பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: அரசியல் Page 3 of 15

மேதைமைகளின் பேதமைகள்.

????

ஒரு புத்தக முன்னுரையில் அண்ணல் அம்பேத்கர் அவர்களை பிரதமர் மோடியுடன், ஒப்பிட்டு இசைஞானி இளையராஜா‌ முற்றிலும் தவறாக பொருத்தியது அவரது அரசியல் ரீதியான அறியாமையை காட்டுகிறது.பெரும் மேதைகளுக்கு அவரவர் சார்ந்த துறைகளில் ஒளிரும் மேதமையை தாண்டி மற்ற துறைகளில் பூஜ்ஜியமாகத்தான் இருப்பார்கள் என்பது வரலாறு நமக்கு காட்டும் பாடம். இசைஞானி இளையராஜாவும் அதில் விதிவிலக்கல்ல. சச்சின் டெண்டுல்கரிடம் போய் இசையமைக்க எப்படி சொல்லக்கூடாதோ அதேபோல இளையராஜாவிடம் அரசியல் பற்றிய தெளிவை எதிர்பார்க்க கூடாது என்பதுதான் எனது புரிதல்.

மேலும் இளையராஜா தன் இந்துத்துவ சிந்தனாபோக்கும் வாழ்வியல் முறையும் தான் தன் இசைத்திறன் ஆதாரமாக இருக்கிறது என நம்புகிறவர். ஆன்மீகம் / கடவுள் போன்றவைகளுக்கு பின்னாலுள்ள அரசியலை காண விரும்பாதவர். தனது மேதமை மொழி/சாதி/நிலம் என எல்லைகளை தாண்டி விரிந்தது என நினைப்பவர். எனவேதான் தமிழ் மொழியை விட இந்தி மொழி இசையமைக்க சிறந்தது எனவும், தன்னை ஒரு சாதி அடையாளத்துக்குள் பார்க்கக்கூடாது எனவும் தான் கூறியவர். அப்படிப்பட்ட பார்வைகளை எதிர்த்தவர்.அது தமிழ் மொழியின் மீதான ஒவ்வாமையோ, சாதி மீதான எதிர்ப்புணர்ச்சியோ அல்ல. எல்லைகளை கடந்த மேதமை நிலையாகவே புரிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறவர். ஒரு தீவிரமான அழுத்தப்பட்ட நிலையிலிருந்து பெரும் பாய்ச்சல் போல வெளிப்பட்ட அவரது ஒட்டுமொத்த வாழ்க்கை சனாதன கட்டுகளை அறுத்தெரிந்த ஒரு புரட்சியாக புரிந்து கொள்ளப்பட வேண்டும் என விரும்பாதவர். அதற்காகவே ஆன்மீகப் போர்வை ஒன்றை தன் மீது போர்த்திக் கொண்டவர்.

எப்போதுமே இளையராஜாவின் அரசியலற்ற அவரது சமூகப் பார்வை நமக்கு உவப்பானது அல்ல. அவரது வரலாற்றிவு இல்லாத சமூக அறியாமை என்பது உச்சத்தை தொட்ட அவரது இசை மேதமையால் அவர் இழந்திருக்கிற இழப்பு. கடந்த பல ஆண்டுகளாக தன் வாழ்வையே இசைக்காக அர்ப்பணித்த அவர், இசையை தாண்டிய சமூக அறிவிலும் சரியாக இருப்பார் என எதிர்பார்ப்பது பிழையானது.ஆனால் அது அவரது கருத்து என்கிற முறையில் அதை வெளியிடும் உரிமை அவருக்கும் , அவரது இசையை தாண்டிய இந்தக் கருத்தினை விமர்சிக்கும் உரிமை நமக்கு உண்டு.

இதில் முக்கியமான பிரச்சினை என்னவெனில்..கல்யாண வீடாக இருந்தால் தாங்கள் தான் மாப்பிள்ளையாக இருக்க வேண்டும், சாவு வீடாக இருந்தால் தாங்கள் தான் பிணமாக இருக்கவேண்டும், புகழப்பட வேண்டுமானால் கருணாநிதி ஸ்டாலினை தான் புகழவேண்டும் என செஞ்சோற்று விசுவாசம் பாராட்டும் அறிவாலயத் திண்ணைகள், முற்போக்கு வெங்காயங்கள் இளையராஜாவை தனிப்பட்ட முறையில், விமர்சிக்க எந்த தகுதியுமற்றவர்கள்.இஸ்லாமிய மக்களை மிகவும் இழிவு படுத்துகிற ‘பீஸ்ட்’ படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்தைப் பற்றி வாய் திறக்கக்கூட மறுக்கிற இவர்கள் இளையராஜாவின் “மோடி பற்று” பற்றி விவாதிக்க தகுதியற்றவர்கள்.

தங்கத் தலைவனுக்கு பாராட்டு விழா, காவியத் தலைவனுக்கு கவியரங்கம் என தங்களுக்குத் தாங்களே விழா எடுத்துக் கொள்ளும் “திராவிடத் திருவாளர்கள்” கருணாநிதியை புகழாமல் இளையராஜா ஏன் மோடியை புகழ்கிறார் எனப் பொருமுவது புரிகிறது.இதே இளையராஜா ஸ்டாலின் எழுதிய புத்தகத்திற்கு முன்னுரை எழுத நேர்ந்திருந்தால், இப்போது நிகழ்ந்திருக்கிற கொடும் விபத்தை விட இன்னும் கொடுமையாக நடந்திருக்கக் கூடிய ஆபத்தும் இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.ஒருவேளை நடந்திருந்தால் ஸ்டாலினும் அம்பேத்கருக்கு நிகரானவராக மாறி இருப்பார்.நல்லவேளை அது நடக்கவில்லை. இது நடந்துவிட்டது. நம்மைப் பொறுத்தவரை இரண்டுமே தேவையில்லாத ஆணிகள் தான்.

எப்போதும் திரைப்படக் கலைஞர்கள் அதிகாரத்திற்கு அச்சப்பட்டு கொண்டே தங்கள் வாழ்வின் ஒவ்வொரு துளியிலும் சிந்திப்பார்கள். அதிகாரத்தின் நெருக்கம் அவர்களுக்கு , அவர்களது தொழிலுக்கு , புகழ்/ விருது/ உயர்வுகளுக்கு அவசியமானது. எனவே யார் ஆட்சியில் இருந்தாலும் அவர்களை புத்தன் இயேசு காந்தி என புகழ்வது அவர்களது வாடிக்கை. கருணாநிதி ஆளும்போது பக்கத்து இருக்கையில் ரஜினிகாந்த் உட்கார்ந்திருப்பார். கமலஹாசன் அமர்ந்திருப்பார். ஜெயலலிதா ஆளும் போதும் அதே காட்சிதான். அவர்களைப் பொறுத்தவரையில் கருணாநிதி மேடையில் அவர் அரசியல் ஞானி. ஜெயலலிதா மேடையில் அவர் தைரியலெட்சுமி.

எனக்கு மிகவும் பரிச்சயமான புகழ்பெற்ற திரைப்பட நடிகர் ஒருவர் இருக்கிறார். எல்லோருக்கும் நல்லவர் (?) அவர். ஈழத்தமிழர் போராட்டங்களிலும் அவர் இருப்பார். அறிவாலயக் கூட்டங்களிலும் அவர் இருப்பார்.ஜெயலலிதாவை புகழ்வார். கருணாநிதியை கொண்டாடுவார். அந்தப் பொழுதில் அவர் ஏறுகிற அந்த மேடைக்கு அவர் நேர்மை(?) செய்யாமல் அன்றையப் பொழுது அவரால் உறங்க முடியாது.அவர் சமீபத்தில் அறிவாலய கூட்டமொன்றில் பேசிய பேச்சைக் கேட்ட எனக்கு, ஈகி முத்துக்குமார் ஆவணப்படம் வெளியிட்டபோது அவர் பேசிய பேச்சு எனக்கு நினைவுக்கு வந்து தொலைந்தது. தன் வாழ்வில் ஒரே சமயத்தில் ஈகி முத்துக்குமாரோடும் , திமுக தலைவர் கருணாநிதியுடனும் இணைய முடிக்கிற ‘சர்க்கஸ் மனிதர்கள்’ அவர்கள்.

அதே போல் தான் தரமான திரைப்படங்களை இயக்கிய அறிவார்ந்த இரண்டு இயக்குனர்கள் சட்டென ஒரு மேடையில் நடிகர் ரஜினிகாந்தை “தமிழ்நாட்டை காப்பாற்ற” அரசியலுக்கு வாருங்கள் என அழைத்த போது எனக்கு தூக்கி வாரிப் போட்டது. இத்தனைக்கும் அதில் ஒருவர் சிறை எல்லாம் சென்று வந்தவர்.அதே வரிசையில் இன்னொருவர் சமீபத்தில் ஸ்டாலின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கப் போகிறேன் என்று அதிரவைத்தார். அதில் திரைப்படத்திற்கான சுவாரசியம் இருக்கிறதாம். இதே மனிதர் எடப்பாடி ஆட்சி காலத்தில் என்ன சொல்லியிருப்பார் என யோசித்துப் பார்த்தபோது பெரும் அச்சமாக இருந்தது.

இப்படித்தான் இவர்கள் இருக்கிறார்கள். யார் ஆள்கிறார்களோ அவர்களின் அரசவையில் பொற்காசு பிச்சைக்கு வரிசைக் கட்டுகிறார்கள்.அவ்வளவுதான் அவர்களது அறிவு. அதுதான் அவர்களது பிழைப்பு.கலை என்ற அம்சத்தை நீக்கினால் அனைத்துமே பேதமைதான். இதில் நடிகவேள் எம் ஆர் ராதா போன்ற விதிவிலக்குகள் மிக மிகக் குறைவு.கலை அறிவைத் தாண்டி திரைப்படக் கலைஞர்களிடம் அனைத்தையும் எதிர்பார்ப்பது தான் காலம் காலமாக தமிழர்கள் செய்துவருகிற பிழை.

தங்கள் வாழ்விற்கான அனைத்து தீர்வுகளையும் திரைப்படக் கலைஞர்கள் வழங்கிவிட வேண்டும் என்பதில் தமிழர்கள் காட்டுகிற தீவிரம் தான் இன்று இளையராஜா மீது வெறுப்பாக மாறுகிறது.

அவர் கருத்து அனைத்தையும் நாம் ஏற்க வேண்டிய தேவை இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.இளையராஜா இசையை ரசிப்போம். என்றும் கொண்டாடுவோம்.

அதைத் தாண்டி அனைத்திலும் அவரை ஏற்க வேண்டிய தேவை நமக்கும் இல்லை. அவருக்கும் இல்லை.

அண்ணன் சீமான் தந்த அண்ணன்.

❤️

அண்ணன் திருமா அவர்களைப் பற்றிய சித்திரம் அண்ணன் சீமானது மதிப்பு மிகுந்த வார்த்தைகளால்தான் எனக்குள் உருவானது. அதற்கு முன் தமிழ்ப்பாதுகாப்பு இயக்க மேடைகளில் அவரை நான் பார்த்திருந்தாலும் அண்ணன் சீமான் தான் தொல். திருமா என்கிற தனிமனிதரின் முழு உருவத்தை, எனக்குள் வரைந்தார்.

உண்மையில் சமூகத்தின் கடைக்கோடி எல்லையிலிருந்து ஒரு மனிதன் உருவாகி, பலதரப்பட்ட அனுபவங்களை உள்வாங்கி, ஒரு ஆற்றல் மிக்க தலைவராக மாறுவதென்பது மிக மிக அபூர்வம். அதுவும் சமீப நாட்களில் நாம் காண நேர்கிற அவரது நேர்காணலை பார்க்கும் போது ஏதோ ஒரு ‘மென்மை’ அவரது சொற்களின் மீது படர்ந்து இருப்பதாக தோன்றுகிறது. அதை அனுபவங்கள் தந்த பக்குவம் என்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

அது ஒருவகை நிதானம். ஆவேசமாக மேடைகளில் முழங்கி, போராட்டக் களங்களில் அதிகார உச்சங்களோடு மோதி, திமிறி எழுந்து, அடங்க மறுத்து, ஆர்ப்பரித்த, ஒரு காலத்து திருமா தற்போது சற்றே பக்குவம் அடைந்து நிதானப்பட்டிருப்பதை பார்க்கும்போது வாழ்க்கைத் தரிசனம் குறித்தான முக்கியச் செய்தி ஒன்றை நாம் கற்றுக்கொள்ள முடிகிறது.

அவரது தீவிரமான வாசிப்புத் தன்மையை அண்ணன் சீமான் விவரிக்கும்போது நான் வியந்திருக்கிறேன். அண்ணன் சீமான் அவர்களே மிக மிக தீவிரமான புத்தக வாசிப்பாளர். இரவு பகலாக புத்தகம் படிப்பதில் அதில் ஆழ்ந்து முழ்குவதில் தேர்ந்தவர். அப்படிப்பட்ட சீமான் அண்ணன் அவர்களே திருமா அண்ணனின் வாசிப்பு பழக்கத்தை சொல்லும்போது வியப்பான மொழிகளில் விவரிக்கிறார்.

சமீபகாலங்களில் பௌத்தத்தை நோக்கி அவர் நகரத் தொடங்கும் நுட்பமான புள்ளிகளை கவனிக்கும்போது அவரின் ஒட்டுமொத்த அரசியல்- பண்பாட்டு வாழ்விற்கான இறுதி இலக்கினை நோக்கி நகர்கிறாரோ என எண்ணத் தோன்றுகிறது.

அவரது அரசியல் சமரசங்களில் நமக்கு எத்தனையோ முரண்படும் புள்ளிகள் உண்டு. இதுபோன்ற முரண்பாட்டு புள்ளிகள், சமரசத் தருணங்கள் போன்ற விசித்திரங்கள் அண்ணல் அம்பேத்கர் அரசியல் வாழ்விலும் ஏற்பட்டிருக்கிறது. அதை ஒரு நேர்காணலில் மிகுந்த சங்கடத்தோடு எதிர்கொள்ளும் அண்ணன் திருமா அவர்கள் அவற்றை ‘ஒரு கையறு நிலை’ என வலியோடு சொல்கிறார்.

“எல்லோராலும் கைவிடப்பட்டவர்கள் எதையாவது பிடித்துக்கொண்டு மேலெழும் முயற்சிகள் அவை” என்கிறார். இந்தப் பார்வை இந்த ஒட்டுமொத்த சாதியச் சமூகத்தின் மீதான அவரது காத்திரமான விமர்சனம் எனலாம்.

நீட் தேர்வு கொடுமையால் இறந்துபோன தங்கை அனிதாவின் மரணத்தின் போதும், முள்ளிவாய்க்கால் முற்றம் கண்ட முனைவர் நடராசன் அவர்களின் மறைவின் போதும் அண்ணன் திருமா அவர்களை நேரடியாக சந்திக்கின்ற வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அண்ணன் சீமான் தான் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார்.
அவரது கைகளில் எல்லாம் நிறைய காயங்கள். நகக்கீறல்கள்.என்ன என்று கேட்டதற்கு ‘பேரன்புத் தம்பிகள் வழங்கிய விருதுகள்’ என்று சிரித்தபடியே சொன்னார்.

உண்மையில் சாதிப் பிடிமானம் மனித உளவியலிலும், சமூகத்திலும் வலிமையாக இருக்கின்ற இக்காலகட்டத்தில் அண்ணன் திருமா அவர்களின் இருப்பு, அவரது சாதி மறுப்புக் கருத்தியல், சனாதன தர்மத்திற்கு எதிராக அவரின் நகர்வுகள் ஆகியவை மிகு முக்கியத்துவம் பெறுகின்றன.

சாதிப்படி நிலைகளின் வலிமை, அதன் உள்ளார்ந்த அரசியல் அதிகாரம் , சாதி அடுக்கு பல்வேறு அதிகாரங்களாக மருவி காலம் காலமாக நீண்டு தொடர்ந்து காலத்திற்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொள்ளும் அதன் ஆற்றல் ஆகியவைகளை கல்வியாகவும்,அனுபவமாகவும் பயின்றவர்கள் அண்ணன் திருமாவின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வார்கள்.

அந்த ஒரு மனநிலையில்தான் அரசியல் முரண்பாடுகள்,தேர்தல் நிலைகள், இவற்றையெல்லாம் தாண்டி தொல் திருமாவளவன் என்கின்ற தனிப்பெரும் மனிதனை, அவர் நாம் சாராத இன்னொரு கட்சியின் தலைவர் என்ற நிலையிலும், நம், அண்ணன், நம் உடன்பிறந்தவர் என்றெல்லாம் அவரது பிறந்த நாளில் நாம் கொண்டாடி மகிழ்கிறோம். வாழ்த்திப் பெருமை அடைகிறோம்.

அந்தப் புரிதலை எங்களிடத்தில் ஏற்படுத்தி உலகமெங்கும் வாழும் நாம் தமிழர் தம்பிகள் இன்று அண்ணன் திருமா அவர்களை வாழ்த்தும் பெருமித மனநிலையை ஏற்படுத்தியது அண்ணன் சீமான் அவர்கள்தான்.

❤️

விடுதலை சிறுத்தைகளின் தலைவர் நம் அண்ணன் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு.. மனம் நிறைந்த
பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

பாவம் அவர்கள்..

நாங்கள் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல,
90 சதவீதம் இந்துக்கள் தான் எங்கள் கட்சியில் உள்ளார்கள் என பகிரங்கமாக சொல்கிற திமுக வை நம்புகிறவர்கள்.

இது ஆர்எஸ்எஸின் திட்டம், நவீன குலக்கல்வித் திட்டம் என திக தலைவர் வீரமணியால் , கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் முத்தரசன் போன்றவர்களால் கூட சுட்டிக் காட்டப்படும் “இல்லம் தோறும் கல்வித் திட்டம்” தான் திராவிடத்தின் அடையாளம் என பேசுகிற திமுகவை நம்புகிறவர்கள்.

ஆர்எஸ்எஸ் சமூக இயக்கம் எனச் சான்றிதழ் கொடுத்து சங்பரிவார் கூட்டத்தில் கலந்து கொண்டு பாரதமாதா சிலையை அமைச்சரை வைத்து திறந்து வைக்கும் திமுகவை நம்புகிறவர்கள்.

குஜராத் கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டபோது அப்போதைய குஜராத் முதலமைச்சர் மோடியை ஆதரித்த திமுகவை நம்புகிறவர்கள்.

A Right Man in Wrong Party என வாஜ்பாய்க்கு சான்றிதழ் கொடுத்து பாஜகவுடன் கூட்டணி வைத்த திமுகவை நம்புகிறவர்கள்.

முதன்முதலாக பிள்ளையார் ஊர்வலத்திற்கு இந்த மண்ணில் அனுமதி கொடுத்து, இந்த நொடி வரை பிள்ளையார் சதுர்த்தி அன்று பள்ளிவாசல் நுழைவாயில்களை பதட்டம் கொள்ள வைக்கிற ஆபத்தினை அன்றே அனுமதித்த திமுகவை நம்புகிறவர்கள்.

காலையில் தினமலர் விழாவில் கலந்துகொண்டு, தினமலருக்கும் கழகத்திற்கும் உள்ள உறவை கவிதையாக பேசிவிட்டு, மாலை நோன்புக் கஞ்சி குடித்து, குல்லா போட்டு, போட்டோவிற்கு போஸ் கொடுத்துவிட்டு, இரவு துக்ளக் விழாவில் சோ எனது நண்பர் என பேசிய கருணாநிதி தலைமையிலான திமுக வை நம்புகிறவர்கள்.

நீதிமன்றமே பிடிவாரண்ட் கொடுத்த போதும் கூட எச் ராஜாவை கைது செய்யாது வேடிக்கை பார்த்து பாஜகவோடு அனுசரணையாக நடந்து கொள்ளும் திமுகவை நம்புகிறவர்கள்.

பத்மா சேஷாத்திரி பள்ளி மீது கைவைத்தால் உன் ஆட்சியைக் கலைப்பேன் என பகிரங்கமாக முகத்தில் காரி உமிழும் சுப்பிரமணிய சாமியை எதிர்த்து ஒரு சொல்கூட பேசாமல் அமைதியாக அடக்கமாக நடந்து கொள்ளும் திமுகவை நம்புகிறவர்கள்.

இஸ்லாமிய மக்களை பாதிக்கக்கூடிய குடியுரிமை சட்டங்கள், வேளாண் சட்டமசோதா போன்றவற்றை தந்திரமாக பாராளுமன்றத்தில் ஆதரித்து வந்துவிட்டு , இங்கே எதிர்ப்பது போல நடித்து ஒரு போராட்டத்திலும் கலந்து கொள்ளாமல் வழக்கும் வாங்காமல் தப்பித்து போன திமுகவை நம்புகிறவர்கள்.

பாஜகவின் அதிகார பீடமாய் வந்து அமர்ந்து இருக்கும் ஆளுநர் மேசைக்கு அனைத்து கோப்புகளையும் அனுப்ப வேண்டும் என அடிமை சாசன உத்தரவை பிறப்பிக்கும் திமுகவை நம்புகிறவர்கள்.

தேர்தல் காலத்தில் வாக்களித்த நீட் தேர்வு, 7 தமிழர் விடுதலை எதையுமே செய்யாமல் மத்திய அரசை பகைத்துக் கொள்ளாமல் நட்பு பாராட்டும் திமுகவை நம்புகிறவர்கள்.

கோவை குண்டுவெடிப்பு கலவரத்தில் கைது செய்யப்பட்ட அப்பாவி இஸ்லாமியர்களை இதுவரை விடுதலை செய்யாமல், இதற்கு முன்னாலும் விடுதலை செய்யாமல் ஓட்டுக்கு மட்டும் முஸ்லிம்களை பயன்படுத்தும் திமுகவை நம்புகிறவர்கள்.

எப்போதும் தேர்தல் அரசியலில் இரண்டு சீட்டு மூன்று சீட்டுக்கு மேல் இஸ்லாமியர்களுக்கு தராமல் அவர்களது ஓட்டை மட்டும் கணக்கு செய்து சரியாக கறக்கும் திமுகவை நம்புகிறவர்கள்.

அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் கிடைத்திருப்பது தீர்ப்பு மட்டுமே, நீதி அல்ல, இது எங்கள் மக்களின் மீது இழைக்கப்பட்ட அநீதி, என முழங்கிய அண்ணன் சீமானை நம்பாது நீதிமன்றத் தீர்ப்பு அப்படியே கடைபிடியுங்கள் என சொன்ன திமுகவை நம்புகிறவர்கள்.

இந்து முன்னணிக்கு எதிராக வீரத்தமிழர் முன்னணி தொடங்கி சமஸ்கிருதத்திற்கு எதிராக தமிழ்,ராமனுக்கு எதிராக ராவணன், பிள்ளையாருக்கு எதிராக முருகன்,விவேகானந்தருக்கு எதிராக வள்ளலார், காவிக்கு எதிராகப் பச்சை , சூலாயுதத்திற்கு எதிராக வீரவேல், ராகவேந்திரருக்கு எதிராக வைகுந்தர்,சாய்பாபாவிற்கு எதிராக புரட்சியாளர் பழனி பாபா என்றெல்லாம் பிரகடனப்படுத்தி இஸ்லாமியர்களை தமிழர் மெய்யியல் காக்கும் வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளர்களாக அறிவித்து எப்போதும் இஸ்லாமியர்கள் பக்கம் நிற்கின்ற அண்ணன் சீமானை 1008 கேள்விகள் கேட்டு விட்டு திமுகவினை ஒரு சொல் கூட கேட்காமல் அப்படியே நம்புகிறவர்கள்..,

நாங்கள் இந்துக்கள் அல்ல என பிரகடனப்படுத்தி , ஒவ்வொரு தேர்தலிலும் இதுவரை தமிழக அரசியல் கட்சிகள் வழங்காத அப்பெரும் இடங்களை இஸ்லாமியர்களுக்கு வழங்கி, குறிப்பாக 13 இடங்களில் எட்டு இடங்களில் இஸ்லாமியப் பெண்களுக்கு வழங்கி, இஸ்லாமிய மக்கள் இந்த மண்ணின் சிறுபான்மை அல்ல, அவர்கள் பெரும்பான்மை தமிழ் தேசிய இனத்தின் பெருமை மிக்க மக்கள் என முழங்கிடும் நாம் தமிழர் கட்சியை..

நம்பாமல் போவது இயற்கைதான்.

இன்னும் நாளை பிஜேபியோடு திமுக கூட்டணி வைத்தாலும் அதையும் இவர்கள் நியாயப்படுத்தி தான் பேசுவார்கள். ஏற்கனவே பிஜேபியோடு திமுக கூட்டணி வைத்தபோது குறைந்த பட்ச செயல் திட்டம் இருக்கிறது என்றெல்லாம் நியாயப் படுத்தி தான் பேசினார்கள்.

பாவம் அவர்கள்.
அவர்களோடு விவாதிக்காதீர்கள்.

யார் எதிரி, யார் நண்பன் என தெரியாத பாவம் அவர்கள்.

இங்கே இந்துத்துவா தான் திராவிடம் வழியாக வருகிறது என உண்மை அறியாத பாவம் அவர்கள்.

அவர் வந்து விடுவார், இவர் வந்துவிடுவார் என அச்சுறுத்தி ஓட்டை பறிக்கும் திருடர்களை நம்பி வழிதவறி நிற்கிற கூட்டம் அவர்கள்.

அநீதிக்கு துணை போவதும், நேர்வழி நிற்பவர்களை இழிவு படுத்துவதும் சரியானவையா என மறுமையில் ஏக இறைவன் முன்னால் அவர்கள் பதில் அளிக்கட்டும்.

இதைச் சரியாக உணர்ந்து
தேவையற்ற விவாதங்களை நம் உறவுகள் தவிருங்கள். புரிந்து கொள்ளும் ஒரு நாள் வரும். அன்று அவர்கள் வரட்டும்.

நம் தலைவர் நமக்கு கற்பித்தது போல நாம் அவர்களுக்காகவும் தான் களத்தில் நிற்கிறோம். பல சமயங்களில் அவர்களுக்காக நாம் மட்டுமே களத்தில் நிற்கிறோம்.

அண்ணன் சீமான் சொல்வது போல..

இந்தத் தேர்தல் களத்திற்கு அப்பாலும் நமக்கென ஒரு லட்சியம் இருக்கிறது. நாம் வெல்கிறோமோ, தோற்கிறோமோ, போராடுவோம்.

ஏனெனில் நாம் போராடப் பிறந்தவர்கள். நம்மை விமர்சிப்பவர்களுக்காகவும் நாம் போராடுவோம்.

நாம் தமிழர்.

மணி செந்தில் ‌.

அண்ணன் என்ற அற்புதன்..

❤️

2009 -ல் மதுரையில் நடந்த “அறுத்தெறிவோம் வாரீர் “கூட்ட மேடையில் முதன்முதலாக ஏறிய போது கைப்பிடித்து என்னை ஏற்றினார்.

அந்த நொடி முதல் அந்த கைகள் என்னை விட்டு விலகியதே இல்லை. தாய்மை சாயல் கொண்ட அந்தக் கண்கள் என்னை விலக்கியதே இல்லை.

அண்ணன் என்ற சொல்லுக்கு அவரைத் தவிர வேறு எதுவும் அர்த்தமில்லை. அவரிடமிருந்து வரும் என்ற தம்பி என்ற அழைப்பைத் தாண்டி வேறு எதுவும் உயர்வில்லை.

தனிப்பட்ட அளவில் நான் எவ்வாறு அவரைப்பற்றி உணர்ந்திருக்கிறேனோ, அதே போல்,நாம் தமிழர் கட்சி என்ற அமைப்பில் இருக்கின்ற லட்சக்கணக்கான உறவுகளும் அவரை உணர்கிறார்கள்.
அவர்கள் அனைவரோடும் நேச வேதியியல் அமைந்த விசித்திரமான பிணைப்பு அண்ணன் சீமானுக்கு உண்டு.

சாதி, மதம், பொருளாதார அடிப்படை, சுயநல அரசியல் பிழைப்பு, எதிர்பார்ப்பு என்றெல்லாம் இயல்பான சமூகத்திற்கு உரிய எந்த சமூக இணைப்புகளும் இல்லாத ஒரு பெருங்கூட்டம், அந்த ஒற்றை மனிதனின் அன்பான சில வார்த்தைகளால் தான் கட்டப்பட்டிருக்கிறது. இணைக்கப்பட்டிருக்கிறது.

இந்த கட்சியை விட்டு சென்றுவிட்ட சிலர் கடுமையாக விமர்சிப்பதை பார்க்கும் போது அதில் தொனிக்கின்ற உணர்ச்சிகளை கவனித்துப் பார்த்தால்..பிசகிய காலத்தினால் இழக்கவே கூடாத “அண்ணனை இழந்து விட்ட” சுய கழிவிரக்கம் அவர்களை பாடாய்படுத்துவதை தான் வெறுப்பாய் உமிழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என நானெல்லாம் உணர்ந்திருக்கிறேன்.

ஏனெனில் அண்ணனின் நிழல் போல் சொர்க்கத்தின் அரண்மனை கூட சுகமாக இருக்காது என அனுபவித்தவர்களுக்கு நன்கு தெரியும் இல்லையா..??

அண்ணன் என தலைவனின் தம்பியை அழைத்து விட்டு மற்றவர்களை தலைவராக ஏற்க , அண்ணனாக அழைக்க கூசும் இல்லையா..??

எதிர்ப்புகளால் தான் நம் அண்ணன் உருவானார். போராட்டங்களும் இழப்புகளும் தான் அவரை உரம் ஏற்றியது. எதற்கும் அஞ்சாத, இனத்திற்காக எதையும் இழக்க துணிந்த அவரது அசாத்திய துணிச்சல் தான் அவரை உயர்த்திக் கொண்டே இருக்கிறது.

இவைகள்தான் ஒவ்வொரு நொடியும் அவர் நமக்கு விடுத்துக் கொண்டிருக்கின்ற செய்தி.

….

இரவு பகலாக உழைத்து, வியர்வை மழையில் நனைந்து, நிறைய வாசித்து, எந்தத் தலைவர்களும் பேசாத அளவிற்கு ஆயிரக்கணக்கில் கூட்டங்கள் பேசி, துளித்துளியாய் இலட்சக்கணக்கில் உறவுகளை இணைத்து, ஒரு பெரும்படை கட்டி நிமிர்ந்து நின்று , ஒவ்வொரு நொடியும் தன்னைத்தானே மேம்படுத்திக் கொள்கிற அந்தப் பெருமகன் நம்மைப் பொறுத்தவரையில் நாம் கற்க விரும்பும் ஒரு தனி மனிதனின் வரலாறு மட்டுமல்ல. நிமிரத்துடிக்கும் ஒரு இனத்தின் வரலாறு.
காலத்தினால் கையளிக்கப்பட்ட
ஒரு கடமையின் வரலாறு.

❤️

“அண்ணன் என்ற என் அண்ணைக்கு
நெஞ்சமெல்லாம் பூரித்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.”

❤️

இனி நாம்தமிழர் காலம்

❤️

புரிய வேண்டிய புரிதல்கள்..

⚫

வர்ணாசிரமக் கோட்பாட்டை வலியுறுத்தும் வைதீக இந்து மதம் என அழைக்கப்படுகின்ற ஆரிய மதத்திற்கு எதிரான கலகக் குரல் தான் தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்கிற முழக்கம்.இது இக்காலத்திற்கு ஏற்றாற்போல் வடிவமைக்கப்பட்ட முழக்கம் அல்ல. காலம் காலமாக தமிழர்கள் தாங்கள் இந்துக்கள் அல்ல என்பதை தங்கள் மீது திணிக்கப்பட்ட இந்துத்துவ அடையாளத்திற்கு எதிராக முழங்கி இருக்கிறார்கள். வரலாற்றில் நமக்குக் கிடைக்கக்கூடிய தொன்ம இலக்கிய சான்றுகளான சங்கப்பாடல்கள் தொடங்கி, சித்தர் பாடல்கள் தொடங்கி, வள்ளலார் வழி வைகுண்டர் வழி என பல கொள்கை வழிகள் பார்ப்பனிய ஆரிய மதமான இந்து மதத்திற்கு எதிரான கலகக் குரல்கள் மட்டுமல்ல, மாற்று பண்பாட்டு வழி தீர்வுகள்.

கடந்த 2009 இன அழிவிற்கு பிறகான தமிழ்த் தேசிய அரசியல் உருவான காலகட்டத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு பார்ப்பனிய ஆரிய இந்து மதத்தின் ஆதிக்க நிலை உச்சத்தில் இருந்ததை உணர்ந்தோம். எனவே தமிழர்கள் வரலாற்று ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் இந்துக்கள் அல்லர் என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டிய ஒரு நிலைக்கு நாங்கள் உந்தப்பட்டோம்.மேலும் தமிழரின் பல பண்பாட்டு விழுமியங்களை அடையாளங்களை ஆரிய இந்து மதம், செரித்து உள்வாங்கி தனது அடையாளங்களாக வெளிப்படுத்துகிற வரலாற்றுத் திரிபுகளை அடித்து நொறுக்க வேண்டும் என இந்த மண்ணின் பூர்வ குடிமக்கள் முடிவெடுத்தோம்.லிங்காயத்துகள் போல சீக்கியர்கள் போல நாங்களும் இந்துக்கள் அல்ல என நாம் தமிழர் என்கின்ற வெகுஜன அரசியலாக கட்டமைக்கப்படுகிற இனத்திற்கான அரசியலின் ஊடாகவே தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்பதையும் நாங்கள் கொள்கை முடிவாக அறிவித்தோம்.

இந்தக் கொள்கை முடிவை எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கின்ற எல்லா இடங்களிலும் முழங்குகிறோம். தமிழர்கள் ஏன் இந்துக்கள் அல்ல என்கின்ற கேள்வி இருந்து தமிழர்கள் யார் என்பதான அறிவுத்தேடல் பிறக்கும் என நாங்கள் நம்புகிறோம். அப்படி தமிழர்கள் யார் என தேடுகிற அறிவுத்தேடல் மூலம் தமிழர் என்கின்ற தேசிய இனம் வலிமையற்ற உதிரிச் சமூகமாக மாறுகின்ற அபாயம் தடுக்கப்படும் என்பதை உணர்ந்திருக்கிறோம்.எனவே தொன்ம இனமான தமிழர் என்கின்ற தேசிய இனத்தின் பண்பாட்டை மீட்க காலப்புழுதியில் புதைந்து கிடக்கும் எம் இனத்தின் மெய்யியல் சிந்தனைகளை மீண்டும் இந்த மண்ணிலே விவாதப் பொருளாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் எங்களது பயணம் அமைகிறது.

இஸ்லாமும் கிறிஸ்தவமும் ஒரு மதம் என்ற அடிப்படையில் அதற்கான அடிப்படைத் தகு நிலைகளை கொண்டிருக்கின்றன. ஆனால் சர் வில்லியம் ஜோன்ஸ் என்கிற ஆங்கிலேய அதிகாரி உருவாக்கிய சொல்லான “இந்து” என்பது ஒரு மதத்தின் பெயர்ச்சொல் அல்ல. அது இந்த மண்ணை ஆண்ட ஆங்கிலேயர் தனது வசதிக்காக உருவாக்கிக் கொண்ட அரசியல் நிர்வாகச் சொல்.இஸ்லாமும் கிறிஸ்தவமும் தங்களுக்கென தனித்த வழிபாட்டு முறைகளை கொண்டிருக்கின்றன. அதற்கென தனித் தனியாக புனிதநூல்கள் அடையாளம் காட்டப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்து என்று ஆங்கிலேயரால் கட்டமைக்கப்பட்ட மதம் இதுபோன்ற ஓர்மைக் கூறுகளை கொண்டிருக்கவில்லை என்பதோடு மட்டுமில்லாமல், ஒரு மதம் என்கிற முறைமையில் ஆய்வாளர்கள் வரையறுக்கிற காரணிகளோடு இந்து மதம் ஒத்துப் போவதில்லை.

யார் இந்துக்கள் என்கின்ற கேள்விக்கு இந்து என்கின்ற சொல்லை இந்த நிலத்தில் வாழக்கூடிய கோடிக்கணக்கான மக்களுக்கான பொதுச் சொல்லாக மாற்றிய சர் வில்லியம் ஜோன்ஸ் அளித்த பதில் மிக விசித்திரமானது.யார் இஸ்லாமியர்கள் இல்லையோ, யார் சீக்கியர்கள் இல்லையோ, யார் கிறிஸ்தவர்கள் இல்லையோ அவர்கள் எல்லாம் இந்துக்கள் என போகிற போக்கில் வரையறுத்த விபரீதத்தை தான் இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.ஏற்கனவே தமிழர் நிலத்தில் சைவம்,மாலியம், பௌத்தம் சமணம் என பல்வேறு நம்பிக்கைகள் இங்கே இருந்தன. மேலும் ஆங்கிலேயர் வருகைக்கு முன்பாகவே இருந்த ஆரிய புராதான வைதீக பார்ப்பனிய மதத்திற்கு எதிராக , வருணாசிரம கோட்பாடுகளுக்கு எதிராக தமிழர் மண் உளவியலாகவே எதிர்ப்பு நிலையை கொண்டிருந்தது. ஆனால் ஆங்கிலேயர் தனது நிர்வாக வசதிக்காக இந்து என்கின்ற பொது அடையாளத்துக்குள் தமிழர்களின் அனைத்து விதமான நம்பிக்கைகளையும் அடைத்து ஏற்கனவே இருந்த ஆரிய வைதீக மதத்திற்கு வலுவை சேர்த்தனர்.

இந்து மதத்தை பரப்புவதற்காக சாமி விவேகானந்தர் தமிழகத்திற்கு வந்திருந்தபோது எங்களை இந்துக்கள் என்று நீங்கள் எவ்வாறு அடையாளப் படுத்தலாம் என பேரறிஞர் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை வினா எழுப்பினார்.எனவே தமிழர்களின் தொன்ம அடையாளங்களை அழிக்கும் விதமாக ஏற்படுத்தப்பட்ட இந்து என்கின்ற பொது அடையாள சொல்லை தமிழர்கள் நாங்கள் நிராகரிக்கிறோம் என்பதன் அடிப்படையிலேயே தமிழர்கள் நாங்கள் இந்துக்கள் அல்ல என பேரறிவிப்பு செய்கிறோம்.தமிழர்கள் எத்தனையோ மதங்களை சார்ந்து வாழ்கிறார்கள்.அயலில் இருந்து இறக்குமதியான இஸ்லாம் கிறிஸ்தவ மதங்களின் மீது நம்பிக்கை கொண்ட தமிழர்களை தாய் மதத்திற்கு திரும்பி வாருங்கள் என்று நாம் அழைக்கவில்லை. அது தேவையும் இல்லை. சொல்லப்போனால் வர்ணாசிரம அடுக்கை, ஆரிய இந்து மதத்தின் ஏற்றத்தாழ்வுகளை வெறுத்த தமிழர்கள்தான் இஸ்லாத்தையும், கிறிஸ்தவத்தையும் ஏற்றார்கள். வர்ணாசிரம கோட்பாட்டை வலியுறுத்துகிற இந்து மத எதிர்ப்பு புள்ளியில் அவர்கள் எங்களோடுதான் நிற்கிறார்கள்.

இந்தப் புரிதலோடு தான் இந்து என்கின்ற அடையாளத்தில் இருந்து தமிழர்கள் வெளிவர வேண்டும்‌ என்கிற அழைப்பினை தான்‌ நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்கள் சென்ற இடங்களில் எல்லாம் அழைப்பு விடுக்கிறார்.நாம் தமிழர் கட்சியில் எத்தனையோ இஸ்லாமியர்கள், கிருத்தவர்கள் கட்சியின் உயர் நிர்வாக பொறுப்பில் இருக்கின்றார்கள்.

அண்ணன் சீமானின் கருத்தை மிகச் சரியாக புரிந்து கொண்டு அண்ணனோடு பயணிக்கிறார்கள். இஸ்லாமிய மக்களை பாதிக்கின்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஒவ்வொரு பள்ளிவாசலிலும் போராடிய இஸ்லாமிய தமிழர்களோடு களத்தில் நின்ற ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டும்தான். அதன் காரணமாக தமிழகத்தில் வழக்கு பெற்ற ஒரே ஒரு அரசியல் தலைவர் அண்ணன் சீமான் மட்டும்தான்.

இதைப் புரிந்து கொண்டு , வெகு காலத்திற்குப் பிறகு இஸ்லாமிய, கிறிஸ்தவ இளைஞர்கள் திராவிட கட்சிகளை விட்டு தமிழ் தேசியத்தின் மீது நம்பிக்கை கொண்டு நாம் தமிழர் கட்சியை நோக்கி நகருகின்ற காட்சிகளை பொறுக்க முடியாமல் தான் இதுபோன்ற வெட்டி ஒட்டி அவதூறுகளை பரப்ப வேலைகளை திராவிட ஆதரவாளர்கள் திட்டமிட்டு செய்கிறார்கள்.

எங்களுக்கு முன்னால் இருந்த முன்னோர்கள் வள்ளலார் வழி வைகுண்டர் வழி என்றெல்லாம் கட்டமைத்து விட்டு இந்து மதத்தில் சங்கமித்து விட்டார்கள் என தீவிர திராவிட ஆதரவாளர் ஒருவர் எச்சரித்துள்ளார்.எங்களை அவர் எச்சரிக்க தேவையில்லை. தன் கட்சியில் 90 சதவீதம் இந்துக்கள் தான் இருக்கிறார்கள் என இந்து மதத்தை நம்புகிற திமுக தலைவரை அவர் எச்சரித்தால் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லது.ஏனெனில் திராவிடம் தான் ஆரியத்தை தமிழக நிலத்தில் விதைத்த, காப்பாற்றுகிற, கூட்டணி அரசியல் செய்கிற வேலையை திறம்பட செய்து வருகிறது.இதை தெளிவாக புரிந்து கொண்டு, அண்ணன் சீமான் அவர்களது கருத்தை வெட்டி ஒட்டி அவதூறு பரப்புவர்களின் அரசியல் பிழைப்பு தனத்தை அம்பலப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

காலை,மாலை,இரவு என மூன்று வேளையும் சீமான் போபியா பிடித்து அலையும் அறிவாலயத்து அடிமைகளை பார்க்கும்போது ஒருபுறம் வேதனையாகவும், மற்றொருபுறம் இப்படி இவர்களை நிம்மதியில்லாமல் எட்டு திசையிலும் கட்டி அடிக்கிறாரே அண்ணன் என்பதான மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

அவர் சாதாரணமாக பேசுவதில் கூட‌ எங்கே உள்ளே புகுந்து பொரணி பேசலாம் என்கின்ற கேடுகெட்ட மனநிலை உச்சத்தில் நின்று ஆடுகின்ற காலம் இது.குமரி மாவட்ட கனிமவளம் கொள்ளை போவது அவர்களுக்கு பிரச்சனை இல்லை. சாட்டை துரைமுருகன் திட்டி விட்டார் என்பதுதான் அவர்களுக்கு பிரச்சனை. நீட் தேர்வை இதுவரை நீக்க முடியவில்லை என்பதெல்லாம் அவர்களுக்கு பிரச்சனை இல்லை.

சீமான் இன்று என்ன பேசினார் என்பது தான் அவர்களுக்கு பிரச்சனை.இப்படி மண்டை முழுக்க அவர்களுக்கு பைத்திய சுமை ஏறி 24/7 ஒரே சிந்தனையில்‌ சீமான், நாம் தமிழர் என அவர்கள் கிறுக்கு பிடித்து சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.நெருங்கி நின்று என்ன பேசுகிறார்கள் என கவனித்து விடாதீர்கள். கடித்து வைத்து விடுவார்கள் கவனம்.

இன்று பனைத் திருவிழா தொடங்கிவைத்து அண்ணன் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது பேசிய சில கருத்துக்களை திசைதிருப்பி வழக்கம்போல் சில வில்லங்க பதிவுகளை சமூக வலைதளங்களில் பரப்ப தொடங்கியுள்ளனர்.தமிழர்கள் இந்துக்களே இல்லை, தமிழர்களை இந்துக்கள் என்பதை நாங்கள் ஏற்கவில்லை என்பதுதான் அண்ணன் சீமான் சொன்னது,

உடனே செய்தியாளர் இடைமறித்து கிறித்துவ, இஸ்லாமிய சமயங்களை நோக்கி ஏன் கேள்வி எழுப்புமாட்டேன் என்கிறீர்கள் என்றதற்கு , அவை வெளியிலிருந்து வந்த சமயங்கள்தானே, ஒன்று ஐரோப்பிய சமயம், மற்றொன்று அரேபிய சமயம்தானே என்று கூறிவிட்டு,மீண்டும் விட்ட பதிலை தொடர்கிறார்.. அதாவது மர செக்கு எண்ணெய்க்கு திரும்புவதுபோல் தமிழர்கள் தங்கள் சமயங்களின் மீது பூசப்பட்ட இந்து என்ற அடையாளத்தை விடுத்து சைவம் , மாலியம் என்று மீண்டு வாருங்கள் என்று சொல்லி அந்த பேட்டியை நிறைவு செய்கிறார்.ஆனால் முன்பாதியை வசதியாக மறைத்துவிட்டு திராவிடத் திருடர்கள் வழக்கம்போல் தங்கள் வெட்டி ஒட்டும் வழக்கமான வேலையின்படி, செய்தியாளர் இடைமறித்து கேட்ட கேள்விக்கான பதிலையும், நாங்கள் இந்துகள் அல்ல என்பதற்கு கொடுத்து வந்த பதிலின் தொடர்ச்சியின் மீதத்தையும் சேர்த்துசீமான் இந்து மதத்திலிருந்து மீண்டு சைவம், மாலியத்திற்கு மீண்டு வாருங்கள் என்று சொன்னதை இஸ்லாம், கிறித்துவத்திலிருந்து மீளச்சொன்னதுபோல் கேடுகெட்ட அவதூற்றுப் பொய்ப் பரப்புரையில் ஈடுபடுகின்றனர்.

நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை தடுக்கிறார்களாம். வாங்கிய 200 ரூபாய்க்கு என்ன வேலை பார்த்தீர்கள் என ஓனர் கேட்கின்ற கேள்விக்கு திராவிட பஜனை கோஷ்டியினர் பதிலளிக்க எப்படியெல்லாம் குட்டிக்கரணம் அடிக்க வேண்டி இருக்கிறது..??இந்தப் கேடு கெட்ட பொழப்பிற்கு..!

⚫

வழக்கறிஞர் மணி செந்தில்.நாம் தமிழர் கட்சி.

59தமிழ வேள், பொன்வாசிநாதன் விஜயரெங்கன் and 57 others2 comments27 sharesLikeCommentShare

2 comments

இது நம் காலம்.

❤️

சம காலத்தில் திராவிட/தேசிய தத்துவங்களை சார்ந்த அனைத்து அமைப்புகளுக்கும் எதிராக நிற்பது என்பது உண்மையில் சற்றே திமிர் கலந்த பெருமிதமாகத்தான் இருக்கிறது. இவர்கள் நம்மை பார்த்து பதற பதற நமக்கு ஆர்வம் கூடுகிறது. பதற்றத்தோடு நம் மீது அவதூறுகளை அள்ளி வீசி அழித்துவிடுவோம், முடித்து விடுவோம், தனித்து விடுவோம் என இவர்கள் துள்ளி குதிக்கும் போது நமக்கு பரவசம் கூடுகிறது. இவர்கள் எதிர்க்கும் போதெல்லாம் மனம் உற்சாகம் அடைந்து உயிர் கொள்கிறது.வரலாற்றில் நம்மைப்போன்ற உறுதி கொண்ட ஒரு கூட்டத்தை தமிழக அரசியல் இப்போதுதான் எதிர்கொள்கிறது.

இந்த மன உறுதி இன அழிவினால் ஏற்பட்ட அறிவினால் உண்டானது. இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் உண்டானது. 60 ஆண்டு காலமாய் நாம் ஏமாற்றப்பட்டதன் பின்னால் உள்ள அவமானத்தால், காயத்தால், வலியால், உண்டானது.எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. 2009 டிசம்பர் மாதத்தில் நாம் தமிழர் மிகச்சிறு அமைப்பாக ஊருக்கு ஊர் முளைவிடத் தொடங்கிய காலகட்டத்தில்.. அண்ணன் சீமான் உள்ளிட்ட நாங்கள் பலரும் ஊர் ஊராய் அலைந்து கலந்தாய்வுக் கூட்டம் என்ற பெயரில் உணர்வாளர்களை ஒன்று திரட்டிய காலக்கட்டம் அது. அப்போதுதான் பெரம்பலூர் கலந்தாய்வு கூட்டத்தில் அண்ணன் சீமான் தீர்க்கதரிசி போல ஒரு கருத்தை வெளியிட்டார்.”கடந்த 50 ஆண்டு கால அரசியல் என்பது கருணாநிதி வாழ்க, கருணாநிதி ஒழிக என்கிற இரண்டு மட்டும் தான்.

அடுத்து வருகிற 50 ஆண்டுகால அரசியல் என்பது நாம் தமிழர் வாழ்க, நாம் தமிழர் ஒழிக என்கிற இரண்டு மட்டும்தான்.”இப்போது அதுதான் நடக்கிறது. எல்லோருக்கும் நாம் எதிரி. ஆனால் நாமோ இவர்களில் 99 சதவீதத்தினரை பொருட்படுத்துவது கூட இல்லை. அண்ணன் சீமான் சொன்னது போல “எங்களை எதிர்பபவர் எல்லாம் எங்கள் எதிரியல்ல ‌. நாங்கள் யாரை எதிர்க்கிறோமோ அவர் மட்டுமே எங்கள் எதிரி.”இந்த மண்ணில் தமிழ்த்தேசியம் என்ற கருத்துரு ஒரு சிறு குழுவாக எழுந்து,இருந்து முடிந்துவிடும் என இவர்கள் நம்பினார்கள்.

கடந்த கால வரலாறும் அப்படித்தான். எங்களுக்கு முன்னால் இருந்த எத்தனையோ தமிழ்த்தேசிய மூத்தவர்கள் கூட தமிழ்த்தேசியம் ஒரு வெகுசன கருத்தியலாக மலராது என நம்பினார்கள். ஏனெனில் திராவிடம் என்ற மகா பூதம் காலம் காலமாய் தமிழ்த் தேசியம் என்ற மலரத் துடித்த இனமான உணர்ச்சியை ஒவ்வொரு காலகட்டத்திலும் விழுங்கி செரித்துக் கொண்டிருந்தது.ஆனாலும் விடாப்பிடியாக அண்ணன் சீமான் இந்த முறை வழமை விதியை மாற்றி எழுத தொடங்கினார். அசாத்திய உழைப்பினால் இவர்களது நம்பிக்கையை பொய்ப்பித்தார். தன்னம்பிக்கை கொண்ட ஒரு மனிதனின் தனி வரலாறு அது.இவர்கள் எல்லோரும் இத்தனை ஆண்டுகாலம் கேள்வி கேட்க முடியாத புனித பிம்ப முகங்களோடு உலா வந்தார்கள். ஊடகங்களில் எல்லாம் தாமே என்று படம் காட்டினார் கள். ஆனால் உலகம் உள்ளங்கையில் அலைபேசி வழியாக வந்து உட்கார தொடங்கும்போது பேருந்து செல்லாத கிராம வீதிகளில் கூட அண்ணன் சீமான் அலைபேசி திரைகளை ஆக்கிரமிக்கத் தொடங்கினார்.

எங்கிருந்தோ வந்த எதிர்பாராத தொழில்நுட்ப வளர்ச்சி தமிழ்த்தேசிய எழுச்சிக்கு உரம் இட்டது.இனி இவர்கள் இறுதியாக நம்பியது, நம்புவது அவதூறு என்கின்ற ஆயுதத்தை மட்டுமே. இளைஞர்கள் வெகுவாக உள்ள சமூக வலைதளங்களை ஏறக்குறைய தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிற அமைப்பாக நாம்தமிழர் எழத் தொடங்கியபோது இவர்கள் அவதூறு ஆயுதங்களைக் கொண்டு பொய்களை வீசத் தொடங்கினார்கள். எதிர்வினை ஆற்ற இளைஞர்கள் எழுந்தபோது இவர்கள் கட்டுப்பாடற்றவர்கள், திட்டுகிறார்கள், கொலை மிரட்டல் விடுக்கிறார்கள் என்றெல்லாம் கத்தி கூப்பாடு போட்டார்கள். கூட்டம் சேர்க்க முயன்று சோர்ந்தார்கள். கடைசியில் தாங்களே ஒரு கூட்டம் என தங்களைத் தாங்களே திருப்திப் படுத்திக் கொண்டார்கள்.

ஆனாலும் ஒரு புறம் நாம் தமிழர் இவர்கள் கண்ணெதிரே வளர்ந்து கொண்டே செல்கிறது. ஒவ்வொரு நாளும் புதிய இளைஞர்கள். ஒவ்வொரு ஊரிலும் புலிக் கொடி மரங்கள்.இவர்களும் நம்பிக்கை இழக்காமல் அவதூறு சளி பிடித்து இருமிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாம் தமிழர் இளைஞர்களோ, ஒவ்வொரு நாளும் பல்கி பெருகிக்கொண்டே இருக்கிறார்கள்.முடிவாக நாம் உணர்வது இதுதான்.இவர்கள் எதிர்க்கவில்லை என்றாலும் நாம் வளர்வோம். எதிர்த்தாலும் நாம் வளர்வோம்.

ஏனெனில் இது நம் காலம்.

நாம் தமிழர் காலம்.

ஸ்டாலின் – சீமான் சந்திப்பு

விமர்சனங்களில் பலவகை உண்டு.ஆக்கப்பூர்வமாக விமர்சிப்பது, விமர்சிக்க வேண்டும் என்பதற்காக எதையாவது கற்பனை செய்து கதை எழுதுவது‌ என்பதான வகைகள் விமர்சனங்களில் உண்டு.குறிப்பாக நாம் தமிழர் மீது ஏவப்படும் விமர்சனங்களை கூர்ந்து கவனியுங்கள். கடந்த பத்தாண்டுகளாக விமர்சனங்களைத் தவிர வேறு எதையும் அடையாத நாம் தமிழர் கட்சியின் அரசியல் பயணம் என்பது அசாதாரணமானது.ஜெயலலிதாவை பார்த்துவிட்டு வந்தபோது அதிமுகவோடு கூட்டணி வைக்கப் போகிறார் என ஒரு கூட்டம் அலறும்.சசிகலாவை போய் பார்த்து விட்டு நடராஜன் சாவிற்கு துக்கம் விசாரித்துவிட்டு வந்தால் சீமான் சசிகலாவின் ஆள் என ஏதோ ஒரு கூட்டம் பதறும். அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடியை சந்தித்து கோரிக்கைகள் வைத்து விட்டு வந்தால் இவர் அண்ணா திமுகவின் ஆள் இன்னொரு கூட்டம் சிதறும். திருமண விழாவில் எதிர்பாராமல் சந்தித்து விட்ட பொன் ராதாகிருஷ்ணனை பார்த்து ஒரு வார்த்தை பேசினால் உடனே பாஜகவின் ஆள் என்று ஒரு கூட்டம் பதறும். கமல் கட்சி தொடங்கும் போது அவர் அழைத்த காரணத்திற்காக நேரடியாக அண்ணன் சீமான் சந்திக்க போனதை கமலோடு கூட்டணி என கதை கட்டி மற்றொரு கூட்டம் கதறும்.

அரசியல் காரணங்களுக்காக விமர்சிப்பது என்பது வேறு. தனிப்பட்ட முறையில் மனித மாண்போடு சக அரசியல் தலைவர்களை அணுகுவது, சந்திப்பது என்பது வேறு. எப்போதும் அண்ணன் சீமான் அதில் மிகச் சரியாக இருந்திருக்கிறார். தீவிரமாக எதிர்த்த திமுக தலைவர் கருணாநிதி சாவிற்கு கூட அண்ணன் சீமான் சென்று விட்டு தான் வந்தார். இதுபோன்ற செயல்பாடுகள் அரசியல் முதிர்ச்சியின் வெளிப்பாடு.சக அரசியல் தலைவர்களை சந்தித்து பேசுவதால் அண்ணன் சீமான் என்றுமே தனது அரசியல் நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டதில்லை. கடந்தகால வரலாறு அதை கம்பீரமாக அறிவிக்கிறது.இன்று முதலமைச்சராக இருக்கக்கூடிய ஸ்டாலினை 7 தமிழர் விடுதலை மற்றும் இதர கோரிக்கைகளுக்காக எங்கள் அண்ணன் சீமான் சந்தித்து விட்டு வந்திருக்கிறார்.

வழக்கம்போல கதற தொடங்கிவிட்டார்கள். 7 தமிழர் விடுதலை பற்றி எடப்பாடியிடம் இன்று பேச முடியாது. எடப்பாடி கூட ஸ்டாலினிடம் தான் இன்று கோரிக்கைகள் வைக்க முடியும்.‌ அந்நிலையில் தமிழகத்தின் மூன்றாவது மாபெரும் அமைப்பாக, உண்மையான எதிர்க்கட்சியாக உருக்கொண்டு நிற்கின்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் முதல்வரை சந்திப்பது என்பது ஒரு மிகச்சரியான எதிர்க்கட்சிக்கான பண்பியல்.எதற்கெடுத்தாலும் விமர்சிக்க வேண்டும், கதற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியை கண்கொத்தி பாம்பாக பார்த்துக்கொண்டிருக்கிற கண்றாவிகளைப் பற்றி நமக்கு கவலை இல்லை.

ஆனால் ஸ்டாலினை பார்த்துவிட்டு வந்து விட்டால் இனி திமுகவை விமர்சிக்க மாட்டார்கள் என நப்பாசையில் கூவும் சில 200 ரூபாய் ‘உபி’ களை பார்க்கும்போதுதான் உண்மையில் காமெடியாக இருக்கிறது.திமுகவை கொள்கை அடிப்படையில், கோட்பாட்டு எதிர்நிலையில் எதிர்ப்பது என்பது நாம் தமிழர் கட்சியின் அடிப்படை பண்புநலன். அதில் எவ்வித மாற்றமும் இல்லை.திமுக தலைவரை அண்ணா அறிவாலயத்தில் அண்ணன் சீமான் சென்று பார்க்கவில்லை. தமிழக மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து தமிழக முதல்வரை, 30 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை வாங்கி மாபெரும் கட்சியாக இன்று உருவாகியிருக்கிற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அண்ணன் சீமான் தலைமைச் செயலகத்தில் சந்தித்துவிட்டு வந்திருக்கிறார்.

அடுத்து வருகிற ஐந்து வருடமும் உண்மையான எதிர்க்கட்சியாக, திமுக அரசு தவறு செய்தால் கடுமையாக விமர்சிக்கின்ற, எதிர்த்துப் போராடுகின்ற மக்களின் அமைப்பாக நாம் தமிழர் கட்சி உறுதியாக செயல்படும். எந்த புதிய அரசுக்கும் முதல் 100 நாட்கள் என்பது தயாரிப்புக்கான காலம். அதனால் எடுத்த எடுப்பிலேயே விமர்சித்துக் கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. நிறைய காலம் இருக்கிறது. நல்லது செய்தால் யாராக இருந்தாலும் நாங்கள் பாராட்டுவோம். அதே சமயம் எம் இனத்திற்கு என ஒரு தீமை விளைந்தால் எவராயினும் எதிர்த்து நிற்போம்.அந்த மன உறுதியோடு தான் நாங்கள் அரசியல் களத்தில் நிமிர்ந்து நிற்கிறோம்.வழக்கம் போல் கிளம்பியிருக்கிற புரிதலற்ற கூப்பாடுகளை புறம்தள்ளி நாம் முன் செல்வோம்.

இப்போது விமர்சிக்கிற எவரும் எப்போதும் நம்மை ஆதரித்ததில்லை. இனியும் ஆதரிக்கப் போவதுமில்லை. அவர்களுக்கு நாம் அசைந்தாலே குற்றம். அவற்றையெல்லாம் நாம் கணக்கில் எடுத்தால் நாம் எதுவும் செய்ய முடியாது.இதை நமது உறவுகள் கணக்கில் எடுத்துக் கொண்டு எதை ஏற்க வேண்டும், எதை புறந்தள்ள வேண்டும் என்ற புரிதலில் சிந்தித்தாலே போதுமானது.

நாம் தமிழர்.

சமூக வலைதள விமர்சனங்களை கையாளும் கலை.

❤️

எல்லா விமர்சனங்களுக்கும் பதில் சொல்லி அலைந்து கொண்டிருப்பது நம் வேலை அல்ல.

வேலையற்றவன், வீணாகி போனவன், முகவரியற்றவன், முகம் தொலைந்தவன் போன்றவர்கள்தான் ஏதோ வயித்தெரிச்சலில் குறை பேசிக்கொண்டு குற்றம் கண்டுபிடித்துக் கொண்டு கதறிக் கொண்டிருப்பார்கள்.நமக்கு அது வேலை அல்ல. நம்மைப் பொறுத்த வரையில் முகநூல் என்பது ஒரு விளம்பர ஊடகம். செய்திகளைப் பரப்பும் கருவி. அதைத்தாண்டி முகநூல் ஒன்றுமில்லை.

முகநூல், டூவிட்டர் பதிவுகளுக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருந்தால் எதையும் செய்ய முடியாது. குறை சொல்பவர்களுக்கு குறை சொல்வது மட்டும்தான் வேலை‌. நமக்கோ குறை சொல்பவனையும் உள்ளடக்கிய இந்த சமூகத்திற்காக உழைக்கின்ற வேலை. பதிவுகளுக்காக பதறாதீர்கள்.அலட்சியப் படுத்தக் கற்றுக் கொள்ளுங்கள். அது எளிதானதல்ல. அது ஒரு பயிற்சி. சொல்லப்போனால் அது ஒரு கலை.

நம் மனதிற்குள் எதைக் கொண்டு போக வேண்டும், எதைக் கொண்டு போகக் கூடாது என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.‌ மற்றபடி கண்ணெதிரே நின்று கத்தினாலும், கதறினாலும் ஜஸ்ட் லைக் தட் என அலட்சியப் படுத்தி கொண்டு நகர்ந்து பாருங்கள். அதுதான் கத்திய கதறிய அந்த முகம் தொலைந்தவனுக்கு‌ நாம் அளிக்கும் தண்டனை.பூகம்பமே வெடித்தாலும் புன்னகை செய்வதை மறந்து விடாதீர்கள். எதுவும் நம்மை ஒன்றுமே செய்துவிடமுடியாது என்று நினைப்பவர்கள்தான் இதுவரை உலகத்தை ஆண்டிருக்கிறார்கள். எனவே சமூக வலைதளங்களில் வரும் ஒவ்வொரு விமர்சனங்களுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருப்பது நமது பணி அல்ல. உங்கள் பதிவில் உங்களுக்கு வேண்டாத கருத்துக்களை, உங்களைப்பற்றி அவதூறான விமர்சனங்களை, நம் கட்சியை பற்றி தவறான விமர்சனங்களை எவனாவது முன் வைக்கிறானா .. உடனே அந்த பதிவை நீக்கிவிட்டு அவனை பிளாக் செய்து தடுத்து விடுங்கள்.

அந்த ஒரு நொடி தான் அவனுக்காக நாம் செலவு செய்த ‌ கடைசி நொடி ஆக இருக்க வேண்டும்.நமது வேட்பாளர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் கொளுத்தும் வெயிலில் மக்களை சந்தித்து கட்சியையும் சின்னத்தையும் கொண்டு போய் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த செய்திகளை மக்களிடம் கொண்டு சேருங்கள்.

நீங்கள் நாம் தமிழர் கட்சிக்காக பிரச்சாரம் செய்யும் படங்களை பெருமிதமாக சமூகவலைதளங்களில் பரப்புங்கள்.விளம்பரம் செய்யுங்கள்.அதைத்தாண்டி முகநூல் அல்லது ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களுக்கு பெரிய முக்கியத்துவத்தைத் தந்து நம்மை நாமே வீழ்த்திக் கொள்ள வழி ஆகிவிடக் கூடாது.மீண்டும் உறுதியாக சொல்கிறேன்.முகநூல் என்பது ஒரு விளம்பர ஊடகம். விவாத ஊடகம் அல்ல. கேள்விகளுக்கு பதில் சொல்லும் விடைத்தாள் அல்ல.

நம் கட்சிக்காக நாம் விளம்பரம் செய்வோம். பட்டித் தொட்டி எல்லாம் நாம் தமிழரை கொண்டுபோய் சேர்ப்போம். விவசாயி சின்னத்தை பரப்புவோம். அலைபேசி முழுவதும் அண்ணன் சீமானின் பேச்சுக்கள் பரவட்டும்.

வெல்லப் போறான் விவசாயி.❤️

558தமிழ வேள், Packiarajan Sethuramalingam and 556 others25 comments112 sharesLikeCommentShare

25

வேட்பாளர் அறிவிப்பு கூட்டம் 2021 வருவோர் கவனத்திற்கு..

அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்..

வருகிற மார்ச் 7-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் நம் உயிர் அண்ணன் சீமான் அவர்கள் கட்சியின் ஆட்சி செயல்பாடு வரவையும் வெளியிட்டு வரலாற்று பேருரை ஆற்ற இருக்கிறார்கள்.மகத்தான இந்த நிகழ்வில் கலந்துகொள்ள தமிழ்நாடெங்கும் நாம் தமிழர் உறவுகளாகிய நீங்கள் தயாராகி வருகிறீர்கள். உங்கள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

இந்தப் பயணம் குறித்தான சில எண்ணங்களை திறந்த மனதோடு உங்களுடன் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1. தொலைவிலிருந்து வரும் உறவுகள் குறித்த நேரத்தில் பயணத் திட்டத்தை வகுத்துக் கொள்ளுங்கள்.

2. ஆறு மணி நேரம் மட்டும் பயணநேர‌ தொலைவில் இருக்கின்ற ஊரிலிருந்து புறப்படுகின்ற உறவுகள் மட்டும் அதிகாலையில் புறப்படுங்கள். மற்றவரெல்லாம் முதல் நாள் இரவே புறப்பட்டு விடுவது நல்லது

.3. 234 வேட்பாளர்களும் மதியம் மூன்று மணிக்கு முன்னதாகவே ஒய்எம்சிஏ மைதானத்திற்கு வந்து விடுவது நல்லது. கடைசி நேர போக்குவரத்து நெரிசலில் வேட்பாளர் சிக்கிக் கொள்வதை இதன்மூலம் தவிர்த்துவிடலாம். வேட்பாளர்கள் மற்றவர்களோடு இணைந்து வருகின்ற பயணத்திட்டத்தை தவிர்த்துவிட்டு முன்னதாகவே தனி வாகனத்தில் சில பேரோடு புறப்பட்டு வருவது இன்னும் சிறந்தது. மற்றவர்கள் நிகழ்ச்சி தொடங்கும் போது வந்தால் கூட பிரச்சனை இல்லை. ஆனால் வேட்பாளர்கள் முன்னதாக அரங்கில் இருப்பதே சிறந்தது. வேட்பாளர்கள் இன்று தலைமை கேட்டிருக்கிற வேட்பாளர் விபரக் குறிப்புகளை மின்னஞ்சலில் உடனே அனுப்பி வைத்து விடுங்கள்.

4. அதிகாலை புறப்படும் உறவுகள் காலை, மதிய உணவை தயார் செய்து எடுத்து வைத்துக் கொள்வது சிறந்தது. செலவும்/நேரமும் இதனால் மிச்சப்படும். இன்னும் வாய்ப்பு இருக்கிற உறவுகள் சென்னையில் இருக்கின்ற தங்களுக்கு வேண்டியவர்களிடம் எளிய இரவு உணவிற்கான ஏற்பாட்டினை அளித்து விட்டால் ‌ குறைவான செலவில் இரவு உணவை தயாரித்து விடலாம். வரும் வழியில் இருக்கின்ற உணவகங்களில் உணவின் விலை அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் இதைப்பற்றி உறவுகள் சிந்திக்கலாம்.

5. செங்கல்பட்டு தொடங்கி ராயப்பேட்டை வரையிலான சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக இருக்கிறது. அதிகாலையில் புறப்படுகின்ற உறவுகள் செங்கல்பட்டை பகல் 12 30 மணிக்குள் கடப்பது போல பயணத் திட்டத்தை வகுத்துக் கொண்டால் இறுதிநேர பரபரப்பைத் தவிர்த்துவிடலாம் .

6. தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுக்கும் உறவுகள் தங்களில் பொறுப்பான ஒருவரைத் தேர்ந்தெடுத்து ஓட்டுனருக்கு அருகே அமர வையுங்கள். இரவு பயணம் மேற்கொள்ளும்போது ஓட்டுநர் களைப்பாக இருந்தால் வண்டியை ஓரமாக நிறுத்தி வைத்துவிட்டு ஓட்டுனருக்கு போதிய ஓய்வு அளித்து பிறகு பயணத்தை தொடருங்கள்.

7. அனைவரும் முகக் கவசம் அணிவதை தவிர்த்து விடாதீர்கள். கையில் சிறிய அளவிலான சானிடைசர் பாட்டில் ஒன்று வைத்துக்கொள்வது சிறந்தது. வீட்டிலேயே காய்ச்சிய குடிநீரை போதியளவு எடுத்துக்கொண்டு கிளம்பினால் வழியில் தேவையற்ற குடிநீர் செலவு மிச்சமாகும். மேலும் வழியில் பாதுகாப்பான குடிநீருக்கு உத்தரவாதமில்லை

8.குழந்தைகளை அழைத்து வரும் உறவுகள் அவர்களுக்கான அவசர மருந்துகள் அனைத்தையும் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதேபோல மாலை நேரங்களில் பனிப்பொழிவு இருக்கிறது. அதற்கான ஆடைகளையும் எடுத்து வாருங்கள்.

9. எல்லாவிடத்திலும் சாலை விதிகளைக் கடைபிடியுங்கள். பெரும்பாலும் வேகமாக செல்வதை தவிருங்கள். மகிழுந்துகளில் வருகின்ற உறவுகள் இடைவார் அணியுங்கள். மகிழுந்தில் வருகின்ற உறவுகள் ஏழாம் தேதி இரவு சென்னையில் தங்க முடிந்தால் தங்கி விடுங்கள். இரவு நேர பயணத்தை முடிந்த அளவு தவிர்த்து விடுங்கள்.

10. வண்டியில் வரும் அனைவரது அலைபேசி எண்களையும் வண்டிக்கு பொறுப்பேற்கிறவரிடம் ஒப்படையுங்கள். சாலைகளை கடக்கும்போது கவனமாக இரு புறமும் பார்த்துவிட்டு கடங்கள். 11. நேர மேலாண்மையை சரிவர பின்பற்றினால் பாதுகாப்பான பயணம் உறுதி.‌ கூட்டம் முடிந்தவுடன் அவசர அவசரமாக கிளம்பாமல் பொறுமையாக புறப்படுங்கள். அது போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும்

.கடந்த 11 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களுக்கான ஒரு அரசியலை உருவாக்க கடுமையான இடையூறுகளுக்கு/ தடைகளுக்கு மத்தியில் அண்ணன் சீமான் தலைமையில் நாம் போராடி வருகிறோம்.‌ வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நாம் மாபெரும் வெற்றியடைய முன்னெழுத்தாக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் அமைய இருக்கிறது.தவிர்க்காமல் அனைவரும் வந்து விடுங்கள். எந்தக் காரணத்தையும் சொல்லாமல் ஓடி வந்து விடுங்கள்.

பொறுப்பாளர்கள் அனைவருக்கும் பயணத் தகவலை தெரிவித்து விடுங்கள். வண்டி புறப்படும் நேரத்தையும், இடத்தையும் தெளிவாக அறிவியுங்கள். அலைபேசியில் உங்கள் குரல் மூலம் தெரிவியுங்கள். வெறும் செய்தி அனுப்பினால் போதாது. மிக மிக முக்கியமான அழைப்பு என்பதை உணர்ந்து அனைவரும் ஒன்றாக திரள்வோம்.நம் ஒவ்வொருவருக்காகவும் அண்ணன் சீமான் ‌ காத்திருக்கிறார் என்பதை உணர்ந்து ‌ பாதுகாப்பான பயணத்தோடு நாம் கூட்டத்தில் பங்கேற்று வீடு திரும்புவோம்.

அன்றைய ஒருநாள் நாம் 11 ஆண்டுகளாக உழைத்து வரும் இலட்சித்திற்கான நாள் என உணர்ந்து சென்னையிலே திரள்வோம்.வாருங்கள்.. சென்னையிலே சந்திப்போம்.

வழக்கறிஞர் மணி செந்தில்

நாம் தமிழர் கட்சி

சட்டமன்றத்தேர்தல் 2021 வேட்பாளர் அறிவிப்பு

பேரன்பு கொண்ட நாம் தமிழர் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.

கொஞ்சம் நீளமான கட்டுரை தான். ஆனாலும் நேரம் ஒதுக்கி படியுங்கள். முழுமையாகப் படியுங்கள். பலருக்கும் எடுத்துச் சொல்லுங்கள். பரப்புங்கள்.ஏனெனில் செய்தி முக்கியமானது.

எத்தனையோ அரசியல் கட்சிகள் தமிழக வரலாற்றில் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. ஆனால் ஒரு இன அழிவின் போது எதுவும் செய்ய முடியாத மன வலியில், எதற்காக தாய் மண்ணை, உறவுகளை இழந்தோம் என்ற சிந்தனையில் நாம் அனைவரும் ஒன்று கூடினோம்.அதுவரை இருந்த தமிழ்த் தேசிய அமைப்புகள் சிறு சிறு குழுக்களாக இருந்து அரங்கக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருந்தன. ஒவ்வொரு ஊரிலும் அதே கூட்டம். அதே நபர்கள். “இவ்வளவுதானா தமிழ்த் தேசியம்..” என சிந்திப்பது போல ஒரு சிலரது ஜோல்னாப் பைக்குள் சிக்கிக்கொண்ட புத்தகங்களாய் தமிழ்த் தேசியம் என்கின்ற கருத்தாக்கம் இருந்தது.நம் கண் முன்னால் நிகழ்ந்த சொந்த இனத்தின் அழிவு இந்த சிறு சிறு குழுக்களின் போதாமையை நமக்கு எடுத்துக் காட்டின. தமிழர் என்கின்ற தேசிய‌ இனத்திற்கு ஒரு அரசியல் வலிமை தேவைப்பட்டது.

இந்திய தேசியம்/ மதவாதம்/ இடதுசாரியம்/ போன்ற வெகுஜன அரசியல் கருத்தாக்கமாய் தமிழ்த்தேசியமும் மாற வேண்டும் என்கின்ற புரிதலை ஈழ அழிவுதான் நமக்குள் ஏற்படுத்தியது.நம் இனப்பிணங்களில் இருந்து பிரசவித்த புரிதல் அரசியலாய் மாறத் தொடங்கிய போது, நாம் தமிழர் பிறந்தது.ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய இனத்திற்கும் அரசியல் அதிகாரத்தை பெற்றுத் தரக்கூடிய ஒரு பெரும் திரள் வலிமைமிக்க மகத்தான அரசியல் அமைப்பினை உருவாக்க வேண்டும் என்கின்ற நோக்கத்தில் நாம் தமிழர் கட்சி உருவானது.

ஈழத் தாயகத்தின் விடுதலை மட்டுமின்றி, தாயகத் தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிற திராவிடக் கட்சிகளின் ஊழல் மிக்க, சுயநல ஆட்சிகளால் நிகழ்ந்துவிட்ட அனைத்துக் கேடுகளில் இருந்து விடுதலைப் பெற உலகம் முழுதும் பரந்து வாழ்கின்ற 12 கோடி தமிழ்த் தேசிய இன மக்களின் உரிமைக் குரலாய் ஒரு அமைப்பு வேண்டும் என்கின்ற புரிதலில் நாம் தமிழர் உருவாகி வளர்ந்தது.எத்தனையோ அடக்குமுறைகளுக்கும், ஊடகப் புறக்கணிப்புகளுக்கும், பொருளாதார சங்கடங்களுக்கும் மத்தியில், பத்தாண்டுகளுக்கு மேலாக இந்த அமைப்பை நாம் உயிரெனப் பாதுகாத்து வருகிறோம்.எத்தனையோ துரோகங்களை பார்த்துவிட்டோம். துரோகங்கள் செய்வதற்கு காரணங்கள் தயாரிக்கப்பட்டன. காரணங்களுக்காக துரோகங்கள் நிகழ்த்தப்பட்டன. நாம் உயிரென நேசித்து போற்றி வளர்த்த அமைப்பினை உடைக்க ஒரு பெரும் கூட்டமே இறங்கி வேலை செய்கிறது.ஆனாலும் அதையும் மீறி தான் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் இதையெல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு புலிக் கொடியோடு முன்னே சென்று கொண்டிருக்கிறார்கள்.ஒவ்வொரு ஊரிலும் ஒரு கருஞ் சட்டை அணிந்த இளைஞன் புலிக்கொடி தூக்கிக்கொண்டு திரியத் தொடங்கி விட்டான். பள்ளிவாசலில் ஓட்டு கேட்கும்போதுதொழுதுவிட்டு திரும்பிய யாரோ ஒரு இளைஞன் எங்களோடு சேர்ந்து துண்டறிக்கை கொடுத்து ஓட்டு கேட்கின்றான். வீதியில் பேசிக் கொண்டிருக்கிற எங்களைப் பார்த்து மனம் கேட்காமல் ஒரு 51 ரூபாய் திருவாளர் பொது ஜனம் என்ற பெயரில் வழங்கி விட்டு கண் கலங்கிய கண்களோடு ஒரு எளியவர் நடக்கிறார்.

அண்ணன் சீமானின் அனல் மிக்க தமிழுக்கு பிறகு திமுக காரர்கள் கூட தங்கள் பிள்ளைகளுக்கு கருணாநிதி என்ற பெயர் வைப்பதில்லை. ஆனால் வீட்டுக்கு வீடு பிரபாகரன்கள் பிறக்கிறார்கள். பிரபாகரன் என்று சொன்னால் தீவிரவாதி என்று குற்றம் சாட்டப்பட்ட மண்ணில் இன்று அவரை தேசியத் தலைவராக கொண்டாடுகிற ஒரு கூட்டம் உருவாகி விட்டது. தூய தமிழில் பலரும் உரையாடுகிறார்கள்.எளிய குடும்பத்தைச் சேர்ந்த பலரும் அரசியலில் ஈடுபட்டு நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக மாறி இருக்கிறார்கள். பொதுத் தொகுதியில் ஆதித்தமிழர் நாம் தமிழர் வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள். மாற்றுத்திறனாளிகள் நம்பிக்கையோடு நாம் தமிழர் வேட்பாளர்களாக களத்தில் நிற்கிறார்கள்.வீதிக்கு வீதி இளைஞர்கள் முழக்கம் இடுகிறார்கள். நாம் தமிழர் என்பது வெறும் கட்சியின் பெயர் அல்ல. அது ஒரு உணர்வு. உறவுகளை ஏற்படுத்தும் பெருங்குடும்பம். சொல்லப்போனால் நாம் தமிழர் என்பது ஒரு வாழ்வியல் என பலரும் புரிந்து கொண்டு விட்டார்கள்.அண்ணன் சீமான் போல பல 100 இளைஞர்கள் ஊருக்கு ஊர் உருவாகிவிட்டார்கள். அனல் பறக்கும் அவர்களது பேச்சில் சத்தியம் தெறிக்கிறது. அவர்கள் மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கும் கேள்விகளை தாங்கமுடியாமல் திமுக காரர்களும், அண்ணா திமுக காரர்களும், பாஜக- காங்கிரஸ் காரர்களும் தலை குனிந்தவாறு அமைதியாக கடக்கிறார்கள்.இது தமிழ்த் தேசியத்தின் பொற்காலம்.

இன உணர்ச்சி கொண்ட தமிழர்கள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிட ஓயாது உழைத்துக் கொண்டிருக்கின்ற இந்த நாட்களில்தான் வருகிறது மார்ச் 7ஆம் தேதி.

தேர்தல் என்ற யுத்தத்திற்கு அண்ணன் சீமானின் சொற்கள் மூலம் நாம் ஆயுதங்கள் தயாரிக்கிற நாள். போருக்குத் தயாராகும் நாள்.நாம் தமிழர் உறவுகளே.. பயணத்திற்குத் தயாராகுங்கள். உடனடியாக பேருந்து வாகனங்களை முன்பதிவு செய்யுங்கள். பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுங்கள். யாரையும் விட்டு விடாதீர்கள். குடும்பம் குடும்பமாக சென்னையில் கூடுவோம்.சென்னை குலுங்க வேண்டும். நமது உயரும் கரங்களில் அந்த வானையே முத்தமிடுகிற நமது புலிக்கொடி காற்றை உரசி பறக்க வேண்டும். “எழுந்தது பார் ஒரு புதிய தலைமுறை.. தாய் மண்ணை காக்க ..” என எதிரிகளும், துரோகிகளும் ஒரே நேரத்தில் அச்சப்படும் அளவிற்கு. நாம் சென்னையில் திரள வேண்டும்.கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக சீமான் என்ற தனிமனிதன் சிந்திய வியர்வை, அவனது தம்பிகள் உழைத்த பெரும் உழைப்பு போன்றவைகளுக்கு உரிய மதிப்பு கிடைக்க சென்னையில் நாம் நிகழ்த்த இருக்கும் மகத்தான எழுச்சி மூலம்தான் கிடைக்கும் என்பதை நாம் உணர்வோம்.

234 வேட்பாளர்கள்.117 ஆண்கள்/ 117 பெண்கள்.ஒரே மேடையில்.இதற்கெல்லாம் மேல் நம் அணுவெல்லாம் ஊடுருவி நம்மைபுலிகளாக மாற்றும் அண்ணன் சீமானின் அனல் உரை.மார்ச்சு 7 ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக நான்கு மணி. சென்னை ராயப்பேட்டை ,ஒய்எம்சிஏ மைதானம்.திரள்வோம்.. திரள்வோம்.பகை மிரளத் திரள்வோம்.பைந்தமிழ் இனத்தீரே..சென்னையில் சந்திப்போம்.

வழக்கறிஞர் மணி செந்தில்

நாம் தமிழர் கட்சி.

334தமிழ வேள், Lingadurai K and 332 others15 comments131 sharesLikeCommentShare

15

Page 3 of 15

Powered by WordPress & Theme by Anders Norén