ஆற்றி இருக்கலாம். அதற்கு பிறகு கூட சீமானோடு நெருக்கமாய் இருந்த காலக்கட்டங்கள் இருந்தன என்பதை மணி அண்ணன் மறந்திருக்கலாம். நாங்கள் மறக்கவில்லை. அப்போதெல்லாம் ஆற்றாத எதிர்வினை இப்போது எகிறி வந்து விழுகிறது என்று சொன்னால்..சொல்லப்பட்டவை எதுவும் மிகை அல்ல.. இப்போது கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றும் எதிர்வினைகளே மிகை.

இன்று படிக்காதவராய் மணி அவர்களால் அடையாளம் காட்டப்படும் சீமான் தான் அன்று தெருத்தெருவாக சென்று பெரியாரை பரப்ப பயன்படுத்தப்பட்ட ஆயுதம். இந்தப் படிக்காத சீமான் தான் அன்று கொளத்தூர் மணி கைது செய்யப்பட்ட போது துண்டேந்தி வசூல் செய்ய பயன்படுத்தப்பட்ட கருவி‌. இந்த படிக்காத சீமான் தான் அன்று பெரியாரைப் பற்றிப் பேசும்போது கொளத்தூர் மணியை உச்சி மோர வைத்த பரவசம். என்ன செய்வது.. சமீப காலமாக ஸ்டாலின் போன்ற மெத்த படித்த அறிவாளிகளோடு ஏற்பட்ட சகவாசம் சீமானை படிக்காதவராய் பார்க்கத் தோன்றுகிறது போலும். ஒத்துக் கொள்ள வேண்டியதுதான். ஸ்டாலின் மேதையாக,மீட்பராக,காப்பராக தோன்றும் விழிகளுக்கு சீமானை படிக்காதவராக தான் தோன்றும்.

அண்ணன் கொளத்தூர் மணி மீது நானெல்லாம் பெரு மதிப்புக் கொண்டவன். திமுக வெறுப்பினை அவர் மூலமாகவே அடைந்தவன். அவர் இன்று எளிதாக ஸ்டாலினைப் பார்த்து ,வீரமணியை சந்தித்து சமாதானமாகிக் கொள்கிறார். எங்களால் ஆக முடியவில்லை. அவ்வளவுதான்‌. அவரால் உண்டாக்கப்பட்டவர்கள் தான் நாங்கள். ஆனால் வரலாற்றின் போக்கு விசித்திரமானது. அவர் மீது நாங்கள் கொண்ட நேசிப்பே இன்று அவருக்கே ரணமாகி இருக்கிறது.

எம் இனத்தை வீழ்த்திய திராவிட கருத்தியலை சமரசமற்ற அரசியலால் வீழ்த்தி முடிப்போம் என முடிவு செய்தோம் . செய்கிறோம். அதே சமயத்தில் இந்துத்துவ காவி அரசியலுக்கு நேரடி எதிரியாக,சாதி முரண்களை கொண்டு காலங்காலமாய் எழுப்பப்படும் அரசியலுக்கு எதிராக …எம்மின படுகொலைகள் தந்த அனுபவங்களை உள்வாங்கி நிற்கிறோம்.

மற்றபடி..மதிப்பிற்குரிய கொளத்தூர் மணி அவர்களின் சொற்களை எல்லாம் கூராய்வு செய்ய வேண்டியதில்லை. இருக்கும் இடத்திற்கு ஏற்றாற் போல அவரெல்லாம் பேச மாட்டார் என கருதினோம். பேசி விட்டார். சிறு புன்னகையோடு கடப்போம்.

அவர்கள் கற்பித்தார்கள்.
நாங்கள் நடக்கிறோம்..

அவர்கள் விட்டு விட்டார்கள்.
நாங்கள் தொடர்கிறோம்.

வரிசையில் நில்லுங்கள்.

24796508_371951016563106_1692215070418562796_n

 

அந்த தத்தளிக்கும்
கைகளை
விட்டுவிடுங்கள்..
இறுதி நம்பிக்கை
தீர்ந்த உச்சக் குரலோடு
முழ்கித் தொலைக்கட்டும்.

பொங்கும் கடலலைகளை
விழி அசையா வெறித்த
பார்வையோடு பார்த்திருக்கும்
அவர்களை விரைவாக கடந்துப்
போங்கள்..
காத்திருந்து கடற்கரை
மணலோடு மணலாய்
மறையட்டும்..

ஒதுங்கும் உடல்களை
ஏறெடுத்தும் பார்க்காதீர்கள்.
குண்டடி காயங்களோடு
கரை சேர்ந்தவைகளையே
எளிதாய் கடந்தோம்.
அலையோடு அலையாக
அழுகி மக்கட்டும்..

ஆர்ப்பரிக்கும் அந்த
கோப முழக்கங்களை
அலட்சியப்படுத்துங்கள்…
அடுத்த தேர்தலில்
ஐநூறு ரூபாய் சேர்த்துக்
கொடுத்து விடலாம்..

சுழன்றடித்த புயலில்
சிக்கி சின்னா
பின்னமாகி
உதிர்ந்த சருகாய்
உலகின் ஏதோ ஒரு
மூலையில் ஒதுங்கும்
தமிழனின் உடலம்
கண்டு பதறாதீர்கள்…

அவனுக்குதான்..

யாதும் ஊரே
யாவரும் கேளிர்..

அதனால்தான்..

அவனுக்கென
ஊருமில்லை..

கேளிராய் கேட்க
நாதியுமில்லை..

விடுங்கள்..

தமிழக மீனவனைப்
பற்றி இந்த வரிகள்
படிக்க நீங்கள்
செலவழித்து இருக்கிற
நொடிகளே போதுமானது..

ஏனெனில்..
அடுத்த நொடியில்
நீங்கள் கவலைப்பட..

விசால்,தீபா,தொப்பி,
கமல், ரஜினி என
நிறைய இருக்கின்றன..

விவாதங்கள் தொடர்கின்றன.

போய் வரிசையில் நில்லுங்கள்.

தூக்குக் கயிற்றின் பாடல்..

 

 

21192660_340527729705435_3007562946593908183_nஅந்த தூக்குக்கயிறு
கனவின் வெப்பத்தை
சுமந்து வாறே
இன்னும் ஊசலாடிக்
கொண்டு தான்
இருக்கிறது…

காற்றின் சிறகுகளோடு
பின்னி..
எரிதழலினுடாக கரைந்துப்
போன அனிதா இன்னும்
குரல் வளை நெரிய
இருமிக் கொண்டுதான்
இருக்கிறாள்..

துயர் மிக்க பின்னிரவின்
கடைசித் துளி கரைவதற்கு
முன்னால் சற்றே கவனித்துக்
கேளுங்கள்..

குரல் வளை ஒன்று
நொறுங்கி உடைந்து
கானலாகிப் போன
அவள்
கனவுகளின் கேவல் ஒலி
உங்கள் ஆன்மாவை
தீண்டலாம்..

நள்ளிரவுகளில் விழி எரியும்
வெப்பத்தை
சுமந்து புத்தகங்களின்
பக்கங்களை அவள்
மென் விரல்களால்
புரட்டும் ஒலி குளிர் காற்றால்
போர்த்திக்கிடக்கும்
உங்கள் செவிகளில்
முணுமுணுப்பாய் முனகலாய்
கேட்கக்கூடும்.

ஓடுகள் சரிந்த
வீட்டின் கூரையை
ஊடுருவி பாதரச
பிம்பமாய் மிதந்து
வருகிற
தேவதையின்
கண்ணீர் துளி
விழி மூடி உறங்கும்
உங்கள் விழிகளில் விழலாம்..

விழுந்த சூட்டினில் சுக
கனவுகளோடு கிறங்கிக்
கிடக்கிற உங்கள் இமைகளில்
தீ எரியலாம்…

ஆனால் நாம் இதற்கெல்லாம்
அசரப் போவதில்லை.

வலி மிகுந்த நினைவு
என்றொரு பாலையை
கடக்க மறதி ஒட்டகங்கள்
நம் முன்னால் காத்துக்
கிடக்கின்றன..

எதையும் கடப்போம்.
எதையும் மறப்போம்.
மீறி துளிர்த்தால்
பிக் பாஸ் உலகத்தில்
ஒளிந்துக் கொள்ள
நமக்கு ஓரிடம் உண்டு.

இன்னும் உறுத்தினால்..
எவனையாவது திட்டி
சமூகக் கடமை
ஆற்றி விட்ட அக திருப்தியை
முகநூலின் முட்டுச்சந்தில்
தேடி திரியலாம்..

இன்னும் ஏதேனும்
எட்டிப்பார்த்தால்
எடப்பாடி:தினகரன்
கமல்:, ரஜினி
என்றெல்லாம் யோசித்து
சரிந்துக் கொள்ள
சாக்கடைகள் நமக்குண்டு..

95 வயது முதியவர்
இன்னும் இருக்கிறரா
ஜெ இட்லி சாப்பிட்டாரா
என்கிற சரித்திரக்
கேள்விகளில் நமது மனதை
தொலைக்கலாம்….

என்ன செய்யலாம் ..
இன்றைய சூடான செய்தி
எங்கிருக்கிறது என நோண்டி
நொங்கெடுக்க..
இருக்கவே
இருக்கின்றன ஏற்கெனவே
முடிவுகள் தீர்மானிக்கப்பட்ட
விவாத அரங்குகள்.

இவர்கள் விவாதிக்க
வேண்டுமெனில்.
தினந்தோறும் அனிதா
தூக்கில் தொங்கியாக
வேண்டும்..

என்ன செய்வது..

கனன்று எரிந்து தணிந்திருக்கிற
சாம்பலின் ஊடாய் அனிதா
புன்னகைக்கிறாள்.

நம்மைப் பொறுத்த வரை
என்றோ அவள் மரித்துப் போனாள்..

அவளோ மரித்தது நானல்ல.
என்னை
மறந்து ..திரியும் நீங்களே
இறந்துப் போன பிணங்கள்
என புன்னகைக்கிறாள்.

இன்னும் தூக்குக் கயிறு
ஊசலாடிக் கொண்டே
சொல்கிறது..

பிணங்களே…நீங்கள்
என் மீதேறி தொங்கி
என்னை இழிவாக்காதீர்கள்..

நேரடியாக சுடுகாட்டில்
சென்று படுத்து விடுங்கள்..

ஏனெனில் அதுதான்
உங்கள் நாடு..
பிணங்களுக்கான வீடு.

ஹம்ரா தேஷ் கே…
குச்சு குச்சு ஹோத்தா ஹை..

தமிழ்த்தேசிய உணர்வில் இடதுசாரி உணர்வின் பொருத்தப்பாடு

21686353_346482965776578_4072896911138594218_n
இடதுசாரி என்பது சொற்களின் கூட்டுக் கோர்வையல்ல.. உமிழ்வது போல உதிர்த்து விட்டு போவதற்கு.

அது ஒரு வகையான வார்ப்பு. மண்ணின் பூர்வக்குடிகளின் மீதான, மண்ணின் மீதான பற்றுறுதி, வர்க்க-சாதி-மத பேதமற்ற தொல்குடி வாழ்வொன்றின் மீதான மீள் பயணம். எந்த நோக்கமும் அற்று பண்பாட்டு விழுமியங்கள் குறித்து சிறிதும் அக்கறை அற்று ,தேசிய இனங்களுக்கான தனித்த குணாதிசியங்கள் மீதான அறிவற்று, மொழிப்பற்றினை அழித்து, ஒரு இனம் கடந்து வந்த பாதைகளை அழித்து அதன் மீது ஏற்கனவே இருந்ததை விட இழிவான ஒன்றினை இருக்க வைத்து செல்வதல்ல இடதுசாரித்தனம்.

இத்தனை ஆண்டு காலம் ஒரு தேசிய இனம் அடைந்த இழிவுகளுக்கும் , அழிவுகளுக்கும் என்ன காரணம் என உணராமல் …சாதி கடந்து தமிழராய் இணைய ஓர்மைப் புள்ளிகளை கட்டமைக்காமல், மீண்டும் மீண்டும் பிளவுப் புள்ளிகளை பிரதானப்படுத்தி அதன் மீது இடது சாரித்தனத்தை எழுப்ப முடியாது.

சாதி ஊடுருவி ரணமாய் ஆழ காயமுற்று இருக்கும் ஒரு சமூகத்தில் உடனடி தீர்வு சாதி ஒழிப்பல்ல. சாதியை ஒழிக்கிறோம், சாதியை ஒழிக்கிறோம் என்று முழங்கி ஆட்சியை பிடித்தவர்கள் தான் சாதிக்கு இத்தனை சீட்டு, நோட்டு என்றெல்லாம் அரசியல் செய்தார்கள். சுயசாதி மறுப்பு என்பது வரலாற்று-பண்பாட்டு தொடர்ச்சியின் பாற், நவீன உலகின் அரசியலின் பாற் அறிவும் தெளிவும் கொண்டு எழுகிற உளவியல். அதை தான் 2009 -ன் அழிவு நவீன தமிழ்த்தேசியர்களுக்கு வழங்கியது.

வர்க்க-சாதி-மத முரண்களுக்கு அப்பாற்பட்டு ஓர்மைப்புள்ளிகளை கண்டறிந்து அதன் மூலமாக எழுச்சியுற்று தனது சுய உரிமைகளுக்காக போரிடுவதன் மூலம் ஒரு தேசிய இனம் தனது வரலாற்றுப்பாதையில் தனது அடையாளங்களை, தனது நிலம்-மொழி-பண்பாடு அம்சங்களை தக்க வைக்கிறது எனலாம். அதனால் தான் தேசிய இனங்களுக்கான உரிமைகளை மறுக்கிற எந்த தத்துவமும் இடதுசாரி வண்ணம் கொண்டதல்ல.

குறிப்பாக திராவிடம். மொழியை நீக்கிய இடதுசாரித்தனம் எதுவுமில்லை. ஆனால் திராவிட சித்தாந்தம் தமிழ் மொழியின் விழிமியங்களை, இலக்கண-இலக்கியச்செழுமைகளை எள்ளி நகையாடியது. பகடி செய்தது. சைவமும்-வைணமுமாக பிரிந்திருந்ததை எப்படி ஆரியம் திட்டமிட்டு இந்துவாக கட்டமைத்ததோ, அதே போல அதை எதிர்ப்பதாகச் சொல்லி திராவிடமும் பல்வேறு இறை நம்பிக்கைகள், மூத்தோர் வழிபாடு,ஆசிவகம் என்றெல்லாம் சிதறி கிடந்த தமிழ்ச்சமூகத்தை இந்து என கட்டமைத்து அதில் ஆரிய ,சூத்திர சண்டைக்கு களம் அமைத்தது.

இதைதான் என் முன்னோர்களான பேராசான் ஜீவாவும்,சிந்தனை சிற்பி சிங்காரவேலரும் நுட்பமாக புரிந்துக் கொண்டு பல்வேறு தனது ஆக்கங்களில்,வெளிப்பாடுகளில் தனது மொழிப்பற்றினை வெளிப்படுத்தி நின்றிருக்கிறார்கள். அந்த உணர்வுதான் இடதுசாரியான ஜீவாவை கம்பனைப் போற்றி புகழ வைத்தது.

எங்கள் ஜீவாவைப் போல ஒரு இடது சாரியை காட்டுங்கள். அவர்தான் இடது சாரி தமிழ்த்தேசியர்.
இல்லாவிடில் அவரும் அப்போதைய திக,திமுகவில் இணைந்து அமைச்சராகி தலைவர் புகழ் பாடி தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்து இருப்பார்.

எனவே இடதுசாரி தமிழ்த்தேசியம் என்கிற புத்தகத்தை எழுதி விட்டு கோபாலபுரத்தில் கால்கடுக்க நின்று..எது செய்தாலும் தலையாட்டி வரும் எங்களது முன்னோர்களையும் நாம் அறிவோம்.

புதிதாக எழுந்து வரும் தமிழ்த்தேசிய இன உணர்வுகளை மடை மாற்ற எண்ணற்றப் பணிகளை பிராயத்தனப்பட்டு செய்து வரும் எங்களது பின்னோர்களையும் நாம் அறிவோம்.

நான் தமிழன் – சாதி,மத மறுப்பாளன் – வர்க்க பேத எதிர்ப்பாளன் என்பதே இடது சாரித்தனம் தான்.

வலது சாரி, இடது சாரி, வரதாச்சாரி என்பது எல்லாம் வெறும் சொற்களே…

கொண்ட தத்துவமும், தத்துவத்தின் படியான பயணமுமே இடதுசாரி யார் என தீர்மானிக்கும்.

அவ்வகையில் தமிழ்த்தேசியத்தில் வலதுசாரி தமிழ்த்தேசியம் என்ற வம்படி சொல்லாடல் ஒன்றே திராவிடத்திற்கு சால்ரா அடித்து எழும்பத்துடிக்கும் தமிழ்த் தேசிய உணர்ச்சிக்கு சாவு மணி அடிக்க அன்றே போடப்பட்ட திட்டம் தானே ஒழிய …

தமிழ்த்தேசியம் என்றாலே – அது இடதுச்சாரித்தனம் தான்.

பேராசான் ஜீவா புகழ் ஓங்குக…
சிந்தனை சிற்பி சிங்காரவேலர் புகழ் ஓங்குக..

செங்கொடி தனில் புலிக் கொடிப் பதித்து தமிழ்த்தேசியம் வெல்க..

மற்றபடி..

சிறை மீண்டு வந்திருக்கிற தோழர்கள் திருமுருகன் காந்தி, இளமாறன், டைசன் உள்ளீட்டவர்களுக்கு ஆகியோருக்கு எம் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

-மணி செந்தில்

Page 9 of 15

Powered by WordPress & Theme by Anders Norén