பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Author: மணி செந்தில் Page 9 of 57

எங்களுக்கு இளையராஜா போதும்.

Disclaimer.

முதலில் ஆஸ்கர் விருது பெற்றிருக்கின்ற நம்மூர் மரகதமணிக்கு அந்த ஊர் கீரவாணி க்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள் . பூங்கொத்து. அவரது அழகன் திரைப்படத்தில் வரும் எல்லா பாடல்களும் எனக்கு மிக மிக பிடித்தவை. குறிப்பாக “ஜாதி மல்லி பூச்சரமே.”

இப்பதிவு கீரவாணி மற்றும் ஏ ஆர் ரகுமானை குறைத்து மதிப்பிடுவதற்கான பதிவு அல்ல. இந்த சமயத்தில் இசைஞானி இளையராஜாவோடு ஒப்பீடுகளை நிகழ்த்தும் சமூக வலைதள வம்பர்களுக்கான பதில் மட்டுமே.

????

எங்கள் பள்ளி வாழ்க்கையில் இறுதியில்தான் ஏ ஆர் ரகுமான் வருகை மற்றும் அவரது தொடர் வெற்றிகள் நிகழத் தொடங்கியிருந்தன. ஆனால் நாங்கள் எல்லாம் இளையராஜாவின் தீவிர ரசிகர்கள். ஏ ஆர் ரகுமான் வெறும் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொண்டு வேடிக்கை காட்டுவதாக தான் நாங்கள் அப்போது தீவிரமாக எதிர்த்தோம்.

90 களின் தொடக்கத்தில் ஹெச் எம் வி நிறுவனம் ராஜாவின் தொடக்க கால 70களின் பாடல் தொகுப்பு ஒன்றினை நான்கு கேசட்டுகளாக வெளியிட்டு இருந்தது. ஒரு அபூர்வமான தொகுப்பு அது. “அன்னக்கிளியே உன்னைத் தேடுதே ,சின்னக் கண்ணன் அழைக்கிறான், கண்ணன் ஒரு கைக்குழந்தை, வசந்தகால கோலங்கள், வா பொன்மயிலே, மயிலே உன் தோகை எங்கே, என அபூர்வ பாடல்கள் நிறைந்த அந்த தொகுப்பு என்னைப் போன்ற ராஜாவின் அதிதீவிர ரசிகர்களுக்கு பெரும் பொக்கிஷம்.

ஆனால் ஏ ஆர் ரகுமான் வருகை மற்றும் அவருக்கு கிடைத்த தேசிய விருது அவருக்கு அப்போது கிடைத்த ஊடக வெளிச்சங்கள் எதுவுமே எங்களுக்கு அப்போது எங்களுக்கு மகிழ்ச்சியை தரவில்லை. பாலச்சந்தர் மணிரத்தினம் என ஏ ஆர் ரகுமான் பின்னால் அணிவகுத்து நின்றவர்களும் அதன் நடுவில் இழை ஓடிய அரசியலும் இளையராஜாவை எங்களுக்கு இன்னும் நெருக்கமானவராக காட்டியது. அது ஒரு வகையான புரிதல் கோளாறு என்பதை கொள்ள சில வருடங்கள் தேவைப்பட்டாலும் இன்றளவும் இளையராஜாவிற்கு மிஞ்சியவர்கள் யாரும் இல்லை என்பதில் எங்கள் தலைமுறையே உறுதியாக இருக்கிறது.

அதற்கு மிக முக்கியமான காரணம் இத்தனை வருட எங்களது வாழ்க்கையில் காலை மாலை சூரிய உதயம் நிலவு இரவு பசி உறக்கம் காதல் காமம் தனிமை தந்தைமை தாய்மை கொண்டாட்டங்கள் போன்ற தவிர்க்க முடியாத இந்த வாழ்வின் ஒரு அங்கம் தான் இளையராஜாவின் இசை. எங்கள் தலைமுறையில் யாரேனும் ஒருவரை சந்தித்து உங்கள் வாழ்க்கையைப் பற்றி அதில் நிகழ்ந்தவை குறித்து நீங்கள் கோர்வையாக சொல்ல முடியுமா என கேள்வி எழுப்பினார்கள் என்றால் அவருக்கு பல இளையராஜா பாடல்கள் நினைவுக்கு வருவது இயல்பு.

என் பதின் பருவ நண்பன் ஒருவன் “தெற்கத்திக் கள்ளன்”என்ற திரைப்படத்தில் வரும் “ராதா அழைக்கிறாள் ..”என்கிற பாடலை ஒரே நாளில் நூற்றுக்கணக்கான முறை கேட்டுக் கொண்டிருந்ததும் அவன் ராதா என்ற பெண்ணை விரும்பி கொண்டிருந்ததும் தற்செயலானது அல்ல என்பதை நாங்கள் அறிவோம். அந்தப் பெயருள்ள அந்தப் பெண்ணை விரும்பினானா அல்லது அந்தப் பாடலுக்காக அந்த பெண்ணை விரும்பினானா என்றெல்லாம் இதுவரையில் அந்த காதலில் நிறைய கேள்விகள் இருக்கின்றன.அதே போல நெல்லை மாவட்டத்தில் எனது கல்லூரி வாழ்க்கையில் மிக நெருங்கிய நண்பன் ஒருவன் ஆனந்த ராகம் திரைப்படத்தில் வரும் “ஒரு ராகம் பாடலோடு ..”என்ற பாடலை ஒரு கேசட் முழுக்க பதிவு செய்து வைத்துக் கொண்டு மீண்டும் கண் கலங்க அதைக் கேட்டுக் கொண்டு கிறங்கி கிடந்ததெல்லாம் எங்கள் தலைமுறையில் தெருவுக்குத் தெரு நடக்கின்ற
மிக மிக சாதாரண சம்பவங்கள்.

எனது பள்ளிக்காலத்தில் எனது நண்பன் ஜோஸ்வா உடன் நான் எங்கள் ஊரில் இருக்கின்ற புராதான சர்ச்சிக்கு போவது வழக்கம். அந்த சர்ச்சில் தேவ கருணை என்கின்ற ஒரு சிஸ்டர் வேலை பார்த்து வந்தார். தேவா என்று மற்றவர்களால் அழைக்கப்பட்ட அந்த சிஸ்டர் ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு வருகை தந்த போது என் வீட்டு நூலகத்தை அவருக்கு அழைத்து போய் காட்டினேன். என் மிகப்பெரிய கேசட்சேகரிப்பை பார்த்து வியந்த அவர் நல்ல பாடல் ஏதோ ஒன்றை ஒளிபரப்பம்படி கேட்டுக் கொள்ள நான் “அறுவடை நாள் “திரைப்படத்தில் வருகிற “தேவனின் கோவில் மூடிய நேரம் ..”என்கிற பாடலை அவருக்கு ஒளிபரப்பி காட்டினேன். நான் ஒரு சோக சுமைதாங்கி என்கின்ற பாடல் வரிகள் வரும் அந்த நொடியில் அவரது கண்கள் கலங்கிவிட்டன. முடிந்தவுடன் என்னிடம் எதுவும் சொல்லாமல் எழுந்து போன அவரை அதன் பின் நான் எங்குமே சந்திக்கவில்லை.

இப்படியாக நிறைய மனிதர்கள் நிறைய வாழ்க்கை.

இளையராஜா என்கின்ற ஒரு தனி மனிதன் வாழ்நாட்கள் முழுக்க ததும்பி நிரம்பி எங்களை முழுகடித்துக் கொண்டிருந்தான்.

2000 களின் தொடக்க காலத்தில் இருந்து நான் திரைப்படப் பாடல்களில் இருந்து நானெல்லாம் வாழ்வின் சூழல்களால் அந்நியப்பட்டு விலகிப் போன போது ஏறக்குறைய ராஜாவும் அமைதியாகி இருந்தார். நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு “காட்டு மல்லி”பூத்திருக்கிறது.

நடுவில் நகர்ந்த நாட்கள் பற்றி அந்தக் காட்டுமல்லிக்கு எந்தக் கவலையும் இல்லை. போன்ற இளையராஜாவின் அதிதீவிர ரசிகர்களுக்கு அந்தக் “காட்டுமல்லி ” குறித்து எந்த பெருமிதமும் இல்லை. ஏனென்றால் இதே போன்று பல நூற்றுக்கணக்கான பாடல்களை நாங்கள் எங்கள் தலைமுறையில் அனுபவித்து சுவைத்து ஆழ்ந்து மூழ்கி அழுது சிரித்து கலங்கி நெகிழ்ச்சியில் நிறைந்து இருக்கிறோம்.

அது கூட சமூக வலைதளங்களில் சில உரையாடல்களை பார்க்கும் போது உண்மையில் பரிதாபமாக இருந்தது. கீரவாணி ,ஏ ஆர் ரகுமான் போன்று ஆஸ்கர் விருது வாங்கியவர்கள் போல இளையராஜா ஏன் ஆஸ்கர் விருது வாங்கவில்லை என்பதான கேள்விகள் “உன் கண்களுக்கு உலகிலேயே அழகான உன் தாய் ஏன் உலக அழகியாக மாறவில்லை …?” என்பது போல அபத்தமாக இருந்தது.

ரகுமான் ஆஸ்கர் விருது வாங்கிய “ஜெய் ஹோ ” பாடலும் கீரவாணி இன்று ஆஸ்கர் விருது வாங்கிய “நாட்டுக்குத்து “பாடலும் மிகச்சாதாரணமாக நாம் கடந்து போனவை. நமக்குள் சிறிதளவு அதிர்வை கூட அந்தப் பாடல்கள் ஏற்படுத்தவில்லை என்பது நிஜம். விருதுகள் அதற்கு பின்னால் இருக்கின்ற வணிகங்கள் இவைகளைப் பற்றி பேசுவது என் வேலை அல்ல. ஆனால் வணிகங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு , இளையராஜாவின் அரசியல் அபத்தங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு ராஜாவின் இசை என் ஆன்மாவை எப்போதும் உலுக்கிக் கொண்டே இருக்கிறது.

என்றாவது பின் இரவில் உங்களுக்கு விழிப்பு ஏற்படும்போது கோபுர வாசலிலே என்ற திரைப்படத்தில் வரும் தாலாட்டும் பூங்காற்று என்கின்ற ஜானகி பாடலை ஒரே ஒரு முறை கேட்டுப் பாருங்கள். ஒரு கால எந்திரத்தில் சிக்கிக்கொண்ட கைதி போல நீங்கள் சுழன்று அடித்து இறந்த காலத்திற்கு தூக்கி அடிக்கப்படுவீர்கள் என்பது உண்மை. இது போன்ற அனுபவங்களை மற்றவர்களின் எந்த பாடல்களும் தருவதில்லை என்கிற கேள்விகளுக்கெல்லாம் இளையராஜாவிடம் கூட பதில் இல்லை தான்.

சமீபத்தில் விமான பயணத்தில் 18 ஆயிரம் அடிக்கு மேல் பறந்து கொண்டிருந்த ஒரு தருணத்தில் “அலைகள் ஓய்வதில்லை “படத்தின் “புத்தம் புது ராகம் ..”என்னை அப்படியே தூக்கிச் சென்று மன்னார்குடி வீதிகளின் அதிகாலை பனிக்குளிரோடு நிற்க வைத்தது.

தமிழனாகிய நான் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இளையராஜா பாடல்கள் மூலமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதை உணர்ந்த தருணம் அது.
என்னை போன்ற பல கோடி தமிழர்களும் அப்படித்தான் வாழ்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும்.

எங்களுக்கு இது போதும்.
இது மட்டும் போதும்.
விருதுகளை அவரவர் வைத்துக் கொள்ளட்டும்.
அதற்கு எம் வாழ்த்துக்கள்.

❤️

10827- வெறும் வாக்குகள் மட்டுமல்ல இவை.

????

ஈரோடு கிழக்குத் தேர்தல் முடிவுகள் வெளியாகி சில நாட்கள் ஆகிவிட்டன. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தங்கை மேனகாவோடு நேற்று பேசிய போது “விடுடா தங்கை, இன்னும் கடுமையாக உழைத்து எதிர்காலத்தில் வெல்வோம்..” என்று ஆறுதலாய் சொன்னபோது, அவள் சொன்ன பதில்தான் இது.

“நிகழ்காலத்திலேயே நாம் வென்று விட்டோம் அண்ணா …”

????
உண்மைதான். பல்வேறு அனுபவங்களையும், உண்மையான போராளிகளையும்,எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இனத்திற்காக உழைக்க வந்த உழைப்பாளிகளையும் தன்னகத்தே கொண்டிருக்கின்ற அண்ணன் சீமான் ஏற்கனவே வெற்றி பெற்றவர் தான்.
…….

இதுவரை நடந்த தேர்தலில் இந்தத் தேர்தல் மிக மிக வித்தியாசப்பட்டது. ஏற்கனவே திருமங்கலம் ஃபார்முலா கண்டுபிடித்த திராவிட அறிஞர்களால் ‘ஈரோடு ஃபார்முலா’ என்கின்ற புதிய அறிவியல் கண்டுபிடிப்பு ஈரோடு கிழக்கு மண்ணில் பிறந்தது.

“சனநாயகத்தினை தாண்டிய மக்கள் உரிமை வேறு எதுவும் இல்லை” என்கிறார் புரட்சியாளர் அம்பேத்கர். ஆனால் கடந்த சில நாட்களாக பட்டப் பகலில்,
நள்ளிரவில், சந்து பொந்துகளில், மக்கள் சாரை சாரையாய் அழைத்து வரப்பட்டு அடைத்து வைக்கப்பட்ட பட்டிகளில்,
மக்களாட்சி என்கின்ற மகத்தான தத்துவம் ரூபாய் தாள்கள் மூலம் செய்யப்பட்ட கூர்மையான வெட்டரிவாளால் படுகொலை செய்யப்பட்டதை ஊடகங்கள்/ தேர்தல் ஆணையம் /காவல்துறை என அனைத்துமே பதறாமல், குற்ற உணர்ச்சி இல்லாமல், பதட்டமில்லாத கண்களோடு பார்த்துக் கொண்டிருந்ததை
அதே மண்ணில் காசு கொடுக்காமல் வெறும் கொள்கைகளை வைத்து ஓட்டு கேட்டுக் கொண்டிருந்த நாங்கள் பயத்தோடு பார்த்துக் கொண்டிருந்தோம்.

குற்ற உணர்ச்சி என்கிற அடிப்படை மானுட உணர்ச்சியைக் கொன்று விட்ட பிறகுதான் ஒரு திராவிடக் கட்சிக்காரன் பிறக்கிறான் என்பதை ஈரோடு கிழக்கு மண்ணில் சுற்றிக் கொண்டிருந்த கரைவேட்டிக்காரர்கள் எங்கள் கண்முன்னால் காட்டிக் கொண்டிருந்தார்கள்.

ஆனாலும் நாம் தமிழர் இளைஞர்கள் எதற்கும் சளைக்காமல் கண்கள் முழுக்க கொள்கைக் கனல் ஏறிய சூட்டோடு,ஓங்கி உயர்ந்த முழக்கங்களோடு
சுடும் வெயிலில் அலைந்து கொண்டிருந்தார்கள்.

தங்குமிடம் யாருக்கும் கிடைக்கவில்லை. எல்லா விடுதிகளிலும் கரைவேட்டிக்காரர்கள் துண்டு போட்டு இடம் பிடித்திருந்தார்கள். இடம் பிடிக்க, பணம் கொடுக்க, அவர்களுக்கு அதிகாரம் என்கின்ற வெறிபிடித்த ஒற்றை நாய் உலவிக் கொண்டிருந்தது.

சரியான உணவும், தரமான இடமும் நாம் தமிழர் தம்பி தங்கைகளுக்கு இல்லை தான். ஆனாலும் அவர்கள் ஆன்மாவில் அண்ணன் சீமானின் மொழி நெருப்பாய் கனன்று கொண்டிருந்தது. அது அவர்களது உறக்கத்தை கொன்று பசியை தொலைத்து விட்டது.

தம்பி இசை மதிவாணன் போன்றோர் அதிகாலையில் தொடங்கி நள்ளிரவு வரை எங்கும் அமராமல் ஓடிக் கொண்டிருந்த காட்சியை காணும் போது “எந்த நம்பிக்கை உங்களை இப்படி ஓட வைக்கிறது..” என்கிற கேள்வியை அவர்களிடம் கேட்க வேண்டும் என்று நான் நினைத்தேன். ஒரு முறை தனிப்பட்ட முறையில் அவனிடம் கேட்டும் விட்டேன்.
அவனிடம் அதற்கு சரியான பதில் இல்லை. ஆனால் அவன் அணிந்திருந்த உடையில் தேசியத் தலைவர் சிரித்துக் கொண்டிருந்தார். அதுதான் அதற்கான பதில்.

குமரியில் இருந்து வந்த ஹிம்லர்,சட்டக் கல்லூரி மாணவன் அபூபக்கர், கோவை பேரறிவாளன், அனீஸ் பாத்திமா போன்ற எண்ணற்ற இளம் தளிர்கள் இந்தப் போர்க்களத்தில் சளைக்காமல் சண்டையிட்டார்கள்.

…. எல்லாவற்றையும் தாண்டி அண்ணன் சீமான்.
உழைப்பால் உருவேறிய உன்னதன் அவர்.

தம்பி இசை மதிவாணன் போல, மருமகள் பாத்திமா பர்கானா போல ‌ எண்ணற்ற சீமானின் பிள்ளைகள் வீடு வீடாய் சென்று தங்களுக்கான நீதியை, இத்தனை ஆண்டு கால திராவிட, தேசியக் கட்சிகளின் அநீதியை எடுத்து சொல்லி மிக உருக்கமாக வாக்குக் கேட்டுக் கொண்டிருக்கும் அதே தருணத்தில் தான், பின்னால் வந்த திராவிடத் திருவாளர்கள் வீடு வீடாய் காசு கொடுத்து கணக்கெடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அது ஒரு முரண்பட்ட காட்சிதான். ஆனால் ஒரே இடத்தில் ஜனநாயகம் இரு முரண்பட்ட முற்றிலும் வேறுபட்ட காட்சிகளை கொண்ட அபத்த திரைப்படமாய் திராவிடத் திருவாளர்களால் மாற்றப்பட்டுவிட்டது.

பிறகு உண்மையான உழைப்பின், ஜனநாயகத்தின் மதிப்பு தான் என்ன.‌.. என்றெல்லாம் விரக்தியின் வானவில் மனதிற்குள் வளைந்து நெளிந்த போது நம்பிக்கைக்கீற்றாய் பலர் களத்தில் ஒளிவிட்டார்கள்.

குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தங்கை மேனகா அவர்களின் கணவர் தம்பி நவநீதனை பற்றி சொல்ல வேண்டும். வீட்டிற்குள் பெண்ணை பூட்டி வைக்கின்ற ஆண்களுக்கு மத்தியில் தன் மனைவியை வேட்பாளராக முன்னிறுத்தி விட்டு, பேரணியின் முன்னும் பின்னும் ஆக ஓடிச்சென்று, ஒழுங்கு செய்து, அனைவரையும் வழிநடத்தி, சக போராளியாக மனைவியை மதித்து, அவன் சாதித்து நின்றது பேரழகு.

மனைவி தாமதமாக வந்தால் “எங்கே சென்று வந்திருக்கிறாய்..?எனக்கான சாப்பாடு எங்கே..? ” என்றெல்லாம் கேட்கின்ற சராசரி ஆண்களுக்கு மத்தியில் அவையத்தில் மனைவியை முன் நிறுத்தி
கணவனுக்கான கடமையை
கண்ணியமாக செய்து கணவன் மனைவிக்காற்றும் உதவி என்பதை புது குறளாக அவன் ஈரோட்டு வீதிகளில் எழுதிக் கொண்டிருந்தான்.

அதேபோல் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தங்கை மேனகா. எல்லா இடத்திலும் தெளிவாக கட்சியின் கொள்கைகளை எடுத்துக் கூறி தொகுதிக்கு என்ன செய்யப் போகிறேன் என்ற தீர்வுகளை பற்றி பேசி, அவதூறு பிரச்சாரங்களை போகிற போக்கில் எதிர்கொண்டு, கூட பயணிக்கும் அனைவரின் நலத்திலும் கவனம் செலுத்தி, எதிரே நடக்கின்ற வன்முறை வெறியாட்டங்களை கூட புன்னகையோடு எதிர்கொண்ட அவளது உறுதி மிக்க மனநிலை, பலரையும் வியக்க வைத்தது.

அற்புதமான பல இளைஞர்களை நாம் தமிழர் கட்சியின் பேரணிகளில் காண முடிந்தது. இரவு தேர்தல் பணிமனைகளில் தூங்கும் போது நடந்து நடந்து வெடிப்பேறிய அவர்களது பாதங்களை பார்க்கும் போது எனக்கு ஏனோ காங்கோ காடுகளில் அலைந்து திரிந்த புரட்சியாளன் சே நினைவுக்கு வந்து போனான்.

உண்மையில் புரட்சிகர மனநிலை என்பது எல்லாவற்றையும் இழக்க துணிவது என்பதைத்தான் சீமானின் தம்பி தங்கைகள் நிரூபித்தார்கள். எதையும் எதிர்பார்க்காமல் அரசியல் மாற்றம் ஒன்றே அனைத்திற்கும் ஆன தீர்வு என்பதை வாக்காளர்களுக்கு உணர வைக்க அவர்கள் உழைத்த உழைப்பு என்பது ஜனநாயகம் என்கிற மானுட சாசனத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய மகத்தான செய்தி.

எத்தனை தூரம் என்றாலும் பரவாயில்லை, எவ்வளவு நேரம் என்றாலும் கவலை இல்லை, முழக்கங்கள் ஒரு நொடியும் குறையாமல் முழங்கித் தீர்த்து, எதிரிகளுக்கு பயத்தையும், ஈரோட்டு மக்களுக்கு வாக்குக்கான பணத்தையும், அதிகப்படுத்தி கொடுத்தார்கள்.

பதிலாக அவர்கள் முதலில் அவதூறை ஆயுதமாக கையில் எடுத்தார்கள். அருந்ததியர் மக்களை வந்தேறி என சீமான் பேசி விட்டார் என பொய்யாக பரப்புரை செய்து நாம் தமிழர் பிரச்சாரங்களில் திட்டமிட்டு கலகங்களை ஏற்படுத்தினார்கள். அடுத்தது வன்முறை. அண்ணன் அன்பு தென்னரசன் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளான போது கூட முதல் தகவல் அறிக்கை கூட தாக்கல் செய்ய முடியாத அளவிற்கு காவல் துறையின் கைகள் அதிகாரத்தால் கட்டப்பட்டிருந்தன.

காலை 8 மணிக்கு எல்லாம் மக்களை வாகனங்களில் ஏற்றிக் கொண்டு, ஆடு மாடுகளை பட்டி தொட்டிகளில் அடைப்பது போல அடைத்து, பகலெல்லாம் டிவி போட்டுக்காட்டி, ஆண்களுக்கு சாராயம் பிரியாணி கொடுத்து, இரவு 8 மணிக்கு போகும்போது ஒவ்வொருவருக்கும் தலா 2000 பணம் கொடுத்து அனுப்பி கொண்டிருந்தபோது, நாங்கள் எல்லாம் பூட்டிய வீடுகளுக்கு முன்னால் வாக்கு கேட்க முடியாமல் கொளுத்தும் வெயிலில், மங்கிய மாலையில், இரவின் களைப்பில் நம்மை வழி நடத்தும் லட்சிய வெறியோடு நடந்து சென்று கொண்டிருந்தோம்.

ஆனால் இதையெல்லாம் தாண்டி ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், 2 ஆவது வாக்குப் பெட்டியில் 22வது வரிசை எண்ணிலிருந்த தங்கை மேனகா அவர்களுக்கு, விவசாயி சின்னத்தைத் தேடித்தேடி வாக்களித்த 10,827 நபர்கள் உண்மையிலேயே வேற்றுக்கிரகத்தில் வந்தவர்களா, தனித் தாதுக்களா, என்றெல்லாம் இன்று இந்த சமூகக் கட்டமைப்பில் யோசிக்க தோன்றுகிறது.

விவசாயி சின்னத்தில் முகமறியா விரல்கள் தொட்ட நொடி எல்லாம் இன்னும் இந்த மண்ணில் மனித உணர்ச்சி சாகாத , பட்டுப் புடவை ஸ்மார்ட் வாட்ச், அண்டா குண்டா, குக்கர்,காசு, சாராயம், பிரியாணி பொட்டலங்கள் என எதற்கும் விலை போகாத மக்கள் திரள் இம்மண்ணிலும் உண்டு என்று நமக்குள்ளும் உயிர்ப்பூ மலர்ந்த தருணங்கள் அவை.

நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னத்தில் தங்களது விரல்களை நம்பிக்கையோடு தொட்டு 10827 ஈரோடு கிழக்கு வாக்காளர்கள் அளித்த ஒவ்வொரு வாக்கும் மாற்று அரசியல் புரட்சியை நிறுவிடப் போராடும் ஒரு மாபெரும் இளைஞர் கூட்டத்திற்கு உண்மையில் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக சூழ்ந்து விட்ட மிகப்பெரிய இருளுக்கு நடுவில் சிறிது வெளிச்சத்தை அளிக்கிறது.

அந்த வெளிச்சக் கயிறு கொண்டு தான் நாங்கள் வெற்றி என்ற சிகரத்தை நோக்கி ஏறத் தொடங்கி இருக்கிறோம்.உலகில் ஏற முடியாத சிகரங்கள் என எதுவும் இல்லை.உறுதியாக ஒரு நாள் நாங்கள் சிகரம் தொடுவோம்.

இவ்வளவு உழைத்தும் உங்களை நோக்கி வெற்றி வரவில்லையே என பலரும் எங்களிடம் கேட்கிறார்கள்.

இதற்கான பதில் எங்களிடம் இல்லை தான். ஆனால் எங்கள் எதிரிகளிடம் உண்டு.

தேர்தல் முடிந்து ஈவிகேஎஸ். இளங்கோவன் அளித்த பேட்டியில் நம்ப முடியாமல், மென்று முழுங்கியவாறே, அச்சத்தோடும், ஆச்சரியத்தோடும் கேட்டாரே அந்த பதில் தான்.

அந்த பதில்.. 10827.

எல்லா தடைகளையும் தாண்டி 10,827 வாக்குகளை நாங்கள் பெற்றுள்ளோம் என்பது போகிற போக்கில் கடந்துப் போகக்கூடிய செய்தி அல்ல.

10827- இது சாதாரண எண்ணிக்கை அல்ல. திமுக/ அதிமுக /காங்கிரஸ் /பிஜேபி என்கின்ற திராவிட தேசிய கட்சிகளை, அடிமனதில் ஆழத்திலிருந்து வெறுக்கின்ற வெறுப்புணர்ச்சியின் கூட்டுத்தொகை.

ஒரு நொடியும் இந்த கூட்டுத் தொகை பெருகிக் கொண்டுதான் இருக்கிறது.அதிகார ஆட்டத்தால் பண மழையால் இந்த எதிர்ப்புணர்ச்சி சற்றே மட்டுப்படுவது போல தோன்றலாம்.

ஆனால் காலங்காலமாய் ஏமாற்றப்பட்டு வருகின்ற மக்களின் கோபம் வன்மமாய் மாறி அது விரல்களின் மூலம் வினை ஆற்ற தொடங்கி இருக்கிறது என்பதையும், ஓடப்பராய் இருந்த ஏழையப்பர்கள் உதையப்பர்களாக மாறி வருகிறார்கள் என்பதையும் 10827 சொல்லத் தொடங்கி இருக்கிறது.

நாம் தமிழர் காலம் பிறக்கிறது.

????

ஈரோடு கிழக்கில் வென்றார் அண்ணன் சீமான்..

????

ஒரு அசலான போர்க்களத்தை ஈரோடு கிழக்குத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி எதிர்கொள்கிறது.
ஜனநாயகத்திற்கும் பணநாயகத்திற்கும் நடக்கின்ற இந்த போரில் அரசியல் மாண்புகள் அனைத்தும் ஆளும் கட்சியினரால் கொலை செய்யப்பட்டு விட்டன.

ஜனநாயகம் என்ற பச்சைக் குழந்தை துடிக்க துடிக்க ஆளும் கட்சியின் அதிகாரத்தால் கழுத்தறுக்கப்பட்டு ஈரோட்டு கிழக்குத் தொகுதியின் வீதிகளில் கொலை செய்யப்பட்டு விட்டது. ஆடு மாடுகளை பட்டித் தொட்டியில் அடைப்பது போல மக்களை லாரிகளில் ஏற்றி வந்து மண்டபங்களில் அடைத்து வைத்து மற்ற எந்தக் கட்சியும் ஓட்டு கேட்க முடியாத ஜனநாயக படுகொலையை திமுக காங்கிரஸ் கூட்டணி நிகழ்த்தி இருக்கிறது. எதிர்க்கட்சியான அதிமுக இதற்குப் போட்டி போட முயன்று அதிகாரம் இல்லாத காரணத்தினால் வாக்கிற்கு பணம் மட்டும் கொடுத்துக் கொண்டு ஒதுங்கி நிற்கிறது.

நேற்றைய முன் தினம் நாம் தமிழர் கட்சியின் மாநில தொழிற்சங்க தலைவர் அண்ணன் அன்பு தென்னரசன் அவர்கள் பிரச்சாரம் செய்யும் போது ஆளும் திமுக கட்சியினரால் கடுமையாக தாக்கப்பட்டு மண்டை உடைக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு ஐந்து தையல்கள் போடப்பட்டுள்ளன. கொலை வெறி தாக்குதலில் சிக்குண்ட அண்ணன் அன்பு தென்னரசன் அவர்கள் நாம் தமிழர் கட்சி இளைஞர்களால் காப்பாற்றப்பட்டு தற்சமயம் மருத்துவ ஓய்வில் இருந்து வருகிறார். இந்த தாக்குதலுக்கு இந்த நொடி வரை தமிழக காவல்துறை முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யவில்லை என்ற நிலையிலிருந்து திமுக அரசின் அதிகார ஆதிக்கத்தின் உச்ச கொடூரத்தை புரிந்து கொள்ளலாம். வழக்கறிஞர் என்ற முறைமையில் நான் அனைத்து காவல்துறை அதிகாரிகளிடமும் முறையிட்டுக் கூட இன்னும் நீதி கிடைத்த பாடில்லை.

ஆனாலும் சீமானின் தம்பி தங்கைகள் இதற்கெல்லாம் சோர்ந்து போகிறவர்கள் அல்ல. நேற்றைய முன் தினம் எங்கள் அண்ணன் அன்பு தென்னரசன் தாக்கப்பட்டதற்கு
பதிலடியாக பல்லாயிரக்கணக்கான நாம் தமிழர் கட்சி உறவுகள் பங்கேற்ற பிரம்மாண்டமான புலிக்கொடி பேரணியை ஈரோடு கிழக்குத் தொகுதியில் நேற்று மாலையில் ஏறக்குறைய 5 மணி நேரம் நாம் தமிழர் கட்சி நடத்தியது. ஏறக்குறைய எதிர்க்கட்சியான அண்ணா திமுக போட்டியிலிருந்து விலகி விட்ட இந்த சூழலில் நாம் தமிழர் கட்சி மட்டும் தான் களத்தில் திமுகவின் அதிகார பலத்தை எதிர்த்து போரிட்டு வருகிறது.

நாளைய தினம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு மீண்டும் பிரச்சாரத்திற்கு வருகின்ற நிலையில், உண்மையான எதிர்க்கட்சியாக நாம் தமிழர் கட்சி மட்டுமே களத்தில் நிற்கிறது.

எப்பேர்ப்பட்ட மோசமான உலகில் நாம் வாழ்கிறோம் என்பதை உணர ஈரோட்டுக் கிழக்கு தொகுதிக்கு வந்து பாருங்கள். அண்ணன் அம்பேத்கர் வகுத்தளித்த இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஆளுங்கட்சியின் பண பலத்தினால் அதிகார ஆட்டத்தினால் நட்ட நடு வீதியில் கொளுத்தப்படுகின்ற காட்சியை நீங்கள் கண்ணால் காணலாம்.

எந்த வீட்டிலும் வாக்காளர்கள் இல்லை. வாக்காளர்களை எல்லாம் கடத்திச் சென்று திமுக காங்கிரஸ் கூட்டணி மண்டபங்களில் அடைத்து வைத்து இருக்கிறது. பிறகு தேர்தல் ஆணையம் என்ற ஒன்று என்ன செய்கிறது என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம்.

அது ஆளுங்கட்சிக்கு பக்கபலமான வாத்தியமாக செயல்பட்டுக் கொண்டு அதிகார ஆணவத்தை மீறி ஓட்டு கேட்கின்ற நாம் தமிழர் கட்சியை முடக்குகிற வேலையை மட்டும் சரியாக பார்த்துக் கொண்டு எஜமான விசுவாசம் காட்டிக் கொண்டு நிற்கிறது.

இதற்கு நடுவில் எளிய இளைஞர்கள் சீமானின் தம்பி தங்கைகள் தங்குவதற்கு கூட இடமில்லாமல், உணவு கூட சரியாக உண்ணாமல் இலட்சிய வெறி கொண்டு சாலைகளில் அலை அலையாய் அணிவகுத்து சென்று கொண்டிருக்கிறார்கள். மக்கள் அவர்களை ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள். பணம் அதிகாரம் அரசியல் என முற்றிலுமான சீர்குலைந்து போன உலகில் கொள்கை கூட்டமாய் உலா வருகின்ற சீமானின் தம்பி தங்கைகள் விழிகள் உறங்கா சிவப்பைக் கொண்டு கனலேறி கிடக்கிறது.

சீனப் புரட்சியாளன் மாவோ மக்களை அணி திரட்டி மாபெரும் நடை பயணத்தை நடத்தியது போல இந்த வரலாற்று வீதியில் ஒரு புரட்சிகர படையணியை உருவாக்கி அண்ணன் சீமான் சகல விதமான சர்வாதிகாரத்திற்கும் எதிராக போரிட்டு வருகிறார்.

ஒரு நாளும் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக பெருகின்ற மக்கள் ஆதரவு ஆளும் திமுக கட்சியை பயத்தில் ஆழ்த்தி இருக்கின்ற காரணத்தினால் அவர்கள் இறுதியாக அவதூறு பிரச்சாரத்தை எளிய மக்களை தூண்டிவிட்டு முன்னெடுக்க முயன்று தோற்று இருக்கிறார்கள். பேசாத ஒன்றை பேசியதாக சொல்லி ஆளும் திமுகவினர் நடத்திய நாடகங்கள் மக்கள் மன்றத்தில் அம்பலப்பட்டு மக்களாலேயே புறக்கணிக்கப்பட்டு விட்டன.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால்..

ஜனநாயக ரீதியில் தேர்தலுக்கு முன்பாகவே அண்ணன் சீமான் ஈரோடு கிழக்குத் தொகுதியில் வென்றுவிட்டார்.

இலட்சிய பற்றுறுதி
கொண்ட அவரைப் போன்ற ஒருவரை திமுக தன் வரலாற்றிலேயே இப்போதுதான் முதல் முறையாக சந்திக்கிறது.

????

ஈரோடு கிழக்கு மண்ணில் இருந்து ..

மணி செந்தில்.

இவ்வாறாகவே நடந்தது அந்தக் கொலை.

????

உன்னை கொல்ல
நான்
ஆதி கால ஆயுதம்
ஒன்றை பரணில்
தேடிக்
கொண்டிருக்கும்
போது தான்,
அந்த துருப்பிடித்த கத்தியை
தேடி எடுத்தேன்.

அதன் முனை
அவ்வளவு கூர்மையாக இல்லை.
ஆனால் அதன் வளைவில் எப்போதோ குத்தப்பட்ட
குருதியின் கறை
அந்தக் கத்தியை
நான் தேர்ந்தெடுக்க போதுமான காரணத்தை தந்தது.

அதை உன்
தோல்களை கவ்வி நிற்கும்
விலா எலும்பில் குத்தலாமா,
கதகதப்பான
நடுநெஞ்சில் பாய்ச்சலாமா,
தசை ததும்பி நிற்கும் அடிவயிற்றில் சொருகலாமா, என்றெல்லாம் நினைக்கும் போது ..
மிடறு விழுங்குகிற உன் தொண்டைக் குழி எனக்கு நினைவுக்கு வந்தது.

அதன் மென்மை
இந்தக் கத்திக்கு
உகந்தது தான்‌.

ஆனால்..
எங்கே குத்தினாலும் சரி
நான் ஒன்றில் மட்டும் உறுதியாக இருக்கிறேன்.

உன் குருதித் துளி என் மீது பட்டுவிடக் கூடாது.

உன்னை விட
உன் குருதியை
நான் அதிகம் வெறுக்கிறேன்.
அதோடு அந்த நொடியில் உறையும் உன் விழிகளையும்.

அந்த இரண்டும்
வாந்தி எடுக்க முடியாத
ஒரு குடிகாரனின் இரவு போன்றவை.

ரத்தம் கொப்பளிக்கும்
உன் சாவை
எப்போதும் கொந்தளித்துக் கொண்டே இருக்கும்
என் மனக்கடலில்
ஒரு படகாக மாற்றி
செலுத்தி விட வேண்டும்
என எண்ணிய அந்த பொழுதில்..
ஏதோ
திருப்தியற்றவனாய்
சாவின் துருவேறிய
அந்தப் பழங்கத்தியை
என் ஜன்னல் வழியே
தூக்கி எறிந்தேன்.

அந்த நொடியில்
நிராயுதபாணியாக
நின்று இருந்த‌
என்னிடம்
என்ன ஆயுதம் இருக்கிறது
என யோசிக்கும் போது தான்…

அதுவரை
கண்ணியம் காத்தோ..
பழகிய காலம் கருதியோ..
உள்ளுக்குள் எப்போதும் சுரக்கும் பேரன்பின்
வாடை உறுத்தியோ…
உன்னைப் பற்றி
பேச கட்டாயப்படுத்தப்பட்ட
எல்லா தருணங்களிலும் மௌனித்த நான்,

முதல்முறையாக
உன்னை பற்றி பேசத் தொடங்கினேன்.

இனி
இயல்பாகவே
நடந்து விடும்‌.
எனக்கான ஒரு கொலையும்,
உனக்கான ஒரு சாவும்.

????

புத்தகப் பரிந்துரை- 2023

அன்பு உறவுகளுக்கு வணக்கம்.

நேற்றைய முன் தினம் நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பாசறை நடத்திய சென்னை புத்தகக் கண்காட்சி 2023 பற்றிய ட்விட்டர் ஸ்பேஸ் அமர்வில் இளம் தமிழ் தேசியர் மற்றும் வாசகர்கள் தவறவிட கூடாத மிக முக்கியமான புத்தகங்கள் பற்றிய பட்டியல் ஒன்றினை கேட்டிருந்தார்கள்.

அதன்படி இந்த பட்டியலை நானே உருவாக்கி உள்ளேன். இது அடிப்படை வாசகர்களுக்கு பரந்துபட்ட இலக்கிய வகைமைகளுக்கு அறிமுகங்களாக இருக்கக்கூடும்.

வழக்கமாக பொன்னியின் செல்வன் பாலகுமாரன் புத்தகம் சுஜாதா எழுதியவை என்றெல்லாம் இல்லாமல் இன உணர்வு மற்றும் நவீன இலக்கியங்கள் சார்ந்து இந்த பட்டியல் ஒன்றினை நான் உருவாக்கி இருக்கிறேன். சிறார் இலக்கியங்கள் குறித்து தனியே ஒரு பட்டியல் உருவாக்க‌ திட்டமிட்டு உள்ளேன்.

இது முழுக்க முழுக்க என் ரசனை சார்ந்தது. நான் வாசித்தபோது எழுந்த அனுபவ உணர்ச்சியினை சார்ந்து தயாரிக்கப்பட்டது.

இது தரவரிசை பட்டியல் அல்ல. எனக்குப் பிடித்த சில நூல்கள் இவை. இன்னும் பட்டியல் இடப்படாத பல நூறு நூல்கள் இருக்கின்றன என்றாலும் நான் வாசித்த வகையில் மிகப்பெரிய வாசிப்பு அனுபவத்தை எனக்கு அளித்த இந்த நூல் வரிசையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

இந்தப் புத்தகங்கள் அனைத்தையும் வாங்குங்கள் என்றெல்லாம் நினைத்து செய்யப்பட்ட பரிந்துரை அல்ல.

தமிழ் தேசிய தத்துவத்திற்கு மாற்றாக எழுதி வரும் சில எழுத்தாளர்களின் நூல்களும் இதில் இடம் பெற்று இருக்கின்றன. ஆனாலும் அவையும் படிக்க வேண்டியவை எனக் கருதி இந்த பட்டியலில் நான் இணைத்து உள்ளேன். எனவே நூல்களில் உள்ள கருத்துக்களை எல்லாம் நான் சார்ந்திருக்கும் அரசியல் தத்துவத்தின் மீது பொருத்தி குழம்பிக் கொள்ள தேவையில்லை.

புத்தக கண்காட்சிக்கு நீங்கள் செல்லும்போது இந்த புத்தகங்கள் உங்கள் கண்களில் பட்டால் ஒரு நிமிடம் எடுத்துப் பாருங்கள். பிடித்திருந்தால் வாங்கிக் கொள்ளுங்கள்.

இந்தப் பட்டியல் தரவரிசை பட்டியலும் அல்ல என்பதோடு இந்தப் பட்டியல் இன்னும் முடிவடையவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

புத்தகம் தேடி செல்வோர்க்கு இந்த பட்டியல் சிறு உதவி செய்தால் பெரும் மகிழ்ச்சி அடைவேன்.

அவசியம் களம் மற்றும் தமிழம் பதிப்பகம் அரங்குகளுக்கு செல்ல தவறாதீர்கள்.

நன்றி.

மணி செந்தில்.

????

  1. தமிழர் மேல் நிகழ்ந்த பண்பாட்டு படை எடுப்புகள் க.ப. அறவாணன்
  2. தமிழன் ஏன் அடிமையானான் க.ப அறவாணன்
  3. சுற்றுச்சூழலியல் உலகம் தழுவிய வரலாறு ராமச்சந்திர குகா எதிர் வெளியீடு
  4. தேசியமும் மார்க்சியமும் தணிகைச் செல்வன்
  5. தமிழ்நாடு தமிழருக்கே
    வழக்கறிஞர் சக்திவேல்
  6. ம.பொ.சியின் தமிழன் குரல்
  7. தொ பரமசிவன் முழு தொகுப்பு காலச்சுவடு வெளியீடு
  8. ஆசான் ம செந்தமிழன் அவர்களின் நூல்கள் செம்மை வெளியீடு
  9. தமிழகத்தில் பிற மொழியினர் ம.பொ.சி
  10. ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்
    தமிழில் இரா முருகவேள்
  11. கம்யூனிசம்- நேற்று இன்று நாளை_ இரா. ஜவகர் நக்கீரன் வெளியீடு
  12. தமிழகத்தில் சமூக சீர்திருத்தம்- அருணன்
  13. நான் நம்மாழ்வார் பேசுகிறேன்- விகடன் வெளியீடு
  14. சுதேசி இந்தியா சுரண்டப்பட்ட வரலாறு- விகடன் வெளியீடு
  15. சாதியை அழித்து ஒழித்தல்- அண்ணல் அம்பேத்கர் – அருந்ததி ராய் முன்னுரையுடன் காலச்சுவடு வெளியீடு
  16. உலக சினிமா- மூன்று தொகுப்புகள் செழியன்
  17. மாவீரர் உரைகள் நேர்காணல்கள்
  18. இவன் ஒரு வரலாறு தொகுப்பாசிரியர் பூபதி
  19. மண்டோ படைப்புகள்
  20. புதுமைப்பித்தன் சிறுகதைகள்
  21. எனது இந்தியா- எஸ் ராமகிருஷ்ணன்
  22. அறம்- ஜெயமோகன்
  23. இந்தியாவில் தேசிய இனங்களும் தமிழ் தேசியமும் கு.ச. ஆனந்தன்
  24. நள்ளிரவில் சுதந்திரம்
  25. வையத் தலைமை கொள் -இறையன்பு
  26. போர் தொழில் பழகு -இறையன்பு
  27. வெள்ளை யானை- ஜெயமோகன்
  28. 1801 -ராஜேந்திரன் ஐஏஎஸ்
  29. காலா பாணி -ராஜேந்திரன் ஐஏஎஸ்
  30. உலக இலக்கியப் பேருரைகள்- எஸ் ராமகிருஷ்ணன்
  31. வால்காவிலிருந்து கங்கை வரை
  32. பட்டாம்பூச்சி‌- நர்மதா பதிப்பக வெளியீடு
  33. மோகமுள்- தி ஜானகிராமன்
  34. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் -ஜெயகாந்தன்
  35. ஜெயகாந்தன் சிறுகதைகள்
  36. பாரதியார் கவிதைகள்
  37. பாரதிதாசன் கவிதைகள்
  38. உலகின் மிக நீண்ட கழிவறை அகர முதல்வன்
  39. இந்திய அரசியலமைப்பும் கூட்டாட்சியும்- ஆலடி அருணா
  40. சுளுந்தீ- முத்துநாகு
  41. மாபெரும் தாய் -அகரமுதல்வன.
  42. ஒரு சிறு இசை- வண்ணதாசன்
  43. வைரமுத்து கவிதைகள்
  44. அப்துல் ரகுமான் கவிதைகள்
  45. திராவிடம் தமிழின் மறுமலர்ச்சியை வளர்த்ததா மடை மாற்றியதா- பெ மணியரசன்
  46. தேசியமும் திராவிடமும்- மாசோ விக்டர்
  47. ஆழி சூழ் உலகு- ஜோ டி குரூஸ்
  48. பூஉலகின் நண்பர்கள் சிறியதே அழகு புத்தக வரிசை
  49. பார்த்தீனியம்- தமிழ் நதி
  50. ரசவாதி

50.புயலிலே ஒரு தோணி/ கடலுக்கு அப்பால்- ப.
சிங்காரம்

  1. பாப்லோ நெருடா கவிதைகள்- தமிழில் சுகுமாரன்
  2. பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும்
    -புதுவை ரத்தினதுரை தொகுப்பு
  3. தமிழின படுகொலைகள்
    களம் வெளியீடு
  4. தஞ்சை பிரகாஷ் சிறுகதைகள்
  5. வண்ண நிலவன் சிறுகதைகள்
  6. ஜாப்னா பேக்கரி -வாசு முருகவேல்
  7. நடுகல்- தீபச்செல்வன்
  8. இரண்டாம் ஆட்டம்/கொமாரா – லட்சுமி சரவணகுமார்
  9. சைவ சமயம் ஒரு புதிய பார்வை- சிகரம் செந்தில்நாதன்
  10. இந்து மதம் எங்கே போகிறது இரண்டு பாகங்கள்- நக்கீரன் வெளியீடு
  11. காந்தியைக் கொன்றவர்கள் -எதிர் வெளியீடு
  12. குற்றப்பரம்பரை -வேல ராமமூர்த்தி
  13. கள்ளிக்காட்டு இதிகாசம்/ கருவாச்சி காவியம்/ மூன்றாம் உலகப் போர்/ வைரமுத்து
  14. குஜராத் மதவெறி படுகொலைகள்- சூத்திரதாரிகளும், பங்காளிகளும் -களம் வெளியீடு
  15. அண்ணல் அம்பேத்கர் வரலாறு வசந்த் மூன் நேஷனல் புக் ட்ரஸ்ட் வெளியீடு/ பாபா சாகேப் அருகில் இருந்து- மைத்திரி
  16. சயாம் பர்மா மரண ரயில் பாதை
  17. ஆழமான கேள்விகளும் அறிவார்ந்த பதில்களும் ஸ்டீபன் ஹாக்கிங்
  18. தூக்கிலிடுபவனின் குறிப்புகள் சசிவாரியர் எதிர் வெளியீடு
  19. விடுதலைக்கு விலங்கு ராபர்ட் பயஸ் களம் வெளியீடு
  20. சிறை கொட்டடியில் இருந்து ஒரு மடல் பேரறிவாளன்
  21. தமிழ் தேசியத் தலைவர் தமிழரசனின் வாழ்வும் அறமும்
  22. நிலைத்த பொருளாதாரம்- ஜே சி குமரப்பா
  23. தமிழர் எழுச்சியின் வடிவம் -பழ நெடுமாறன்
  24. கால்கள்- ஆர் அபிலாஷ் உயிர்மை வெளியீடு
  25. இருபதாம் நூற்றாண்டு சிறுகதைகள் 100 -பதிப்பு முனைவர்.வீ. அரசு
  26. புலி நகக்கொன்றை- பி ஏ கிருஷ்ணன்
  27. கோபல்ல கிராமம் -கி ராஜநாராயணன்
  28. ஒரு புளிய மரத்தின் கதை- சுந்தர ராமசாமி
  29. அ முத்துலிங்கம் சிறுகதைகள்
  30. இருபதாம் நூற்றாண்டு இந்திய வரலாறு/ தகர்ந்து போன தன்னாட்சிக் கனவுகளும் தேசிய இனங்களின் தன்னுரிமை பயணமும் முனைவர் த ஜெயராமன்.
  31. ஈரோட்டுப் பாதை சரியா- ப ஜீவானந்தம்
  32. சாதியும் தமிழ் தேசியமும்- பெ மணியரசன்
  33. வ உ சிதம்பரனார்/ மா ரா அரசு/ சாகித்திய அகாதமி வெளியீடு
  34. அருணகிரி நாதர் முதல் வள்ளலார் வரை சிகரம் செந்தில்நாதன்.
  35. ஆரியக்கூத்து- அ.மார்க்ஸ்
  36. நவீன தமிழ் இலக்கிய அறிமுகம்- ஜெயமோகன்
  37. இடக்கை, யாமம், துயில் எஸ் ராமகிருஷ்ணன்,
  38. நிலம் பூத்து மலர்ந்த நாள் -மனோஜ் குரூர்
  39. செம்புலம் -இரா முருகவேள்
  40. மாநில சுயாட்சி- முரசொலி மாறன்
  41. முத்தமிழ் காவலர் கி ஆ பெ விசுவநாதம் அவர்களின் தமிழ் பணி / முனைவர் கோ வீரமணி
  42. சிதம்பர நினைவுகள் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு தமிழில் கே வி சைலஜா
  43. ஈழப் படுகொலையின் சுவடுகள் நிலவன்
  44. ஓநாய் குலச் சின்னம்
  45. மனித குலமும், தமிழ்த் தேசியமும் பல நெடுமாறன்
  46. சூழலியல்- கி வெங்கட்ராமன்
  47. பெருந்தலைவர் காமராஜர் விகடன் வெளியீடு
  48. அஜயன் பாலா எழுதிய நாயகன் வரிசை நூல்கள் விகடன் வெளியீடு
  49. நெடுங்குருதி- எஸ் ராமகிருஷ்ணன்.

தொகுப்பு: மணி செந்தில்

சி.ஆர்.7 -தன்னிகரற்ற வீரர்.

கால்பந்து ஆட்டங்கள் பார்க்கத் தொடங்கிய காலம் தொட்டு என்னுடைய அணி அர்ஜென்டினா. முதலில் மாரடோனா. தற்காலங்களில் என்னுடைய கதாநாயகன் மெஸ்ஸி. ஆனாலும் போர்ச்சுகல் நாட்டின் ரொனால்டோ ஆகச்சிறந்த கால்பந்து வீரனாக உருவாகி வந்த காலகட்டங்களில் ஒரு மெஸ்ஸியின் ரசிகனாக ரொனால்டோவை வெறுக்க முடியாதது ஒன்றுதான் ரொனால்டோவின் ஆகப்பெரும் வசீகரம். ஏனெனில் அந்தத் திறமை வெறுக்க முடியாத, பொறாமை கொள்ள முடியாத உயரம் கொண்டது.

ஒரு பேட்டியில் மெஸ்ஸி உலகின் தலைசிறந்த வீரர்களை பற்றி கூறும் போது ரொனால்டோவின் பெயரை கூறாதது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்புவார்கள். அப்போது மெஸ்ஸி சிரித்துக்கொண்டே “நான்தான் அவர். என்னில் இருந்து அவரைப் பிரிக்க முடியாது.. எனவே தான் அவரை நான் தனியே சொல்லவில்லை..” என்று சொல்வார்.

அதுதான் ரொனால்டோ. சிஆர் 7 என்று அவர் டீசர்ட் அணிந்து மைதானத்தில் இறங்கும்போது ஒவ்வொரு முறையும் ஆகச் சிறந்த ஆட்டக்காரரான அவர் தன்னைத்தானே மிஞ்சி காட்டுவதில ஒரு மந்திரக்காரன்.

தன்னை நோக்கி வரும் பந்தை உயரமாக எழும்பி கோலாக மாற்ற அவர் எழும்பும் உயரம் உலகில் இதுவரை யாராலும் முறியடிக்கப்படாதது மட்டுமல்ல, ஒரு கவிதை போல அவ்வளவு வசீகரமானது.

இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் முடியும்போது உலகின் ஆகச்சிறந்த வீரர்களான நெய்மர் , மெஸ்ஸி, ரொனால்டோ போன்ற ஜாம்பவான்கள் ஓய்வு பெற்று இனி விளையாட மாட்டார்கள் என செய்திகள் வெளியான போதே கால்பந்து ரசிகர்கள் பலருக்கும் நாடு இனம் கடந்து மனம் வலிக்க தொடங்கியிருந்தது.

இன்றும் அப்படித்தான்.

உலகக் கோப்பையின் கால் இறுதி போட்டியான இன்று போர்ச்சுக்கல் ஆப்பிரிக்க நாடான மொராக்காவை எதிர்கொண்டார்கள். ஆட்டத்தின் முதல் பாதியில் ஏனோ முதன்மை வீரரான ரொனால்டோவை போர்ச்சுக்கலின் கோச் இறக்காமல் பெஞ்சில் அமர வைத்து இருந்தது பார்வையாளர்களின் கடுமையான விமர்சனமாக இருந்தது.

இந்த உலகப் பந்தய போட்டிகளில் உலகின் மிகச்சிறந்த அணிகளை வென்று வருகிற மொரோக்கா ஆட்டத்தின் முதல் பாதியிலேயே கோல் அடிக்க இதுவரை போர்ச்சுக்களால் அதற்கு பதிலடி கொடுக்க முடியவில்லை.

இறுதியில் முதல்முறையாக ஒரு ஆப்பிரிக்க நாடு உலகக் கோப்பையின் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது மனதிற்கு ஆறுதலாக இருந்தாலும், கால்பந்து போட்டிகளின் கதாநாயகன் 37 வயது நிரம்பிய ரொனால்டோ தன் கடைசி போட்டியில் அழுது கொண்டே களத்தை விட்டு வெளியேறும் போது ,

மெஸ்ஸியின் பரம ரசிகனான என் இளைய மகன் பகலவன் கலங்கி அழுது கொண்டிருந்தான்.

அதுதான் ஒரு சிறந்த விளையாட்டு வீரன் தன் வாழும் காலத்தில் பெறுகிற உயர்வான வெகுமதி.

போய் வாருங்கள் சிஆர் 7.

உங்கள் கால்கள் உலவாத கால்பந்து மைதானங்கள் மெஸ்ஸியின் ரசிகர்களால் கூட விரும்பப்படாதவை தான்.

ஏனெனில் நீங்கள் விளையாடும் காலத்தில்…ஒரு காலத்தை உருவாக்கினீர்கள்.

எப்போதும் மெஸ்ஸியின் ரசிகனாக இருந்து சொல்வேன்..உங்கள் காலத்தில் தன்னிகரற்ற வீரர் நீங்கள் தான்.

❤️❤️❤️

நவம்பர் -26 தலைவர் பிறந்தநாள்

வனமேறி நின்ற
அந்த புலியின்
கண்கள்
ஆதி முருகன்
சாயல் ஒத்தவை
என பார்த்தோர்
பதற சொன்னார்கள்.

சினமேறி நின்ற
அதன் சீற்றம்
அறிந்தோர்
அது வெறும்
வனமேறிய புலி
அல்ல..
அது மூத்த குடி
சுமந்த கனவு
என கண்டார்கள்.

கார்த்திகை இரவில்
காந்தள் மலர் பூட்டி
சன்னதம் வந்து
முழங்கிய முதியவன்
ஒருவன் கம்பீரமாய்
சொன்னான்.

அது கனவும் அல்ல ,
நினைவின் சினமும் அல்ல,
அது
இனம் வணங்கும்
இறை என்று.

நவம்பர்-8 அண்ணன் சீமான் பிறந்தநாள்.

“அமைதியான வரலாறு என்ற ஒன்றே உலகில் கிடையாது” என்கிறார் மாமேதை வால்டர். வரலாற்றின் பக்கங்கள் எங்கோ தோன்றிய தனி நபர் விளைவித்த சிந்தனைகளால், கலகங்களால் சதா அதிர்ந்துக் கொண்டே இருக்கின்றன. யாரும் எதிர்பார்க்காத ஒருவரிடம், போகிற போக்கில் நிகழ்ந்துவிடுகிற கால ஓட்டத்தில் இருந்துதான் வரலாற்று அதிர்விற்கான சூட்சமப் புள்ளிகள் தோன்றி விடுகின்றன.

இவர் எங்கிருந்து வந்தார் என யோசிக்கும் முன்னே வரலாற்றுநாயகர்கள் சமகாலத்து சிந்தனைகளை மாற்றிக் கட்டமைத்து புது பாய்ச்சலை நிகழ்த்தி விடுகிறார்கள் ‌.

எப்படி சாத்தியம் என்று நாமெல்லாம் யோசிக்கும்போது நம்மில் ஒருவராக பிறந்து சீமான் என்கின்ற தனி மனிதன் சாத்தியப்படுத்தி சாதித்துக் காட்டியதைத்தான் நாம் 12 வருடங்களுக்கு மேலாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
நாம் தமிழர் கட்சி உருவான புள்ளியான மதுரையில் நடந்த “அறுத்தெறிவோம் வாரீர் ..” என்கிற பேரணி நடந்த போது கூட தமிழகத்தில் தமிழ் தமிழருக்கு எதிராக ஏதேனும் தோன்றினால் கலகம் செய்ய ஒரு சிறு அமைப்பாக செயல்படும் எண்ணம் தான் அண்ணன் சீமானிடம் இருந்தது. ஆனால் காலம் வேறு மாதிரி சிந்தித்து வைத்திருந்தது என்பதை அவர் கூட அப்போது உணரவில்லை.

படிப்படியான நகர்வு என்பது போன்ற ஒரு தொடர் ஓட்டத்தில் ஒரு பேரணிக்கு அனுமதி வாங்க உண்டாக்கப்பட்ட அமைப்பு இயக்கமானது. இயக்கம் கட்சியானது. அந்தக் கட்சி தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக தமிழ்த் தேசியத்தை அரங்கங்களில் இருந்து விடுதலையாக்கி வெகுஜன அரசியல் பரப்பிற்கு கொண்டு வந்தது. 30 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை வாங்கி தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக அசலான எதிர்க்கட்சியாக இன்று களத்தில் நிற்கிறது.

ஓய்வறியா தன் உழைப்பால், கொட்டி முழங்கும் தன் தமிழால், சமூகத்தின் கூட்டு மனசாட்சி அல்லது மக்களின் பொதுவான கருத்தியல் போன்றவற்றின் திசையை மாற்றி, தமிழ்த் தேசிய இனத்தின் சிந்தனை ஓட்டத்தில் பெரும் மாறுதல்களை ஏற்படுத்தியவர் அண்ணன் சீமான்.

2009 க்கு பிறகான காலகட்டத்தை திராவிடத்தின் பெருமிதங்களை, தேசியத்தின் தோற்ற மயக்கங்களை தன் அனல் தமிழால் தகர்த்தெறிந்த காலமாக அவர் மாற்றினார்.

ஒரே நேரத்தில் தமிழர்கள் இந்துக்கள் அல்லர், தமிழர்கள் திராவிடர்கள் அல்லர் என்று அரசியல் கணக்குகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு துணிந்து அண்ணன் சீமான் முழங்கியது அசலான கருத்தியல் புரட்சி.

இது எதுவுமே அவர் திட்டமிடவில்லை. அதுவாகவே ஒவ்வொரு படியாக நிகழ்ந்ததையும், நகர்ந்ததையும் நாங்கள் அனைவரும் விழிகள் வியக்கக் கண்டோம்.

ஒரு மாயவிசை ஒன்று அவரை இயக்கிக் கொண்டே இருந்ததை நாங்கள் உணர்ந்த போது அவர் தன் லட்சிய பயணத்தில் வெகு தூரம் கடந்து வந்து விட்டார். அந்த மாயவிசையை அவரும் தனக்குள் உணர்ந்திருக்கிறார்.

எல்லாவற்றையும் விட ஒரு இனப்படுகொலைக்கு பின்பான இந்த காலகட்டத்தில் பத்தாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.‌.எல்லோரும் அதைக் கடந்து விடுவோம் என அவருடன் பயணித்த பலர் சமரசமாகி சரண் அடைந்த பிறகும் கூட, இன்றளவும் துளியும் சமரசம் இன்றி அதே உக்கிரத்தோடு போராடிவரும் அண்ணன் சீமான் எங்கள் அண்ணன் என்பதில் எங்களுக்கு பெருமிதம் உண்டு.

இன்று தமிழகம் கண்டு இருக்கும் பல்வேறு மாற்றங்களுக்கு குறிப்பாக தமிழ்- தமிழர் உணர்வேற்றத்திற்கு அண்ணன் சீமானே முதன்மைக் காரணம்.

அவரோடு நிற்பதும் , அவரோடும் பயணிப்பதும், எம் இனத்திற்காக எம் மொழிக்காக நாங்கள் செய்யும் பிறவிக் கடன்.

அண்ணன் சீமான் நீடூழி நலத்தோடு வாழட்டும்.

தமிழர் நிலம் தலை நிமிரட்டும்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா.

உலகமெங்கும் கேட்கட்டும் சங்கத்தமிழோசை..

????

“சங்கத் தமிழ் ஓசை” என்ற பெயரில் அழைப்பிதழ் பார்த்தவுடன் உண்மையில் அச்சமாகத்தான் இருந்தது. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நுட்பமான இலக்கண விதிகளுக்கு உட்பட்டு வரையப்பட்ட இலக்கிய பாடல்களான சங்க பாடல்களுக்கு சமகாலத்தில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்துவது என்பது எந்த வகையில் பார்வையாளர்களை ஈர்க்கும் என்கிற கேள்வியும்,சாதாரண வாசகர்களால் வெற்று வாசிப்பின் மூலம் எளிதில் புரிந்து கொள்ள முடியாத சங்க பாடல்களை எப்படிப்பட்ட இசை வடிவத்தில் பொருத்தி கேட்போரை ஈர்க்க செய்யப் போகிறார்கள் என்கிற கேள்வியும் எனக்குள் எழுந்தன.

உண்மையில் அது ஆபத்தான முயற்சி தான். அதுவும் ஒரு வெகுஜன அரசியல் கட்சி தன் கலை பண்பாட்டு பாசறை மூலமாக தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதல்முறையாக சங்கப் பாடல்கள் மற்றும் பாவேந்தர் பாரதிதாசன், பாரதியார் பாடல்களை வெகுமக்கள் திரள் முன் மேடையேற்றம் செய்கிற நிகழ்ச்சி அது.‌ ஓட்டு அரசியலுக்கு இது எந்த விதத்தில் கை கொடுக்கும் என்கிற கேள்வி இயல்பாகவே அரசியல் பார்வையாளர்களுக்கு எழ வைக்கிற முயற்சி அது. தன் கட்சி கொடிகள் சின்னங்கள் லட்சணைகள் எதுவும் இல்லாமல் கவனமாக அவைகள் தவிர்க்கப்பட்டு, “மீண்டெழும் தமிழ் மொழி ” என்கின்ற புனித லட்சியத்திற்காக தன்னலம் பார்க்காமல் நாம் தமிழர் கட்சி செய்திருக்கின்ற இந்த வரலாற்றுப் பெரு நிகழ்வு தமிழர் வரலாற்றில் மறுமலர்ச்சியை தோற்றுவிக்கிற தொடக்கப் புள்ளியாக கொள்ளலாம்.

இருந்தாலும் இந்த நிகழ்ச்சி எவ்வாறு வெற்றி பெறப் போகிறது என்கிற கவலையும், கூட்ட ஒழுங்கு பற்றிய அச்சமும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பலருக்கும் அச்சமயத்தில் இருந்தது.

ஆனால் இதையெல்லாம் பற்றி கொஞ்சமும் கவலைப்படாத, சொல்லப்போனால் அந்த நிகழ்ச்சி குறித்து மகத்தான நம்பிக்கை கொண்டிருந்து உலகத் தமிழர்களை அந்த நிகழ்ச்சிக்கு அழைக்கும் பணியில் அண்ணன் சீமான் தீவிரமாக இருந்தார். கட்சி பொறுப்பாளர்களை அழைக்கும் போது கூட “இது மிக மிக முக்கியமான ஒரு நிகழ்வு. வரலாற்றில் முதல்முறையாக, தவற விட்டு விடாதே..” என உரிமையோடும், அதே நேரத்தில் கொஞ்சம் கண்டிப்போடும் அழைத்த அந்த அழைப்பு, ஆயிரக்கணக்கான தமிழர்களை 17-09-2022 சனிக்கிழமை மாலை சென்னை கலைவாணர் அரங்கத்தில் திரட்டியது.

அந்த அரங்கில் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக கூடியிருந்த எல்லோர் மனதிலும் இருந்த கேள்வி ” அடுத்து வருகிற சில மணி நேரங்களை எப்படி கடப்பது ‌…”

ஏனென்றால் இது போன்ற பல நிகழ்ச்சிகளை அவர்கள் ஏற்கனவே தங்கள் வாழ்க்கையில் சந்தித்து இருக்கிறார்கள். இது போன்ற இசை நிகழ்ச்சியில் திரைப்பட பாடல்களுக்கே உரிய வசீகரமோ, துள்ளல் இசையோ போன்ற கொண்டாட்ட அம்சங்கள் இடம்பெறாது என்பது இதுவரை
நிகழ்ந்த நிகழ்ச்சிகள் மூலம் அவர்கள் பெற்றிருந்த வாழ்வியல் பாடம். ஒரு வகுப்பறையில் நடக்கும் தமிழ் வகுப்பில் செய்யுள் பாடப்பகுதி‌ நடத்தப்படும் போது எது போன்ற அனுபவம் (?) நமக்கு இதுவரை கிடைத்ததோ அதே அனுபவத்தை இந்த நிகழ்ச்சியும் வழங்கி விடுமோ என்கிற அச்சம் அங்கே கூடியவர்களுக்கு இருந்தது.

ஆனாலும் அண்ணன் சீமான் அழைத்திருக்கிறார். நிகழ்ச்சியில் அவர் பேசுவதாகவும் சொல்லி இருக்கிறார். எனவே அந்த நெருப்புத் தமிழை கேட்பதற்காக வேணும் நாம் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோம் என அவரவருக்கு ஒவ்வொரு சமாதானத்தை உள்ளுக்குள் உண்டாக்கி இருந்தார்கள்.

அந்த அரங்கில் அமைக்கப்பட்டு இந்த மேடை இந்த கணக்குகளை எல்லாம் தாண்டி பார்த்த நொடியில் ஆர்வத்தை தூண்டக்கூடிய பிரம்மாண்ட ஒழுங்குகளை கொண்டிருந்தது.

மேடையில் ஆபிரகாம் பண்டிதர் உள்ளிட்ட தமிழிசை மூத்தோர் படங்கள் வைக்கப்பட்டிருந்தன.

மின்விளக்குகள் அமைக்கப்பட்டிருந்த முறையும், ஒலி ஒளி அமைக்கப்பட்டிருந்த ஒழுங்கும் ஒரு பிரம்மாண்டமான இசை விருந்தை எதிர்கொள்ள பார்வையாளர்களை தயார் படுத்தின.

சற்றே இருளும், குளிரூட்டி குளிரும் நிலவிய அந்த அரங்கில் சில முணுமுணுப்புகளை தாண்டி பெரிய ஓசைகள் இல்லை. மேடையிலும் யாரும் இல்லை.
எல்லோருக்கும் இனம் புரியாத அமைதி உள்ளுக்குள் ஊற, தயாரானது அரங்கம்.

சரியாக ஆறு மணிக்கு அண்ணன் சீமான் முகம் முழுக்க பெருமித புன்னகையோடு, அரங்கத்திற்குள் வரவே, உற்சாக குரல்கள் விண்ணை தொட்டன. அவரைத் தொடர்ந்து பட்டாடையோடு உள்ளே வந்தார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.

30க்கும் மேற்பட்ட இளைஞர்களும் இளம்பெண்களும் மேடையில் அடுக்கடுக்கான வரிசையில் மிக ஒழுங்காய் நிற்க மேடை முன்புறம் அமைக்கப்பட்ட சிறு மேடையில் வந்து நின்று நிகழ்ச்சி குறித்து அறிமுக உரை நிகழ்த்தினார் ஜேம்ஸ் வசந்தன்.

முதலில் இசை நிகழ்ச்சியை நடத்துபவர்கள், பார்வையாளர்கள் என்கிற இருவர்களுக்குமான இடைவெளி இருக்கக் கூடாது, இந்த நிகழ்ச்சியில் அனைவருமே பங்கேற்பாளர்கள் என்பதை முத்தாய்ப்பாக அறிவித்தார்‌ அவர்.

தன் உரையின் தொடக்கத்திலேயே
பார்வையாளர்கள் கொண்டிருந்த நிகழ்வு குறித்தான அச்சங்களை
தன் புன்னகை மொழியால் அடித்து நொறுக்கினார் ஜேம்ஸ் வசந்தன்.
மேலும் இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவம் குறித்தும் , தமிழ் மொழியின் தொன்மை குறித்தும் அவர் ஆற்றிய சிறு உரை அந்த நிகழ்ச்சி எப்படி அமையப் போகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்தது.

முதலில் “திருக்குறளின் கடவுள் வாழ்த்து” அதிகாரம்.

அரங்கமே அமைதியானது. மேடையில் நின்றிருந்தவர்களின் சேர்ந்திசை குரல் மெதுவாக தொடங்கியவுடன், ஒரு பன்னாட்டு இசை நிகழ்ச்சிக்கான நேர்த்தியை நம்மால் உணர முடிந்தது.

“அகர முதல” என தொடங்கிய போது அருகே வைக்கப்பட்டிருந்த திரைகளில் வரிகளும் வரிகளுக்கான விளக்கமும் தோன்றத் தொடங்க, நவீன இசையும் இணைந்து கொள்ள கண்ணுக்கும் காதுகளுக்கும் பெரும் விருந்தை அந்த நிகழ்ச்சி படைக்க தொடங்கியது. அடுத்தது புறநானூறு , குறுந்தொகை, பாரதிதாசன் பாரதியார் பாடல்கள், பாடல்கள் காளமேகப்புலவரின் கவிதைகள்,மீனவர் பாடல் என அடுத்தடுத்த பாடல்கள், அதற்கான முன்னுரைகள் என நிகழ்ச்சிக் களைக் கட்டியது.

பாரி மகளிர் பற்றி சங்க கால கவிஞர் கபிலர் பாடிய பாடலைக் கேட்கும் போது வேள்பாரி உருவம் திரையில் தோன்ற, நம் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களே தோன்றுவதாக உணர்ந்து அரங்கில் உள்ளோர் விழி நிறைந்து உறைந்தனர்.

அதேபோல் தமிழுக்கு அமுதென்று பேர் என்கிற பாவேந்தர் பாரதிதாசன் பாடலின் வரிகளும் இசையும் அந்த அரங்கில் உள்ளவரை சொக்கி இழுத்து மயக்கி போட்டன என்றால், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கிற துள்ளல் பாடல் இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் வழிகாட்டுதலின் அடிப்படையில் அனைவரையும் எழுந்து ஆட வைத்தது. அண்ணன் சீமான் உள்ளிட்ட அந்த அரங்கில் உள்ளோர் அனைவரும் எழுந்து ஆட
உச்சகட்ட கொண்டாட்ட தருணத்தை பார்வையாளர்கள் அனுபவித்தார்கள்.

“விடிவெள்ளி தானே நம் விளக்கு.
..” என்கின்ற மீனவர் பாடல் அரங்கில் உள்ளோர் அனைவரையும் ஐலேசா போட வைத்தது.

ஈடு இணையற்ற தொழில்நுட்ப மேன்மையோடு அமைக்கப்பட்ட அரங்கு, துல்லியமான ஒலி ஒளி வசதிகள் என பிரமிக்க வைத்த 90 நிமிட அந்த நிகழ்ச்சி , தமிழரின் காதல், வீரம், அறம், தொன்மை என அனைத்து பக்கங்களையும் தொட்டு காட்டி பார்க்கும் அனைவரையும் பரவசப்படுத்தியது. “யாயும் யாயும்
யாரோ யாராகியோரோ..” என்கிற சங்க கால காதற் பாடல் இசைக்கப்படும்போது முழுக்க தோன்றிய திரை முழுக்க காதற் சின்ன இதயங்கள் பேரழகு வடிவமைப்பால் நம்மை வெகுவாக கவர்ந்தன.

எல்லா காலத்திலும் எல்லா இசை வடிவங்களிலும் ஒரு மொழி பொருந்துகிறது என்றால் அந்த மொழி எப்படிப்பட்ட வடிவம் கொண்டதாக இருந்திருக்க வேண்டும் என்பதை தன் இசை மூலம் ஜேம்ஸ் வசந்தன் நுட்பமாக விளக்க விளக்க அரங்கில் உள்ளோரெல்லாம் தன்னை மறந்து தன் இனத்தையும், தன் மொழியையும் நினைத்து பூரித்து நின்றார்கள்.

90 நிமிட வெகு அற்புதமான நிகழ்ச்சிக்குப் பிறகு, வாழ்த்துரை வழங்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் பலத்த வாழ்த்தொலிகளுக்கு மத்தியில் மேடை ஏறினார்.

மிகுந்த உற்சாகமும் பூரிப்பும் பெருமிதமும் நிறைந்த மனிதராக காணப்பட்ட அண்ணன் சீமான் கஎப்படி இசை நம் மொழியின் உயிராக இருக்கிறது என்பதை இலக்கிய சான்றுகளோடு உணர்வுபூர்வமாக உரையாற்றினார். ஓசைக்கும் இசைக்குமான வேறுபாடை அவர் விவரித்த முறை அவரது ஆழ்ந்த பேரறிவை, வாசிப்பை வெளிப்படுத்தியது. கோவில்களில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதன் கோபத்தையும் தன் உரையில் வெளிப்படுத்திய அவர், இப்படிப்பட்ட புலவர்களை உருவாக்கிய ஆசிரியர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்திருப்பார்கள் என வியப்பாக தெரிவித்த போது அவர் அடைந்த அதே வியப்பு நிகழ்ச்சியை கேட்ட பார்த்த அனைவரும் அடைந்தார்கள்.

ஆழமான அதே சமயத்தில் அழகான மொழியோடு இசை நிறைந்த வடிவத்தோடு தன் உரையை ஆற்றி அமர்ந்த அண்ணன் சீமான் வாழ்த்துரையில் ஒரு துளி அளவு கூட சமகால அரசியல் குறித்து பேசவில்லை என்பது மிக மிக குறிப்பிடத்தக்கது.
ஏனெனில் அது தமிழுக்கான மேடை. தமிழ் இசைக்காண மேடை. அதில் அரசியலை கலக்க வேண்டாம் என்கிற அவரது உறுதி தமிழ் நிலத்தில் வேறு எந்த அரசியல் தலைவருக்கும் வாய்த்திராத அற்புத உளவியல்.

அண்ணன் சீமான் வாழ்த்துரைக்குப் பிறகு ஏற்கனவே இசை நிகழ்ச்சியில் பாடப்பட்ட பாடல்களில் சிறந்தவை மட்டும் பார்வையாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மீண்டும் இசைக்கப்பட்ட போது அரங்கம் கொண்டாட்டத்தின் உச்சிக்கே சென்றது.

வாழ்க்கையில் இது போன்ற அனுபவத்தை இதுவரை அனுபவித்ததில்லை என்பதை நிகழ்ச்சி முடிந்த பிறகு பார்வையாளர்களின் பரவச முகங்களே அடையாளங்களாய் திகழ்ந்தன.
..

ஒரு மொழி அதுவும் உலகத்தின் மூத்த தொன்மையான இன்றளவும் பேச்சு வழக்கில் எழுத்து வழக்கில் இருக்கின்ற செவ்வியல் மொழி இத்தனை காலங்கள் கடந்த பிறகும், இத்தனை வரலாற்றுப் பக்கங்கள் நகர்ந்த பிறகும் உயிர்போடு இருந்து நவீன கால இசை திறப்புகளிலும் பொருந்துகிறது என்று சொன்னால், தமிழ் மொழி போல் வேறு எந்த மொழியும் இல்லை என்பதை தமிழர் பெருமிதம் கொள்ளலாம் என்பதற்கு சான்று இந்த இசை நிகழ்ச்சி.

குறிப்பாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இசை குழுவினரின் அளவற்ற உழைப்பின் மூலம் பயிற்சி மூலம் அடைந்த ஒழுங்கு தான் இந்த நிகழ்ச்சி அடைந்திருக்கும் வெற்றியின் மூலதனம். ஒரே நேரத்தில் காணொலி மூலமாகவும் இசையொலி மூலமாகவும் நிகழ்த்தப்பட்ட இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இளைஞர்களும் இளம் பெண்களும் அளவற்ற திறமை கொண்டவர்களாக இருந்ததோடு மட்டுமல்லாமல், 90 நிமிட நிகழ்ச்சியில் ஒரு நொடியை கூட வீணாக்காமல் பார்வையாளர்களுக்கு கொண்டாட்டத்தையும் , தமிழ்மொழி உணர்ச்சியையும் வழங்கி சிறப்பித்தார்கள்.

ஓட்டு அரசியலில் வெகுஜன கட்சியாக செயல்படும் நாம் தமிழர் கட்சி என்கிற அமைப்பு சங்க தமிழோசை என்கிற மொழி மீட்பு இசை நிகழ்ச்சியை நடத்துவதன் மூலமாக வெறும் அரசியல் விடுதலை மட்டுமல்ல, தமிழர்கள் தங்களது பண்பாட்டு தளத்தில் மொழி மீட்பு களத்தில் வெற்றி பெற வேண்டும் என்கிற உணர்ச்சியை உலகமெங்கும் பரந்து வாழக்கூடிய தமிழர்களுக்கு ஏற்படுத்துவதில் வெற்றி பெற்று விட்டது.

நிகழ்ச்சி மேடையிலேயே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் சொன்னது போல இந்த தமிழோசை ஒவ்வொரு ஊரிலும் உலகில் தமிழர்கள் எங்கெங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கங்கெல்லாம் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தினார்.

மெய் சிலிர்க்க நடந்த இந்த வரலாற்று பெரு நிகழ்வு பார்வையாளர்களுக்குள் ஏற்படுத்திய தாக்கம் மிக மிக ஆழமானது.

இதே நிகழ்ச்சி உலகமெங்கும் நடக்கட்டும்.
உலகத் தமிழர் உள்ளத்தில் தமிழ் உணர்ச்சி மலரட்டும்.

“உலகம் எங்கும் கேட்கட்டும் சங்கத்தமிழோசை.”

நன்றி : வேல் வீச்சு இதழுக்கான அட்டைப்பட கட்டுரை.

திசை அறியும் திசைக்காட்டி.

சமகால தமிழக அரசியல் வரலாற்றில் அதிகம் விமர்சிக்கப்படுகிற, விவாதிக்கப்படுகிற ஆளுமையாக அண்ணன் சீமான் உருவாகி இருக்கிற உயரம் அவரே எதிர்பார்க்காத ஒன்று‌.அது திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட அல்லது நோக்கம் கருதி உருவாக்கப்பட்ட நிகழ்வு அல்ல. காலத்தின் கருவியாக தன்னை ஒப்புக் கொடுத்த ஒரு தனி மனிதனின் அசாத்திய மனப்பாங்கு.

தன் அரசியல் வாழ்வின் தொடக்க காலத்தில் இருந்து யாரும் தொட தயங்குகிற ,பிற தலைவர்கள் அதுவரை தொட்டிராத வரலாற்றின் வீதியில் இறுக மூடப்பட்டு துருவேறிக் கிடக்கின்ற பல சர்ச்சைக் கதவுகளை தன் அனல் தமிழால் எட்டி உதைத்து
மூடப்பட்ட கதவுகளை திறக்கும் பேரொசையால் அரசியல் களங்களை நிறைத்தவன் அண்ணன் சீமான்.

எங்கோ தொலைதூரத்தில் இருக்கின்ற தீவின் பிரச்சனை என அனைவரும் பேசிக் கொண்டிருக்கும்போது, இல்லை.. இல்லை.. அது என் மற்றொரு தாய் நிலத்தின் விடுதலைப் போராட்டம் என முழங்கியவன் அவன்தான்.

விடுதலைப்புலிகளை நாங்கள் ஆதரிக்கிறோம் என முழங்கிய தலைவர்கள் மத்தியில் புலிகள் எங்கள் உடன் பிறந்தவர்கள், தமிழர்கள் புலிகளின் புதல்வர்கள் என முழங்கியவன் அவன் தான்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் , அவர் வீரம் செறிந்தவர் என்றெல்லாம் பேசிய தலைவர்களுக்கு மத்தியில் பிரபாகரன் என் அண்ணன், என் உடன் பிறந்தான் என முழங்கி தமிழகத்து வீதிகளில் இன உணர்வு தீப்பற்ற வைத்தவன் அவன் தான்.

அவன் பார்க்காத விமர்சனம் இல்லை. அவன் சந்திக்காத எதிர்ப்பு இல்லை.

எம் இனத்தை அழித்த காங்கிரஸ் கட்சி, திமுகவோடு கூட்டணி கண்டு 63 இடங்களில் ஆர்ப்பரித்து நின்ற போது, இப்போது நிமிர்ந்து நிற்கும் நாம் தமிழர் கட்சி அப்போது இல்லை தான்.

ஆனாலும் தனி ஒருவன் அவன் அசரவில்லை. ஓயாமல் அவன் ஓடி ஓடி ஓங்கி அடித்த அடியில், அவன் போக முடியாத ஐந்து தொகுதிகளை தவிர, 58 தொகுதிகளில் காங்கிரஸ் காணாமல் போனது பழைய வரலாறு.

இயக்கமாக இருந்த போது இன்னும் சில காலம் இருப்பார்கள் சில்லறையாய் சிதறுவார்கள் என்றார்கள். கட்சியாய் மாறிய போது இதுவெல்லாம் சில காலம் தான்.. காணாமல் போய்விடுவார்கள் என்றார்கள். தேர்தலில் நின்ற போது பத்தோடு ஒன்று என்றார்கள்.திமுகவை எதிர்த்த போது இத்தோடு இது ஒன்று என்றார்கள். திராவிடத்தை எதிர்த்த போது பாஜகவின் B டீம் என்றார்கள்.பாஜகவை எதிர்த்த போது இதுவும் இன்னொரு திராவிடக் கட்சி தான் என்றார்கள்.

சாதி மறுப்பு பேசியபோது அதுவெல்லாம் சாத்தியம் இல்லை என்றார்கள். மதம் கடந்து தமிழராய் இணைத்த போது இதுவெல்லாம் ஆகாத வேலை என்றார்கள்.

கவிப்பேரரசு வைரமுத்து சொன்னது போல..

“அப்படி என்றால் அதுவும் தப்பு.. இப்படி என்றால் இதுவும் தப்பு..
கத்தும் நாய்க்கு காரணம் வேண்டாம்.
தன் நிழல் பார்த்து தானே குரைக்கும்.”

????

ஒவ்வொரு முறையும் முடிவெடுக்கும் போது அண்ணன் சீமான் விமர்சிக்கப்படுகிறார். ஆனால் தான் கொண்ட தத்துவத்திற்கு, தான் நிக்கிற லட்சியப் பாதைக்கு அவர் நேர்மையாக நிற்கிறார்.

அவர் அண்ணன் திருமாவளவனோடு எதில் இணைய வேண்டும் எதில் இணையக் கூடாது என்பதில் அண்ணன் சீமான் மிகத் தெளிவாக இருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பாக தனியாக நின்று என்ன புடுங்க போகிறாய் என கேட்ட அண்ணன் திருமாவிற்கு ,எம் அண்ணன் சீமான் சொன்ன பதில் ” எனக்கு என்ன அவர்கள் போதித்தார்களோ அந்த பாதையில் தான், அவர்கள் விலகினாலும் நான் தொடர்ச்சியாக பயணிக்கிறேன். கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் பதக்கம் பெறுவதில்லை. கற்றுக் கொள்ளும் மாணவர்கள் தான் வெற்றி பெறுகிறார்கள் பதக்கம் பெறுகிறார்கள்.”

இந்தப் பக்குவம் கடந்த 12 ஆண்டுகளாக அரசியல் செய்து தன்னிச்சையாக உறுதியாக களத்தில் நிற்கிற அண்ணன் சீமான் இறுதியாக கண்டடைந்த நிலை.

தன் இலட்சியப் பயணத்தை பிறர் சொல்லியும் எச்சரித்தும் கேட்காமல் தொடங்கிய அவருக்கு அது எப்படி நடத்த வேண்டும் என்கிற புரிதல் உண்டு.

எனவே இங்கு போதனைகள் தேவையில்லை.

எத்துயர் வந்தாலும், எந்நிலை தாழ்ந்தாலும் அண்ணன் கரம் பற்றி தடம் மாறாமல் பயணிக்கும் பேராற்றல் சாதனைதான் வேண்டும்.

அந்த நம்பிக்கை தான் இந்த 12 வருடங்களில் தடம் மாறாமல், தடுமாறாமல் பயணித்து அவர் சம்பாதித்தது.

அழைத்துச் செல்லும் அண்ணன் சீமான் அறிவார் அனைத்தையும்.

அவர் உறுதியாய் வெல்வார் தமிழர் மனத்தையும்.

எனவே .
ஏன் அப்படி செய்கிறார், ஏன் இப்படி செய்கிறார் என்றெல்லாம் வினாக்கள் எழுப்பி அவர் பாதையில் நாம் திசைக் காட்டிகள் வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஏனெனில் அவர் பயணத்தில் அவரே பாதை. அவரே திசைக்காட்டி.

அமைதி கொள்க அனைவரும்.

Page 9 of 57

Powered by WordPress & Theme by Anders Norén